Wednesday, September 26, 2007

காதல் அழிவதில்லை - சிறுகதை


வானம் தவணை முறையில் வெளிச்சத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம்.

நீங்க எப்படி ஆரம்பிக்க போறீங்க? சுஜாதா கேட்டாள்.

அவள் காதலன் சுந்தர் சலைத்துக் கொண்டான்,” சே.. காதலை காதலிக்கிட்ட சொல்ற அவஸ்தையை விட வீட்ல சொல்ற அவஸ்தை தாங்க முடியலை”.

சுஜாதா, “நீங்க கண்டிப்பா சொல்லிடுவீங்களா? என்றாள்.

சுந்தர், சொல்லாமல்.. நான் அப்பாகிட்ட எப்படி சொல்றதுன்னு ஒத்திகை பார்த்துட்டேன். நீயும் கண்டிப்பா சொல்லிடு” என்றான்.

சுஜாதா பதறினாள், “சம்மதிக்கலைன்னா..?”

சுந்தர் தீர்மானமாக சொன்னான், சம்மதிச்சா நல்ல சன்னதியில கல்யாணம்- சம்மதிக்கலைன்னா நாளை ROMல் கல்யாணம்”- இருவரும் புறப்பட்டார்கள்-

சுந்தர் வீடு-

அப்பா பாலசந்தர் கத்தினார்- “உனக்கு கல்யாணத்துக்கு இது தருணம் அல்ல- நான் செத்து போயிடலை உனக்கு எப்ப பெண் பார்க்கணும்னு எனக்கு தெரியும் அது வரைக்கும் பேசாமல் இரு- நான் வேற எதையும் கேட்க தயாராயில்லை”.

சுஜாதா வீடு-

விவாகரத்தான அக்கா வித்யா திட்டினாள்- “இன்னும் படிப்பு முடியலை பெரிசா படிச்சு முன்னுக்கு வரப் போறேன்னு சொன்னே- காதல், கத்திரிக்காய் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்கிற வழியை பாரு- உனக்கு காதல் இப்ப ரொம்ப முக்கியம் இல்லை- வேற ஏதாவது என் கிட்ட சொல்லணுமா?

ROM-

இனிதாக திருமணம் நடந்தது- மணமக்கள் இருவரும் மாலையும் கையுமாக வெளியே வந்தார்கள்- அதிர்ந்தார்கள்- வெளியே சுந்தரும் சுஜாதாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்- சற்று முன் திருமணம் நடந்தது அல்லவா? அதில்
மணமகன்- பாலசந்தர்(சுந்தர் அப்பா)
மணமகள்- வித்யா(சுஜாதா அக்கா)

அழகு - சிறுகதை


“ஏங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்களே கவனிச்சீங்களா?” என்று தன் கணவன் குமாரை கேட்டாள் ரூபா.

குமார் அந்த கேள்வியில் ஆர்வம் இல்லாதவனாக, “அதுக்கு என்ன இப்ப?” என்றான்.

ரூபா எரிச்சலாக, “உங்கள்ட்ட போய் சொன்னேனே, அட... வேறு ஒண்ணுமில்லைங்க..அந்த பொண்ணு வெளியேயே வரலை, ஏன் தெரியுமா?” என்றாள்.

குமார் அலட்சியமாக, “ஓஹோ! அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சு போச்சா, சரி சொல்லேன்.. ஏனாம்?” என்றான்.

ரூபா,”அந்த பொண்ணை ஜன்னல் வழியா பார்த்தேன்.. ஸ்கேல் வச்சு அளந்து எடுத்து பொன்னால செஞ்ச சிலை மாதிரி இருக்கா, அவ்வளவு அழகு- ஆனால் அவ மாப்பிள்ளை.. அய்யோ..! கரிசட்டி! தேயிலை கல்ரு.. 4ஆர் சைஸில் ஒரு போட்டொவே தலையில ஒட்டலாம்.. வழுக்கைதலை.. நல்லா வீடு கட்டி சாப்பிடுவான் போல, ஆள் வர்றதுக்கு முன்னாடியே வயிறு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி போவுது..” என்று தொடர

குமார் கையமர்த்தினான்,”இரு.. இரு.. அடுத்தவங்களை பத்தி இப்படி பேசறது தவறு.. இதுக்கு மேல தாங்காது.. நான் குளிக்க போறேன்” என்று குளியலறைக்குச் சென்றான்.

ரூபாவுக்கு இருப்பு கொள்ளவில்லை, அதே குடியிருப்பில் வேறு தளத்தில் வசிக்கும் தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று சற்று முன் பேசியதை மறு ஒலிபரப்பு செய்தாள்.

இருவரும் வெறும் வாயை மென்றே ஏப்பம் விடுபவர்கள்- அவல் கிடைத்துள்ளது சும்மா விடுவார்களா? இருவரும் வம்பளந்தார்கள்- நாளை ரூபாவின் பக்கத்து வீட்டிற்கு செல்வது என முடிவெடுத்தார்கள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்தான் ராஜேஷ், வாசலில் பார்த்த முகமான ரூபாவை கண்டு புன்முறுவலுடன்ரூபா, ஜெயந்தி இருவரையும் வரவேற்றான்,””உள்ளே வாங்க..”

இருக்கையை காட்டி”உட்காருங்கள்” என்று உள்ளே சென்றான்.

ரூபா ஜெயந்தியிடம், “அவ வரட்டும், நான் கேட்கிறேன்,’ஏன்ம்மா, வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?- காதல் திருமணமா?- ஆள பார்த்தா எமனுக்கு வாகனமா இருந்தவர் போலிருக்கே.. இவரை போய்..” என்று முடிக்குமுன்

விவாகரமான ஜெயந்தி குறுக்கிட்டு, “நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன் எப்படி இந்த ஆள் பக்கத்துல படுக்க முடியுது?” என்று கூறி சிரித்து யாரோ வரும் சத்தம் கேட்டு சதாரித்து அமர்ந்தனர்.

ராஜேஷ் தன் மனைவி உமாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி கொண்டு வந்தான்.

ரூபா, ஜெயந்தி அதிர்ந்தனர். இருவரும்,”இவங்களுக்கு..” என்றனர்.

ராஜேஷ் சொன்னான், ஆமாம்.. ஒரு விபத்துல கால் போயிடுச்சு.. அந்த அதிர்ச்சியில பேச்சும் போயிடுச்சு” என்றான்.

இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சக்கர நாற்காலியில் புன்னகையுடன் உட்கார்ந்திருக்கும் அந்த பெண்மணியை பார்த்தார்கள். அவளோ தன் கண்வனிடம் திரும்பி சைகையில் ஏதோ சொல்ல, ராஜேஷ், ”அடடே... பாருங்க.. நான் மறந்தே போயிட்டேன்.. என்ன சாப்பிடறீங்க..” என்றான்.

இருவரும் கண்ணீர் மல்க பார்த்தனர். அப்போது ராஜேஷ் அவர்களுக்கு அழகாக தெரிந்தான்

மணவாழ்வு - சிறுகதை


சிங்கப்பூர் கிம் செங் சாலையின் வாரத்தின் கடைசி நாள் ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தது. ‘கிரேட் வர்ல்ட் சிடி(Great World City)’ என்ற பிரமாண்ட கடை தொகுதி(shopping complex)க்கு எதிரே கிம் செங் பிளாசாவை ஒட்டி சாலையின் ஓரத்திலேயே மஞ்சள் கோடு போடப்பட்டிருந்ததை மறைத்துக் கொண்டு ஒரு சீருந்து வந்து நின்றது.

சீருந்தின் இயக்கத்தை நிறுத்தாமல் சுட்டிக் காட்டும் விளக்கை போட்டு விட்டு சீருந்தில் இருந்து இறங்கி அந்த சிறிய உணவகத்தில் நுழைந்தான் அவன்.

அந்த சாலையோர கடையில் தேத்தணி குடித்ததற்கு வெள்ளி(காசு) கொடுத்து விட்டு திரும்பிய ராஜேஷ் அதிர்ந்தான். போக்குவரத்து துறை அதிகாரியான அந்த பொண்மணி ராஜேஷின் சீருந்தின் மீது ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

ராஜேஷ் பதட்டத்துடன் ஓடி வந்து, ‘சாரிலா.. இப்ப தான் வந்தேன்.. உடனே எடுத்துடறேன்..’ என்றான்.

மேக்கப் போடாமலே அழகாக இருந்தாலும் மேக்கப் போட்டு அழகை கூட்டாமல் அழகை கெடுத்திருந்த உமா சொன்னாள், ‘இந்த மாதிரி மஞ்சள் கோடு போட்டிருந்தா மொதோ காடிய நிறுத்தவே கூடாதுன்னு தெரியாதா?’ என்று.

ராஜேஷ், ‘தெரியும் மேடம் அதான் இப்ப எடுத்துடறேன்னு சொல்றேன்ல..’ என்றான்.

சொல்லி முடிக்கு முன், ‘சத்தம் போடாதீங்க.. டோண்ட் ஷவுட்.. ஓகே.. எதாயிருந்தாலும் ஆபீஸ்ல போய் பேசிக்குங்க..’ என்று அதிரடியாக கூறிவிட்டு தன் வாகனத்தில் ஏறி பறந்தாள்..

ராஜேஷ் அஞ்சலகம் சென்று சிங்கப்பூர் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக வரிசையில் நின்று அபராதத்தை கட்டினான்.

ராஜேஷ் மீண்டும் அவன் வேலை பார்க்கும் அலுவலகம் சென்று சில வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினான்.

குளியலறை சென்று களைப்பு நீங்கி ஹார்லிக்ஸ் போட்டு குடித்துக் கொண்டே தொலைகாட்சியை இயக்கி விட்டு ‘அப்பாடா..’ என்று சோபாவில் சாய்ந்தான்.

சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ராஜேஷ் அசைய கூட இல்லை. கதவை திறந்து கொண்டு உமா உள்ளே வந்தாள்.

நேராக படுக்கையறை சென்றாள். தோல்பையை எடுத்து வீசினாள். அந்த பை ராஜேஷ¤ம் உமாவும் மணக்கோலத்தில் எடுத்த புகைப்படத்தின் மீது போய் விழுந்தது.

உமா அந்த புகைப்படத்தை எடுத்தாள். இமை கொட்டாமல் சிறிது நேரம் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இதய ஒளியை சோக மேகம் மூடியது..
கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது..

அந்த புகைப்படம் அவர்களது பழைய காதல் கதையை சுருக்கமாக நமக்கு எழுதி காட்டுகிறது.. படித்து பார்ப்போம்..

ராஜேஷ் தான் எப்போதும் செல்லும் ப(B)•பலோ சாலையில்(buffalo road) உள்ள ‘புளு டயமண்ட்’ கடையில் புகுந்தான். எப்போதும் அமரும் அதே இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.

பிடித்த உணவு பதார்த்தங்களை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தொலைபேசி மணி அழைத்தது..

தனது கை தொலைபேசியை எடுத்து பார்த்தான். அவனுக்கு அழைப்பு வரவில்லை. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று யோசித்த விநாடி பக்கத்து நாற்காலியில் ஒரு தொலைபேசி இருப்பதை கண்டான்.

‘பிரைவேட் நம்பர்’ என்று காட்டிய அந்த அழைப்பிற்கு ‘ஹலோ’ என்று பதில் கொடுத்தான்.

மறுமுனையில் தேனினும் இனிய குரல், ‘ஹலோ.. என் பேர் உமா சார்.. நீங்க இப்ப பேசறது என்னோட ஹேண்ட் போன் தான் நான் தான் மறந்து வச்சுட்டேன்..’ என்று அழகாக இனித்தது.

ராஜேஷ் குரலை கேட்ட மாத்திரத்திலேயே குரலுக்குறிய முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், ‘என் கிட்டே தான் பத்திரமா இருக்கு..’ என்றான்.

உமா, ‘சார் நான் இப்ப ‘பாஸிர் ரிஸ்’ ல இருக்கேன்.. நீங்க எப்போ எங்கே வர சொல்றீங்களோ அங்க வந்து வாங்கிக்கறேன்..’ என்றாள்.

ராஜேஷ் இடத்தை சொன்னான்..
நேரத்தை சொன்னான்..
அடையாளத்தை சொன்னான்..

ராஜேஷ் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருந்தான் என்பதை விட தவமிருந்தான் என்பதே சரி..

உமா எனும் பூலோக தேவதை அடையாளம் கண்டு வந்தது..
ராஜேஷ் மட்டும் கவிஞர் வாலியாக இருந்திருந்தால் ‘என்ன விலை அழகே?’ என்றும் கவியரசு வைரமுத்துவாக இருந்திருந்தால் ‘அன்பே.. அன்பே.. கொல்லாதே..’ என்றும் பாடியிருந்திருப்பான்.

அவன் ராஜேஷாக இருந்ததால்..

‘உனது பேச்சு என்னவோ
தென்றல் தான்
ஆனால்
என் மனதில்
புயலின் பாதிப்பை
அல்லவா ஏற்படுத்திவிட்டது’ என்று
யோசிக்க மட்டும் முடிந்ததே பெரிய விஷயம் தான்.

எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் உமாவை பார்க்கும் முன்னாடியே பார்க்க துடித்தது எப்படி?

எல்லா அழகும் காதலை சொல்லி விடுவதில்லை. காதலை சொல்லும் அழகு மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அந்த மாற்றம் இப்போது ராஜேஷ¤க்கு ஏற்பட்டிருந்தது.

ஆமாம், ராஜேஷ் உமா மீது காதல் வயப்பட்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழ் திரைப்படத்திலும் சொல்வார்களே, அதே love at first sight தான்..

காதல் என்ற இரத்தம் இல்லாத இரசாயன யுத்தம் தொடங்கியாகி விட்டது. இனி காதல் வெற்றியை அறிவிக்க வேண்டும்..

காதலை சொல்வது எப்படி? புஸ்தகம் கடையில் விற்கிறதா? சிராங்கூன் சாலையிலும் குட்டி இந்தியா கடைத் தொகுதியிலும் தேடிப் பார்த்தான்.

ஒரு முறை துணிந்து விட்டான். எப்படியும் சொல்லி விடுவது என்று எண்ணி தொலைபேசியை கையிலெடுத்தான். வந்த தைரியம் ரிடர்ன் டிக்கெட் வாங்கி விட்டு வந்த வழியே சென்று விட்டது.

தொலைபேசியை கையிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது மணி ஒலித்தது. அழைப்பது ‘உமா’ என்று சொல்லியது.

எடுத்து ஒரு வித கலக்கத்துடன், ‘ஹலோ’ என்றான்.

உமா, ‘உங்களை இன்னைக்கு சந்திக்கலாமா?’ என்று கேட்டாள்.

ராஜேஷ் அதற்காக காத்திருந்தவனாக, ‘எப்ப? எங்கே?’ என்றான்.

இருவரும் சந்தித்தார்கள்.

உமா தான் முதலில் தைரியமாக ஆரம்பித்தாள், ‘நா சொல்றேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க.. நான் உங்கள காதலிக்கிறேன்..’ என்று..

போச்சுடா.. உமாவிற்கும் அதே love at first sight தான் போலிருக்கிறது..

வானம் தூறலாவது போடாதா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தவனுக்கு அடைமழையையே பரிசாக பெற்றது போலிருந்தது ராஜேஷ¥க்கு.

அவர்களது காதல் கூட அழகு தான். காமம் என்பது காதலர்களுக்கு உறியது அல்ல தம்பதிகளுக்கு உறியது என்பதை நன்றாகவே அந்த தமிழ் நெஞ்சங்கள் உணர்ந்திருந்தது.

பெரிய ஆச்சரியம் தான் இல்ல..

எதிர்ப்பே இல்லாத காதல். அதாவது இருவரது பெற்றோர்களுக்கும் இருவரது குடும்பங்களையும் பிடித்திருந்தது.

அழகிய திருமணம். மலரினும் மெல்லிது காமம் என்ற குறளுக்கு ஏற்ப சிறப்பான தாம்பத்ய வாழ்க்கை..

அந்த புகைப்படம் சொன்ன கதையை நாம் படித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ராஜேஷ் வசந்தம் சென்றல் தொலைக் காட்சியில் பவளகாந்தம் கந்தசாமி அவர்கள் அழகிய தமிழில் வாசித்த தமிழ் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.

போக்குவரத்துறை அலுவலக பணிமனை சிற்றுண்டிச்சாலை..

‘இவர் இந்த அளவுக்கு ஏன் மேல வெறுப்பு காட்டுவார்ன்னு நா நினைக்கவே இல்லலா..’ என்றாள் உமா

‘என்னாச்சு.. ஜி.எம்.(general manager) கூப்டாரே என்ன சொன்னாரு..’ என்றாள் உமாவின் தோழி ரமா.

‘இல்ல.. நேத்து ரோட் ஓரத்துல கார நிறுத்திட்டு உள்ள போயிருந்தாரு.. நான் சூரா வச்சேன்.. அது தப்பா.. அது பீக் அவர் தெரியுமா..?’ என்றாள் உமா.

‘சரி இப்ப என்னாச்சு அதனால..’ என்றாள் ரமா.

‘நான் தான் சொன்னேன்.. எதா இருந்தாலும் ஆபீஸ்ல வந்து பேசிக்குங்கன்னு.. ஆனா அதுக்காக ஆபிஸ்க்கு போன் பண்ணி என்ன பத்தி கம்ப்ளய்ண்ட் கொடுத்திருக்காருலா..?’ என்று அழுதாள் உமா.

கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். ஆனால் வெறுப்பு வந்து விடக் கூடாது.
காதலித்து செய்த திருமணம்..
பெரியோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம்..
இன்று நீதிமன்றத்தின் வாசலில் வந்து நிற்கிறதே..
புரிந்து கொண்டவர்கள் பிரிய நினைப்பது ஏன்..?

இந்த அவசர உலகத்தில் காதல் கூட அவசர அவசரமாக தான் வந்து தொலைக்கிறது. கேட்டால் love at first sight என்கிறார்கள். கல்யாணம் முடிந்து விவாகரத்து கோருவது காதலை விட அவசரமாக வந்து விடுகிறது. இதை எப்படி சொல்ல போகிறார்கள்.. divorce at first fight என்றா..? தெரியவில்லை.

ராஜேஷ் அவனது நண்பர்களை ஒரு ஞாயிறன்று விடுமுறையில் நண்பர்களை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
உமாவிடம் இது பற்றி பேசிய போது,
‘என்ன கேக்காம ஏன் நீங்களா கமிட் பண்றீங்க’ என்று முதலில் கோபப்பட்டு பிறகு ஒத்துக் கொண்டாள்.

ஞாயிறு வந்தது..
நண்பர்களும் வந்தார்கள்..
உமா மட்டும் வீட்டில் இல்லை..

உமாவின் தோழி ரமாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தெரிய வர உமா சமையல் வேலையை அப்படியே போட்டு விட்டு அவசரமாக சென்று விட தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிறகு தான் ராஜேஷ¥க்கே தெரிந்தது.

நண்பர் வட்டாரம் ராஜேஷை, ‘உன் ஒய்•புக்கு சமைக்க தெரியலைன்னா ஏதாவது ரெஸ்டோரண்ட்ல லன்ச்சை வச்சிருக்கலாமே’ என்று விளையாட்டக சொல்ல ராஜேஷ் பெரிய அவமானமாக உணர்ந்தான் அதை.

இது சம்மந்தமாக ராஜேஷ¥க்கும் உமாவிற்கும் வாக்குவாதம் நடந்த போது வாய்க்கு எட்டியது கைக்கும் எட்டி விட்டது. பேசிக் கொண்டே இருக்கும் போது கோபத்தில் உமாவை அடித்து விட்டான் ராஜேஷ்.

உமாவின் தோழி ரமா சொன்னாள், ‘என்னால தான் இவ்வளவும்’ என்று.

உமா, ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு தான் எம்மேல பாசமே இல்ல.. அவருக்கு ஆச ஆசயா பொறந்த நாளன்னைக்கு மோதிரம் ஒண்ணு வாங்கி கொடுத்தேன்.. அப்படி பாசம் உள்ளவரா இருந்தா என்ன செஞ்சிருக்கணும்.. பத்திரமா வச்சிருக்கணும் தானே.. ஆனா அவர் என்ன செஞ்சார் தெரியுமா? என் கிட்டே கூட கேக்காம அவர் கூட வேல பார்க்குற ஒரு பொண்ணுக்கு அவ கல்யாணத்தன்னைக்கி கி•ப்டா கொடுத்துட்டாரு தெரியுமா..?’ என்று கலங்கினாள் உமா.

ரமா அவளை தேற்ற நினைத்து, ‘நீ ஏன்லா அப்படி நினைக்கிறே? அவர் உரிமையா எடுத்து கொடுத்திருக்கலாம் இல்லயா?’ என்றாள்.

உமா தன் கைப் பையிலிருந்து ஒரு எழுதுகோலை(pen) எடுத்து ரமாவின் முகத்திற்கு நேராக நீட்டி, ‘இது என்ன தெரியுமா? அவர் வாங்கி கொடுத்த பென்.. ஒகே..’ என்று திரும்ப பையில் வைத்துக் கொண்டே, ‘நான் பத்திரமா வச்சில்ல.. அத மாதிரி தானே நானும் எதிர்பார்ப்பேன்.. அவரும் நான் கொடுத்ததை பத்திரமா வச்சிருக்கணும்ணு..’ என்றவள் மெல்லிழைத் தாள்(tissue paper) எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, ‘யாரையாவது நேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்த பொருளையும் நேசிப்பே.. இப்படி ஈஸியா தூக்கி கொடுத்துட மாட்டே..’ என்றாள்.

ராஜேஷின் நண்பர்கள் சொன்னார்கள், ‘நீங்க பிரியறதுக்கு நாங்க எந்த விதத்திலேயாவது காரணமா இருந்திருந்தா எங்களை மன்னிச்சிடு’ என்று.

ராஜேஷ், ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அவளுக்கு எம்மேல பிரியமிருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது’ என்றான்.

நண்பர்களில் ஒருவன், ‘நீயேன் அப்படி நினைக்கிறே.. வீட்டுக்கு வர்ர விருந்தை விட ஹாஸ்பிடல்ல பிரண்ட் இருக்கும் போது போய் பார்க்குறதுல என்ன தவறு?’ என்று கேட்டான்.

ராஜேஷ், ‘நோ லா.. நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்லைலா.. ஹாஸ்பிடல்ன்னா.. ஆக்ஸிடெண்ட் கேஸா என்ன..? எப்பவும் வர்ர வயித்து வலி.. யூசுவல் பெய்ன்.. தட்ஸ் ஆல்.. சரி.. எங்கிட்டே சொல்லிட்டு போலாம்ல.. குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள வீட்ட பூட்டிட்டு போயிட்டா எப்படி..? என்ன செஞ்சிருக்கணும்? எங்கிட்டே சொல்லிருக்கணும்.. நானே கூட்டிட்டு போயிருப்பேன்.. அவளுக்கு பாசமே இல்லலா.. எம்மேல மரியாதையும் இல்ல..’ என்று தன் பக்கமிருந்த நியாயத்தை சொன்னான்.

வக்கீல் வடிவழகன் வீடு-

வக்கீல் வடிவழகன் ராஜேஷையும் உமாவையும் பார்த்து, ‘உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு விவாகரத்துன்னு தீர்ப்பு கிடைச்சிடும்..’ என்றார்.

இருவரும் நன்றி சொன்னார்கள்.

வடிவழகன், ‘நீங்க எங்கிட்டே •பர்ஸ்ட் டைம் வந்தப்ப நான் சொல்றத கேக்குற ஸ்டேஜ்ல நீங்க ரெண்டு பேருமே இல்ல.. அதான் நாளைக்கு டிவோர்ஸ் நிச்சயங்குற பட்சத்துல ரெண்டு பேரயும் கூப்ட்டு பேசிடலாம்னு தோணுச்சி..’ என்றவர் சிறிது மௌணத்திற்கு பிறகு, ‘பேசலாமா?..’ என்று இருவரையும் பார்த்து கேட்டார்.

இருவரும் தலையை ஆட்டி ‘ப்ளீஸ்’ என்றார்கள்.

‘நீங்க ரெண்டு பேருமே ஒர்கிங் கபுள்ஸ் ஆமாவா.. இல்லயா?’ என்றார் வடிவழகன்.

இருவரும் ‘ஆமா..’ என்றார்கள்.

‘நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷமா வேல பார்க்குறீங்க..?’-வடிவழகன்.

‘நான் பிரைவேட் கன்சர்ன்ல செவன் இயர்ஸா மேனேஜரா ஒர்க் பண்ணிட்டிருகேன்’-ராஜெஷ்
‘நான் போக்குவரத்து துறைல கடந்த நாளு வருஷமா வேல பார்க்குறேன்’-உமா

வடிவழகன் தன் கண்ணாடியை கழட்டி தன் சட்டையில் துடைத்து திரும்ப மாட்டி விட்டு ‘இத்தனை வருஷத்துல நீங்க எப்பவாவது உங்க வேலய ரிசைன் பண்ணணும்னு நினைச்சதுண்டா..? ஆபிஸ்ல ஏதாவது பிரச்சினை வந்து..’ என்று முடிக்குமுன்.
‘யெஸ் அப்படி நினைச்சதுண்டு.. ஆனா அவ்வளவு ஈஸியா தூக்கி போட்டுட முடியாது.. வேலையாச்சே..’ என்றான் ராஜேஷ்.

‘நான் கூட நினைச்சிருக்கேன்.. பட்.. வேலைன்னா பிரச்சினை இல்லாம இருக்காது.. ஆமா தானே.. ஸோ.. நான் வர்ர பிரச்சினைய சமாளிச்சிட்டு இல்லன்னா.. பொறுத்துட்டு போயிடுவேன்..’ என்றாள் உமா.

வடிவழகன்- ‘ரெண்டு பேரும் வேலய விடறதுக்கு முன்னாடி இவ்வளவு தூரம் சிந்திச்சிருக்கீங்களே.. இந்த மாதிரி வாழ்க்கைய விடணும்னு வந்திருக்கிறீங்களே.. இதுக்கு முன்னாடியும் நீங்க சிந்திச்சு இருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்..’

இருவரும் மௌணம் காத்தனர்..

‘திருமணங்கறது ஒரு ஒப்பந்தம்.. வாழ்க்கை முழுவதற்கும் இடையில ஏற்படற கஷ்டம் நஷ்டம் எதுவும் பிரிக்க முடியாத பந்தம்..’

இருவரும் கூர்ந்து கவனித்தார்கள்..

‘விவாகரத்துண்ணா.. கொடுமை படுத்துறது.. நடத்தை சரியில்லாம போயிடறது.. குடிச்சிட்டு கலாட்டா பண்றது.. நாலு காசு சம்பாதிக்காம குடும்பத்த கவனிக்காம பட்டினி போடறது.. இந்த மாதிரியான் காரணங்களுக்காக பிரிஞ்சு போயிடறதுக்கு சட்டம் கொடுக்குற மாற்று வாழ்க்கை.. ஆனா விவாகரத்த போயி தன்னம்பிக்கைன்னு சொல்லிக்கிறாங்க.. காலம் அப்படி இருக்கு.. என்ன செய்றது?.. ஆனா நீங்க..’

வடிவழகன் பேச்சை நிறுத்தி விட்டு இருவரது முகம் மாறுவதையும் கவனித்தார்..

‘ஆனா நீங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பிரியப்பட்டிருக்கீங்க.. இனி புரிஞ்சிக்கணும்.. விட்டு கொடுக்கணும்.. வேலய அவ்வளவு சீக்கிரம் விட்டுடாத நீங்க வாழ்க்கைய ரொம்ப சுலபமா விட்டுட நெனைச்சது தான் வேதனை..’ என்றவர்..

‘சரி.. நீங்க ரெண்டு பேரும் இந்த பேப்பர்ல சைன் வைங்க..’ என்று எழுதுகோலை தேடினார்.. அது இல்லை..

உமா அதை கவனித்து விட்டு, ‘எங்கிட்டே இருக்கு..’ என்று தன் கைப் பையிலிருந்து எழுதுகோலை எடுத்தாள்..

வடிவழகன் அழகாக இருந்த எழுதுகோலை பார்த்து விட்டு, ‘எங்கே.. காட்டுங்க.. அழகா இருக்கே.. எங்கே வாங்குனீங்க? விலை என்ன.?’ என்றார்.

உமா, ‘இவங்க தான் வாங்கி கொடுத்தாங்க..’ என்று அழ ஆரம்பித்து விட்டாள்..

ராஜேஷ் கண்களில் கண்ணீருடன் உமாவை திரும்பி பார்த்தான்..

வடிவழகன் சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, ‘மண வாழ்க்கைங்கறது ஆழமான சுவையான கருத்துள்ள புஸ்தகத்தை படிக்கிற மாதிரி.. காசு கொடுத்து வாங்கிட்டு படிக்கிறதுக்கு முன்னாடியே கிழிச்சு போட வந்துட்டீங்களே..’ என்றார்.

ராஜேஷ் அழுத உமாவை, ‘அழாதே உமா..’ என்று கண்களை துடைத்து விட்டான் அழுது கொண்டே..

உமா வடிவழகனிடம், ‘என்ன மன்னிச்சிடுங்க நா இனிமே இந்த மாதிரி தப்பை நெனைச்சு கூட பார்க்க மாட்டேன்..’ என்றாள்.

ராஜேஷ், ‘நா கூட இனிமே சரியா நடந்துக்கறேன்..’ என்றான்.

இருவரும் வக்கீல் வடிவழகனுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார்கள். சீருந்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர். உமா அழுதுக் கொண்டே இருந்தாள்.

ராஜேஷ் வானொலி ஒலி 96.8ஐ இயக்கி விட்டான்..

அதில் ஓசை படத்தில் வரும் ‘ஒரு பாடல் நான் கேட்டேன்..’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ராஜேஷ், ‘தண்ணி குடிக்கலாமா?’ என்றான்.

உமா, ‘ம்’ என்றாள்.

ராஜேஷ் அந்த குடியிருப்பு பகுதியில் நுழைந்து சீருந்து நிறுத்துமிடத்தில் கொண்டு போய் நிறுத்தினான்.

ராஜேஷ் உமாவிடம், ‘இப்பல்லாம் அஞ்சு நிமிஷம் காடிய நிறுத்தினாலும் பார்க்கிங் கூப்பன் வச்சுட்டு தான்லா இறங்குறது..’ என்றவன் ‘கூப்பன் அந்த பாக்ஸ்ல தான் இருக்கு.. தொறந்து எடேன்..’ என்றான்.

உமா திறந்தாள். அங்கே ஒரு மோதிரம் வைக்கும் நகை பெட்டியும் இருந்தது.

உமா, ‘என்ன இது?’ என்று கேட்டாள்.

ராஜேஷ், ‘இதுவா.. மோதிரம் நீ வாங்கி கொடுத்தது தான்.. அது கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு அதான் சரி பண்ணலாம்னு கழட்டி வச்சிருக்கேன்..’ என்றான்.

உமா ஆச்சரியத்துடன் கேட்டாள், ‘அப்ப நீங்க அந்த ஜெயாவுக்கு பிரசெண்ட் பண்ணது..?’ என்று..

ராஜேஷ், ‘ஆமா.. யெஸ்.. யு ஆர் கரெக்ட் பார்க்க ரெண்டு மோதிரமும் ஒரே மாதிரி தான் இருக்கும்..’ என்றான்.

உமா, ‘என்ன சொல்றீங்க.. அப்ப அது வேற மோதிரங்கறீங்களா?’ என்றாள்.

ராஜேஷ், ‘ஆமா.. வேறென்னா.. நீ வாங்கி கொடுத்ததயா தூக்கி கொடுக்க முடியும். யாரையாவது நேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்த பொருளையும் நேசிப்பே.. ஆமாவா இல்லையா?.. உங்கிட்ட இருக்கிற பேனா.. என்கிட்டே இருக்கிற மோதிரம்.. இப்படி.. இதெல்லாம் ஈஸியா தூக்கி கொடுத்துட முடியாது இல்லையா?’ என்றான்.

உமாவால் அழுகையை கட்டுப்படுத்த முடிய வில்லை.

மணவாழ்வு- இனிமேல் தான் அவர்களுக்கு ஆரம்பம்.

கடுமையிலிருந்து விடுபடு! (Relax!)


எனக்கு என் பாட்டியார் பொன்னாச்சிம்மா மீது கொள்ளை பிரியம், அவர்களை பற்றி திண்ணை இணைய தளத்தில் ஒரு கதையே எழுதி இருந்தேன், நிற்க..

எனக்கு சாதாரணமாகவே விரல்கள் நடுங்கும், இன்னும் ஏதோ சிறிய பதட்டமான சூழ்நிலை என்றால் கூட கைகளில் இன்னும் உதறல் கூடி விடும், வயதானவர்களுக்கு குளிரில் நடுங்குமே அது போல் அல்லது அதை விட அதிகமாக நடுநடுங்க ஆரம்பித்து விடும். நான் எப்போதும் கடுமையாகவே இருப்பேன், பேருந்துகளில் உட்கார்ந்து இருக்கும் போது கூட தேவையே இல்லாமல் கம்பிகளில் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்வேன்.

இப்படியாக தேவைக்கு மீறிய அச்சம் ஏற்படும் காரணத்தால் நான் என் உடலிலிருந்து அதிக சக்தியை விரயமாக்கி இருக்கிறேன், வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது உணவுக்கும் குடிநீருக்கும் மட்டும் தான் பொருந்தும் என்று நினைத்திருந்தேன். அப்புறம் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் மாணவனாக மாறிய பிறகு தான் அது உடலின் அசைவுக்கு கூட பொருந்தும் என்று தெரிந்து கொண்டேன், தெளிந்து கொண்டேன்.

ஒரு முறை என் பெரியம்மாவின் மகளார் சேச்சி சிறு வயதில் சிறிய மணியை விளையாடும் போது அவரது மூக்கின் உள்ளே திணித்து விட்டார், தொடர்ந்து அழ ஆரம்பித்து விட்டார், என் பாட்டியார் பொன்னாச்சிம்மா என்ன? ஏது? என்று கவனித்த போது செய்தி தெரிந்திருக்கிறது, அதே நேரத்தில் சில விருந்தாளிகள் திடீரென்று வந்து விட்டார்கள், உடனே பொன்னாச்சிம்மா கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் சேச்சியை சோபாவில் தூக்கி உட்கார வைத்து விட்டு, 'ஏன் குழந்தை அழுகிறது?' என்று கேட்ட விருந்தாளியாய் வந்த பெண்டிர்களுக்கு ஒரு பதிலை சொல்லி விட்டு, வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைத்து விட்டு, சேச்சியின் நாசியில் மிளகாய் பொடியை காண்பித்தார், ஒரு தும்மல் தான், நாசியின் உள்ளே சென்ற சிறிய மணியானது வந்து வெளியே விழுந்தது, சேச்சியின் அழுகை நின்றது.

நானாக இருந்திருந்தால் பதட்டமடைந்து அழுது புரண்டு வீட்டையே இரண்டாக்கி இருப்பேன். எது நடந்தாலும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும், பொன்னாச்சிம்மாவிடம் கற்றுக் கொண்டது. தன் மரணத்தின் இறுதி நேரத்திலும் பதட்டப்படாமல், 'யாரும் அழ கூடாது, இது தான் சரியான நேரம்' என்றவர் தான் எனது பாட்டியார்.

பிரச்சினை வரும் போது பதட்டப்படாமல் இருந்தால் அல்லது வீணாக உடலில் இருந்து அதிக சக்தியை விரயமாக்காமல் இருந்தால் பிரச்சினைகளின் தீர்வை நம் மனசே சொல்லி விடும் இன்ஷா அல்லாஹ்..