Friday, June 22, 2007

ஆச்சிமா


இவர்
என் தந்தையின்
அன்னை-
'இஸ்மாயில்'
என பெயரிட்டார்
என்னை

சஹர் உணவிலேயே
சதை போடுது இங்கே
பலருக்கு-
வருஷம் முழுதும்
நோன்பு பிடித்த தேகம்
இவருக்கு

பரணில் குரானை
தூங்க வைத்த பாவம்
எங்களுக்கு-
பொருளோடு குரானை
தூங்காமல் படித்த பெருமை
உங்களுக்கு

புரியவில்லை எனக்கு-
உலகமே தெரியாது
என்பதால்
சொத்து சுகம்
கேட்கவில்லையா?
உலகமே நிலைக்காது
என்பதால்
சொத்து சுகம்
சேர்க்கவில்லையா?

ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!

தேநீரிலும்
வெறுநீரிலுமே
உங்கள் வயிறு
நிரம்பியது
ஒடுக்கலானையும்
அத்தரையுமே
உங்கள் மனசு
விரும்பியது

உங்களது
கஜானா குறைந்தால்
அபாய் அப்பாவிற்கு
கைகள் தான் அரித்தது-
அபாய்அப்பா
சொல்லாமல் போனதால்
உங்களது
இதயம் அல்லவா துடித்தது

சேத்தநானாவாம்
சேத்தப்பா
தங்கச்சி என்றழைத்த
பொன்னாச்சி(மா)
அன்பிற்கு
இரு சாட்சி-
மறைந்து போனதே
அந்த
அழகிய காட்சி..!

வாழ்வில்
அயர்ந்து உறங்கி
உங்களை யாருமே
பார்த்தது இல்லை
என்றா
ஐந்தாண்டுகள்
உறக்கத்திலேயே
இருந்தீர்கள்!

யாயிச்சாவிற்கு மட்டுமா
என்ன..?
பிள்ளை சபியாவிற்கும்
பேரன் அன்சாரிக்கும்
அல்லவா
குழந்தையாய்
இருந்தீர்கள்!

ஆச்சிமா..!
உங்கள் வாழ்க்கை
இருக்கிறது
எனக்கு
ஆச்சரியமா..!

ஊர் வந்தால்..
உங்களை தான்பார்க்க முடியாது
என எண்ணியிருந்தேன்..!
நீங்கள்
வாழ்ந்த வீட்டையும்
பார்க்க முடியாது
போலும்..!
என் செய்ய
பேய் பிடித்தால்
பாப்பாவூர்
ஊர் சொல்கிறது-
பணம் பிடித்தால்
எந்தஊர்
ஊர் சொல்லுமா?

யாரங்கே..!
இனி
'ஆச்சி(மா) வீடு எங்கே?'
என எவரும் கேட்டால்
என் இதயம்காட்டுங்கள்..!
காசுக்கு கல் தான்
விலைபோகும்
என் கல்புமா
விலை போகும்..?

கண்ணீர் துளிகளுக்கிடையே
இந்த கவிதை துளிகளையும்
சிந்தியது..

இஸ்மாயில்