“ஏங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்களே கவனிச்சீங்களா?” என்று தன் கணவன் குமாரை கேட்டாள் ரூபா.
குமார் அந்த கேள்வியில் ஆர்வம் இல்லாதவனாக, “அதுக்கு என்ன இப்ப?” என்றான்.
ரூபா எரிச்சலாக, “உங்கள்ட்ட போய் சொன்னேனே, அட... வேறு ஒண்ணுமில்லைங்க..அந்த பொண்ணு வெளியேயே வரலை, ஏன் தெரியுமா?” என்றாள்.
குமார் அலட்சியமாக, “ஓஹோ! அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சு போச்சா, சரி சொல்லேன்.. ஏனாம்?” என்றான்.
ரூபா,”அந்த பொண்ணை ஜன்னல் வழியா பார்த்தேன்.. ஸ்கேல் வச்சு அளந்து எடுத்து பொன்னால செஞ்ச சிலை மாதிரி இருக்கா, அவ்வளவு அழகு- ஆனால் அவ மாப்பிள்ளை.. அய்யோ..! கரிசட்டி! தேயிலை கல்ரு.. 4ஆர் சைஸில் ஒரு போட்டொவே தலையில ஒட்டலாம்.. வழுக்கைதலை.. நல்லா வீடு கட்டி சாப்பிடுவான் போல, ஆள் வர்றதுக்கு முன்னாடியே வயிறு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி போவுது..” என்று தொடர
குமார் கையமர்த்தினான்,”இரு.. இரு.. அடுத்தவங்களை பத்தி இப்படி பேசறது தவறு.. இதுக்கு மேல தாங்காது.. நான் குளிக்க போறேன்” என்று குளியலறைக்குச் சென்றான்.
ரூபாவுக்கு இருப்பு கொள்ளவில்லை, அதே குடியிருப்பில் வேறு தளத்தில் வசிக்கும் தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று சற்று முன் பேசியதை மறு ஒலிபரப்பு செய்தாள்.
இருவரும் வெறும் வாயை மென்றே ஏப்பம் விடுபவர்கள்- அவல் கிடைத்துள்ளது சும்மா விடுவார்களா? இருவரும் வம்பளந்தார்கள்- நாளை ரூபாவின் பக்கத்து வீட்டிற்கு செல்வது என முடிவெடுத்தார்கள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்தான் ராஜேஷ், வாசலில் பார்த்த முகமான ரூபாவை கண்டு புன்முறுவலுடன்ரூபா, ஜெயந்தி இருவரையும் வரவேற்றான்,””உள்ளே வாங்க..”
இருக்கையை காட்டி”உட்காருங்கள்” என்று உள்ளே சென்றான்.
ரூபா ஜெயந்தியிடம், “அவ வரட்டும், நான் கேட்கிறேன்,’ஏன்ம்மா, வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?- காதல் திருமணமா?- ஆள பார்த்தா எமனுக்கு வாகனமா இருந்தவர் போலிருக்கே.. இவரை போய்..” என்று முடிக்குமுன்
விவாகரமான ஜெயந்தி குறுக்கிட்டு, “நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன் எப்படி இந்த ஆள் பக்கத்துல படுக்க முடியுது?” என்று கூறி சிரித்து யாரோ வரும் சத்தம் கேட்டு சதாரித்து அமர்ந்தனர்.
ராஜேஷ் தன் மனைவி உமாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி கொண்டு வந்தான்.
ரூபா, ஜெயந்தி அதிர்ந்தனர். இருவரும்,”இவங்களுக்கு..” என்றனர்.
ராஜேஷ் சொன்னான், ஆமாம்.. ஒரு விபத்துல கால் போயிடுச்சு.. அந்த அதிர்ச்சியில பேச்சும் போயிடுச்சு” என்றான்.
இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சக்கர நாற்காலியில் புன்னகையுடன் உட்கார்ந்திருக்கும் அந்த பெண்மணியை பார்த்தார்கள். அவளோ தன் கண்வனிடம் திரும்பி சைகையில் ஏதோ சொல்ல, ராஜேஷ், ”அடடே... பாருங்க.. நான் மறந்தே போயிட்டேன்.. என்ன சாப்பிடறீங்க..” என்றான்.
இருவரும் கண்ணீர் மல்க பார்த்தனர். அப்போது ராஜேஷ் அவர்களுக்கு அழகாக தெரிந்தான்
0 comments:
Post a Comment