Tuesday, November 10, 2009

கைத்தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தானதா?


இன்றைக்கு ஒரு மெயிலை படித்தேன், அதில் கைத்தொலைபேசியை (ஹேண்ட் போன் அல்லது செல்லுலர் போன் அல்லது செல்) பேண்ட்டில் மாட்டிக் கொண்டு போனால் இடுப்பு எலும்பு நொறுங்கி விடும் என்று துருக்கி நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். 150 பேர்களிடம் நடந்த சோதனையில் 122 பேர்களின் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் அந்த மெயில் சொன்னது.

இது போல் பல சுவாரஸ்ய மெயில்களும் ஹேண்ட் போனை பற்றி வந்ததுண்டு. இரண்டு பக்கமும் ஹேண்ட் போனை வைத்து முட்டை பொறிப்பது போல் எல்லாம் வந்து நம்மை பயமுறுத்தியதுண்டு. அதாவது நம்முடைய காதும் அதோடு சேர்ந்து மூளையும் சேர்த்து சமைக்கப்பட்டு விடுமோ என்று நினைத்து பார்த்தது உண்டு.

ஆனால் நினைத்து தான் பார்த்தோமே தவிர, அதற்காக கலங்கியதெல்லாம் கிடையாது, அது உண்மையாக இருக்குமோ என்று கவலையாவது பட்டிருப்போமா என்றால் அதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன்.

சரி ஒரு வேலை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட யாரும் ஹேண்ட் போன் பேசுவதை நிறுத்த போவதில்லை என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் உடம்புல இடுப்பு எலும்பு எப்படி ஒரு பாகமோ அது போலவே ஹேண்ட் போனும் ஒரு பாகமாகவே ஆகி விட்டது. yes, hand phone is not our belonging, it is part of our body.

சிகரெட் குடிச்சா கேன்சர் வரும்னு சொன்னாங்க, அதுக்காக சிகரெட் குடிக்கிறதை யாரும் நிறுத்திட்டாங்களா, என்ன? - அதுவும் தவிர சிகரெட் கம்பெனி ஆரம்பித்து நஷ்டமா போன முதலாளி யாருமே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

சிகரெட் அட்டை பெட்டியில் சிகரெட் கம்பெனி காரர்கள் போடுவது போல் "சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்று ஹேண்ட் போன் கம்பெனி காரர்கள் "ஹேண்ட் போன் பயன்படுத்துவது தீங்கானது" என்று போடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில் இது வரை ஹேண்ட் போனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்கள் என்ற ஆதாரம் இல்லை (there is no conclusive evidence for adverse effects) என்று உலக சுகாதார மையம் (WHO) உள்பட அனைவருமே சொல்லுகின்றனர்.

(long long ago so long ago no body can say how long ago) சிகரெட் கண்டுபிடிக்கப்பட்ட போது கூட இத்தனை பேர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரம் இருந்திருக்குமா? - யோசிக்க வேண்டிய விஷயம். விஞ்ஞானிகள் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டார்கள் (நம்ம தௌஹீது வாதிகள் அல்லது வஹ்ஹாபிகளை போல என்று இங்கே யாரும் அநாவசியமாக ஒப்பிட வேண்டாம்)

ஹேண்ட் போனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கதிர்வீச்சு (ரேடியேசன்) பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

ரேடியேசன் இரண்டு வகைப்படும்.
1. (ionising radiation - alpha, beta, gamma, neutron and x-ray)
அயனைசிங் ரேடியேசன் (ஆல்பா, பீட்டா, காம்மா, நியுட்ரான் மற்றும் எக்ஸ் ரே)
2. (non-ionising radiation - ultraviolet, visible, infrared, microwave/rf, laser, ultrasound)
நான் - அயனைசிங் ரேடியேசன் (அல்ட்ராவயலட், விசிபிள், இன்ப்ராரெட், மைக்ரோ வேவ் அல்லது ஆர்.எஃப்., லேசர், அல்ட்ரா சவுண்ட் ரேடியேசன்)

இதில் அயனைசிங் ரேடியேசன் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக எக்ஸ்ரே வை எடுத்து கொள்வோம். தொழிற்சாலைகளில் பல பயன்பாடுகளுக்காக இதனை பயன்படுத்துகிறோம். உதாரணமாக, வெல்டிங் வைத்த பிறகு உள்ளே தெறிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு இதனை பயன்படுத்துகிறோம்.

இதனை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது, இதன் டோஸேஜை சிவர்ட் என்ற அளவில் நாம் அளக்கிறோம். இங்கே சிங்கப்பூரில் ஒரு ஆண்டுக்கு ரேடியேசனில் வேலை பார்க்கும் ஊழியர்கள் (National Environmental Agency - NEA Regulations)சட்டப்படி 20 மில்லி சிவர்ட்டுக்கு மேல் டோஸேஜை உடம்பில் பெறக் கூடாது.  இதுவே அனுமதிக்கப்பட்ட அளவு.

அயனைசிங் ரேடியேசன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது உடனடி பாதிப்பு (acute effect), அல்லது நீண்ட நாட்கள் கழித்து தெரியும் பாதிப்பு (chronic effect) மற்றும் தலைமுறை சார்ந்த பாதிப்பு (genetic effect) ஏற்படலாம். கேன்சர் கூட வரலாம்.

ஆனால் நான் அயனைசிங் ரேடியேசன் என்பது தோல் எறிவது (skin burn) அல்லது கண் பாதிப்பு (eye injury), இந்த இரண்டு பாதிப்புகளை தவிர வேறு எந்த பாதிப்புகளும் இருப்பதாக அறியவில்லை. ஆனால் நான் - அயனைசிங் ரேடியேசன் வகையை சேர்ந்த அல்ட்ராவயலட் எனும் ரேடியேசன் தோல் புற்று நோயை உருவாக்கலாம்.

இப்போது ஹேண்ட் போன் மேட்டருக்கு வருவோம். அது மைக்ரோவேவ் வகையை சேர்ந்தது. இத்தகைய ரேடியேசன் கேன்சரை உருவாக்குவது என்பதெல்லாம் நம்ப முடியாத அல்லது நிரூபிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஹேண்ட் போனின் பவர் அவுட் புட் 6.3 மில்லி வாட்ஸிலிருந்து 600 மில்லி வாட்ஸ் வரை. இந்த பவரை வைத்துக் கொண்டு முட்டையை எல்லாம் வேக வைப்பது சாத்தியமே இல்லை என்று தான் நான் அறிகிறேன்.

என்றாலும் தலைவலி, உறக்கமின்மை, மறதி, சோர்வு போன்ற பாதிப்புகள் வரலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

SAR (Specific Absorption Rate) - என்று சொல்கிறார்களே அது என்ன என்றும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது 'சார்' என்றால் நம் உடலில் எவ்வளவு மைக்ரோவேவ் அல்லது ஆர்.எஃப் ரேடியேசன் உள்ளே செல்கின்றது என்பதை கணக்கிடும் அளவு.

'சார்' அளவு எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கு நல்லது என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக 2 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று the International Commission on Non-Ionising Radiation Protection (ICNIRP) பரிந்துரை செய்துள்ளது.

இது போக, என் நண்பர் ஒருவர் இங்குள்ள மருத்துவமனைக்கு அவரின் தாயாரை காண சென்றார். அங்கே அவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். அந்த மருத்துவமனையில் போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். அங்கே அவரின் தாயாருக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவருக்கு போன் மூலம் முக்கிய அழைப்பு வந்தது. அவர் மெதுவாக நகர்ந்து போன் பேச போனார். இங்கே தண்ணீர் இறங்குவது திடீரென்று நின்று விட்டது. நர்ஸ் வந்து பார்த்து விட்டு, "இங்கே போன் பேசக் கூடாது என்று போட்டிருக்கோம்ல.." என்று சொன்னதும் அவர் ஆடிப் போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

Thursday, October 22, 2009

மாமியாரா..? என்னோட அம்மா..!


எனக்கு பிடித்த விளம்பரம்

Saturday, October 17, 2009

ஆன்ந்தி - (புயல்) - பழைய இந்தி பட விமர்சனம்


அரசியலுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இது மத்த எல்லா மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு ரொம்பவே பொருந்தும். பாபா என்ற சுமாராக கூட இல்லாத படத்தை திரையிட விடாது பொட்டியுடன் பொட்டியை கட்டியது தமிழக அரசியலின் அல்லது  சினிமாவின்  வரலாற்று  சிறப்புகளில் ஒன்று.

இதே போல் குல்சார் சாப் அவர்கள் இயக்கிய ஆன்ந்தி என்ற படத்தை அன்றைக்கு (1975 வாக்கில்) வெளியிட விடாமல் தடுத்து நிறுத்தியதும் அரசியல் செல்வாக்கு தான், அது மட்டுமல்ல அந்த படத்தில் பாடிய கிஷோர் குமாரின் பாடல்களை இரண்டு வாரத்துக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாது தடை செய்திருந்தார்கள் என்றும் படித்ததுண்டு.

அவ்வாறு ஆன்ந்தி - புயல் என்று தமிழில் அர்த்தம் - படத்தை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கு காரணம் என்ன என்றால், படத்தின் கதை இந்திரா காந்தி அவர்களின் கதையை ஒத்து இருந்தது தான். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படம் வெளியாக முடிந்தது.

குல்சார் சாப் கதை சொல்லும் அழகே தனி. பிளேஷ் பேக் காட்சிகள் இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் படங்களில்  பிளேஷ் பேக் காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரே தடவையில் பிளேஷ் பேக் காட்சிகள் வந்து முடிந்து விடாது, இடையிடையே பிளேஷ் பேக் காட்சிகள் வந்தவண்ணம் இருக்கும். குல்சார் சாபின் படங்களான பரீச்சே, கோஷிஷ், இஜாஜத், அங்கூர், நம்கீன் இன்னும் அத்தனை கவிதை(யான படங்க)ளும் இதற்கு சாட்சி, அதற்கு, இந்த ஆன்ந்தியும் விதிவிலக்கல்ல..

ஆர்த்தி தேவி (சுசித்ரா சென் - இவர் 12B படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன் சென் என்ற நடிகையின் தாயார் மற்றும் தாஜ்மஹால் படநாயகி ரியா சென், ரய்மா சென்ஆகிய நடிகைகளின் பாட்டி)என்ற சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் சந்திரசேன் (ஓம்சிவ்பூரி) மேடையில் காட்டமாக கேள்விகள் கேட்டு இடைதேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் நாடகம் நடத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது.

ஆர்த்தி தேவியை இடை தேர்தல் நடக்கும் ஊருக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர் வந்தால் தங்குவதற்கு இருக்கும் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் எரிந்து சாம்பலாகிய நிலையில் அவர் தங்குவதற்கு ஹோட்டலில் வசதி செய்ய திட்டமிடுகிறார் அவரின் பிரச்சார குழு தலைவர் (ஓம்பிரகாஷ்).

ஒம்பிரகாஷ் ஹோட்டல் மேனேஜர் ஜே.கே.யை (சஞ்சீவ் குமார்) சந்தித்து தங்களுக்கு தெற்கு கிளையில் உள்ள எல்லா அறைகளையும் வேண்டும் என்று புக் செய்கிறார்.

ஜே.கேவுக்கு ஆச்சரியத்துடன், "இவ்வளவு ரூம் தேவைப்படுகிறதே அப்படி யார் வருகிறார்கள்?" என்று கேட்க, "ஆர்த்தி தேவி வருகிறார்", என்றதும் சற்று தடுமாறுகிறார்.

ஆர்த்தி தேவி ஹோட்டலில் வந்து இறங்கியவுடன் அங்கு இருக்கும் ஊதுவர்த்தி, மண் பானையில் தண்ணீர் போன்று அவருக்கு பிடித்தமான அத்தனையும் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார். அவருக்கு பிடித்த பூவையும் ஹோட்டல் சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது. எல்லாம் ஜே.கே.யின் ஏற்பாட்டின் படி தான் நடந்திருக்கின்றது.

ஆர்த்தி தேவி மகிழ்ந்து தனக்கு பிடித்தவைகளை யாரோ தெரிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்.

ஜே.கே விடம் சமையல்காரராக இருக்கு பிந்தா காக்கா (A.K.ஹங்கல்)  என்பவரிடம் "நீங்கள் (ஆர்த்தி தேவியை) பார்த்தீங்களா?" என்று ஜே.கே. கேட்கிறார்

பிந்தா காக்கா, "உங்கள்ட்ட கேக்காம எப்படி போய் பாக்குறது?" என்கிறார்

"இதுல எண்ட்ட கேக்க என்ன இருக்கு? என்னய விட அதிக உரிமை உங்களுக்கு தான் இருக்கு, நீங்க ஆர்த்திய சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்திருக்கிறீங்க.. அப்புறமா பிஸியா இல்லாத நேரமா பார்த்து போய் பாருங்க" என்கிறார்

தொடர்ந்து பிந்தா காக்கா போய் பார்க்க ஆர்த்தி தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார், "நீங்கள் எப்படி இங்க..?" என்று ஆச்சர்யம் கொள்கிறார்

"நான் சாபோடு தான் இருக்கேன்.. இப்ப சாப் இந்த ஹோட்டல்ல தான் வேல பார்க்குறாங்க.." என்கிறார்

ஊதுபத்திக்கும், மண்பானைக்கும், பூக்களுக்கும் அர்த்தம் புரிந்து விடுகிறது ஆர்த்தி தேவிக்கு, "காக்கா, நான் இங்கே கொஞ்ச நாளைக்கு இருப்பேன், நீங்க அடிக்கடி வந்து பாருங்க.." என்று விடைபெறுகிறார்.

"இஸ் மோடு (சாலையில் உள்ள வளைவுகள்) ஸே ஜாதே ஹேய்ன்" - என்ற நினைவுகள் பாடலாக பின்னோக்கி ஜே.கேயின் பார்வைகளில் நகர்கின்றது.

அதாவது குழப்பமான பல வளைவுகளை உடைய சாலையில் நின்று ஆர்த்தி தேவி ஜே.கேயை நினைத்து பாடுகிறார்,

எந்த வளைவுகள் வழியாக நான் போவது?

கற்களாளான அரண்மனை அல்லது மாளிகை(கோடீஸ்வரர்கள் வசிக்குமிடம், கண்ணாடி வீடுகள் (நடுத்தர வர்க்கம் வசிக்கும் வீடுகள் என கொள்ளலாம்), பறவையின் கூடு போன்ற சிறிய வீடு (ஏழைகள் வசிப்பது)

இப்படி பல இடங்களுக்கு வழிகள் இருக்கிறது? - எந்த வழியில் சென்றாள் தன் காதலனிடம் (காதலியிடம்) தன்னை கொண்டு போய் சேர்க்கும்? என்று -

பல பேருக்கு இந்த பாட்டு பிடிக்காது என்று  தான்  நான்  நினைக்கிறேன்   ஏன்னாக்கா  இது மிகவும் அருமையான கருத்தாழமிக்க பாடல் - எங்கே இப்போ உள்ள கவிஞர்களை இதே போல் எழுத சொல்லுங்களேன் பார்ப்போம்? - அவங்க "போடா போடி" என்று எழுதுவார்கள்.

பாடல் நினைவுகள் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முடிவுறுகிறது. ஜே.கே போய் கதவை திறக்கிறார். வாசலில் ஆர்த்தி தேவி. இருவரும் ஒரு கனம் திகைத்து போய் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

இருவரும் கணவனும் மனைவி என்றும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்சிகள் அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கவிதைகளாகவும் பதிகின்றன.

படத்தில் ஒட்டு மொத்த கதை..

ஆர்த்தி தேவி மிகவும் பிரபலமானவர்.தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறார். ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டல் மேனேஜர் தான் தனது கணவர் என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு பிறகு தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் ஈடுபாடுகள் இருந்ததால் குடும்பத்தையும் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது, இதன் காரணமாக கணவனுக்கு மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 9 வருடம் கழித்து மறுபடியும் இந்த ஹோட்டல்ல் சந்தித்து இருக்கிறார்கள்.

ஆர்த்தி தேவி பிரபலமாக இருப்பதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை அரசியலுக்கு பிரச்சினையாக வரக் கூடாது என்று கருதினாலும் தனது கணவரை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது, வெளியே போய் வருவது என்று இருக்கிறார்.

அப்படி வெளியே முதன் முறையாக ரொம்ப நாளைக்கப்புறம் வரும் போது ஒரு பாடல் வருகிறது.

"தேரே பினா ஜிந்தகி சே கோய் சிக்வா தோ நஹி சிக்வா நஹி..
தேரே பினா ஜிந்தகி சே லேகின் ஜிந்தகி தோ நஹி ஜிந்தகி நஹி.."
- என்று வரும் அந்த பாடல்..

அந்த பாடல் காட்சியில் இருவரும் பேசிக் கொள்வது போல் வசனமும் இடம் பெறுகிறது, ஏதோ எனக்கு தெரிந்த மொழியில்.. எனக்கு தெரிந்த வரையில்..

பெண்: ரொம்ப நாளைக்கப்புறம்... வெளியே வர்ர மாதிரி ஒரு உணர்வு...

ஆண்: என்ன அது..?

பெண்: ஒரு யுகம் தாண்டி வந்த மாதிரி இருக்கு

ஆண்: ம்.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு.. (ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை காட்டி) இந்த கட்டடம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அந்த காலத்துக்கு..

பெண்: ம்.. இன்னொரு ஜென்மம் கெடைச்சு வந்த மாதிரி..இல்ல?

ஆண்: நாம் ஒண்ணு செய்வோம்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும் தெனமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரி இருக்கும்.. (ஆர்த்தி தேவி குளிரில் நடுங்குவதை பார்த்து) ஒன் ஷால் எங்கே?

பெண்: நான் மறந்துட்டேன்

ஆண்: நீ இன்னும் மாறவே இல்லை.. இத வச்சுக்க.. (மாட்டி விடுகிறார்)

பாடல் ஆரம்பமாகிறது..

பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை

சரணம் 1:
பெண்:
நான் போய் சேர வேண்டிய இடம் உன் பாதங்களை பின்பற்றியதாக இல்லாமல் வேறு எங்கேயோ தூரமாக விலகி சென்று விட்டது
நீ என்னுடன் இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து நான் போக வேண்டிய இடங்கள் குறைவில்லாமல் இருந்திருக்கும்

வசனம்:

ஆண்: ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..? அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள்.. நீ பகல்ல பார்த்தா தான் தெளிவா தெரியும்

(எதிரே கையை நீட்டி) இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..

(வேறொரு பக்கம் கையை காட்டி)பகல்ல இங்கே.. (என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)

பெண்: ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..

ஆண்: இந்த நிலவை பாரு.. இது ராத்திரியில மட்டும் தான் வரும்.. பகல்ல வெளியே வர்ரதில்ல..

பெண்: இது தான் எப்போதும் வருதே

ஆண்: ஆமா வரும்.. ஆனா எடைல.. அமாவாசை இருக்கு.. உண்மையில.. எப்போதும் அமாவாசை வர்ர நாள்லேந்து தொடர்ந்து 15 நாளைக்கு இருட்டாவே இருக்கும்.. ஆனா இந்த தடவை அமாவாசை வந்ததிலிருந்து ரொம்ப வருஷமா வரவே இல்ல..

பெண்: (தன்னை தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு) 9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..

சரணம் 2:
பெண்:
உன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கிறது..
உன்னுடைய கண்களிலும் அழுததற்கான தடங்கள் தெரிகிறது..

சரணம் 3:
ஆண்:
நீ மட்டும் ஒரு வார்த்தை சொன்னால் இந்த நிலவு மறைந்து போகாமல் தங்கி விடும், இந்த நிலவின் இரவுகள் நீடித்து இருக்கும்..
ஆனால் அப்படி நீ சொன்னால் கூட அது இந்த ஒரு இரவுக்கு மட்டும் தான்.. தொடர்ந்து வாழ்க்கை பூராவும் இருக்குமா என்று தெரியவில்லை


பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை

- இப்படியாக முடிகிறது அந்த பாடல்

கணவன் மனைவியின் பிரிவுகளின் வலியை இவ்வளவு உணர்வு பூர்வமாக எந்த வசனங்களும் பாடல்களும் சொன்னதில்லை என்பது என்னுடைய கருத்து.

படத்தில் ஆர்த்தி தேவியின் அரசியல் எதிரிகள் ஹோட்டல் மேனேஜருடன் ஆர்த்தி தேவிக்கு உறவு என்ற ரீதியில் குழப்பம் ஏற்படுத்த பல பிரச்சினைகள் புயலாக (ஆன்ந்தி) புறப்பட்டு வருகிறது.

ஆர்த்தி தேவியின் அரசியல் வாழ்க்கை, தேர்தல் முடிவு என்னாயிற்று? கணவருடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? சிம்லாவில் படித்து கொண்டிருக்கும் தனது குழந்தையை கண்டாரா? என்பதை எல்லாம் உணர்வு பூர்வமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸை பொறுத்த மட்டில் இந்த படத்தில் சஞ்சீவ் குமாரும், சுசித்ரா சென்னும் நடிப்பு பாடம் நடத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். எக்ஸலண்ட்.
அவுட் ஸ்டேண்டிங்.. மாஸ்டர் பீஸ்..

இந்த படத்தில் வேறு ஏதேனும் நுண்ணரசியல்கள் இருக்கலாம், எனக்கு தெரியவில்லை, ஏனெனில் அந்த பாடத்தில் நான் நர்ஸரி தான் படித்து வருகிறேன்.

பாடல்களை பொறுத்த வரை,

1.
சலாம் கீஜியே என்ற அரசியல் கிண்டல் பாடலும் முஹம்மது ரஃபி வாய்ஸில் கேட்டு மகிழலாம்.



2.
இஸ் மோடு ஸே ஜாதே ஹேய்ன் என்ற அர்த்தமுள்ள கணவன் மனைவிக்கான பாடலும் உள்ளது



3.
தும் ஆகயிஹே நூர் ஆகயா ஹே (நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது) என்ற காதல் பாடலும் உள்ளது



4.
தேரே பினா ஜிந்தகி சே கோயி என்ற பிரிவின் வலியும் உள்ளது




கிஷோர் - லதா - ஆர்.டி.பர்மன் - குல்ஜார் சாப் சேர்ந்தால் பாடல் ஹிட் தானே

சாப்பாட்டிலிருந்து கக்கூஸ் போறது வரை புயல் வேகத்தில் அவசரமாக போய் விட்ட இந்த உலகத்திலிருந்து என்னை அமைதியான மென்மையான் உலகத்துக்கு சில நேரங்களுக்காவது அவ்வப்போது அழைத்து செல்லும் படங்களில் இந்த புயலும் - ஆன்ந்தியும் - ஒன்று என்று தான் நான் சொல்வேன்

Tuesday, September 15, 2009

குரான் ஷரீஃப் - ஓர் அற்புதம்


1

முஸ்லீம்களுக்கிடையே குரான் ஷரீஃப் இறைவனுடைய பேச்சா இல்லையா என்பதில் சர்ச்சையே இல்லை.  ஆஹா..! இந்த விஷயத்திலாவது சர்ச்சை இல்லாமல் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய முடியாது.

ஏனெனில் அவர்களுடைய சர்ச்சை அது எந்த நாளில் இறக்கப்பட்டது என்பதில் உள்ளது. என் போன்றோர் அது ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவன்று இறங்கியிருக்கலாம் என்றும் இல்லை இல்லை அது கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவில் ஏதாவது ஒரு இரவில் இறங்கியது என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் மறுசாரார் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.

சரி, இந்த சர்ச்சை கியாமத் (இறுதி நாள்) வரை நடந்து கொண்டு தானிருக்கும். அதில் நான் அதிகம் கவனம் எடுத்து கொள்ள போவதில்லை.

குரான் ஷரீஃப் உலகத்தின் மிகப்பெரிய அற்புதம் என்று நான் உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறேன். நான் அவ்வாறு கூறுவதற்கு தர்க்க ரீதியான காரணமும் உண்டு.

மூஸா (மோஸல்) நபியவர்கள் கடலை பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்கள். ஈஸா (ஜீஸல்) நபியவர்கள் இறந்தவர்களை உயிர்பித்தார்கள். இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் போன்ற எல்லா வற்றிலும் தீர்க்கதரிசிகள் அல்லது அவதாரங்கள் அற்புதங்களை நிகழ்த்தியதாக தான் காண்கிறோம்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதம் குரான் ஷரீஃப் தான். இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். "இறைவனிடமிருந்து என்ன அற்புதத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.." என்ற கேள்வி அவர்கள் முன் எழுப்பப் பட்டது.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் ஆச்சர்யமில்லை. தீர்க்கதரிசிகளாக தோன்றியவர்கள் ஏதாவது ஒரு அற்புதத்தை செய்து காட்ட வேண்டும் என்பது நியதி.

மேற்கூறிய இந்த கேள்விக்கு முஹம்மது நபிகள் எந்த மந்திரங்களையும் செய்து காட்டவில்லை, எந்த தந்திரங்களையும் செய்து காட்டவில்லை. "குரான் ஷரீஃபே இறைவனிடமிருந்து நான் பெற்ற அற்புதம்" என்றார்கள்.

என்ன அற்புதம் செய்து காட்ட போகிறீர்கள் என்ற  வினாவிற்கு  கடலை  பிளக்கிறேன், மலையை தூக்கிறேன் என்றெல்லாம சொல்லாமல் மக்களுக்கு இறைவன் தன்னை எடுத்து கூற சொன்ன கருத்துக்கள் அடங்கிய நூலை (சிறுநூலுக்குள் அடங்கிய பெருநூலகம் - குரான்  ஷரீஃப் பற்றி அடியார் அவர்கள்) அற்புதம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய அற்புதமான விஷயம் தானே.

2

சஅது பின் ஹிஷாம் என்பவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "திருத்தூதரின் நற்பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா? அவர்களிடம் என்னென்ன குணங்கள் இருந்தன என்பதை விளக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

சஅது பின் ஹிஷாம் அவர்கள் கேட்டது அன்னை ஆயிஷா அவர்களிடம், அதாவது பெருமானார் அவர்களின் மனைவியிடம். ஒருவரை பற்றி சரியாக அவர் மனைவியை தவிர வேறு யார் சொல்லி விட முடியும். வெளியிலே ஆயிரம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டு உள்ளுக்குள் அதற்கு நேருக்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். இப்படி நடப்பது வெளியே நண்பர்களுக்கு கூட தெரியாது. ஆனால் மனைவிக்கு தெரிந்து விடும், "ஆமா எஹ தானே.." என்று மனைவிமார்கள் ஆரம்பித்தால் முடிந்தது கதை..

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நீங்கள் குரான் ஷரீஃபை ஓதுவது இல்லையா?" என்று கேட்டனர்.

'ஆம் ஓதுகிறேன்.." என்றார்கள்

"குரான் ஷரீஃப் போதித்த அத்தனை நற்பண்புகள் அனைத்தும் திருத்தூதரிடம் இருந்தன" என்று தீர்க்கமாக தெளிவாக சொன்னார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதில் இரண்டு செய்திகள் கவனத்திற்குறியவை. ஒன்று பெருமானார் அவர்கள் எதை போதித்தார்களோ அதுவாகவே பெருமானார் வாழ்ந்தது, அதுவும் அவர்களின் மனைவியின் வாயாலேயே அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது, பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியது.

3

இரண்டாவதாக சொன்ன கருத்தில் ஒரு சிறு குழப்பம் உள்ளது. பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியதா? அப்படி என்றால் பெருமானாரிடத்தில் குரான் ஷரீஃபுக்கு முந்தைய வாழ்க்கையில் நற்பண்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததா? என்பதே அந்த குழப்பமாக இருக்கலாம்.

உண்மையில் பெருமானார் அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் தான் தன்னை இறைதூதர் என்று அறிவிக்கிறார்கள். நபிபட்டம் வழங்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்திலேயே பெருமானார் அவர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களை சுட்டிகாட்டி "அதோ அல் அமீன் (நேர்மையின் இருப்பிடம்) செல்கின்றார் என்றும் அதோ அஸ்ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) போகின்றார் என்றும் மக்கா நகர மக்கள் மனமுவந்து கூறி வந்தனர்.

அல் அமீன் அஸ்ஸாதிக் போன்ற பட்டங்கள் நம்மூரில் கிடைக்கும் டாக்டர் பட்டங்கள் போன்று என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உள்ளபடி அப்படி வாழ்ந்தார்கள். பெருமானாரின் வாழ்க்கையை படித்து பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

சரி நான் சொல்ல வந்த செய்தி பெருமானாரை (ஸல்) குரான் ஷரீஃப் மேன்மேலும் பண்படுத்தியது என்பது தான் உண்மை. அது எப்படி என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் விளக்குகிறது.

4

அந்த காலத்தில் மக்கா நகர மக்கள் தியானத்தில் மூழ்க தனிமையை நாடி மலை குகைக்கு செல்வது வழக்கம். அப்ரஹா என்பவன் யானை படையுடன் மக்காவில் அமைந்துள்ள தேவாலயத்தை இடிக்க வந்த போது பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தனிமையை நாடி ஹீரா குகையிலிருந்து விட்டு தான் திரும்பினார்கள்.

அப்படி தான் பெருமானாரும் தனிமையை நாடி ஹீரா எனும் மலை குகைக்கு சென்றார்கள். இரவு பகல் பாராமல் நாள், மாதம், வருடம் தெரியாமல் விளிப்பு நிலையில் இருக்கிறோமா உறக்க நிலையில் இருக்கிறோமா அல்லது இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கிறோமா என்று கூட தெரியாமல் அந்த இருளில் தவம் செய்தார்கள்.

அப்போது ரமலான் மாதம், நள்ளிரவு, தேய்பிறை, ஒளிப்பிழம்பான உருவம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது, பெருமானார் (ஸல்) அந்த ஒளிப்பிழம்பை பார்த்து பயந்து நடுங்கினார்கள்,  பேச துணியவில்லை, என்ன செய்வது என்றே விளங்க வில்லை, எனினும் சில நாட்களாகவே அந்த உருவம் தான் தன்னை கனவிலும் நினைவிலும் பிடிக்க வந்த  அதே உருவம்  என்றும் அதுவே இப்போது முழுமையாக தன்னிடத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்.

அந்த உருவம் அவர்கள் முன் வந்து, "ஓதுவீராக!" என்று கூறியது

'எனக்கு ஓத தெரியாதே..' என்றார்கள் எழுத படிக்க தெரியாத பெருமானார் (ஸல்) அவர்கள்

அந்த உருவம் அவர்களை இறுக கட்டி அணைத்தது. இதயத்தோடு இதயம் இணைத்தது. (இதை தான் சூபியாக்கள் (இறையன்பர்கள்) இதயத்திலிருந்து இதயத்திற்கு என்று கூறுகிறார்கள்)

இப்படியாக மேலே கூறியபடி மூன்று முறை நடந்த பிறகு குரான் ஷரீஃபின் முதல் அத்தியாயமானது அந்த உருவத்தில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஓதிக் காண்பிக்கப்பட்டது. அதையே பெருமானாரும் ஓதினார்கள்.

ஒதி முடித்த பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அந்த நிலையில் பெருமானாரின் நிலையை சொல்லவே வேண்டாம். அச்சமும் திடுக்கமும் நிறைந்தவர்களாக ஹீரா குகையை விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டி அன்னை கதீஜாவிடம் "என்னை போர்த்துங்கள்!" என்று ஏக்கத்திலும் பயத்திலும் சொன்னார்கள்.

எந்த ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த போது பயந்து நடுங்கினார்களோ அதே ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை, இஸ்லாம் மற்றும் முக்கியமாக இஹ்ஸான் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்க முடிந்ததற்கு காரணம் அதே குரான் ஷரீஃப் தான். (இதனை பற்றி விளக்கமாக இங்கே எழுத முடியாதமைக்கு வருந்துகிறேன்)

5

இப்படியாக குரான் ஷரீஃப் பல் வேறு சமயங்களில் அதாவது குறிப்பிட்ட ஒரே தடவையாக அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முந்தைய தூதுவர்கள் மற்றும் பிறர்களின் வாழ்க்கை சரித்திரங்கள், இறைவனை பற்றி அவனின் வல்லமை, ஆற்றல், அழகிய திருநாமங்கள்  பற்றிய வசனங்கள், சட்ட திட்டங்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்கள் இப்படியாக மனிதனுடைய அறிவு ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் உதவும் வசனங்களை கொண்டவையாக இறக்கியருளப்பட்டது.

இதில் உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்று வரும் போது ஒரு முறை உஹது யுத்தத்தின் போது சத்தியத்தின் எதிரிகளால் பெருமானாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் எங்கும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அதை துடைத்துக் கொண்டிருந்த அவர்கள், "தங்களிடம் அனுப்பப்பட்ட தூதரின் முகத்தை இப்படி உதிரத்தால் கோரப்படுத்தும் இவர்கள் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள்?" என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களாக முன் வந்து நான் தான் தூதுவர் என்று கூறவில்லை, அவர்களை இறைவன் அவ்வாறு தேர்ந்தெடுத்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்காக அவர்கள் எந்த கூலியையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இறைவனுக்காக அனுப்பப்பட்ட அவர்களை மக்கள் இவ்வாறு துன்புறுத்துகிறார்களே என்ற வருத்தத்தில் அவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள்.

ஆனால் இறைவனிடமிருந்து இப்படி செய்தி வந்தது, "உபதேசம் செய்வதை தவிர்த்து அவர்கள் விஷயத்தில் உமக்கு வேறு எந்த பொறுப்பும் கிடையாது!"

இன்னொரு இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்து, "உமக்கு ஏற்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையோடு செயலாற்றும்" என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான்

இப்படியாக பெருமானார் அவர்களின் சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் இறைவன் உடனே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுவான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் இறை கட்டளைக்கு அறிவுரைக்கு இணங்கி செயலாற்றி வெற்றியும் பெற்றார்கள்.

பெருமானாரை குரான் ஷரீஃப் மூலமாக பண்படுத்திய இறைவன், "நீர் சிறந்த குணசீலர்.." என்று சான்றிதழையும் அதே குரான் ஷரீஃபிலேயே வழங்கி விட்டான்.

இப்போது நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் சொன்னதன் பொருள் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

6

குரான் ஷரீஃபிலே அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? முஹம்மது தன் வாயாலேயே தான் சொல்கிறார். இது இறைவனின் வார்த்தையன்று என்றும் தனது வாய்க்கு வந்தவாறு சொல்லினர்.

ஆனால் இப்படி பொய்யுரைத்தவர்களை அல்லது ஏற்க மறுத்தவர்களை பார்த்து இறைவன் குரான் ஷரீஃபின் மூலமாகவே சவால் விடுத்தான். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இதை விட சிறப்பான ஒரு வேதத்தை கொண்டு வாருங்கள் என்றும் அப்படி கொண்டு வரவே முடியாது என்றும் கூறினான். பிறகு ஒரு பத்து அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றான், அதுவும் முடியாது போகவே ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றும் சவால் விடுத்தான்.

இறைவன் சவால் விடுத்தது அரேபிய இலக்கிய புலமையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்களே அவர்களிடத்தில். அத்தகைய இலக்கிய மேதைகள், கவிஞர்கள் படித்து பார்த்தனர்.

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்

- குரான் ஷரீஃப் 108 : 1 - 3

இத்தகைய அழகும் ஆழமும் இலக்கிய நடையும் இலக்கன பிழையில்லாமையும் உள்ள அத்தியாயத்திற்கு போட்டியாக அவர்கள் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முயன்றார்கள்;

அவர்களால் இப்படி தான் கடைசியில் கொண்டு வர முடிந்தது, உண்மையில் குரான் ஷரீஃபிடம் சரணடைய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்

மா ஹாதா கலாமுல் பஷர் (இது நிச்சயமாக மனிதனுடைய சொல்லன்று)

7

இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியான அபுஜஹ்ல் தீப்பொறி கக்கினான், ".. முஹம்மதின் தலையை கொன்று வருபவர்களுக்கு என்னிடமிருந்து நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பு.." என்று கஃபாவின் ஹூபல் சிலையின் முன்னே ஆணையிட்டு சத்தியம் செய்தான்.

முப்பத்து மூன்று வயதுடைய இளைஞர் உருவிய வாளுடன் பாய்ந்து சென்றார் முஹம்மதின் தலையை கொய்து வருவதற்கு. வழியில் எதிர்பட்டவர் "எங்கே செல்கின்றீர்?" என்று கேட்டதற்கு "முஹம்மதின் தலையை துண்டிக்க" என்றார் அந்த இளைஞர்.

வழியில் எதிர்பட்ட அவரோ, "முஹம்மதின் தலையை துண்டிப்பது இருக்கட்டும், உம்முடைய தங்கையும் மைத்துனரும் முஹம்மதின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டனரே.." என்றதும் முஹம்மது நபிகளின் இல்லம் நோக்கி விரைந்த கால்கள் அவர் தம் தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தது அப்போது.

கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக் குரல். ஒட்டுக் கேட்டார். கப்பாப் என்பவர் குரான் ஷரீஃபை அழகொழுக ஓதும் குரல் கேட்டது. அந்த ஒலி நாதத்தில் லயிப்பு ஏற்பட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்து தங்கையிடம் என்ன "ஓதிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்

தங்கையும் மைத்துனரும் நடுக்கத்தில். கப்பாப் பயந்து போய் மறைவில். இளைஞரின் கோபம் தாக்குதலை தொடுத்தது. காயத்துடன் தங்கை இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதாகவும், ஓதிக் கொண்டிருந்தது குரான் ஷரீஃபின் வசனங்கள் என்றும் சொல்லவே அந்த குரான் ஷரீஃபின் வசனங்களை தன்னிடம் காண்பிக்குமாறு வலியுறுத்தி அதனை ஓதினார்.

கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, ஓதிக் கொண்டிருக்கும் போதே, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று அவர்களை அறியாமலேயே வாய் விட்டு கூறினார்கள்.

அப்படி கூறியது இஸ்லாத்திற்கு மாறிய தனது அடிமையை அடித்து ஓய்ந்து, "உன் மீது இரக்கப்பட்டு நான் உன்னை அடிப்பதை விடவில்லை நான் களைத்துப் போனதால் அடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று முன்பு கூறி தங்கை வீட்டில் மேற்கூறிய சம்பவத்தில் இஸ்லாத்தை தழுவி பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாவது கலிபாவாக (ஆட்சி தலைவர்) இஸ்லாமிய உலகை ஆண்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தான்.

இவ்வாறு குரானின் ஒலியே எத்தனையோ பேர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து இருக்கிறது.

8

குரான் ஷரீஃபில் நபியே நீர் கூறும் என்று ஆரம்பிக்குமே தவிர நபி இன்னது கூறினார் என்று இருக்காது. அதாவது குரானில் இருப்பது அனைத்துமே இறைவனின் பேச்சு தானே தவிர முஹம்மது நபிகளின் பேச்சு கிடையாது

குரான் ஷரீஃப் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. அந்த அரபி மொழி வேத மொழி மட்டுமல்ல இன்றைக்கு சவுதி அரேபியா மட்டுமின்றி துபாய் ஈராக் முதல் மொரோக்கோ வரை வழக்கு மொழியாகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் குரான் ஷரீஃப் இருந்தாலும் அவை எல்லாம் மூல மொழியான அரேபிய மொழியிலிருந்து அருளப்பட்டதை பதிவு செய்து பிற்காலத்தில் முறையாக தொகுக்கப்பட்டு அப்படியே ஒரு புள்ளியேனும் மாற்றமில்லாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டவையே ஆகும்

இன்னும் சில வார்த்தைகள், வேதங்கள் மக்களுக்காக என்றால் அதை ஏன் மக்களிடமிருந்து மறைக்க வேண்டும். ஒரு வேளை திருமறை என்பதில் வரும் 'மறை' என்பதை தவறாக 'மறைத்து வைப்பது' என்று புரிந்து கொண்டார்களோ என்னவோ?


ஆனால் குரான் ஷரீஃபை மக்களுக்கு எடுத்து கூறும்படியும் மக்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே குரான் ஷரீஃபை மக்களுக்கு போதிக்க மதில் சுவர் மேல் எல்லாம் ஏற வேண்டியதில்லை. எல்லா சம்பூகன்களுக்கும் ஓதுவதற்கு அனுமதியுண்டு. குரான் என்றாலே "ஓதக்கூடியது" அல்லது "ஓதவேண்டியது" என்று தான் பொருள்

நான் எனது ரிபோர்டிங் ஆபிஸருடன் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க போயிருந்தேன். அங்கு கிராஅத் ஓதினார்கள். அதை கேட்டவுடன் இஸ்லாம் அல்லாதவரான அவர் கண் கலங்கி விட்டார்.


குரான் ஷரீஃப் அற்புதம் என்றால் அது வினைத் தொகையை போன்று அற்புதம் நிகழ்த்தியது, நிகழ்த்தி கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தானிருக்கும்.

துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானது சம்மந்தமாக..


தட்ஸ் தமிழ் டாட் காமில் படித்த செய்தி

2 துப்புரவு தொழிலாளிகள் கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட போது விஷ வாயு தாக்கி பலியாகி விட்டதாக படித்தேன்.

அதன் இணைப்பு  இங்கே உள்ளது

இன்றைய தேதிக்கு மனித உயிர்களுக்கு அப்படி ஒன்றும் மதிப்பு கிடையாது. மனித உயிர்கள் என்று கூட என்னால் சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், நாடு, மொழி என்று பிரிந்து கிடக்கிறார்கள்.

ஒரு கதை கூட சொல்வார்கள். அமெரிக்காவின் நியுயார்க் நகரின் சாலையில் ஒரு குழந்தையை நாய் ஒன்று கடித்து கொன்றிருந்ததாம். அப்போது அதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் குழந்தையை காப்பாற்ற வேண்டு நாயை அடித்து கொன்று விட்டார்.

அதை பார்த்துக் கொண்டிருந்த அந்நகரின் காவல் அதிகாரி ஒருவர், ஓடி வந்து குழந்தையை காப்பாற்றிய அவரின் கையை பிடித்து , "வீரமிக்க நியுயார்க் வாசி ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று பாராட்டினாராம்.

அதற்கு அவர், "நான் நியுயார்க் வாசி அல்ல.." என்று பதிலுறைத்தாராம்

உடனே காவலதிகாரி, "பரவாயில்லை.. ஒரு வீரமிக்க அமெரிக்கர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று புன்னகைத்திருக்கிறார்

அதற்கும் அவர், "நான் அமெரிக்கரும் அல்லர்.." என்று கூறினாராம்

"அப்படி என்றால் யார் தான் நீங்கள்" என்று கேட்டதற்கு "நான் பாகிஸ்தானி" என்றாரம்

உடனே அடுத்த நாள் செய்தி தாளில் "தீவிரவாத பாகிஸ்தானி அநியாயமாக நடு ரோட்டில் நாயை அடித்து கொன்றார்.." என்று வந்ததாம்.

இப்படி மனிதர்கள் தான் மனிதர்கள் என்பதை மறந்து அவர்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கும் பல் வேறு சாதி மத நாடு மொழி இனம்  வர்க்கம்  போன்ற முகமூடிகளை அணிந்து சுய முகங்களை இழந்து பல காலங்கள் மறைந்தோடி விட்டது.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் துப்புரவு தொழிலாளிகள் இறந்தால் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேச வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காகத் தான்.

சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

ஊழியர்கள் சாக்கடை அமைக்க, சுத்தம் செய்ய, இருப்பதை மூட, இன்னும் பல்வேறு பணிகளுக்காக பூமிக்கு அடியில் இறங்கி வேலை பார்க்க வேண்டி உள்ளது.

பூமிக்கு கீழுள்ள இடங்களை ஆங்கிலத்தில் கன்ஃபைண்ட் ஸ்பேஸ் என்றும் தமிழில் வரையறுக்கப்பட்ட இடம் என்றும் அழைப்பார்கள்.

இத்தகைய இடங்களின் விளக்கமாவது..

1. உள்ளே செல்வதற்கும் உள்ளிருந்து வெளியேறுவதற்கும் குறைவான வழிகளே இருக்கும்
2. இயற்கையான காற்றோட்டம் இருக்காது
3. இயற்கையான வெளிச்சம் கிடைக்காது
4. அது வேலை செய்வதற்கான இடமல்ல (அதாவது அலுவலகம் போன்றோ கடைகள் போன்றோ அமைக்கப்பட்ட இடமல்ல)

மேற்கூறிய விளக்கங்களையுடைய இடங்களில் ஊழியர்கள் இறங்கும் போது அவர்களுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு ஆபத்துகள் உள்ளது.
அவையாவன..

1. உயிர்வாயு பற்றாக்குறை (ஆக்ஸிஜன் டெஃபிஸியன்ஸி)
2. தீயும் விபத்துகளும் கூட ஏற்படும்
3. நச்சுத்தன்மையுடைய அல்லது விஷத்தன்மையுடைய வாயுக்கள்

இதில் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷ வாயு பத்து லட்சம் பங்கு காற்றில் வெறும் பத்து பங்கு அளவு மட்டுமே கலந்து இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து உள்ளது.

ஆகவே ஊழியர்களை ஆபத்தான வரையறுக்கப்பட்ட இடங்களில் இறங்க சொல்வதற்கு முன்பு தேவையான உயிர்வாயு உள்ளதா என்று சோதிப்பதுடன் எரியக்கூடிய வாயுக்கள், விஷ வாயுக்கள் இல்லை எனவும் 100 சதவிகிதம் உறுதியாக தெரிந்தவுடன் தான் இறங்க சொல்ல வேண்டும்.

மேற்கூறிய இடத்தில் வேலை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அதிகாரிகள் இடத்தை சோதனையிட வேண்டும். அனைவருக்கு பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்.

விபத்துகள் விடுமுறைக்கு செல்வதே இல்லை. "இன்றைக்கு எங்க ஊட்டு காலண்டர்ல நல்ல நேரம்னு போட்டிருக்கு அதனால விஷ வாயு வந்தா கூட எனக்கு ஒண்ணும் ஆவாது" என்றெல்லாம் சொல்லி ஏமாந்து போக கூடாது. பாதுகாப்பு தான் உயிருக்கு உத்திரவாதம்

உயர்நீதி மன்றம் இத்தகைய விபத்துகளை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை இந்த மாத துவக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நல்ல துவக்கம் தான்

இது போன்ற வேலையிட விபத்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்

Sunday, September 13, 2009

ஹலீம் கஞ்சி செய்வது எப்படி?


பகுதி 1:

கடலை பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
துவரம் பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
பச்சை பயிறு - கால் (ரைஸ் குக்கர்) கப் அளவு
பாஸ்மதி அரிசி (அல்லது) பச்சரிசி - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
மேற்கூறிய அனைத்தையும் தண்ணீரில் ஒரு 15 நிமிடத்திற்கு அப்படியே போட்டு வைக்க வேண்டும்

15 நிமிடம் கழித்த பிறகு பருப்புகளை களைந்து அனைத்து தண்ணீரையும் வடித்து விட்டு
உடைத்த கோதுமை யை (முக்கால் ரைஸ் குக்கர் கப் அளவு)
அந்த பருப்புகளில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்

பகுதி 2
கோழியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) அல்லது இறைச்சியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) சின்னசின்ன துண்டுகளாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் (அல்லது) கொத்துகறியும் (கால் கிலோ) வாங்கி வைத்துக் கொள்ளலாம்

பகுதி 3

குக்கரை (பிரஸ்டிஜ் வகை) அடுப்பில் வைத்து
அந்த குக்கரில்
எண்ணெய் (4 சோறு வைக்கிற ஆப்பை அளவு) ஊற்றி
பட்டை (சின்ன துண்டு 1), கிராம்பு (4),
வெங்காயம் (பெரியது 1 1/2), (நன்றாக வதங்கணும், கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால் பொண்ணிறமாக வந்துவிடும்)
இஞ்சி பூண்டு (5 டேபிள் ஸ்பூன்), (மீண்டும் வதங்கணும்)
நன்றாக மீண்டும் வதக்கிய பிறகு
தக்காளி (2),
பச்சை மிளகாய் (4),
மல்லி கீரை (கொஞ்சம்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு தாளித்து

அதுலேயே
மிளகாய் தூள் (1 1/2 டேபிள் ஸ்பூன்),
மிளகு தூள் (1 டேபிள் ஸ்பூன்),
ஜீரக தூள் (1 டேபிள் ஸ்பூன்),
மஞ்சள் தூள் (1 டேபிள் ஸ்பூன்),
உப்பு தூள் (தேவையான அளவு),
கரம் மசாலா (அல்லது) இறைச்சி மசாலா (4 டேபிள் ஸ்பூன்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி

பகுதி 2 ல் உள்ள கோழி அல்லது இறைச்சி அல்லது கொத்துகறியை கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

அடுத்து

பகுதி 1ல் உள்ள அனைத்து பருப்புகளையும் கொட்டி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி குக்கரை மூடி கொஞ்சம் ஆவி வந்தவுடன் குக்கர் வெயிட்டை போட வேண்டும்

குக்கரில் 4 சத்தம் வந்தவுடன் அடுப்பை அடக்கி விட வேண்டும்

ஆவி போனவுடன் குக்கரை திறந்து ஆப்பையில் பருப்பை நன்றாக மசித்து பார்க்க வேண்டும்.

எல்லாம் நன்றாக வெந்து கஞ்சி போல வந்தவுடன் தேங்காய் பால் - 5 கரண்டி (டேபிள் ஸ்பூன்) - ஊற்றி கஞ்சியை எறக்கி விட வேண்டும்

ஹலீம் கஞ்சி தயார்

5 அல்லது 6 பேர் வரை நன்றாக சாப்பிடலாம்

நன்றாக இருந்தால் சொல்லி அனுப்பவும்

Monday, September 07, 2009

ஜட்ஜ் அப்பா (ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில்) - பகுதி 1


நாகூரில் இந்து முஸ்லீம் கலவரம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். நான் லுகாஸ் டிவிஎஸ் ஸில் வேலையில் சேர ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு பயணமானேன். சென்னையில் நான் தங்கியிருந்த வீடு மிக பிரம்மாண்டமான, கம்பீரமான வீடு. மயிலாப்பூரில், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் இருந்த அந்த வீட்டிலிருந்து அண்ணா நகரில் இருந்த இன்னொரு  வீட்டிற்கு  இரவு சாப்பாட்டிற்கு பிறகு புறப்பட  தயாராகிக்  கொண்டிருந்தேன். 

இறைச்சி கறியை கேள்வி கணக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த போது அங்கே அவர்கள் வந்தார்கள், "இந்து, முஸ்லீம்ன்னு சண்டைலாம் போட்டுகிட்டிருக்க கூடாது, வேலைய மட்டும் பார்க்கணும்.." என்று என் கிட்டே வந்து இத மட்டும் சொல்லி விட்டு இல்லை இல்லை சிங்கம் போல் கர்ஜித்து விட்டு நகர்ந்து போகிறார். வாயில் இறைச்சி துண்டோடு எழுந்து நின்று ஒரு பேச்சு பேசாமல் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும் என் வயிற்றுக்குள்ளே இறைச்சி போகவே இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு லுகாஸ் டிவிஎஸ்ஸில் நேர்முக தேர்வு நடந்த போது சென்னையில் எங்கே தங்குவாய்? என்று பாலாஜி என்ற பார்ப்பனர் வாயில் வெத்தலையை போட்டுக் கொண்டே கேட்க,

நான் "மயிலாப்பூரில்.." என்று சொன்னேன்.

"மயிலாப்பூரில் உனக்கு யாரிருக்கா..?" என்று கேட்க

நான் எனக்கு தாத்தா முறையுடைய அன்னாரின் பெயரை சொன்னதும், ஒரு கனம் அவர் பேசவே இல்லை, "அவர்கள் உங்களுக்கு என்ன உறவு..?" என்றார்

நான், "என்னோட தாத்தா" என்று சொன்னேன்

அதற்கு அந்த பாலாஜி என்பவர், "நான் அவரோட படத்த என் பூஜ ரூம்ல வச்சிருக்கேன், தெனமும் கையெடுத்தும் நம்ஸ்காரம் பண்ணிட்டு தான் வேலைக்கே வருவேன்.." என்று பக்தி பெருக்குடன் இணைவைக்க நான் கண் விழி பெருசாவதை உணர்ந்தேன்
-------------------------------------------------------------------------------------------------------------
எனது சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பிடிக்காது என்பதை விட எனக்கு ஒரு கேடும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பள்ளிகூடத்தில் படிக்கிற பசங்க பாகிஸ்தான் வெற்றி பெற்றால் "நீங்க ஜெயிச்சிட்டீங்க.." என்றும் இந்தியா வெற்றி பெற்றால், "என்ன பாய்.. மண்ண கவ்விட்டீங்க போல.." என்பதும் என்னை அவர்கள் மீது பெரிதாக கோவம் வருவதற்கு பதிலாக கிரிக்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆவலை மட்டுமே தூண்டியது.

நாளடைவில் முஸ்லீம்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இரசிகனாகவும் ஆகி போனேன். அதன் பிறகு பாகிஸ்தான் வெற்றி பெற்றால், "எப்படி..? தவுடு பண்ணிட்டான்வோ..?" என்று பீற்றிக் கொள்வதும் உண்டு. இதற்காக நான் தேச துரோகி என்று வர்ணிக்கப் பட்டேன். சில நண்பர்கள் (?) "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் நீ பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே, நீயெல்லாம் பாகிஸ்தானுக்கு போ" என்று மிகுந்த அன்புடன் என்னை வற்புறுத்துவார்கள்.

அதையெல்லாம் நினைக்கையில், எனக்கு மர்ஹூம் பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது, "பாகிஸ்தான், காலிஸ்தான், ஏண்டா எங்களுக்கு என்ன கபுருஸ்தானா?" என்று கேட்பார்.

சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன், மேலே சொன்ன மயிலாப்பூர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது, மரியாதைக்குறிய அவர்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்றோடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த ஆவலோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அப்போது சயீது அன்வர் வேகமாக வந்த பந்தை ஒரே விளாசு விளாச அது தென்னை மர உயரத்துக்கு பறந்து போய் காய்ஞ்சு போய் விழுற மட்டையாட்டம் ஒரு பீல்டரின் கைக்கு லட்டு போல் வந்து கொண்டிருக்க,  நான் சும்மா இல்லாமல், பாகிஸ்தான் அணி ஏனக்கு விருப்பத்திற்குறிய அணியாக இருந்த காரணத்தினால் "போச்சு.. போச்சு.." என்று என்னை மறந்து கத்தி விட, அவர்கள் என்னை திரும்பி பார்த்தார்கள். நான் எச்சில் விழுங்கினேன்.

அன்னாரின் மகளார் வேறு சும்மா இல்லாமல், "இவரு பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட்.." என்று மாட்டி விட்டு விட்டார்.

நான் பதறி போய், "இல்ல..இல்ல.." என்று கத்தி வைக்க

"விளையாட்டு தானே.. இருந்து போவட்டும்..." என்று சொன்னதும் "அப்பாடா.." என்றிருந்தது எனக்கு. இது பாகிஸ்தான் அந்த மேட்சில் தோற்று போய் நான் வருத்தப்பட்டது சம்மந்தமில்லாத செய்தி
-------------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள். முக்கிய நபர்கள் வர வேண்டி இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நேரமும் வந்து விட்டது.

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களிடம் சென்று, "ஐயா, இன்னும் முக்கிய புள்ளிகள் வரவில்லை.. என்ன செய்ய?' என்பது போல் கேட்க, நிகழ்ச்சியை குறித்த நேரத்துக்கு தொடங்கியாக வேண்டும் என்று உத்திரவிட்டார்கள். "அப்ப கரெக்ட் டயத்துக்கு வந்து ஒட்கார்ந்து இக்கிறவன்லாம் என்ன கேனையனா..?" என்பது போல் கேட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.

இதன் காரணத்தினால் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூட அன்னாரின் வீட்டு திருமணத்திற்கு வந்த போது, கடிகாரத்தை காட்டி, "குறித்த நேரத்துக்கு சரியா வந்துட்டேன்.." என்று அன்பொழுக சொல்லி தழுவிக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------

மேலே தொகுக்கப்பட்ட அத்தனை செய்திகளிலும் நாயகர் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஜட்ஜ் அப்பா என்று எங்கள் குடும்பத்தார்கள் எல்லோரும் மரியாதையுடன் அழைக்கும் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்ம்மாயீல் அவர்கள் தான்.

தொடரும்...

Saturday, August 22, 2009

நோன்பு


பெண்ணாசையை போலவே மனிதனுக்கு வரும் ஆசைகளில் உணவாசையும் மிக வலிமையானது இன்னும் சொல்ல போனால்  பெண்ணாசையை விட உணவாசை வலிமையானது என்றே நான் சொல்வேன்.

ஏனெனில் உணவுக்கும் மனிதனுக்குமான பந்தம் தாயின் கருப்பையிலிருந்தே தொடர்கிறது அல்லவா?. வயிற்றுக்குள் இருக்கும் சிசு தாயின் உணவை தானும் உண்கிறது. கருத்து தெரிந்த பின்னர் வேண்டுமென்றால் பெண்ணாசை அல்லது பொன்னாசை வரலாம். கருப்பையில் இருக்கும் போதே உணவு பழக்கம் தொடங்கி விடுகிறது.

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரு வயிறுக்கு சாப்பிட்டால் எங்க ஊரில் (நாகூரில்) மட்டும் ஏழு வயிறுகளுக்கு சாப்பிடுவார்கள். எனது சின்னாப்பா அவர்கள் அவர்களது நண்பர் ஒருவரை காலையில் தேநீர் அருந்த வீட்டிற்கு அழைத்தார்கள்,  இப்படியாக, "வாருங்கணி, தேத்தனி குடிக்கலாம்", அதற்கு அந்த நண்பர், "இருங்கணி கடைல போய் குடிச்சிட்டு வர்ரேன்.." என்று கிளம்பி போய் கடையில் தேத்தணி குடித்து விட்டு விறுவிறுவென்று வீட்டிற்கு போனார், காலைக் கடனை முடித்தார், திரும்ப வீட்டிற்கு வந்து தேத்தணி குடித்தார், ஏன் இந்த மாதிரி என்றால் வீட்டில் குடிக்கும் நல்லா போட்ட தேத்தணி வயித்துல கொஞ்சம் நேரம் இருக்கணும் அதுக்காக தான் என்கிறார்.

இத்தகைய உணவாசையை கட்டுப்படுத்துவது என்பது கொஞ்சம் அல்ல அதிகம் சிரமமான காரியம். கடவுள் பாதி மிருகம் பாதி என்று தொடங்கும்  பாட்டில் மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்ப்பதாகவும் கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே என்றும் தவிக்கிறது.

மிருகத்தை கொன்று கடவுள் வளர்க்க என்ன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த  பாடல் சொல்லவில்லை. 

காட்டுக்கே ராஜாவான சிங்கம் கூட சர்க்கஸில்  ரிங் மாஸ்டரின் குச்சிக்கு கட்டுபட்டு நிற்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் அவரது தலையை சிங்கத்தின் வாயில் விடும் போதும் அந்த சிங்கம் (மிருகம்) ஒன்றும் செய்யாமல் இருக்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் எப்படி அந்த சிங்கத்தை சொல்பேச்சு கேக்கும் கிளிபிள்ளையாக மாற்றியிருப்பார்.

அங்க தான் இருக்கு விஷயம். பட்டினி போட்டு பழகுவது. கிட்டதட்ட நமக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுப்படுத்துவது கூட அந்த முறையில் சாத்தியமாகும்.

மோசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) மற்றும் ஜீசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களும் 40 நாட்கள் நோன்பு இருந்ததாக எக்ஸோடஸ் 24:18 மற்றும் மேத்திவ் 4:2 லும் முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம்" என்று குரான் ஷரீஃப் கூறுகிறது (2:183)

மேலே கண்ட வசனத்தில் "தக்வா" என்ற அரபி வார்த்தைக்கு "பயபக்தி" என்ற தமிழ் வார்த்தையாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. வேறு சில மொழிபெயர்ப்பில் இதே "தக்வா" எனும் வார்த்தைக்கு "சுயக்கட்டுபாடு" என்பது போலவும் அர்த்தம் காணப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்து வீட்டில் எல்லாம் இருக்கும் போதே கோபித்துக் கொண்டு பிடிவாதமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி சாப்பிடாமல் சுயகட்டுபாட்டோடு நோன்பிருந்தாலும் பயபக்தி வந்து விடாது.

இப்படியும் சில நண்பர்கள் கேட்கிறார்கள், "நோன்புங்கறீங்க.. நோன்பு தெறக்கும் போது சேத்து வச்சு சாப்பிடுறீங்களே?" என்று

அதாவது எப்படா நோன்பு திறக்குற நேரம் வரும் என்று பார்த்துக்கிட்டிருந்து நோன்பு திறந்தவுடனே அடக்கி வச்சதை தொறந்து விட்ட மாதிரி 10 சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து தள்ளுவது.

நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு இஸ்லாத்தில் தோன்றிய முதல் புதுமை (பித்அத்) வயிறு முட்ட சாப்பிடுவது தான் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் இஹ்யாவில் எழுதியுள்ளார்கள்.

பெருமானார் பெரும்பாலும் தண்ணீரும் பேரிச்சம்பழம் கொண்டு தான் நோன்பு வைப்பார்கள் நோன்பு திறப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க  வேறு சிலரோ , "ஏன் நீங்கள் இப்படி உங்களையே நீங்கள் எல்லாரும் வருத்திக் கொள்கிறீர்கள்.." என்று மிகவும் அக்கறையாக கேட்கிறார்கள்

எனக்கு மௌலானா ரூமி எழுதி நாகூர் ரூமி அவர்கள் மொழி பெயர்த்த கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது

பால்குடி மறக்கடிப்பது
பட்டினி போடுவதற்கல்ல!
காம்பு மறுக்கப்படுவது
கருணையின் பொருட்டே!

இப்படி உணவு மறுக்கப்படுவது கூட
இறைவனின் கருணையின் பொருட்டு தான்.

நோன்பில் இன்னொரு விசேசம் நோன்பு திறக்கும் நேரம் தான். நம்ம இஷ்டத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நோன்பு திறக்க முடியாது. எல்லோரும் காத்திருப்பார்கள். குறித்த நேரம் வந்தவுடன் நோன்பு திறந்து விடுவார்கள். இதில் என்ன பெரிய விசேசம் இருக்கிறது என்று கேட்கலாம்.


சிலர் தன்னை எப்போதும் மற்றவர்களை விட பெரிய பக்திமானாக காட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. அவ்வாறு நினைத்து கொண்டு மற்றவர்களை விட நான் தான் அதிக நேரம் நோன்பிருந்தேன், ஆகவே நான் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவன் என்று கதை விட முடியாது.


நோன்பு என்பது ஒரு பயிற்சி
நோன்பு என்பது சுத்தப்படுத்துதல்

பேசப்பட்ட வார்த்தைகளை விட பேசாத மௌனங்களுக்கு தான் வலிமை அதிகம். வெளிப்படையான வணக்கத்தை விட மறைவான வணக்கத்திற்கு தான் வலிமை அதிகம்

நோன்பு ஒரு மறைவான வணக்கம்.
நீங்கள் யாரிடமும் சொல்லாத வரை யாருக்கும் நீங்கள் நோன்பாளி என்பது இறைவனையும் உங்களையும் தவிர.வேறு யாருக்கும் தெரியாது.

சில ஒழுக்கங்களை கடைபிடிப்பதை தான் "தக்வா" என்று இறைவன் கூறுகிறான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அது இறைவனின் எண்ணம் தான் என்று எல்லாம் என்னால் அடித்து கூறி மேடைக்கு அழைத்து வாதாட முடியாது.

அதுவும் தவிர வாதாடுவதற்கு என்று பிறை பார்ப்பது, தராவிஹ் தொழுகையா இரவு தொழுகையா? அப்படியே எதுவோ ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அது 8ஆ 20ஆ? என்று வாதாட நிறைய செய்திகளும் ஆட்களும் மன்னிக்கவும் ஆலிம்களும் இருக்கும் போது நான் வேறு எதற்கு வாதாட வேண்டும்.

நாகேஷ் கௌரவம் படத்தில், "நான் 3 மாசம் தான் கஷ்டப்படுவேனாம்.. " என்பார்

அதற்கு இன்னொருவர் ஆர்வமாக, "அதற்கப்புறம்.." என்று கேட்பார்

'அதுவே பழகிடுமாம்.." என்பார்

இது அர்த்தமுள்ள நகைச்சுவை.

உண்மையில், நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி பழக்கப்படுத்தி விட்டால் கஷ்டமே இருக்காது அல்லது தெரியாது. இது மனித இயல்பு

பசியை பழகுவோம்
ஒழுக்கம் பேணுவோம்