நான் எப்பவோ எழுதி பாதியிலே எழுதாமல் விட்ட கதை, பழைய கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்த போது அகப்பட்டது, அப்படியே பதிவிடலாம் என்று தோன்றியது.
இது வரை 3 அத்தியாயங்கள் மட்டுமே எழுதி இருந்திருக்கிறேன். இப்போதைக்கு முதல் அத்தியாயம் மட்டும் இங்கே..
துளசி
1 - கல்லூரி நாட்கள்
ராஜாராமன் லட்சுமி தம்பதியரின் குடும்பமே ஒரு பல்கழைக்கழகம் தான். ராஜாராமன் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி லட்சுமி அதே பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். இவர்களின் ஒரே மகளின் பெயர் துளசி. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் துளசி அந்த ஊரில் இருந்த பொறியியல் கல்லூரிக்கு முதல் நாள் வகுப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.
துளசி கல்லூரிக்கு செல்வதற்குள் அவளை பற்றிய சில தகவல்களை சொல்லி முடித்து விட கடமைப் பட்டுள்ளேன். இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்றோ அல்லது இது உயர்ந்த வேலை, இது தாழ்ந்த வேலை என்றெல்லாமோ பார்க்க மாட்டாள், எந்த வேலையை கொடுத்தாலும் ஈடுபாட்டோடு செய்வாள். செய்யும் வேலையை ஒழுங்காக செய் என்பதே இவளது தெய்வீக மந்திரம். மனிதராக இருந்தால் போதும் - இவளுக்கு, நல்லவிதமாக பழகுவாள். ஒரு முறை இவளது வீட்டில் வேலை பார்த்த மங்கை என்பவரின் குழந்தைக்கு ஏதோ பெயர் சொல்லாத கடும் வியாதி வந்து விட்டது. அந்த குழந்தைக்கு குணமாக வேண்டி 9 வியாழக்கிழமை விரதம் இருந்தாள். மருத்துவம், வேண்டுதல் எல்லாத்தையும் மீறி இவளது நல்ல குணம் அந்த குழந்தையை குணப்படுத்தியதாக தான் மங்கை நம்பினாள். மங்கைக்கு உடல் நலம் இல்லாமல் இருந்தால் அல்லது வேறு ஏதோ காரணத்தால் முடியாமல் இருந்தால் வீட்டை பெருக்கி கூட்டி சுத்தம் செய்து விடுவாள். சும்மாவே இருக்க மாட்டாள், வீட்டை அலங்கரிப்பாள், எம்பிராய்டரி போடுவாள், ஓவியம் வரைவாள். தேநீர் நன்றாக போடுவாள் ஆனால் தேநீர் அறவே குடிக்க பிடிக்காது இவளுக்கு.
அவளின் அழகை பற்றி நான் எழுத ஆரம்பித்தால், நான் எழுதி முடிப்பதற்குள், நீங்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் எண்ணி முடித்திருப்பீர்கள். அவ்வளவு எழுதலாம். நான் சொல்ல வருகின்ற அழகு நிறத்தை தோற்றத்தை மட்டும் குறிப்பிடுபவை அல்ல குணத்தை நன்னடத்தை போன்றவைகளையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன்.
கல்லூரியில் முதல் நாள் வகுப்பு அறிமுக நேரங்களாக தான் இருந்தது. துளசியுடன் பள்ளியில் படித்த யாரும் இந்த கல்லூரியில் சேரவில்லை. இவளுக்கு எல்லோருமே புதுமுகங்கள் தான். தேநீர் இடைவேளையில் எல்லோரும் வெளியே போன பிறகும் துளசி தனது இருக்கையிலேயே அமர்ந்து வழங்கப்பட்ட புஸ்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.
'எக்ஸ்கியூஸ்மி..' குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
அவன் வாயில் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். நல்ல வளர்த்தி, ஆள் பார்ப்பதற்கு திரை நடிகர் மாதவனை கொஞ்சூண்டு ஞாபகப் படுத்தினான்.
'யெஸ்..' எழுந்து நின்றாள்.
அவன் கையை நீட்டினான், 'ஐயம் துரை..' என்றான்.
பதிலுக்கு கையை பட்டும் படாமல் குலுக்கி விட்டு, 'ஐயம் துளசி..' என்றாள்.
துரை இரண்டு விரலை நீட்டி 'இதுல ஒரு விரல தொடுங்க..' என்றான் புன்னகை மாறாமல்.
'ஐயம் சாரி.. எனக்கு புரியல.. எதுக்கு இதெல்லாம்..' புரியாமல் பார்த்தாள், கேட்டாள்.
'தப்பா நினைக்காதீங்க.. நான் தனியா கேன்டீன் போறதா?, உங்களோட போறதான்னு ஒரு சின்ன டெஸ்ட், நான் எப்போதும் இப்படி தான்.. இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல..' விளக்கினான்.
'நம்பலாமா..?' முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்.
'சத்தியமாங்க.. நான் டீ பிரேக்ல பொய்யே சொல்ல மாட்டேன்.. நம்பலாம்.. தொடுங்களேன்..' என்றான்
'..ம்ம்ம்ம்ம்ம்.....' தொட்டாள்.
'யெஸ்.. நீங்க என் கூட வர்ரீங்க..' என்றான்.
'வர்ரத பத்தி ஒண்ணும் இல்ல.. நான் டீ காஃபி குடிக்க மாட்டேன்' என்றாள்.
'டீ காஃபி சேர்ந்து குடிக்க கூடாதுங்க.. ஏதாவது ஒன்னு தான் குடிக்கனும்..' என்றான்.
'சத்தியமா சொல்றேன்.. எவ்வளவோ டிரை பண்ணி பார்த்தேன்.. சிரிப்பே வரலை..' என்றாள்.
'சரிங்க.. அங்கே இருக்குற சிநேக்ஸயாவது வயித்துக்கு அனுப்புவோம்..வாங்க..' என்றான்.
கேன்டீன்.
'உண்மைய சொல்லுங்க.. ரெண்டு விரல்லயும் என்னோட சாப்பிடணும்னு தானே நினைச்சிருந்தீங்க' என்றாள்.
'நான் அப்படி எல்லாம் நினைப்பேனா..? ஒரு விரல்ல நாம சாப்பிடறதுக்கு நீங்க தான் காசு குடுக்கணும், இன்னொரு விரல்ல நான் தான் காசு குடுக்கணும்னு நினைச்சிருந்தேன், நீங்க தாராளம், இப்ப நீங்க தான் காசு கொடுக்கணும்.. கொடுங்க..' என்றான்.
இதயம் எனும் படம் கல்லூரி மாணவர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டதால் அரங்கத்தில் இடம் இல்லாமல் பலர் தவித்தனர். அப்படி தவித்த பலரில் அன்றைய தினத்தில் நம்ம துரையும் அடக்கம். 'என்னடா.. இது.. டிக்கெட் இல்லையே?' என்று யோசித்த விநாடி யாரையோ பார்த்து விட்டு வாய்க்குள் விசிலடித்தான். பெண்களுக்கான டிக்கெட் வழங்கும் பகுதி தனியாக இருந்தது, அங்கு கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது, அந்த கூட்டத்தில் துளசியும் நின்றிருந்தாள். வெயில் தாங்காமல் தலையில் சுடிதாரின் துப்பட்டாவை போட்டு மறைத்திருந்தாள்.
துரை, 'ஹாய்.. என்னங்க, எனக்கு தெரியகூடாதுன்னு தானே இப்படி தலையில துப்பட்டாவ வச்சு மறச்சுட்டு நிக்கறீங்க?' என்றான்.
'இல்லங்க நீங்க வேற..' என்றாள்.
'பின்னே என்ன கப்பல் கவுந்துடுச்சா..' என்றான்.
'வெயில் கொடுமையே தேவல போலருக்கு' என்றாள்.
'சரிங்க நீங்க என்ன அடிக்கிறதுக்குள்ளே, வந்த விஷயத்த சொல்லிடறேன், எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க முடியுமா?' என்று கேட்டான்.
துளசி இரண்டு விரலை நீட்டி ஒன்றை தொட சொன்னாள். யோசிக்காமல் பட்டென்று தொட்டான்.
'போச்சு..' என்றாள்.
'என்னங்க.. எனக்கு டிக்கெட் எடுக்க மாட்டீங்களா..?' என்றான்.
'அதில்லைங்க.. என் டிக்கெட்டுக்கும் நீங்க தான் காசு கொடுக்கணும்..' என்றாள்.
துரை வாய் விட்டு சிரித்தான்.
அடுத்த நாள்,
'படம் எப்படி?' என்றான்.
'நல்லா தானே இருந்துச்சு, ஆனா.., இந்த காதலில் எல்லாம் எனக்கு பெரிசா ஈடுபாடு இல்லை, அதனால, எனக்கு பெரிசா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல..' என்றாள்.
'இப்படி சொல்றவங்க தான் நாளைக்கு காதல்.. காதால்.. காதல்.. காதல் இல்லையேல் சாதல்ன்னு டயலாக் உடுவாங்க' என்றான்.
'இப்போதைக்கு படிப்பு மேல தான் எனக்கு காதல்.. படிப்பு இல்லையேல் சாதல் தான், கரெக்டா..?' என்றாள்.
'நீங்க இப்படி சொல்றீங்க, என்னோட காதல் ஒரு லவ் லெட்டரால கெட்டு போச்சு' என்றான்.
'எப்படி?' என்றாள்.
'என் கூட ஜெயந்தின்னு ஒரு பொண்ணு படிச்சா, பார்த்தீங்கன்னா, சினிமா நடிகை சுகன்யா மாதிரி இருப்பா,
அழகா இருக்காளேன்னு கவிதை எழுதினேன்
நீயின்றி நானில்லை
நான் குப்பை தொட்டி
நீ பூத்தொட்டி
நாம் இருவரும்
சேர்ந்து செய்வோம்
ஒரு பிள்ளை தொட்டி
'தூ'ன்னு காரி துப்பிட்டு போயிட்டா, அவ துப்பிட்டு போனதுல கூட பெருசா வருத்தம் ஒண்ணுமில்லைங்க, ஆனா அவ சொன்னா பாருங்க ஒரு வார்த்தை, அத தாங்க என்னால தாங்க முடியல' என்றான்.
துளசி சிரித்துக் கொண்டே கேட்டாள், 'என்னா அது..?' என்று
துரை தொடர்ந்தான், 'ஜெயந்தி சொல்றா, 'கண்ணா, நீ வாழ்க்கையில் ரெண்டு விஷயம் மட்டும் எப்பவுமே செய்யாதே, ஒண்ணு கவிதை எழுதுறது, இன்னொன்னு காதலிக்கிறது, நீ நல்லா இருப்பே, நான் சொல்றத கேட்காம எவளயாவது காதலிச்சேன்னு வைய்யி, மவனே, தண்டம் ஒன் தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்னு, ரஜினியையும் நம்பியாரையும் கல்ந்தாப்ல பேசி மிரட்டிட்டு போனாங்க..' என்று துரை பயந்த மாதிரி சொல்ல துளசி சிரிப்பை அடக்க முயன்று தோற்று போய், 'ஜெயந்தி தான் என் குல தெய்வம்..' என்று துரை முறைப்பதையும் பொருட்படுத்தாமல் சிரிசொத்தில்லி(சிரித்து+சொல்லி) முடித்தாள்.
கல்லூரி சுற்றுலா..
பேருந்து புறப்பட சில மணி நேரங்களே இருந்தன.. துரையின் கண்கள் துளசியை தேடின.. இன்னமும் ஏன் வரவில்லை?.. அவன் கண்களுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையில் தெரிந்தது. வீட்டில் ஏதேனும் நிலைமை சரியில்லாமல் வராமல் போய் விடுவாளோ?, அவள் இல்லை என்றால் இந்த பயணம் ஏதோ கடைசி பயணம் போல் தான் இருக்கும் என உணர்ந்தான்.
அப்பொழுது தான் ஒரு சீருந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், அவன் கண்களில் நரகாசுரனின் டெத் அன்னிவர்சரி, தீபாவளி என்று சொல்ல வந்தேன்.. இனி இந்த பயணம் புனித பயணமாக தான் இருக்கும் என தோன்றியது அப்போது அவனுக்கு..
இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். வழி நெடுக துரை துளசியை சிரிக்க வைத்தான். சிறு வயதில் பக்கத்து வீட்டு கொள்ளையில் மாங்காய் திருடியது, பள்ளிகூடத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டது, தயிர் கார அம்மாவை மோதி சைக்கிள் ஓட்ட கத்துக் கொண்டது இப்படியாக அவன் விழுந்து விழுந்து கத்துக் கொண்டதை கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
பிடித்த நடிகர், நடிகை, சிரிப்பு நடிகர், படம், பாடல் இப்படி எல்லாவற்றையும் பேசினார்கள்,
துரை திடீரென்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தான், திடீரென்று நிறுத்தி, 'நான் நல்லா பாடுறேன்ல..' என்றான்
அதற்கு துளசி, 'ஜெயந்தி இருந்தா உங்க கிட்ட மூணு விஷயம் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருப்பாங்க, பாடுறது தான் மூணாவது' என்று சிரித்தாள்.
துளசி தங்கியிருந்த அறை கதவு தட்டப்பட்டது. திறந்தாள், துரை நின்றிருந்தான், 'வாங்க' என உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்தான், 'எங்கே யாருமே இல்லை?' என்று கேட்டுக் கொண்டே.
'எல்லோரும் வெளியே போயிருக்காங்க.. எனக்கு மயக்கமா இருக்கிற மாதிரி இருந்துச்சு, அதான் நான் போகலை' என்றாள்.
துரை, 'பயன களைப்பா இருக்...' சொல்லிய விநாடி துளசி குமட்டிக் கொண்டு வந்த வாயை பொத்திக் கொண்டு கழிவறைக்கு ஓடி கதவை தாழிட்டு கொண்டாள். ரொம்ப நேரமாகியும் சத்தமும் வராததால் துளசியும் வெளியே வராததால் கழிவறை நோக்கி நகர்ந்தான், 'துளசி..' என்று அழைத்துக் கொண்டு. கதவு திறக்கப்பட்டது, கிட்டதட்ட மயங்கிய நிலையில் தலையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். 'என்னாச்சு..?' என்றான்.
'என்னன்னே தெரியலைங்க..' என்றாள்.
'இங்கே இருக்க வேண்டாம்., வெளியே வாங்க முதல்ல ..' என்றான்.
வெளியே அழைத்து வந்து உட்கார வைத்தான். 'நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்..' என்றாள்.
'இப்ப என்ன போச்சு, அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க எதயும் நினைக்காதீங்க..' என்றான்.
அவள் பேசினில் அடைத்துக் கொண்டு வடியாமல் வாந்தியாக எடுத்த அஜீரணங்களை பற்றி கவலைப்பட்டாள், யாரும் வர்ரதுக்கு முன்னாடி சுத்தம் செஞ்சுட்டா நல்லா இருக்கும்' என்று துடித்தாள்.
'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்' என்றவன் ஓடி போய் யாரையோ பார்த்தான், அந்த யாரோ வந்தார்கள், எல்லாம் சரி செய்யப்பட்டது.
துளசி சொன்னாள், 'வழியில ஒரு கடையில புரோட்டா வாங்கி சாப்பிட்டேன் பாருங்க, அதான் எனக்கு ஒத்துக்கல..' என்றாள்.
'சரி இப்ப எப்படி இருக்கு, அத சொல்லுங்க முதல்ல..' என்றான்.
'இப்ப பரவாயில்லை.. சரி நீங்க வெளியே இருக்கீங்களா..?, நான் டிரஸ் சேஞ் பண்ணனும்' என்றாள்.
ஊர் திரும்பியதும், 'நீங்க செஞ்ச உதவியையும் உங்களையும் மறக்கவே முடியாது' என்றாள்.
சில தினங்கள் கழித்து,
துளசி, துரை இன்னும் சில நண்பர்கள் படிப்பு சம்மந்தமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பி.எம்.டபிள்யு சீருந்து வேகமாக உள்ளே நுழைந்து நின்றது. அனைவரின் கவனமும் அந்த காரில் இறங்கியவர்கள் மீது தான் இருந்தது. உள்ளேயிருந்து கல்லூரி முதல்வர் இறங்கினார், கூடவே ஒரு பெண்மணி இறங்கினார். துளசி தன்னை அறியாமல், 'அத்தை..' என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
அந்த அத்தை துளசியை பார்த்து விட்டு நேராக துளசியை நோக்கி முதல்வருடன் நெருங்கினார். 'துளசி..' என்று அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
'அத்தை.. நீங்க எப்போ..?' என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.
'அதெல்லாம் இருக்கட்டும்.. ' என்றவர் முதல்வரிடம் , 'இது தான் துளசி, எப்படி இருக்கா பாருங்க, தங்க விக்கிரகம் மாதிரி.. இவ தான் எனக்கு மருமகள், நம்ம சுதாகருக்கு இவ தான்னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணுனதாச்சே..' என்றாள்.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Sufism Related Quotes
"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)
“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)
Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63
"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)