Sunday, February 28, 2010

மீலாதுந்நபி

1

உலகம் பூராவும் சவுதி அரேபியா தவிர மற்ற முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் மீலாதுந்நபியன்று விடுமுறையாம். அது சவுதி அரேபியா  நாட்டின் சிறப்புகளில் ஒன்றா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனக்கு நாகூரின் சிறப்புகளில் ஒன்றினை பற்றி தெரியும். அது, நாகூரில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மதரஸாக்களில் ஓதும் பிள்ளைகளும் பிறை கொடி ஏந்தி "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" முழங்கி இந்த மீலாது தினத்தை நினைவு கூர்வார்கள்.

சிறு வயதில் நாகூரின் தெரு பள்ளி தெருவில் அமைந்திருந்த வஹ்ஹாப் சாஹிப் பள்ளியின் சார்பாக பிறை கொடி ஏந்தி மீலாது விழாவில் கலந்து கொண்டு நாகூர் தெருக்களில் ஊர்வலமாக நடந்து சென்றதில் என் கால்களுக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். Too be child was very heaven.

மீலாதுந்நபி என்றால் நபி பெருமானார் அவர்கள் பிறந்த தினம் என்று கொள்ளலாம். மீலாது என்ற வார்த்தை 'விலாதத்' என்ற பிறப்பை குறிக்கும் அரேபிய வார்த்தையிலிருந்து வந்தது.

மீலாதுந்நபி என்றால் 'ஹேப்பி பர்த்டே' பாடி கேக்கில் வைக்கப் பட்டிருக்கும் மெழுகுவர்த்தியை கொளுத்தி அதை ஊதி அனைத்து கேக் ஊட்டி கொண்டாடும் நிகழ்வு அல்ல.

மீலாதுந்நபி என்பது பெருமானாரின் ஒட்டு மொத்த வாழ்வையும் நினைத்து பார்த்து அவர்களை பற்றி தெரியாத அறியாத பல செய்திகளை அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டதாகும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மீலாது விழா தான் பெரியோர்களை தலைவர்களை அவர்களின் பிறந்த நாளில் எப்படி நினைவு கூர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.

நாங்கள் தெரு பூராவும் கொடி ஏத்தி பேனர்களில் வார்த்தைகள் எழுத நாகூரின் சொல்லரசு மரியாதைக்குறிய மர்ஹும் மு.ஜாபர் முஹ்யித்தீன் மாமா அவர்களிடம் போய் நிற்போம்.

அவர்கள் பெருமானாரை பற்றி நூறு புகழ் வார்த்தைகள் எழுதி வைத்து உங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்பார்கள்.
திருக்குறள் மாதிரி இரண்டு அடியில் இருக்கும் அந்த வாசகங்களை தேர்ந்தெடுக்க நாங்கள் திணறி போவோம் எதை எடுப்பது எதை விடுப்பது என்று.

அரபு மண்ணின் அழியா காவியம்
மரபுக் கவிதை மாநபி வாக்கியம்

- இது ஒரு சோறு தான், பானை நிறைய சோறு இருந்தது. சொல்லரசு மாமா சமைத்தது.

2

இன்றைக்கு அறிஞர்கள் நிரம்பிய உலகமாகி விட்ட படியால் 'பெருமானாருக்கு பிறந்த நாள் விழாக்கள் தேவையா?, மார்க்க அனுமதி உண்டா?' என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள் கேள்விகளாலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.(excuse my language)

மார்க்கத்தை பிரிந்துவிடாது தூக்கி பிடித்து நிறுத்தும் (யாரும் சிரிக்க வேண்டாம்) இவர்களின் மீலாது பற்றிய ஆதார கேள்விகளுக்கெல்லாம்  பதில் சொல்லி மாளாது அல்லது எனக்கு அவர்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல தெரியாது.

எப்படி அவர்களால் என்னை இதுவரை மீலாது  வேண்டாம் என்று அத்தனை ஆதாரங்களை முன்வைத்தும் மீலாது பற்றிய என் எண்ணங்களிலிருந்து பின் வாங்க வைக்க முடியவில்லையோ அதே போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சரி, மீலாதுக்கு அதாவது பெருமானாரின் வாழ்வை நினைவு கூர்வது தான் மீலாது என்று நான் சொல்லியிருந்தேன் அல்லவா? அதை அந்த நினைவு கூர்தலை பற்றி சிந்திப்போம்.

மனைவி அல்லது லாத்தா அல்லது தங்கச்சி இப்படி யாரும் வீட்டில் பிள்ளை உண்டாகியிருந்தாலே நமக்கெல்லாம் சந்தோஷம் தாங்க முடியாது, அதுவும் அழுது கொண்டே குழந்தை பிறந்து விட்டது என்று வையுங்கள், நம் வீட்டின் சந்தோஷ சிரிப்பொலி சொல்லில் அடங்காது.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'நபி அவர்களே! நான் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன்' என்று.

இது உமர் (ரலி) அவர்களின் கூற்று மற்றுமன்று. ஒவ்வொரு முஸ்லீமின் வார்த்தையாகவும் எடுத்து கொள்ளலாம். அதனால் தான் பெருமானாரின் பிறப்பை நம் வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் சந்தோஷத்தை விட அதிகமான மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம்.

அது சரி, நாட்களை அல்லது பிறப்பை நினைத்து பார்ப்பது ஏற்புடையது தானா? என்றால் குரான் ஷரீஃபிலேயே விளக்கம் இருக்கிறது. இது ஃபாஸ்ட் புட் காலம் என்பதால் நம்மில் பலர் 'சீக்கிரம் சொல்லுங்கள், எங்கே டைரக்டாக இருக்கிறது, எனக்கு வேறு வெட்டி முடிக்கும் வேலைகள் நிறைய இருக்கிறது, இன்னும் நிறைய ஆதார கேள்விகள் தயாரிக்க வேண்டும் (state board questions, central board questions, international board questions எல்லாம் பிச்சை எடுக்கணுமாக்கும்)' என்கிற ரீதியிலேயே கேட்கிறார்களே தவிர சிந்தித்து பார்க்கவோ அல்லது ஆராய்ந்து அணுகவோ தயாராக இல்லை.

3

குரான்ஷரீஃப்
அத்தியாயம் 19
வசனம் 15

"அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக"

-  இறைவன் ஹஜ்ரத் யஹ்யா (அலை) அவர்களை பற்றி குறிப்பிடும் பொழுது தான் மேற்கண்டவாறு கூறுகிறான்.

இந்த 15ம் வசனத்திற்கு முந்தைய வசனங்கள் பூராவும் யஹ்யா நபியவர்களின் பிறப்புக்கு முந்தைய சம்பவங்களையும் அவர்கள் பிறந்த பின்னர் அவர்களின் எப்படி பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும்  பெருமை கொண்டவராகவோ அல்லது மாறு செய்பவராகவோ இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறான்.

இதை தான் முழுமையான மீலாதுந்நபி என்று சொல்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நபி ஈஸா (அலை) அவர்கள் தமக்கு தாமே மீலாது விழா கொண்டாடுகிறார்கள்.

குரான்ஷரீஃபின் அதே 19வது அத்தியாயம் 16வது வசனம் அன்னை மர்யம் (அலை) அவர்களை பற்றி நினைவு கூர்கிறது. தொடர்ந்து  33வது வசனத்தில் நபி ஈஸா (அலை) அவர்களின் பேச்சை பற்றி இறைவன் அவர்களின் வார்த்தையையே குறிப்பிடுகிறான்.

"நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் நான் உயிர் பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், சாந்தி என் மீது உண்டாவதாக" - என்று வசனம் வருகிறது.

இந்த 13வது வசனத்திற்கு முன்னர் மர்யம் அவர்கள் கர்ப்பமுற்றது, ஈஸா நபியின் அற்புத பிறப்பை எடுத்து சொல்லும் முறை எல்லாமே மீலாதின் முன் மாதிரிகள் தான்.

4

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 14 வசனம் 5ல் மூஸா நபியவர்களுக்கு இறைவன் அனுப்பிய செய்தியை பற்றி சொல்லும் போது,

"... இன்னும் அல்லாஹ்வின் நாட்களை பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக!..."  - என்று இறைவன் கூறுகிறான்.

அது என்ன நாட்கள் என்பதை பற்றி வசனம் 6ல் குறிப்பிடும் போது "பிர் அவ்னிடமிருந்து காப்பாற்றிய பொழுது இறைவனின் நிஃமத்துகளை நினைவு  கூர சொல்வதோடு, பிர் அவ்ன் புரிந்த கொடிய செயல்களை பற்றியும் எடுத்து சொல்கிறான், அவன் கொடிய வேதனை செய்தது, ஆண் மக்களை கொன்று விட்டு பெண் மக்களை விட்டு விட்டது -

- இப்படியாக இறைவன் மூஸா நபிக்கு அளித்த செய்தியில் சொல்கிறான். இதுவே என்னளவில் மீலாது தான்.

முஸ்லீமாகிய நாங்களும் எங்களுக்கு இறைவன் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூர்கிறோம். எங்களின் அருட்கொடை முஹம்மது நபிகளன்றி வேறொன்றும் இல்லை.

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 21ல் வரும் வசனம் 107ல் இறைவன் பெருமானாரை பற்றி கூறும் பொழுது,

"(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை" என்றல்லவா கூறுகிறான்.

நாம் நினைத்து பார்க்க அதாவது மீலாது செய்ய இறைவன் நமக்கு புரிந்த அருள் பெருமானாரின் பிறப்பன்றி வேறென்ன இருக்க முடியும்.

5

நாம் செய்யும் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பெருமானார் தான் அழகிய முன்மாதிரி. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் நாம் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி?

அல்குரான் ஷரீஃப்

அத்தியாயம்:33; வசனம்:56

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து(அருள் பிரார்த்தனை)ச் செய்கிறார்கள். (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஸலாமும் கூறுங்கள்.

பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்வதற்கு அல்லாஹ்வும் மலக்குமார்களும் தான் அழகிய முன்மாதிரி.

அல்லாஹ் கலிமா சொல்ல வில்லை, தொழுவதுமில்லை, 100க்கு 2.50 காசு ஜகாத்தும் கொடுக்கிறதில்லை, ஹஜ்ஜும் செய்வதில்லை.

அவன் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறான். நாமும் இறைவனோடு சேர்ந்து பெருமானாரை நினைவு கூர்வோம். இதுவும் மீலாது தான்.

(அல்லாஹும்ம சல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி)

6

பெருமானாரை பற்றி பேசுவதென்பதே நாவை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல தான் என்று நான் எழுதிய ஒரு கதையில் சொல்லியிருப்பேன்.

பெருமானாரை பற்றிய கவிதைகளில் நம்மை முழுமையாக சுத்தப்படுத்தும் சக்தி 'கஸீதத்துல் புர்தாஹ்'வுக்கு உண்டு என்று நம்புகிறேன்.

அந்த கஸீதாவிலிருந்து..

35 வது கஸீதா

எமது (நபி பெருமானார் (ஸல்)) அவர்கள் (நன்மையானவற்றை ஏவி, (தீமையானவற்றை) விலக்குபவராவர். எனவே, "ஆம்" அல்லது "இல்லை" என்ற வாக்கில்  அவர்களை விட வேறெவரும் சக்தி வாய்ந்தவரல்லர்.

50 வது கஸீதா

கனவுகளை கண்டு அவையே போதுமென திருப்தியடைந்து கொள்ளும் துயில் கொண்ட கூட்டத்தினர், இவ்வுலகில் அ(ந் நபிய)வர்களின் அந்தரங்கத்தை எங்கனம் உணர முடியும்?

7

இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதில் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.." என தொடங்கும் மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள் அற்புதம்



இதோ அந்த வரிகள்..

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு
எங்கள் திருநபியிடம் போய் சொல்லு
சலாம் சொல்லு

தன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞ்ஞான பெருமான்
கண்ணோடு கண்ணாகி
கல்புக்குள் நிறைவாகி
கருணைக்கு பொருள் தந்த எம்மான்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

மடமையாம் இருள் போக்கி
மதுவையும் விஷம் ஆக்கி
மாந்தரின் நலம் காத்த பெருமான்
மண்ணோடு பெண்மகவை
மகிழ்வோடு புதைத்திட்ட
மாபாத(க)ச் செயல் தடுத்த எம்மான்
அந்த மஹமூதை காண்பேனோ இந்நாள்
எங்கள் மஹமூதை காண்பேனோ இந்நாள் (தென்றல் காற்றே)

கடல்காடு மலைபாலை
கடக்கின்ற இறைவேதம்
கனிவாயில் இதழ் விண்ட பெருமான்
கடல்போன்ற பகைமுன்னே
உடைவாளை கரமேந்தி
படை கொண்டு பகைவென்ற எம்மான்
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்?
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்? (தென்றல் காற்றே)

எந்நாளும் அவர்நாமம்
இயம்பாத கணமேது
இறையில்ல பாங்கோசை பெருமான்
கைநகம் கண்தொட்டு
கனிகின்ற ஸலவாத்தில்
கஸ்தூரி மணம் கமழும் எம்மான்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

8

குரான் ஷரீஃபில்
பெருமானாரை பற்றி இறைவன்

அத்தியாயம் 68
வசனம் 4
"(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்"
(truly you are of a magnificient charachter)

அத்தியாயம் 10
வசனம் 58

"அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும்.; ஆகவே அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும்; இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது" என்று (நபியே) நீர் கூறுவீராக

முஸ்லீம்களாகிய நம்மை பொறுத்த வரை பெருமானாரை தவிர வேறொன்றும் பேரருள் கிடையாது, அவர்களின் பிறப்பை வாழ்வை நினைவு கூர்ந்து சந்தோஷமடைவோம். இந்த சந்தோஷம் நாம் சேகரித்து வைத்திருக்கிறோமே வீடு, வாசல், சொத்து, நகை எல்லாம் இவை எல்லாவற்றையும் விட சிறந்தது.

Sunday, February 21, 2010

சில டைரி குறிப்புகள்

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சினிமா இயக்க பைத்தியம் பிடித்து அலைந்த மாதிரி நாங்களும் சிறு வயதில் சினிமா இயக்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததுண்டு. (இல்லேண்டாலும் அப்படித் தான்)

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர் படத்துக்கு ‘கத்தி முனையில் ரத்தம்’ என்று பெயர் வைத்திருப்பார்.

நாங்கள் அதே தலைப்போடு நாகூரோடு ஒத்து போகிற இன்னொரு பெயரையும் இணைத்து பெயர் வைத்து வீட்டில் பைத் வாங்கினோம்

நாங்கள் வைத்த பெயர்..

‘கத்தி முனையில் ரத்தம்
மைத்தாங் கொல்லையில் ஹத்தம்“

- இதுக்கு யார் தான் ஏசாம இருப்பார்கள்..?

--------------------------------------------------------------------------

எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம்.

வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர்.

அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?

அதற்கான விடை இதோ:

நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா.

இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...

 அடுத்து ரஜினியை பார்ப்போம்..

அவர் குடிச்சிட்டு வந்து குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் உள்ள யுனுஸ் நானா கடைக்கிட்டே ஒரு முறை தவறி விழுந்து விட்டார். தூக்க போன சிலரின் கையை உதறி விட்டு தானாகவே சிரமப்பட்டு எந்திரிச்சு ஒத்த வெரலை பாஷா படத்தில் வரும் ரஜினி மாதிரி உசத்தி காட்டி “நான் ஒரு தடவ உழுந்தா நூறு தடவ உழுந்த மாதிரி”ன்னு சொன்னார். அவர் பெயரும் பாஷா தானுங்களே..

So, நான் சொல்ல வரும் So and So எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து வைத்த கலவை தானே..?

-------------

Tuesday, February 16, 2010

மாவ்சம் - (காலங்கள் - Season) - பழைய இந்தி பட விமர்சனம்

முதலில் கீழே வரும் இந்த பாட்டை கேளுங்கள் (பாருங்கள்). மாவ்சம் என்ற படத்தில் எழுத்தில் வரும் பாடல் இது. பூபிந்தரின்  ஆழமான குரலிலிருந்து நம்மை ஆளும் அருமையான கஜல், இந்த பாடல்.  வைரமுத்து 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்று எழுதினார். இந்த கஜல் 'செவியில் விழுந்து டைரக்டாக ஆன்மாவில் நுழைந்து' விடும்.

பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.

மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்



பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?

- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்

வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார்.  டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.

இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.

வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்

ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.

27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.

வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.




சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.

கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.

அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.

அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.

அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.




இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த  வீட்டில்  தங்கியிருக்கும்  சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.

தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு    சென்றது,  தனது  தாயாரின்  நிலைக்கு  காரணமான  டாக்டரின்  மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.

கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.

டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்

'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்

டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.

கில் கஜிலியிடம்  'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.

டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.

கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.




இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.

குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.

இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.

சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.

படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.

காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்

இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.

Friday, February 12, 2010

கவ்வாலியின் மின்னும் நட்சத்திரம் - ஷாஹென்ஷா-ஏ-கவ்வாலி - The Brightest Star of Qawwaali

1948 அக்டோபர் 13ல் பாகிஸ்தான் நாட்டின் லைலாப்பூர் என்ற நகரில் இசையின் உருவம் இப்புவி மீது அழுது கொண்டே பிறக்கிறது.  (லைலாப்பூர் என்ற ஊர் இப்போது ஃபைஸலாபாத் என்ற பெயருடன் விளங்குகிறது).

 உஸ்தாத் பதேஹ் அலி கான் எனும் இசை மேதையின் குடும்பத்தில் ஐந்து பெண் மக்களுக்கு பிறகு ஆறாவதாக அந்த இசையின் பெரு உருவம் (பெரு உருவம் என்றால் பெருத்த உருவம் மட்டுமல்ல பெருமைக்குறிய உருவமும் கூட) முதன் முதலாக அழுகையின் ஊடாக இசைத்தது.



உஸ்தாத் பதேஹ் அலி கான் மற்றும் அவரது சகோதரர் உஸ்தாத் முபாரக்  அலி கான் மற்றும் சலாமத் அலி கான் ஆகியோர்களின் இசைக் குழுவில் சிறு வயதிலேயே இசை உருவம் தன்னை இணைத்து கொண்டு செயல் பட தொடங்கியது.

தபேலாவில் விரல்கள் படர ஆரம்பித்து பாகிஸ்தானின் பாரம்பரிய இசையான 'கயால்' எனும் இசையை சரி வர உள்வாங்கி கொண்டது.

1964ல் தந்தையாரின் மறைவும், 1971ல் தந்தையின் சகோதரரின் மறைவுக்கு பிறகும் அந்த இசை உருவம் தலையெடுக்க ஆரம்பித்தது.

'கவ்வாலி' என்றால் 'உரக்க சொல்வது' என்றே பொருளாம். யாரிடம் எதை சொல்வது? - உண்மையில் இறைவன் மீதும் அவனது தூதர் முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதான் அன்பை உரக்க சொல்வது. அடுத்து யாரிடம் சொல்வது? அல்லாவிடத்திலா? ஊர் உலகத்துக்கா? - என்றால் அதுவும் இல்லை, தனக்கு தானே சொல்லி கொள்வது.அதை உரக்க சொல்வதற்கு பெயர் தான் கவ்வாலி.

கவ்வாலி என்பது சூஃபி இசையின் ஒரு வடிவம். சூஃபி என்றால் இறைவனை தவிர்த்த வேறு சிந்தனையே இல்லாதவர் என்று பொருள்.

இறைவனை நினைவு கூர்வதால் உள்ளம் அமைதி பெறும் என்ற திருமறை வாசகத்தில் வருவதற்கேற்ப கவ்வாலி இசைக் கலைஞர்கள் தான் உச்சஸ்தாயியில் பாடும் போது இறைவனையே நினைவு கூர்கிறார்கள். இதனால் அவ்வாறு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் உள்ளம் அமைதி பெறுகிறது என்றால் அது மிகையல்ல.

அந்த இசை உருவம் 'கயாலை'யும் 'கவ்வாலியையும்' கலக்கியது உலகத்தையே ஒரு கலக்க இருப்பதற்கு ஒரு முன்னோட்டம் தான்.
அவரின் ஒரே கனவு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்காவில் அடங்கியிருக்கும் 'ஏழைகளின் பங்காளர்' (கரீபே நவாஜ்) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யினுத்தீன் அவர்களின் தர்பாரில் ஒரு இசை தர்பார் படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.



இந்த கனவு கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறியது. பாலிவுட்டில் ராஜ்கபூர் என்ற ஷோமேனின் அழைப்பை ஏற்று ரிஷிகபூர் - நீட்டுசிங்கின் திருமண விழாவில் பாடுவதற்காக அந்த இசை உருவம் அழைத்து கௌரவிக்கப்பட்ட போது தான் அந்த கனவு நிறைவேறியது.

(குறிப்பு: ராஜ்கபூரும் பெஷாவர் எனும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு நகரில் பிறந்து லைலாப்பூர் என்ற ஃபைஸலாபாத்தில் வளர்ந்தவர் தான். அதனால் தான் ஒரே ஊர் காரர் என்ற காரணத்தால் ரிஷி-நீட்டு திருமணத்திற்கு அழைத்தார். ராஜ்கபூர் ரஸ்ஸியாவில் தான் பிரபலம். ரஸ்ஸிய மக்களுக்கு காந்தி, நேரு எல்லாம் தெரியாது, ஆனால் ராஜ்கபூர், நர்கீஸ் என்றால் தான் தெரியும்)

பாலிவுட்டே அந்த இசை உருவத்தின் இசை கோர்வையை கேட்டு வியப்பில் மூழ்கியது.  இந்த இசை உருவம் உர்து தொடங்கி பஞ்சாபி, பாரசீகம் கடந்து இந்தியையும் விட்டு வைக்காமல் இசைத் தேனால் குளிப்பாட்டியது. உண்மையை சொன்னால் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் நம் அழகிய தமிழிலும் இந்த இசை உருவத்தின் குரலை ஏ.ஆர்.ரஹ்மானின் புண்ணியத்தால் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

(குறிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை தொகுப்பில் இந்த இசை உருவம் ஏ.ஆர்.ஆரோடு சேர்ந்து 'போறாளே பொண்ணுத்தாயி..' என்ற கருத்தம்மாவில் வந்த இசையை ரீமிக்ஸ் வடிவத்தில் கேட்டிருக்கலாம்)

இன்னும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து சோதனை முயற்சி  செய்து பார்த்த செய்திகளும் உண்டு. கின்னஸ் ரெக்கார்டில் கவ்வாலி இசை வடிவத்தின் அதிக தொகுப்புகளை படைத்தவர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெற்றதுமுண்டு.

தமிழில் பாடவில்லையே என்ற கவலை எனக்கிருந்தாலும் அவரின் இசையையும் விட்டு வைக்காமல் தமிழ் படத்துக்கு காப்பி அடித்த சம்பவமும் இருக்கவே செய்கிறது.

காப்பியடிப்பதில் சாதனை புரிந்த சுந்தர்.சி யின் முதல் படமான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி வாயசைக்க கார்த்திக் பின்னாடி ஒளிந்து கொண்டு பாடும் வைஜெயந்திமாலாவின் 'வாழ்க்கை' காலத்து காட்சிகள் நிரம்பிய 'மாமா நீ வாம்மா.. புத்தம் புது பாட்டு..' என தொடங்கும் பாடல் 'கின்னா சோனா தெய்னு ரப்னே பனாயா..' என்ற இவரின் பாடலின் இசை திருட்டு அல்லவா அது.

இன்றும் இசை பிரியர்களால் குறைந்த பட்சம் கவ்வாலி இசை பிரியர்களால் மதிக்கப்படும் அந்த இசை உருவம் 'நஸ்ரத் பதேஹ் அலி கான்' என்ற பெயர் தாங்கி உருவம் தன்னுடைய 48வது வயதில் ஆகஸ்ட் 16ல் 1997ஆம் ஆண்டில் காலத்தை முடித்துக் கொண்டு புகழோடு கரை சேர்ந்தது.


பின் குறிப்பு:

'கயால்' இசை வடிவத்தை 'கயல்' என்று தவறாக எழுதியதற்காக வருந்துகிறேன்

திருத்திய ஆபிதீன் நானா அவர்களுக்கு என் நன்றிகள்..

அதற்காக ஆபிதீன் நானா அவர்களை இந்த 'அல்லாஹூ அல்லாஹூ'வில் கரையுங்கள் என்று வாழ்த்துகிறேன்

Thursday, February 11, 2010

குழந்தை பாதுகாப்பு

'வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்' ன்னு சொல்வாங்க, அதோட 'குழந்தைய வளர்த்துப் பார்'ன்னும் சேர்த்துக்கலாம்னு தோணுது.

இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.

(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)

(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)

குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.

எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள்,  வீடு  சுத்தம்  செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.

குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.

இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நான் ஒரு ரெண்டு மூன்று  வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.

சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?

ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.

சில டைரி குறிப்புகள்...

நான் செட்டியர் ஸ்கூல்ல ரெண்டாவது படிச்சிகிட்டிருந்தேன். வாத்தியார் பேர் தெரியலை. ஆனாக்கா 'செவுட்டு வாத்தியார்' என்று தான் கூப்பிடுவோம். அவருக்கு காது அவ்வளவா கேட்காது அல்ல அவ்வளவும் கேட்காது. வாத்தியார்களுக்கு பல பேர் இப்படி மாணவர்கள் வைப்பதுண்டு. ஒரு வாத்தியாருக்கு 'போண்டா சார்' என்று கூட பெயரிருந்தது. அவர் போண்டா பிரியமா சாப்பிடுவாரா? அல்லது போண்டா மாதிரி இருப்பாரா? அல்லது இரண்டுமேவா? என்றெல்லாம் ஞாபகமில்லை.

இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'.

அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில்  (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார்.

போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார்.

'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிறர்,

போனை எடுத்தவர் தொடர்ந்து கடுப்புடனே பேசியிருக்கிறார், 'அவன்லாம் இல்லை'

'வந்தா நான் பேசுனேன்னு சொல்லுங்க..'

அவர், 'நீங்க யாருன்னு சொல்றது?' என்று கேட்டிருக்கிறார்

அறிவாளி சொல்லியிருக்கிறார், 'நானா..?'

அவர், 'ஆமா.. ஆமா..'

அறிவாளி, 'நா அறிவாளின்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்...' என்றிருக்கிறார்

அவர், '(கடுப்புல கெட்ட வார்த்தையை சொல்லிட்டு) அப்ப நாங்க என்ன முட்டாளா?' என்று கேட்டுட்டு போனை அறைந்திருக்கிறார்.

இந்த டைரி குறிப்பு 'செவிட்டு சார்' என்ற பட்டப் பெயரை வைத்து மாணவர்கள் என் வாத்தியாரை கிண்டலடித்தது பற்றியது அல்ல. சொல்ல வருவது வேறு விஷயம்..

நான் ஒரு முறை எனது தம்பி தாஜையும் எனது மச்சான் ஜெஹபரையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு போயிருந்தேன். செவிட்டு வாத்தியார் இன்னும் வரவில்லை. அதுக்கிடையில் தாஜுக்கும் ஜெஹபருக்கும் சரியான சண்டை. கட்டிகிட்டு உருளுகிறார்கள். 'நான் தான்..' 'நீ தான்' என்று பயங்கர சண்டை.

நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். முடியலை. எனக்கு வாத்தியார் வந்துட போறார் என்ற பயம் இருந்தது. அவர் வந்தவுடன் இன்னும் பயம் இன்னும் உச்சத்துக்கு எகிறியது..

செவிட்டு வாத்தியார் அமைதியாக, 'யேய்.. ஏன்ப்பா சண்டை போடுறீங்க.. சண்டை போட கூடாது.. பேசாம எடத்துல போய் உக்காருங்க..' என்று சண்டைய தடுத்தார்.

நான் குறுக்கிட்டு, 'சார், அதுல தான் சார் சண்டையே.. யார் ஒக்கார்ரதுன்னு..' கத்தினேன் நான்

'ஒவ்வொரு ஆளா ஒக்காருங்க.. மொதல்ல நீ ஒக்காரு.. (என்று தாஜ் பக்கம் கையை காட்டி விட்டு) அப்புறம் நீ ஒக்காரு (என்று ஜாஃபர் பக்கம் கையை காட்டினார்..'

'வேணாம் சார்..' கதறினேன் நான்

'ஏன் வேணாம்.. நீ சும்மா இரு.. போய் ஒக்காரு.. ஆமா எங்கே ஒக்கார போறே..' என்று கேட்க

ஜாஃபர் அவசர அவசரமாக கையை நீட்டினான், 'அங்கே தான்..' என்று.

திரும்பி பார்த்தாரு.. அது அவர் உட்கார்ர நாற்காலி.

அன்னைக்கு பூரா நிண்டுகிட்டு பாடம் நடத்துன வாத்தியாரு கடைசியா போவும் போது என்னய தனியா கூப்ட்டு,
'கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து இந்த ரெண்டு பேரையும் மட்டும் இனிமே கூட்டிட்டு வந்துடாதே..' என்று எப்போதுமே கத்தி பேசும் அவர் அந்த செய்தியை மட்டும் மெதுவாக தான் சொன்னார்.

--------------------------------------------------------------------------------------------------------

எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள்.

ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை'  (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள்.

முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான்.

'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு   போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று

வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.

எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று

அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்

---------------------------------------------------------------------------------------

மதியானம் படத்துக்கு போக வேண்டும் என்று திட்டம். எத்தனை மணிக்கு எங்கே சந்திப்பது என்பது பற்றிய பேச்சு சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது.

எங்கே சந்திப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் இப்போது எத்தனை மணிக்கு என்பது பற்றிய பேச்சு..

ஒருவர், 'பவலைக்கு எத்தனை மணி..' என்று ஆர்வமாக கேட்க
(பவல் - பகல்)
(பகல் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வி)

மற்றொரு நண்பர், '12 மணியாயிட்டா பவல் தாங்கனி..' என்றார்