நான் கவிஞன் என்று சொல்லி பல கவிஞர்களின் தற்கொலைக்கு காரணமாக விரும்பவில்லை. அதே நேரத்தில் மனிதர்களை பாடாத கம்பர்கள் மீது எனக்கு மரியாதையும் இல்லை. பாவேந்தரின் பாடலில் பாடாத தேனீக்கள் உண்டோ என்று கேட்பாரே அது போலே காதலை பாடாத கவிஞர்கள் உண்டோ என்று கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு கவிஞர்களுக்கு இந்த காதலுக்கும் தொடர்பு உண்டு. மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ இப்படி எந்த கவிதையின் வடிவும் காதலை பாடாமல் விட்டதில்லை. “பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணுங்க” என்று காதல் செய்ய “தூங்காதே தம்பி தூங்காதே” என்று எழுப்பி விடும் பாடல்களுக்கு என் “கவிதையாம்” கொஞ்சூண்டு “தேவலையாம்” என்று சொன்னாலும் மகிழ்ச்சி தான்.
காதல் ஒரு புதிய அனுபவம்..! காதலி..!
எனது பெயர் மறந்து விட்டது
முகவரியும் தவறி விட்டது
என் இருப்பு மட்டும்
இருப்பதாய் தெரிகிறது
வார்த்தைகள் இறந்து விட்டன
மௌனங்களும் தொலைந்து விட்டன
நீ பேசுவது மட்டும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது
காட்சிகள் மறைந்து விட்டன
பார்வைகளும் இழந்து விட்டன
உனது முகம் மட்டும்
தெரிந்து கொண்டே
இருக்கிறது
தித்திக்கும் விபத்தாய்
நிகழ்ந்துவிட்ட
நம் சந்திப்பு
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
காகித பூக்களுக்கு
மத்தியில்
வாசனை பூவாய்
நொடிக்கொரு தரம்
புன்னகையில் மலர்ந்தாய்
உன் மழலை மொழியில்
மழை பெய்த சோலையானது
மனம்
சிரமமில்லாமல்
இதய பலூனுக்குள்
சுலபமாக நுழைந்தது
காதலெனும் ஊசி
வாழ்க்கையில் உன்னை சந்தித்தேன்
உன்னை சந்திப்பது தான்
வாழ்க்கை என்று
தெரிந்து கொண்டேன்
கவிதை நீ..!
அழகாய் இருக்கிறாய்
புரிய மறுக்கிறாய்
காற்று நீ..!
மறைந்து இருக்கிறாய்
உயிரை வளர்க்கிறாய்
ஏட்டுச்சுறைக்காய்
கறிக்கு உதவாது
பல் குத்தும் குச்சி
சிலை வடிக்க உதவாது
காலம் கடந்த எதுவும்
வாழ்க்கைக்கு உதவாது
என் காதலும்
இவ்வகை
என் காதல்
பருவம் தவறிய
மழை
தவறி செய்த
கொலை
எல்லாம் தெரியும் தான்
என் செய்ய
எனது
கற்பூர இதயத்தை
சுற்றிலும் எரிகிறது
காதல் நெருப்பு
அடம் பிடிக்கும்
குழந்தையாய்
என் சொல் பேச்சு
கேட்க மறுக்கிறது
என் மனம்
நல்ல குணமாய்
சொல்லி பார்த்தேன்
பலிக்கவில்லை
சினங் கொண்டு
அதட்டி பார்த்தேன்
பயனில்லை
என் இதயத்தில்
நான் எழுதிய
உனது பெயரை
நீ அழிக்க கிறுக்கிய
கோடுகளும்
அழகிய கவிதையாய்
தெரிகிறது
இந்த பாழாய் போன
காதலால்
மேகங்கள் கூடினால்
மழை வரும்
நாம் கூடாமல் போனோம்
இதோ..!
என் கண்களில்
கண்ணீர் மழை
மழை நீரை இதுவரை
சேமித்ததில்லை -
ஆனால் நீ வந்த
கனவுகளை கூட கலையாமல்
என் இதய தேக்கடியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
கோபங்களால்
உனை பிரிந்தேன்
காலம்
உன் மீதான் காதலை
அழித்து விடும் என்று துணிந்தேன்
ஆனால் காலம்
உன் மீதான கோபத்தை
அழித்து விட்டு
சென்று விட்டது
புதிய அலுவல்கள்
புதிய நண்பர்கள்
புதிய புத்தகங்கள்
புதிய கவிதைகள்
உனை மறக்க
நான் செய்த
மாற்று முயற்சி
படுதோல்வி
உன் நினைவுகள்
உன் சிரிப்பலைகள்
உன் மொழிகள்
உன் சிணுங்கல்கள்
அணை உடைத்த
வெள்ளங்கள்
உனது சிறிய
ஞாபகமும்
மாயன இருட்டில்
கண்கூசும் வெளிச்சமாய்
இரவின் நிசப்தத்தில்
காதுகிழிக்கும் பேரிறைச்சலாய்
சிரமமாய் இருக்கிறது
எனக்கு
இதோ
இந்த நொடியிலலும்
உனது அந்த
சிறிய ஞாபகம் தான்
அந்த ஞாபக
வெளிச்சத்தில்
அந்த ஞாபக
பேரிறைச்சலில்
ஒரு புதிய அனுபவம்
எனக்கு..!
இருந்துக் கொண்டே
இயற்கை எய்துகிறேன்