Saturday, October 30, 2010

யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க - சிறுகதை

யுனூஸ் நானா கடைல ஒக்காந்திருந்த என்னையும் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே ஆச்சர்யம் தாங்க முடியலை. 'என்னா இது, ஷாஹாவா இப்படி சொன்னது' என்று

அப்படி என்னா ஷாஹா ஊர்ல இல்லாதத பெருசா சொல்லிட்டார்ன்னு கேட்டா ஒக்காந்திருந்த எல்லோருக்கும் 'சுலைமானி' சொல்லிட்டார். அவ்வளவு தான்.

டீக்கடை காரரிடம், 'இந்தாப்பா சலீம்.. நல்ல தக்வாவா சுலைமாணி போடு.. எல்லாருக்கும்.. இன்னைக்கி.. நம்ப செலவுல தான் சுலைமாணி..'

இதிலென்ன ஆச்சர்யம்ன்னு கேட்டா, அவருக்கு எப்போதுமே யுனூஸ் நானாட்ட தேத்தணி சொல்ல சொல்லி நச்சரித்து வாங்கி கேட்டு குடிப்பது தான் பழக்கம்.

ஒரு நாள் கூட தன் சட்டை ஜோப்புலேந்து எடுத்து பத்து பைசா செலவு பண்ணுனது கெடையாது.

ஆனா இன்னைக்கு என்னடான்னா ரொம்ப சந்தோஷமா இக்கிறாரே செலவுலாம் செய்றாரேன்னு என்னான்னு  தெரியலையேன்னு  நாகூர் யுனூஸ் நானா அலைவரிசைல ஒக்காந்திருந்த ஒட்டு மொத்த ஜமாவுக்கு இருந்த ஒரே ஆச்சர்யம்.

ஷாஹாக்குன்னு பெருசா வேலை வெட்டியெல்லாம் ஒண்ணுமில்லை, ஊர்ல, இவர் பொண்டாட்டிகிட்ட எப்பவோ நல்ல செம்மத்தியா அடி வாங்கினத அரசல் புரசலா தான் பேசுவாங்க.. ஆனா இவர் அன்னாடம் ஏச்சு வாங்குறத தான் அசராம பேசுவாங்க..

ஒரு தடவ ஷாஹாட புள்ள அவர வெளையாட கூப்டிச்சு, 'வாப்பா வாப்பா எங்கூட வெளையாடறீங்களா..?'

'வெளையாடாதேம்மா.. நீ வேற.. வெளையாடுற நெலமைலயா நான் இக்கிறேன்' ஷாஹா மறுத்தார்

'இல்ல இல்ல வாப்பா.. இது ரொம்ப ஈஸி.. நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டே இக்கணும்.. யாரு மொதல்ல சிரிக்கிறாஹலோ அஹ அவுட்..'

பல தடவ வெளையாடியும் ஷாஹா தான் ஜெயிச்சார்

'எப்படி வாப்பா... நீங்க சிரிக்காமலே இக்கிறீங்க..'

'ஒங்க ம்மாவ தாம்மா நெனைச்சிகிட்டேன்..'

தெனாலி கமலஹாசனும் இவரும் ஒண்ணு - ரெண்டு பேரும் எத பாத்தாலும் பயப்படுவாங்க.. ஆனா ஒரே ஒரு வித்தியாசம் இவருக்கு எத பாத்தாலும் அல்லது யார பார்த்தாலும் பொண்டாட்டியா தான் தெரியும்.


ஓரு முறை ஷாஹாவின் பொண்டாட்டியிடம் வேலைக்கார பெண்மணி ஒருத்தர் இப்படி கேட்டார், 'என்னம்மா காசு 2 ரூவா கூட கேட்டதுக்கு வேலக்காரியவே மாத்திட்டீங்களே..?' என்று

அவர் ரொம்ப கூலா ஜாய் ஐஸ் கிரீம் குடிச்சிகிட்டே இப்படி சொன்னார், "நீ வேற புள்ள,  1 ரூவா கூட கேட்டாக்கா இந்த நிக்கிறாஹலே (ஷாஹாவை கைகாட்டி) என் மாப்பிள்ளையையே மாத்திடுவேன்..'

ஷாஹா, 'நான் எப்போ கூட கேட்டேன்..?' என்று அலறினார்.

மாற்றம் ஒன்று தான் மாறாதது போலும்..!

டில்லி கா லட்டு
ஜோ காயேகா
ஓ போஸ்தாயேகா
ஜோ பி நஹி காயேகா
ஓ பி போஸ்தாயேகா

- அதாகப்பட்டது..

டில்லியில் கிடைக்கும் லட்டு -
இதனை சாப்பிட்டவர்கள் -
அவதிப்படுகிறார்கள் -
(இன்னும்) சாப்பிடாதவர்கள் -
(இவர்களும்) அவதிப்படுகிறார்கள்

ஷாஹாவின் புலம்பல் தான் இது -

டில்லி கா லட்டு தான் ஷாஹாவின் கல்யாணம்.

மதர்ஸ் டே, பாதர்ஸ் டே எல்லாம் கொண்டாடுவாங்க தெரியுமா? அதாவது அந்த நாளைக்கு மட்டும் ம்மாவ, வாப்பாவ போய் பாத்துட்டு வந்துடுறது, அந்த மாதிரி ஒய்ஃப் டேன்னு ஒண்ணு வந்தா ஷாஹாக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்.. ஏன்னா அந்த நாள்ல மட்டும் போய் பாத்துட்டு வந்துடலாம்ல.. அதனால தான்..

பேக் டு யுனுஸ் நானா கடை,  'என்னாங்கணி, ஷாஹா.. இன்னைக்கு என்னா ரொம்ப சந்தோஷமா இக்கிறீயோம்... என்னா விஷேஷம்..' என்று ஆளாளுக்கு கேட்டதுக்கு

'என் பொண்டாட்டிக்கு பல்லுல வலின்னு டாக்டர்ட்ட போனதுக்கு டாக்டர் பல்ல புடிங்கி ரெண்டு நாள் பேச கூடாதுன்னு டாக்டரு சீதேவி மனுஷன் அடிச்சி சொல்லிட்டாரு.. அதனால தான்..' என்று  சொன்னதோடு 'யார்ட்டயும் சொல்லிடாதீங்கள்வோ' என்று ஒரு பத்து பேரு இருந்திருப்போம் அத்தனை பேர் கிட்டேயும் சொல்லி விட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு, பஹ்ருதீன் வந்து, எல்லோரும் சிரிச்சிகிட்டு இருந்தத பார்த்து 'என்னா'ன்னு கேட்டதுக்கு, எல்லோரும், 'பஹ்ருதீண்ட்ட சொல்லிடலாமான்னு'  ஷாஹா பக்கம் திரும்பி ஷாஹாட்ட கேட்டதுக்கு ஷாஹா ஸ்டைலா வாயில இருந்த சிகரெட்ட எடுக்காமலே கையை அசைத்து அசைத்து ஏதேதோ சொன்னார், அதன் அர்த்தம் சொல்லலாம்.. வேற யார் கிட்டேயும் சொல்ல கூடாது என்று அர்த்தம்.

ஆனா ஒண்ணுங்க, யாரு சொல்றாங்களோ இல்லையோ, நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன்.