எனக்கு என் பாட்டியார் பொன்னாச்சிம்மா மீது கொள்ளை பிரியம், அவர்களை பற்றி திண்ணை இணைய தளத்தில் ஒரு கதையே எழுதி இருந்தேன், நிற்க..
எனக்கு சாதாரணமாகவே விரல்கள் நடுங்கும், இன்னும் ஏதோ சிறிய பதட்டமான சூழ்நிலை என்றால் கூட கைகளில் இன்னும் உதறல் கூடி விடும், வயதானவர்களுக்கு குளிரில் நடுங்குமே அது போல் அல்லது அதை விட அதிகமாக நடுநடுங்க ஆரம்பித்து விடும். நான் எப்போதும் கடுமையாகவே இருப்பேன், பேருந்துகளில் உட்கார்ந்து இருக்கும் போது கூட தேவையே இல்லாமல் கம்பிகளில் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்வேன்.
இப்படியாக தேவைக்கு மீறிய அச்சம் ஏற்படும் காரணத்தால் நான் என் உடலிலிருந்து அதிக சக்தியை விரயமாக்கி இருக்கிறேன், வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது உணவுக்கும் குடிநீருக்கும் மட்டும் தான் பொருந்தும் என்று நினைத்திருந்தேன். அப்புறம் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் மாணவனாக மாறிய பிறகு தான் அது உடலின் அசைவுக்கு கூட பொருந்தும் என்று தெரிந்து கொண்டேன், தெளிந்து கொண்டேன்.
ஒரு முறை என் பெரியம்மாவின் மகளார் சேச்சி சிறு வயதில் சிறிய மணியை விளையாடும் போது அவரது மூக்கின் உள்ளே திணித்து விட்டார், தொடர்ந்து அழ ஆரம்பித்து விட்டார், என் பாட்டியார் பொன்னாச்சிம்மா என்ன? ஏது? என்று கவனித்த போது செய்தி தெரிந்திருக்கிறது, அதே நேரத்தில் சில விருந்தாளிகள் திடீரென்று வந்து விட்டார்கள், உடனே பொன்னாச்சிம்மா கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் சேச்சியை சோபாவில் தூக்கி உட்கார வைத்து விட்டு, 'ஏன் குழந்தை அழுகிறது?' என்று கேட்ட விருந்தாளியாய் வந்த பெண்டிர்களுக்கு ஒரு பதிலை சொல்லி விட்டு, வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைத்து விட்டு, சேச்சியின் நாசியில் மிளகாய் பொடியை காண்பித்தார், ஒரு தும்மல் தான், நாசியின் உள்ளே சென்ற சிறிய மணியானது வந்து வெளியே விழுந்தது, சேச்சியின் அழுகை நின்றது.
நானாக இருந்திருந்தால் பதட்டமடைந்து அழுது புரண்டு வீட்டையே இரண்டாக்கி இருப்பேன். எது நடந்தாலும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும், பொன்னாச்சிம்மாவிடம் கற்றுக் கொண்டது. தன் மரணத்தின் இறுதி நேரத்திலும் பதட்டப்படாமல், 'யாரும் அழ கூடாது, இது தான் சரியான நேரம்' என்றவர் தான் எனது பாட்டியார்.
பிரச்சினை வரும் போது பதட்டப்படாமல் இருந்தால் அல்லது வீணாக உடலில் இருந்து அதிக சக்தியை விரயமாக்காமல் இருந்தால் பிரச்சினைகளின் தீர்வை நம் மனசே சொல்லி விடும் இன்ஷா அல்லாஹ்..
0 comments:
Post a Comment