அடித்த
புயல் மழைக்கு
இரும்பு கட்டிடங்களே
இருந்த இடம்
இல்லாமல் போகும்
என்னுடையது
பூஞ்சோலை..!
இறப்பதற்காகவே
மரணத்தின்
கருப்பையில்
வளர்ந்தது
என் காதல் சிசு..!
கிழக்கு திசைக்கு
இத்தனை
பக்கத்திலா
மேற்கு திசை
விடிந்தவுடன்
அஸ்தமித்து விட்டதே..!
எனது
முதல் எழுத்தே
முற்றுப்புள்ளி தான்..
முடிவு என்ன என்று
நன்றாய் தெரிந்திருந்தும்
தொடங்கியிருந்தேன்
எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
தெரியவில்லை..!
தொழிலாளர்கள்
உலகத்தில்
புரட்சியாளர்களே அதிகம்
தோல்வியாளர்கள்
உலகத்தில்
காதலர்களே அதிகம்..!
அவளுடனான
முதல் சந்திப்பு
இன்னமும் பசுமையய்..
இதோ
என் தங்கை
பெயர் புன்னகை
மனோதத்துவம் படிக்கிறாள்
அறிமுகம் செய்கிறான்
நண்பன் ஒருவன்
இந்த மோதிரம்
எங்கே வாங்கினாய்..?
ஆசையாய் கேட்டது
நண்பனின் தாய்
பேங்காக்..
- நான்..
இந்த சட்டை
சிங்கப்பூரா..?
ஆர்வமாய் கேட்டது
நண்பனின் தந்தை
ஊரில் சிங்கப்பூர் கடையில்..
- நான்..
அழுதிருந்தாயா..?
கண்களில் தெரிகிறதே
தேனாக கேட்டது
புன்னகை
புன்னகைத்தேன்
- நான்..
அணிகலன் விசாரிப்பின்
நடுவே
அழுகையை விசாரித்தவள்
எனக்கு
அழகாய் தெரிந்தாள்
தேள் கொட்டிய
இடத்தில்
தேன் கொட்டியது
போல்..
அருமை
பாட்டியாரின் மரணம்
தொண்டை
அடைக்கும் துயரம்
பூட்டி தானே
வைத்திருந்தேன்
உன் கண்களுக்கு
புலப்பட்ட தெப்படி..?
உங்களுக்கு அழுகை
பிடிக்காதா..?
- நான்..
அழுவது பிடிக்கும்
புலம்புவது பிடிக்காது
கூட்டத்தில் சிரி
தனிமையில் அழு
"எனக்கு தெரிந்தது
உங்களுக்கு தெரிந்தால்
அதிகமாக அழுவீர்கள்
குறைவாக சிரிப்பீர்கள்"
ஹதீஸ் அறிவாயோ..?
தெளிவாய் இருந்தாள்
உங்களுக்கு இஸ்லாமும்
தெரியுமா?
- நான்..
என் வீட்டு
நூலகத்தில்
மகாகவி பாரதியின்
பகவத் கீதையும்
உண்டு
தமிழர் தலைவரின்
கீதையின் மறுபக்கமும்
உண்டு
என் ஆரம்பம்..
என் கருத்து
மட்டுமே சரி
என்ற புள்ளியில்
தொடங்குவதில்லை
அதனால் தான்
இதுவரை நான்
தோற்றதுமில்லை
உங்களிடம்
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
- நான்..
கற்க வேண்டியது
நிறைய உள்ளது
இதுவே
இதுவரை
நான் கற்றது
அடைக்கப்பட்ட இடத்திற்குள்
தென்றலாய் நுழைந்தது
புன்னகையின் புன்னகை
சிறைப்பட்டிருந்த
என் துயரங்களை
விடுதலை செய்து
பறக்க விட்டாள் -
நானே அவளுக்குள்
சிறைபட்டேன்
அன்று
அவளுக்கு
பிறந்த நாள்..
பூக்களிடம் விசாரித்தேன்
உனது
பிறந்த தினம்
என்றென்று தெரியாதாம்-
மறந்து போயும்
சொல்லிவிடாதே
இன்று தவிர
மற்ற நாளில்
பூக்காமல்
இருந்து விடும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்து
படித்ததும் -
என்னை காதலிக்கிறாயா..?
கேட்டே விட்டாள்
சுற்றி வளைக்க
தெரியாது
அவளுக்கு
என்னை மணமுடிக்கிறாயா..?
போட்டு உடைத்தேன்
துணிச்சல் தான் -
அவளிடம் கற்றது
அடர்த்தியான நிசப்தம்
இருவருக்கும் இடையில்
இடைஞ்சலாய்
அவளின்
நாளை சந்திக்கிறேன்
எனும் சொல்லில்
மௌனம் கலைந்தது
விடை தெரியாமல்
அன்றைய பகலும்
விடைபெற்றது
தூக்கம் தொலைந்த கண்கள்
இரவுகளின்
இருட்டு இரகசியங்களை
எனக்கு
வெட்ட வெளிச்சமாக்கியது..!
ஆளில்லாத நெடுஞ்சாலையில்
தனியாய் நிற்கும்
தொலைதொடர்பு கம்பிகளாய்
நின்றேன்
என் வீட்டு
சன்னலின் ஓரத்தில்..
என் பறவை வந்துவிடாதா..?
ஏமாற்றாமல்
சொன்னபடி வந்துவிட்டாள்
"உன்னை விட்டு போகிறேன்"
என்று சொல்ல
'டூமீல்' சத்தம்
என் காதுக்குள்..
தோட்டாக்களை
விட வலிமையானது
அவள் வார்த்தைகள்
முன்பு..
அவள் புன்னகை
அவள் சிரிப்பு
அவள் சொல்
அவள் வார்த்தை
நிஜத்தில்..
அவள் ஸ்பரிசம்
அவள் அணைப்பு
அவள் முத்தம்
அவள் உறவு
கனவில்..
இன்று..
கனவிலும்
நிஜங்கள் கூட
இல்லை..!
அன்று சொன்னது..
கதையில் வரும்
அனைத்து பாத்திரங்களிலும்
கதாரிசிரியர் இருப்பார்
என்
உணர்வில் உயிரில்
நீ இருப்பாய்..!
இன்று சொல்வது..
நான் உன்னுள்
இருப்பதாக
சொல்
இப்பொழுதே
இறந்து விடுகிறேன்..!
இப்படிக்கு -
உன் காதலன்
0 comments:
Post a Comment