கற்காலம்
நாகூர் ரூமி
முதல் பகுதி - http://nagoreismail786.blogspot.com/2010/07/14.html
என்ன குற்றம்?
ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று adultery. இன்னொன்று fornication. 'அடல்ட்ரி' என்பது, ஒரு கல்யாணமான ஆண் அல்லது பெண், தன் மனைவி அல்லது கணவன் அல்லாத வேறொரு ஆளோடு உடலுறவு வைத்துக்கொள்வதைக் குறிக்கும். '·போர்னிகேஷன்' என்பது, கல்யாணமாகாத ஆண் பெண்ணுக்கிடையேயான உடலுறவைக் குறிக்கிறது. இதில் ஒருவர் மட்டும் கல்யாணமானவர், இன்னொருவர் ஆகாதவர் என்றால், அதில் 'அடல்ட்ரி'யும் '·போர்னிகேஷ'னும் சேர்ந்திருப்பதாக அர்த்தம்.
'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' என்ற இரண்டிற்குமிடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனெனில், அதன் அடிப்படையில்தான் இத் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.
கூடாவொழுக்கம் இஸ்லாத்தின் பார்வையில் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. உடலுறவிலும் ஒழுக்கத்தையே இஸ்லாம் போதிக்கிறது. ஒழுக்கக் குறைவுக்கான தண்டனையாகத்தான் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இந்த தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
என்ன ஆதாரம்?
இஸ்லாமிய சட்டம் என்று சொல்லும்போதே, அதற்கு இரண்டு மூலங்கள்தான். ஒன்று இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன். இன்னொன்று, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஸ¤ன்னத் எனும் வழிமுறை. இந்த வழிமுறை ஹதீதுகளின் மூலமாக அறியப்படுகிறது.
திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?
திருக்குர்ஆனில் இந்த விஷயம் பற்றி இறைவன் மிகத்தெளிவாகக் கூறுகிறான். உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ; அதற்கான உறுதியான நான்கு சாட்சிகள் வேண்டும் ; பொய்சாட்சி சொன்னவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களை விளக்கும் விதமாக(வும்) திருமறையின் 24வது அத்தியாயமான சூரா நூர் அமைந்துள்ளது. அதில் இரண்டாவது வசனம்
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 'ஜினா' செய்வாரேயானால், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது இறைவனின் கட்டளை. இறைவன் மீதும் அவனுடைய இறுதித்தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டக்கூடாது. நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர் இதற்கு சாட்சியாக இருக்கட்டும்
என்று கூறுகிறது (அர்த்தத்தை மட்டும் நான் எனது மொழியில் இங்கே கொடுத்துள்ளேன்).
'ஜினா' -- ஒரு விளக்கம்
வேண்டுமென்றேதான் நான் 'ஜினா' (zina) என்ற அரபிச் சொல்லை தமிழாக்கத்தில் பயன்படுத்தினேன். காரணம், மேற்கூறிய கல்லடிக் கொல்லரசுகளால் அந்த சொல்லுக்கு fornication என்று மட்டும் அர்த்தப்படுத்தப் படுகிறது. ஆனால் 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிப்பதாகவும், ஒழுக்கக்குறைவைப் பொறுத்தவரையில் அவர்கள் திருமணமானவர்களா, ஆகாதவர்களா என்று ஆண்டவனும் அரபி மொழியும் பார்க்கவில்லை என்பதாகவும்தான் பல பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகிறார்கள்.
உதாரணமாக, 'ஜினா' என்பது தங்களுக்குள் திருமணமாகாத இரண்டு பேருடைய உடலுறவைக் குறிக்கும் என்று யூசு·ப் அலி விளக்குகிறார். அதாவது, குறிப்பிட்ட ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட இருவரும் திருமணமாகாதவர்களாக இருக்கலாம். (அதாவது '·போர்னிகேஷன்' செய்தவர்களாக). அல்லது திருமணமானவர்கள் என்றால், அந்த ஆண் வேறொரு பெண்ணின் கணவனாகவும், அந்த பெண் வேறொருவரின் மனைவியாகவும் இருப்பார்கள். (அதாவது 'அடல்ட்ரி' செய்தவர்களாக).
எப்படியிருப்பினும், அவர்கள் 'தங்களுக்குள்' திருமணமாகதவர்களே. இந்த இரண்டு விதமானவர்களுடைய புணர்ச்சியையும் 'ஜினா' என்ற சொல் குறிக்கிறது என்கிறார் யூசு·ப் அலி.
இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலானா அப்துல் மஜீத் தர்யாபாதி, தனது 'த·ப்ஸீருல் குர்ஆன்' என்ற விரிவுரையின் மூன்றாவது வால்யூமில், மேற்கண்ட இறைவசனத்துக்கு, "ஜனா என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், அவர்கள் திருமணமானவர்களோ அல்லவோ, ஏற்படும் முறைசாராக் கலவியையே குறிக்கிறது" என்று, யூசு·ப் அலி கூறும் விளக்கத்தை ஒட்டிய, தனது விளக்கத்தை அளிக்கிறார்.
"ஜினா என்பது தங்களுக்குள் திருமண உறவு ஏற்பட்டிராத ஒரு ஆணுக்கும் பெண்ணும் இடையில் ஏற்படும் தன்னார்வ உடலுறவைக் குறிக்கிறது. இதில் அவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே மற்றவரைத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாமலிருந்தாலும் சரி. எனவே ஜினா என்ற சொல், மேற்கத்திய மொழிகளில் இருப்பதுபோல, அடல்ட்ரி என்றும் ·போர்னிகேஷன் என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை" என்று முஹம்மது அசது என்ற மொழிபெயர்ப்பாளர் கூறுவதும் கவனிக்கத்தக்கது.
உண்மை இப்படி இருக்கும்போது, கல்லடி, இறக்கும்வரை அடிப்பது போன்ற எதைப்பற்றியுமே இறைவன் தன் திருமறையில் ஒன்றுமே கூறியிருக்காத நிலையில், மேற்கண்ட 'குற்றம்' இழைத்தவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற சட்டம் எங்கிருந்து வருகிறது?
ஹதீஸிலிருந்து! ஆம். 'அடல்ட்ரி' செய்தவர்களை கல்லாலடித்துக் கொல்லும்படி நபிகள் நாயகம் சொன்னதாக நாலைந்து ஹதீதுகள் ஆதாரப்பூர்வமான ஹதீது தொகுப்பான புகாரியில் வருகின்றன!
ஆகவே, '·போர்னிகேஷன்' செய்தவர்களைத்தான் 'ஜினா' குறிக்கிறது என்றும், அவர்களுக்குத்தான் நூறு கசையடிகள் என்பதாகவும், 'அடல்ட்ரி' செய்தவர்களை நபிவழிப்படி கல்லாலடித்துக் கொல்லவேண்டும் என்றும் 'சட்ட வல்லுணர்கள்' கூறுகிறார்கள்! நபிகள் நாயகம் அப்படிச் செய்தார்களா?
புகாரி ஹதீதுகள்
1. ஒரு யூதரும் ஒரு யூதப்பெண்ணும் இந்தக் குற்றம் செய்ததற்காக நபிகள் நாயகம் முன்னிலயில் கொண்டுவரப்படுகின்றனர். அவர்களுடைய வேத நூலான மோஸஸின் 'தவ்ராத்'தில் (ட்டோரா) உள்ள யூத சட்டப்படி, கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டும் என்று நாயகம் சொன்னதாகவும் அதன் படியே செய்யப்பட்டதாகவும் ஒரு ஹதீது. இதை அப்துல்லாஹ் இப்னு உமர் என்பவர் அறிவிக்கிறார் (ஹதீது எண் 4.829)
2. பனீ அஸ்லம் என்ற குலத்தைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆண், தான் இந்தக் குற்றம் செய்ததாகவும், அவருக்கு எதிராக அவரே நான்கு முறை சாட்சி சொன்னதால், அவரை கல்லாலடித்துக் கொல்லும்படியும் நபிகள் நாயகம் உத்தரவிட்டார்கள் என்று ஒரு ஹதீது. இதை அறிவிப்பவர் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்சாரி. (ஹதீது எண் 8.805)
3. "அல்லாஹ்வுடைய தூதர் ரஜம் (கல்லால் அடித்துக் கொல்லச் செய்யும் தண்டனை) நிறைவேற்றச் சொன்னார்களா?" என்று அஷ்-ஷைபானி என்பவர் அப்துல்லாஹ் இப்னு அபீ ஔ·பா என்பவரிடம் கேட்க, அதற்கு அவர், "ஆமாம்" என்று பதில் சொல்கிறார். " (இந்தக் குற்றத்துக்கான தண்டனை 100 கசையடிகள் என்று உத்தரவிடும்) சூரா நூர் அத்தியாயம் அருளப்பட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா?" என்று அவர் மறுபடியும் கேட்க, "எனக்குத் தெரியாது" என்று பதில் வருகிறது. இந்த ஹதீதை அஷ்-ஷைபானி அறிவிக்கிறார். (எண் 8.804). இதே ஹதீது மறுபடியும் சொல்லப்படுகிறது (எண் 8.824)
4. கல்லால் அடிப்பது பற்றி ஒரு இறைவசனம் அருளப்பட்டது என்றும், அது பின்னாளில் இழக்கப்பட்டது என்றும், இறைத்தூதர் கல்லால் அடிக்க உத்தரவிட்டுள்ளார் என்றும், அதைப் பின்பற்றி நாங்களும் அவ்வாறே செய்துள்ளோம் என்றும் இஸ்லாத்தின் இரண்டாம் கலீ·பா உமர் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது. (கஷ்·புல் கும்மாஹ், வால்யூம் 2, பக்கம் 111).
5. முதலில் திருக்குர்ஆனில் சொல்லியபடி ஒரு குற்றவாளிக்குக் கசையடி கொடுத்ததாகவும், பின்னர் இறுத்தித் தூதர் வழிப்படி அவருக்கு கல்லடி கொடுத்ததாவும் இஸ்லாத்தின் நான்காவது கலீ·பாவானா அலீ அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது (புகாரி).
சில விளக்கங்கள்
திருக்குர்ஆனிலே இறைவன் விதிக்கும் தண்டனை நூறு கசையடிகள். ஆனால் ஹதீதுகள் மூலம் கிடைக்கும் தண்டனை சாகும்வரை கல்லடி. இஸ்லாமிய சட்ட வல்லுணர்கள், திருக்குர்ஆன் சொல்வது '·போர்னிகேஷ'னுக்கு என்றும், ஹதீது சொல்வது 'அடல்ட்ரி'க்கு என்றும் பங்கிட்டுக் கொண்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இறைவனையும் விட்டுவிட முடியாமல், நபிகள் நாயகத்தையும் பின்பற்றாமல் இருக்க முடியாது என்றோ என்னவோ இப்படி ஒரு விளக்க ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டது போலும்.
திருக்குர்ஆனில் உள்ள 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிக்குமானால், இந்த ஹதீதுகளை என்ன செய்வது?
இந்தப் பிரச்சனையில் சில அறிஞர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறினார்கள். அது என்ன?
கூடா ஒழுக்கம் கொண்டவர்களுக்கு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை சூரா நூர் என்ற அத்தியாயத்தின் மூலம் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டது. அது மதீனாவில் அருளப்பட்ட சூரா. அதாவது, மக்காவிலிருந்து இறைத்தூதர் மதீனாவுக்குச் சென்ற ஆறாவது ஆண்டு, அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து என்று வரலாற்று வல்லுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது, இஸ்லாமிய சட்டம் கசையடிதான் என்பது உறுதியாகிறது. அப்படியானால், கல்லடித் தண்டனைகள் இந்த சூரா அருளப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன், வேறு தண்டனையே கிடையாதா? ஏன் கல்லால் அடிக்க வேண்டும்? ஏனெனில், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அவ்வப்போது அருளப்படுவதற்கு முன்பு, நபிகள் நாயகம் அவர்கள், மோஸஸ் எனப்படும் மூஸா நபிக்கு அருளியிருந்த தவ்ராத் (ட்டோரா) என்ற வேதத்தில் சொல்லப்பட்ட சட்டதிட்டங்களின்படித்தான் நடந்து வந்தார்கள். அதில் காணப்படும் தண்டனைகளில் ஒன்றுதான் இந்த கல்லடித் தண்டனை. அதைத்தான் நபிகள் நாயகம் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, குறிப்பிட்ட குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டம் இல்லாத பட்சம், யூத சட்டத்தை நபிகள் நாயகம் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது சிலருடைய கருத்து. (மேற்கண்ட ஹதீதுகள் ஒன்றில், இந்த தண்டனை யூதர்களுக்கே நிறைவேற்றப்பட்டிருப்பதாக இருப்பதைக் கவனிக்கவும்).
ஆகவே, இந்த சூரா அருளப்பட்டுவிட்டதால், அதற்குப் பிறகு கல்லால் அடித்தல் என்பது இஸ்லாமிய சட்டமாகாது என்பது அவர்களுடைய வாதம்.
அதாவது, இன்றைக்கு ஈரான், நைஜீரியா, சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிறைவேற்றப்படும் கல்லடித் தண்டனையை கண்டிக்கும் அதே சமயம், திருக்குர்ஆனையும் ஹதீதையும் விட்டுக் கொடுக்காத விளக்கங்களைத் தருகிறார்கள்.
என்னுடைய கருத்தில்
- தொடரும்
0 comments:
Post a Comment