இணைப்பு:
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=10407083&format=print&edition_id=20040708
http://nagoreismail786.blogspot.com/search/label/1%20%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE
http://www.altafsir.com/
----------------------------------------------------------------------------
நீங்க கொஞ்சமா சம்பாதிக்கணும்னா ஒரு புஸ்தகம் எழுதுங்க, நிறைய சம்பாதிக்கணும்னா ஒரு மதத்தை உருவாக்குன்னு ஒரு
அறிஞர் சொன்னாராம்
சரியாத்தான் இருக்கும் போல..
எத்தனையோ பாதைகள் இருப்பினும் ‘நேரான பாதை’ என்று குரான் ஷரீஃப் ஒரு பாதையில் செல்ல நம்மை அழைக்கிறது.
அதனை பற்றி நான் படித்தது... கேட்டது...
ஸூரத்துல் அன் ஆம் (6) - ஆடு, மாடு, ஒட்டகம்
வாக்கியம்: 151, 152, 153
151
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்;
’வாருங்கள்’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை அரபியில் ”த ஆலவ்” என்ற வார்த்தையிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு ‘எழுச்சி பெறுங்கள்’ என்பது போன்று அர்த்தம் கொண்டது.
அதாவது, இப்படி படிக்க வேண்டும் இதை, “வாருங்கள்.. எழுச்சி பெறுங்கள் (அடுத்த நிலைக்கு உயருதல், கம்.. ரெய்ஸ் யுவர் லெவல்), நான் ஓதிக் காண்பிக்கின்றேன்....”
அதே போல ”ஹர்ரம” என்ற வார்த்தையை தான் மேலே ‘விலக்கியிருப்பவற்றையும்..” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
”ஹர்ரம” என்ற வார்த்தைக்கு “புனிதம்” என்பது தான் சரியான அர்த்தம் என்பது எனது கருத்தாகும்.
அதாவது, இப்படி படியுங்கள், “வாருங்கள், உங்கள் நிலைகளை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்கள் இறைவன் உங்கள் மீது விதித்திருக்கும் புனிதமான கடமைகளை நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றேன்...”
அதாவது புனிதமான அந்த கடமைகளை நான் அனுசரித்தும் வாழ்வில் பின்பற்றியும் வந்தால் நம் நிலைகளை உயர்ந்து விடும்.
அது என்ன, புனிதமான கடமைகள்...?
(1) எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்;
இணை வைத்தல் (ஷிர்க்) என்பது பங்கு போடுவது, கூட்டு சேர்ப்பது, பங்காளியாக்குவது இப்படியாக பொருள்படும்.
இதுக்கு நேரெதிரான வார்த்தை என்னவென்றால் ‘தவ்ஹீது’ - இதற்கு ‘பங்குகள் ஏதுமில்லாத’ ஏகத்தை குறிக்கும் சொல்.
முஸ்லீமான ஒவ்வொருவரும் முதன் முதலில் ‘தவ்ஹீதை’ தான் சாட்சி சொல்ல வேண்டும்.
ஆனால் இங்கே இறைவன் சாட்சி கூட சொல்ல சொல்லவில்லை, ஷிர்க்கை விட்டு விலகி விடுங்கள் என்கிறான்.
ஏனெனில் ‘தவ்ஹீது’ என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரிடத்திலும் இயற்கையாகவே இருக்கும்.
பின் வரும் வசனத்தை கவனியுங்கள்...
- ஸூரத்துல் அஃராஃப் (7) - சிகரங்கள்
172 வது வாக்கியம்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
ஆக, நாம் இந்த உலகிற்கு வருமுன்னரே நாம் தவ்ஹீதை இறைவனை ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் இங்கே வந்த பிறகு அதற்கு மாறு செய்கிறோம்.
அதனால் தான் நீங்கள் தான் ஒத்துக் கொண்டீர்கள் அல்லவா? அதற்கு மாற்றமாக ஷிர்க் வைக்காதீர்கள் என்கிறான் இறைவன்.
இஜட்.ஜபருல்லாஹ் நானா சொல்வாஹா, ‘மொதல்ல கெட்டதை நீக்கணும், அப்புறம் நல்லதை நிரப்பினால் தான் நல்லது நல்லதா இருக்கும்’ என்று. உதாராணமாக, ’ஒரு அழுக்கான கிளாஸ் இருக்கு, அதில் சுத்தமான பாலை ஊத்தினால் பால் சுத்தமானதாக இருக்காது - அதனால மொதல்ல கிளாஸை சுத்தம் பண்ணனும் அப்புறமா தான் பாலை ஊத்தணும்’ என்று உதாரணம் கொடுப்பார்கள்.
அதனால மொதலில் ஷிர்க்கை விட்டு ஒழிக்கணும், இது வந்து கிளாஸை சுத்தமாக்குற மாதிரி.
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், இணை வைத்தல் என்றால் மனிதர்களை இணையாக்குவது மட்டும் தான் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
சிலவங்க இருப்பாங்க, அவங்க ரொம்ப திமிரா எல்லாம் தெரியும் என்பது போல் பெருமானாரையும் இன்னும் ஏனைய பெரியோர்களை எல்லாம் கூட்டாளி மாதிரி பேசுகின்ற தொனி அவங்களிடத்திலே இருக்கும்.
இவர்கள் எதை தெரியுமா இறைவனுக்கு இணையாக்குகிறார்கள்..? படியுங்கள்..
- ஸூரத்துல் ஃபுர்கான் (25) - பிரித்தறிவித்தல்
43 & 44 வது வாக்கியம்
தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.
மன இச்சைகளை இணைவைக்கும் அவர்களுக்கு பெருமானார் எப்படி பாதுகாவலராக இருப்பார்கள்..?
அவர்கள் கால்நடைகளை விட வழி கெட்டவர்கள்.
மரியாதை தெரியாத அவர்களின் தொழுகையையோ நோன்பையோ பார்த்து ஏமாந்து விடக் கூடாது.
(2) பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
நன்மை என்ற தமிழ் வார்த்தை ‘இஹ்ஸான்’ என்ற அரபி வார்த்தைக்கு மொழி பெயர்ப்பாக வந்துள்ளது.
’இஹ்ஸான்’ என்றால் ‘அழகு’ என்று ஒரு அர்த்தம் உள்ளது.
அதாவது இப்படி படியுங்கள், “பெற்றோர்களுக்கு அழகானதை செய்யுங்கள்” அல்லது “பெற்றோர்களிடம் அழகாக நடந்து கொள்ளுங்கள்”
நம்ம பொறந்த ஒடனே நமக்க நாம யாரென்றே தெரியாது.பேர் கூட தெரியாது.
பசிச்சா ‘பசிக்கிது’ன்னு சொல்ல தெரியாது. அழுவ (அழுகை) தான் தெரியும்
சாப்ட வொடனே வயித்த பெறட்டுனுச்சுன்னா ‘பீ வருது’ன்னு கூட சொல்ல தெரியாது.
எல்லாத்தையும் யார் பார்த்துகிட்டா? - பெற்றோர்கள் தான். ம்மா வாப்பா தான்.
ஆனா இப்ப நாம் அப்படி இல்லை.. (இல்லை இல்லை நான் அப்டி தான், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)
’நான் யார் தெரியுமா?’ - ‘என்னை பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்” என்று கர்வமாக கேட்கிறோம் - ஒரு கட்டத்தில் நமக்கு யாரென்று நமக்கே தெரியாமல் இருந்தது.
‘பசிக்குதுன்னா’ ஒடனே நல்ல ரெஸ்டாரண்ட் உள்ளே போய் வாயையும் வயிறையும் அவுத்து வுட்டுடறோம்.
தின்னது செறிச்சு வெளியே வருதுண்ணா கொள்ளைக்கு போறோம்.
எல்லாத்தையும் நாமளே செய்ய முடியிது.
- ஆனா இப்போ என்ன கவனிக்கணும்னா,
இப்போ பெற்றோர்களை பார்த்தாக்கா, அவங்க.. வயசாயிருப்பாங்க... முதுமை அடைஞ்சி இருப்பாங்க.. இப்போ நமக்கு அவங்க குழந்தை மாதிரி.. நம்ம பொறந்த வொடனே எவ்வளவு பிரியமா அழகா பார்த்துகிட்டாங்க... அதே மாதிரி இப்போ நம்ம அந்த குழந்தைகளை அழகா பார்த்துகிடணும். கீழே படியுங்கள்..
ஸூரத்து பனீ இஸ்ராயீல் (17) - இஸ்ராயீலின் (யாகூப் நபி (அலை) அவர்களின்) சந்ததிகள்
வாக்கியம் 23 & 24
- அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
பெற்றோர்களை ‘சீ’ன்னு சொல்றது பெரும் பாவம். கனிவான கண்ணியமான வார்த்தைகளை ரொம்ப மரியாதையா பேசணும். பணிவு என்னும் இறக்கையை அவர்களுக்காக தாழ்த்த வேண்டும். சின்ன வயதில் என் மீது எவ்வளவு பரிவோடு என்னை வளர்த்தார்களோ அபப்டி இறைவனே நீ அவர்கள் மீது கிருபை செய் என்று இறைஞ்ச வேண்டும்.
(3) வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
இந்த உலகத்துல எல்லோருக்கும் எல்லாமே நேரடியா கிடைக்காது. உங்களுக்கு கிடைப்பது எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடையாது. உங்கள் மூலமாக இன்னொருத்தருக்கு கிடைக்க வேண்டியது, உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான்.
வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொலை செய்ற அளவுக்கு போய் விடக் கூடாது. நம்பிக்கை கொள்ளணும். நாம ஹஜ்ஜுக்கு போறோம். அங்கே ‘ஸஃபா’ ‘மர்வா’ன்னு ரெண்டு மலைகள் இருக்கு. அந்த மலைகளை பற்றி குரான் ஷரீஃபில் இப்படி வருது.
- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு
158 வது வாக்கியம்
”நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; ..............”
’ஸஃபா’ ‘மர்வா’ல என்ன விசேஷம் அது ஏன் இறைவனின் அடையாளமாவுது என்றால். அங்கே தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் மனைவி ஹாஜிரா (அலை) தாகம் வந்து அழுது துடித்த தனது குழந்தைக்கு தண்ணீர் தேடி ஓடி அலைந்தார்கள்.
தண்ணீர் மருந்துக்கும் இல்லாத பாலைவனமது. அங்கே பிள்ளை தண்ணீருக்கு அழுகின்றது. நீங்க தண்ணீரை தான் தேட வேண்டுமே தவிர குழந்தையை கொல்ல நினைக்க கூடாது.
அப்படி தேடினால்..?
அது பாலைவனமாக இருந்தாலும் தண்ணீர் ஊற்றெடுக்க தான் செய்யும். போதும் போதுங்கற அளவுக்கு அது ஊற்றெடுக்க தான் செய்யும். இது தான் இறைவனின் அடையாளம்.
இது மாதிரி எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்தி செய்ய முயல வேண்டும். கொஞ்ச நேரத்தில் அல்லது கொஞ்ச நாளில் இறைவன் உங்களுக்கு வழிகாட்டுவான். அதில் சந்தேகமேயில்லை.
(4) வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்;
இன்றைக்கு மானக்கேடானது எது என்று கண்டுபிடிப்பதே கஷ்டமாகி விட்டது.
ஆனால், இறைவன் சொல்கிறான், ”வெளிப்படையான இரகசியமான மானக்கேடான...” என்று. அதாவது என்ன அர்த்தம் என்றால், மானக்கேடானதை நீங்கள் வெளிப்படையாக செய்தாலும் சரி, இரகசியமாக அறைக்குள்ளே செய்தாலும் சரி மானக்கேடானது மானக்கேடானது தான்.
நாம் மேலே கண்டோம், இறைவன் பெற்றோர்களிடம் அழகான முறையில் நடந்து கொள்ள சொன்னதை பற்றி.
இறைவனுக்கு ‘அழகு’ தான் பிடிக்கும். அழகு என்றால் முக அழகு அல்ல. அக அழகு.
ஷைத்தானுக்கு தான் அசிங்கம் பிடிக்கும். அவன் தான் அசிங்கத்தை ஏவுவான்.
- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு
169 வது வாக்கியம்
நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
(5) அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் -
மனிதன் அறியாமல் தனது சக மனிதனுக்கு (ஓர் ஆத்மாவுக்கு அது எந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் சரியே!) தீங்கு செய்பவனாக இருக்கின்றான்.
இறைவன் ஒரு பிரதிநிதியை படைக்க போகிறேன் என்று சொன்ன போதே மலக்குகள் கேட்கிறார்கள், ‘இரத்தம் சிந்துவோரையா நீ அமைக்கப் போகிறாய்?” என்று. படியுங்கள்...
- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு
30 வது வாக்கியம்
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
31 வது வாக்கியம்
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
32 வது வாக்கியம்
அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
குரான் ஷரீஃபிலே எச்சரிக்கின்றான், ‘நியாயமானதற்கு அல்லாமல் எந்த உயிரையும் கொல்லக் கூடாது” என்று.
இன்றைக்கு கொலைகள் கேவலம் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், நிலத்துக்காகவும், அரசியலுக்காகவும், மதத்தின் பெயரை சொல்லியும் ( கொன்று விட்டு ‘அல்லஹ் அக்பர்’ என்று சொன்னாலும் நிச்சயமாக இதிலும் நியாயம் கிடையவே கிடையாது), நாட்டுக்காகவும் அல்லவா நடக்கிறது.
அலி (றலி) அவர்கள் ஒரு யுத்தத்தில்ல் ஒருவரை கொலை செய்ய வாலை ஓங்கி விட்டார்கள். அவர் தூய்மையான அலி(றலி) அவர்களது முகத்தில் எச்சில் துப்பி விட்டார்.
உடனே வீரர் அலி (றலி) அவர்கள் வாளை தூக்கி போட்டு விட்டு எழுந்து விட்டார்கள்.
அவர் ஆச்சர்யம் தாங்காது, ‘ஏன் இப்படி? - கோவம் இல்லையா? - எது என்னை வெட்ட விடாமல் தடுத்தது?’ என்று காரணம் வேண்டுகிறார்.
அலி (றலி) அவர்கள் விளக்கம் தந்தார்கள், “நீ என் முகத்தில் எச்சில் துப்பிய போது நான் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டேன், எனக்கு கோவம் வந்தது, நான் ஓங்கிய வாளில் பாதி இறைவனுக்காகவும் பாதி எனக்காகவும் இருந்தது. இறைவனுடைய அலுவல்களில் பங்காளிகள் ஏது?” என்று கேட்டார்கள்.
அவர் இதயத்தில் ஈமான் குடி கொண்டது என்பது இஸ்லாமிய வரலாறு. அலி (றலி) அவர்கள் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் தான் குரான் ஷரீஃபின் மேற்படி வசனத்திற்கு சிறந்த தப்ஸீர்.
நியாயம் இல்லை என்றால் உயிரை பறிப்பது என்பது நமக்கு துளி கூட உரிமை இல்லாத செயல். பாவத்திலேயே பெரிய பாவம்.
இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
போதனை என்று சொன்னால் அது ஒரு வகையில் மேலே கண்டதை எல்லாம் செய்ய சொல்லி கட்டளையிடுகிறான் என்று அர்த்தம். இப்படியும் இருக்கலாம் என்ற பல வழிகளில் இருக்கும் ஒரு வழி அல்ல.. இது தான் இருக்கவே இருக்கும் ஒரே நேரான வழி.
இத்தோடு முடியவில்லை...
152 வது வாக்கியம்
(6) அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்;
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அனாதைகளை ஆதரிக்கும் வீடே ஆசீர்வதிக்கப்பட்ட வீடு என்று.
தாய் தந்தையை இழந்தவர்களான இவர்கள் இவர்களாக விரும்பி அப்ளிகேஷன் போட்டு அனாதையாகி விடவில்லை.
அவர்களுக்கு யாருமில்லை அவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்து விடலாம் என்று யாரும் தைரியமாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு அல்லாஹ் இருக்கின்றான்.
முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறான், அவர்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால் அதை அழகான முறையிலன்றி அதாவது அதை பெருக்குவதற்காகவேயன்றி அதை நீங்கள் எடுக்க கூடாது.
குரான் ஷரீஃபின் இன்னொரு வசனம் அனாதைகளின் சொத்தை உண்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. படியுங்கள்...
- ஸூரத்துன்னிஸாவு (4) - பெண்கள்
10வது வாக்கியம்
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான்
(7) அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்;
பெருமானார் (ஸல்) அவர்கள் ஏதாவது வாங்கினால், “ஒழுங்காக நிறுத்துப் போடுங்கள்!” என்று கடைக்காரரிடம் சொல்லுவாஹலாம்.
புலைல் என்பவர்கள் தனது மகனாரை கவனிக்கிறாங்க.. மகனார் ஒரு தங்க நாணயத்தைத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்தாஹா. விற்பனைக்கு உள்ள அந்த தங்க நாணயம் அழுக்கினாலும் கறையினாலும் அதன் நிறை உயரக் கூடாதுங்குறதுக்காக..
புலைல் ங்குறவங்க பார்த்துட்டு சொன்னாஹலாம், “மகனே! நீ செய்யும் காரியம், இரு பத்திரண்டு தடவைகள் இறையில்ல தரிசனம் செய்வதை விடச் சிறப்பு வாய்ந்தது!”
நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை;
மனிதன் என்பவன் களிமண்ணினால் படைக்கப்பட்டவன். களிமண் என்பது படைக்கப்பட்ட ஒரு பொருள். படைக்கப்பட்ட ஒரு மூலப் பொருளிலிருந்து இன்னொரு பொருளை உருவத்தை மனிதனாக படைக்கிறான் இறைவன்.
படைத்த இறைவன் தனது ரூஹை மனிதனில் ஊதுகிறான். இப்போ என்ன ஆச்சுன்னா, லேசான ஒரு பொருள் புனிதமான ஒரு உயிராக உருவெடுத்து விட்டது.
இப்படி வச்சுக்குங்களேன்... புனிதமும் அற்பமும் கலந்த கலவை மனிதன் என்று.
குரான் ஷரீஃபில் ஸூரத்து கஹ்ஃபு எனும் அத்தியாயத்தில் “இரண்டு கடல்கள் ஒன்று சேரும் இடம்..” (60 வது வாக்கியம்) என்று வரும்.
ஸூரத்துல் ஃபுர்ஃகான் - பிரித்தறிவித்தல்
53, 54 வது வாக்கியம்
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
இரு கடல் என்பதை சூஃபியாக்கள் களிமண்ணையும் இறைவனுடைய ரூஹையும் என்று ஆழ்ந்த அர்த்தமுள்ள விளக்கம் கொடுக்கிறார்கள்.
சரி, இதில் நஃப்ஸ் எங்கே வருகிறது என்று கேட்டால், அது தான் இரு கடல்களையும் ஒன்று சேர்க்கும் பகுதி.
(கணிதத்தில் ‘இண்டர்செக்ஸன்’ என்று படித்திருக்கிறோமே, அதை நினைத்து கொள்ளவும்)
அப்படி பார்த்தால் நப்ஸில் இறைவனின் ரூஹில் உள்ள இறைத்தன்மைகளும் இருக்கும், களிமண்ணில் உள்ள அதாவது உலகத் தன்மைகளும் இருக்கும்.
சுருக்கமாக சொன்னால் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.
குரான் ஷரீஃப் என்பதே நப்ஷுக்கு நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிவிக்க கூடியது தான்.
இந்த நப்ஷ் கெட்டதிலிருந்து விலகி இறைத் தன்மையின் பக்கம் வரவழைத்து விட்டால் அது தாங்கிக் கொள்ளாத ஒரு கஷ்டமும் இல்லை. எதுவெல்லாம் கஷ்டம் என்று நினைத்து வருந்துகிறோமோ அந்த கஷ்டம் வந்ததற்காக சூஃபியாக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருந்தார்கள் என்பது இதை தான் உணர்த்துகிறது.
(8) நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்;
இது ஒரு குவாலிட்டி ஆஃப் பிஹேவியரின் உச்சம் என்பேன்.
இது வந்து சாதாரணமா பேசும் போது கூட என்று வருகிறது. பெரிதாக ஒரு கேஸில் தீர்ப்பு எழுதும் போது என்றெல்லாம் இல்லை, வக்கீலாக நின்று நீதிமன்றத்தில் வாதிடும் போது என்று கூட இல்லை, நாம சும்மா பேசிகிட்டு இருக்கோம்ல அப்போ கூட ஒரு ஃபேவரிட்டிஸம் இருக்க கூடாது, நியாயமானதை மட்டும் தான் பேச வேண்டும்.
யார் பாதிக்கப்பட்டாலும் சரியே.
(9) அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
நம்ம வாழ்க்கையின் ரீவைண்ட் பட்டனை தட்டி விட்டால், நேற்று , முந்தா நாள் என்று பின்னோக்கி சென்று கொண்டே இருந்தால் கல்லூரி, பள்ளிகூடம், இன்னும் பின்னே போய் பால்குடி மாறாமல் தாயின் மடியில், இன்னும் தாயின் வயிற்றில் அப்படியே இன்னும் பின்னே போனால்... ஒரு கட்டத்தில்...
ஸூரத்துல் அஹ்ஜாப் (33) - சதிகார அணியினர்
32 வது வாக்கியம்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
மேலே படித்த அத்தனை பொறுப்புகளையும் செவ்வனே செய்வேன் என்று உறுதி மொழி கொடுத்து விட்டு தான் இங்கே வந்திருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டும்.
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
இறைவன் காட்டியதும் பெருமானார் (ஸல்) அவர்களும் பெரியோர்களும் சென்றதுமான நேரான பாதையில் நடைபோட இறையருள் வேண்டியவனாக..
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...