Wednesday, September 16, 2009

குரான் ஷரீஃப் - ஓர் அற்புதம்

1

முஸ்லீம்களுக்கிடையே குரான் ஷரீஃப் இறைவனுடைய பேச்சா இல்லையா என்பதில் சர்ச்சையே இல்லை.  ஆஹா..! இந்த விஷயத்திலாவது சர்ச்சை இல்லாமல் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய முடியாது.

ஏனெனில் அவர்களுடைய சர்ச்சை அது எந்த நாளில் இறக்கப்பட்டது என்பதில் உள்ளது. என் போன்றோர் அது ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவன்று இறங்கியிருக்கலாம் என்றும் இல்லை இல்லை அது கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவில் ஏதாவது ஒரு இரவில் இறங்கியது என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் மறுசாரார் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.

சரி, இந்த சர்ச்சை கியாமத் (இறுதி நாள்) வரை நடந்து கொண்டு தானிருக்கும். அதில் நான் அதிகம் கவனம் எடுத்து கொள்ள போவதில்லை.

குரான் ஷரீஃப் உலகத்தின் மிகப்பெரிய அற்புதம் என்று நான் உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறேன். நான் அவ்வாறு கூறுவதற்கு தர்க்க ரீதியான காரணமும் உண்டு.

மூஸா (மோஸல்) நபியவர்கள் கடலை பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்கள். ஈஸா (ஜீஸல்) நபியவர்கள் இறந்தவர்களை உயிர்பித்தார்கள். இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் போன்ற எல்லா வற்றிலும் தீர்க்கதரிசிகள் அல்லது அவதாரங்கள் அற்புதங்களை நிகழ்த்தியதாக தான் காண்கிறோம்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதம் குரான் ஷரீஃப் தான். இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். "இறைவனிடமிருந்து என்ன அற்புதத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.." என்ற கேள்வி அவர்கள் முன் எழுப்பப் பட்டது.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் ஆச்சர்யமில்லை. தீர்க்கதரிசிகளாக தோன்றியவர்கள் ஏதாவது ஒரு அற்புதத்தை செய்து காட்ட வேண்டும் என்பது நியதி.

மேற்கூறிய இந்த கேள்விக்கு முஹம்மது நபிகள் எந்த மந்திரங்களையும் செய்து காட்டவில்லை, எந்த தந்திரங்களையும் செய்து காட்டவில்லை. "குரான் ஷரீஃபே இறைவனிடமிருந்து நான் பெற்ற அற்புதம்" என்றார்கள்.

என்ன அற்புதம் செய்து காட்ட போகிறீர்கள் என்ற  வினாவிற்கு  கடலை  பிளக்கிறேன், மலையை தூக்கிறேன் என்றெல்லாம சொல்லாமல் மக்களுக்கு இறைவன் தன்னை எடுத்து கூற சொன்ன கருத்துக்கள் அடங்கிய நூலை (சிறுநூலுக்குள் அடங்கிய பெருநூலகம் - குரான்  ஷரீஃப் பற்றி அடியார் அவர்கள்) அற்புதம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய அற்புதமான விஷயம் தானே.

2

சஅது பின் ஹிஷாம் என்பவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "திருத்தூதரின் நற்பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா? அவர்களிடம் என்னென்ன குணங்கள் இருந்தன என்பதை விளக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

சஅது பின் ஹிஷாம் அவர்கள் கேட்டது அன்னை ஆயிஷா அவர்களிடம், அதாவது பெருமானார் அவர்களின் மனைவியிடம். ஒருவரை பற்றி சரியாக அவர் மனைவியை தவிர வேறு யார் சொல்லி விட முடியும். வெளியிலே ஆயிரம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டு உள்ளுக்குள் அதற்கு நேருக்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். இப்படி நடப்பது வெளியே நண்பர்களுக்கு கூட தெரியாது. ஆனால் மனைவிக்கு தெரிந்து விடும், "ஆமா எஹ தானே.." என்று மனைவிமார்கள் ஆரம்பித்தால் முடிந்தது கதை..

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நீங்கள் குரான் ஷரீஃபை ஓதுவது இல்லையா?" என்று கேட்டனர்.

'ஆம் ஓதுகிறேன்.." என்றார்கள்

"குரான் ஷரீஃப் போதித்த அத்தனை நற்பண்புகள் அனைத்தும் திருத்தூதரிடம் இருந்தன" என்று தீர்க்கமாக தெளிவாக சொன்னார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதில் இரண்டு செய்திகள் கவனத்திற்குறியவை. ஒன்று பெருமானார் அவர்கள் எதை போதித்தார்களோ அதுவாகவே பெருமானார் வாழ்ந்தது, அதுவும் அவர்களின் மனைவியின் வாயாலேயே அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது, பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியது.

3

இரண்டாவதாக சொன்ன கருத்தில் ஒரு சிறு குழப்பம் உள்ளது. பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியதா? அப்படி என்றால் பெருமானாரிடத்தில் குரான் ஷரீஃபுக்கு முந்தைய வாழ்க்கையில் நற்பண்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததா? என்பதே அந்த குழப்பமாக இருக்கலாம்.

உண்மையில் பெருமானார் அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் தான் தன்னை இறைதூதர் என்று அறிவிக்கிறார்கள். நபிபட்டம் வழங்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்திலேயே பெருமானார் அவர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களை சுட்டிகாட்டி "அதோ அல் அமீன் (நேர்மையின் இருப்பிடம்) செல்கின்றார் என்றும் அதோ அஸ்ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) போகின்றார் என்றும் மக்கா நகர மக்கள் மனமுவந்து கூறி வந்தனர்.

அல் அமீன் அஸ்ஸாதிக் போன்ற பட்டங்கள் நம்மூரில் கிடைக்கும் டாக்டர் பட்டங்கள் போன்று என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உள்ளபடி அப்படி வாழ்ந்தார்கள். பெருமானாரின் வாழ்க்கையை படித்து பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

சரி நான் சொல்ல வந்த செய்தி பெருமானாரை (ஸல்) குரான் ஷரீஃப் மேன்மேலும் பண்படுத்தியது என்பது தான் உண்மை. அது எப்படி என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் விளக்குகிறது.

4

அந்த காலத்தில் மக்கா நகர மக்கள் தியானத்தில் மூழ்க தனிமையை நாடி மலை குகைக்கு செல்வது வழக்கம். அப்ரஹா என்பவன் யானை படையுடன் மக்காவில் அமைந்துள்ள தேவாலயத்தை இடிக்க வந்த போது பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தனிமையை நாடி ஹீரா குகையிலிருந்து விட்டு தான் திரும்பினார்கள்.

அப்படி தான் பெருமானாரும் தனிமையை நாடி ஹீரா எனும் மலை குகைக்கு சென்றார்கள். இரவு பகல் பாராமல் நாள், மாதம், வருடம் தெரியாமல் விளிப்பு நிலையில் இருக்கிறோமா உறக்க நிலையில் இருக்கிறோமா அல்லது இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கிறோமா என்று கூட தெரியாமல் அந்த இருளில் தவம் செய்தார்கள்.

அப்போது ரமலான் மாதம், நள்ளிரவு, தேய்பிறை, ஒளிப்பிழம்பான உருவம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது, பெருமானார் (ஸல்) அந்த ஒளிப்பிழம்பை பார்த்து பயந்து நடுங்கினார்கள்,  பேச துணியவில்லை, என்ன செய்வது என்றே விளங்க வில்லை, எனினும் சில நாட்களாகவே அந்த உருவம் தான் தன்னை கனவிலும் நினைவிலும் பிடிக்க வந்த  அதே உருவம்  என்றும் அதுவே இப்போது முழுமையாக தன்னிடத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்.

அந்த உருவம் அவர்கள் முன் வந்து, "ஓதுவீராக!" என்று கூறியது

'எனக்கு ஓத தெரியாதே..' என்றார்கள் எழுத படிக்க தெரியாத பெருமானார் (ஸல்) அவர்கள்

அந்த உருவம் அவர்களை இறுக கட்டி அணைத்தது. இதயத்தோடு இதயம் இணைத்தது. (இதை தான் சூபியாக்கள் (இறையன்பர்கள்) இதயத்திலிருந்து இதயத்திற்கு என்று கூறுகிறார்கள்)

இப்படியாக மேலே கூறியபடி மூன்று முறை நடந்த பிறகு குரான் ஷரீஃபின் முதல் அத்தியாயமானது அந்த உருவத்தில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஓதிக் காண்பிக்கப்பட்டது. அதையே பெருமானாரும் ஓதினார்கள்.

ஒதி முடித்த பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அந்த நிலையில் பெருமானாரின் நிலையை சொல்லவே வேண்டாம். அச்சமும் திடுக்கமும் நிறைந்தவர்களாக ஹீரா குகையை விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டி அன்னை கதீஜாவிடம் "என்னை போர்த்துங்கள்!" என்று ஏக்கத்திலும் பயத்திலும் சொன்னார்கள்.

எந்த ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த போது பயந்து நடுங்கினார்களோ அதே ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை, இஸ்லாம் மற்றும் முக்கியமாக இஹ்ஸான் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்க முடிந்ததற்கு காரணம் அதே குரான் ஷரீஃப் தான். (இதனை பற்றி விளக்கமாக இங்கே எழுத முடியாதமைக்கு வருந்துகிறேன்)

5

இப்படியாக குரான் ஷரீஃப் பல் வேறு சமயங்களில் அதாவது குறிப்பிட்ட ஒரே தடவையாக அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முந்தைய தூதுவர்கள் மற்றும் பிறர்களின் வாழ்க்கை சரித்திரங்கள், இறைவனை பற்றி அவனின் வல்லமை, ஆற்றல், அழகிய திருநாமங்கள்  பற்றிய வசனங்கள், சட்ட திட்டங்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்கள் இப்படியாக மனிதனுடைய அறிவு ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் உதவும் வசனங்களை கொண்டவையாக இறக்கியருளப்பட்டது.

இதில் உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்று வரும் போது ஒரு முறை உஹது யுத்தத்தின் போது சத்தியத்தின் எதிரிகளால் பெருமானாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் எங்கும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அதை துடைத்துக் கொண்டிருந்த அவர்கள், "தங்களிடம் அனுப்பப்பட்ட தூதரின் முகத்தை இப்படி உதிரத்தால் கோரப்படுத்தும் இவர்கள் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள்?" என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களாக முன் வந்து நான் தான் தூதுவர் என்று கூறவில்லை, அவர்களை இறைவன் அவ்வாறு தேர்ந்தெடுத்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்காக அவர்கள் எந்த கூலியையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இறைவனுக்காக அனுப்பப்பட்ட அவர்களை மக்கள் இவ்வாறு துன்புறுத்துகிறார்களே என்ற வருத்தத்தில் அவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள்.

ஆனால் இறைவனிடமிருந்து இப்படி செய்தி வந்தது, "உபதேசம் செய்வதை தவிர்த்து அவர்கள் விஷயத்தில் உமக்கு வேறு எந்த பொறுப்பும் கிடையாது!"

இன்னொரு இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்து, "உமக்கு ஏற்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையோடு செயலாற்றும்" என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான்

இப்படியாக பெருமானார் அவர்களின் சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் இறைவன் உடனே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுவான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் இறை கட்டளைக்கு அறிவுரைக்கு இணங்கி செயலாற்றி வெற்றியும் பெற்றார்கள்.

பெருமானாரை குரான் ஷரீஃப் மூலமாக பண்படுத்திய இறைவன், "நீர் சிறந்த குணசீலர்.." என்று சான்றிதழையும் அதே குரான் ஷரீஃபிலேயே வழங்கி விட்டான்.

இப்போது நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் சொன்னதன் பொருள் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

6

குரான் ஷரீஃபிலே அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? முஹம்மது தன் வாயாலேயே தான் சொல்கிறார். இது இறைவனின் வார்த்தையன்று என்றும் தனது வாய்க்கு வந்தவாறு சொல்லினர்.

ஆனால் இப்படி பொய்யுரைத்தவர்களை அல்லது ஏற்க மறுத்தவர்களை பார்த்து இறைவன் குரான் ஷரீஃபின் மூலமாகவே சவால் விடுத்தான். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இதை விட சிறப்பான ஒரு வேதத்தை கொண்டு வாருங்கள் என்றும் அப்படி கொண்டு வரவே முடியாது என்றும் கூறினான். பிறகு ஒரு பத்து அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றான், அதுவும் முடியாது போகவே ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றும் சவால் விடுத்தான்.

இறைவன் சவால் விடுத்தது அரேபிய இலக்கிய புலமையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்களே அவர்களிடத்தில். அத்தகைய இலக்கிய மேதைகள், கவிஞர்கள் படித்து பார்த்தனர்.

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்

- குரான் ஷரீஃப் 108 : 1 - 3

இத்தகைய அழகும் ஆழமும் இலக்கிய நடையும் இலக்கன பிழையில்லாமையும் உள்ள அத்தியாயத்திற்கு போட்டியாக அவர்கள் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முயன்றார்கள்;

அவர்களால் இப்படி தான் கடைசியில் கொண்டு வர முடிந்தது, உண்மையில் குரான் ஷரீஃபிடம் சரணடைய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்

மா ஹாதா கலாமுல் பஷர் (இது நிச்சயமாக மனிதனுடைய சொல்லன்று)

7

இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியான அபுஜஹ்ல் தீப்பொறி கக்கினான், ".. முஹம்மதின் தலையை கொன்று வருபவர்களுக்கு என்னிடமிருந்து நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பு.." என்று கஃபாவின் ஹூபல் சிலையின் முன்னே ஆணையிட்டு சத்தியம் செய்தான்.

முப்பத்து மூன்று வயதுடைய இளைஞர் உருவிய வாளுடன் பாய்ந்து சென்றார் முஹம்மதின் தலையை கொய்து வருவதற்கு. வழியில் எதிர்பட்டவர் "எங்கே செல்கின்றீர்?" என்று கேட்டதற்கு "முஹம்மதின் தலையை துண்டிக்க" என்றார் அந்த இளைஞர்.

வழியில் எதிர்பட்ட அவரோ, "முஹம்மதின் தலையை துண்டிப்பது இருக்கட்டும், உம்முடைய தங்கையும் மைத்துனரும் முஹம்மதின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டனரே.." என்றதும் முஹம்மது நபிகளின் இல்லம் நோக்கி விரைந்த கால்கள் அவர் தம் தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தது அப்போது.

கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக் குரல். ஒட்டுக் கேட்டார். கப்பாப் என்பவர் குரான் ஷரீஃபை அழகொழுக ஓதும் குரல் கேட்டது. அந்த ஒலி நாதத்தில் லயிப்பு ஏற்பட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்து தங்கையிடம் என்ன "ஓதிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்

தங்கையும் மைத்துனரும் நடுக்கத்தில். கப்பாப் பயந்து போய் மறைவில். இளைஞரின் கோபம் தாக்குதலை தொடுத்தது. காயத்துடன் தங்கை இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதாகவும், ஓதிக் கொண்டிருந்தது குரான் ஷரீஃபின் வசனங்கள் என்றும் சொல்லவே அந்த குரான் ஷரீஃபின் வசனங்களை தன்னிடம் காண்பிக்குமாறு வலியுறுத்தி அதனை ஓதினார்.

கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, ஓதிக் கொண்டிருக்கும் போதே, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று அவர்களை அறியாமலேயே வாய் விட்டு கூறினார்கள்.

அப்படி கூறியது இஸ்லாத்திற்கு மாறிய தனது அடிமையை அடித்து ஓய்ந்து, "உன் மீது இரக்கப்பட்டு நான் உன்னை அடிப்பதை விடவில்லை நான் களைத்துப் போனதால் அடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று முன்பு கூறி தங்கை வீட்டில் மேற்கூறிய சம்பவத்தில் இஸ்லாத்தை தழுவி பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாவது கலிபாவாக (ஆட்சி தலைவர்) இஸ்லாமிய உலகை ஆண்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தான்.

இவ்வாறு குரானின் ஒலியே எத்தனையோ பேர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து இருக்கிறது.

8

குரான் ஷரீஃபில் நபியே நீர் கூறும் என்று ஆரம்பிக்குமே தவிர நபி இன்னது கூறினார் என்று இருக்காது. அதாவது குரானில் இருப்பது அனைத்துமே இறைவனின் பேச்சு தானே தவிர முஹம்மது நபிகளின் பேச்சு கிடையாது

குரான் ஷரீஃப் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. அந்த அரபி மொழி வேத மொழி மட்டுமல்ல இன்றைக்கு சவுதி அரேபியா மட்டுமின்றி துபாய் ஈராக் முதல் மொரோக்கோ வரை வழக்கு மொழியாகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் குரான் ஷரீஃப் இருந்தாலும் அவை எல்லாம் மூல மொழியான அரேபிய மொழியிலிருந்து அருளப்பட்டதை பதிவு செய்து பிற்காலத்தில் முறையாக தொகுக்கப்பட்டு அப்படியே ஒரு புள்ளியேனும் மாற்றமில்லாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டவையே ஆகும்

இன்னும் சில வார்த்தைகள், வேதங்கள் மக்களுக்காக என்றால் அதை ஏன் மக்களிடமிருந்து மறைக்க வேண்டும். ஒரு வேளை திருமறை என்பதில் வரும் 'மறை' என்பதை தவறாக 'மறைத்து வைப்பது' என்று புரிந்து கொண்டார்களோ என்னவோ?


ஆனால் குரான் ஷரீஃபை மக்களுக்கு எடுத்து கூறும்படியும் மக்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே குரான் ஷரீஃபை மக்களுக்கு போதிக்க மதில் சுவர் மேல் எல்லாம் ஏற வேண்டியதில்லை. எல்லா சம்பூகன்களுக்கும் ஓதுவதற்கு அனுமதியுண்டு. குரான் என்றாலே "ஓதக்கூடியது" அல்லது "ஓதவேண்டியது" என்று தான் பொருள்

நான் எனது ரிபோர்டிங் ஆபிஸருடன் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க போயிருந்தேன். அங்கு கிராஅத் ஓதினார்கள். அதை கேட்டவுடன் இஸ்லாம் அல்லாதவரான அவர் கண் கலங்கி விட்டார்.


குரான் ஷரீஃப் அற்புதம் என்றால் அது வினைத் தொகையை போன்று அற்புதம் நிகழ்த்தியது, நிகழ்த்தி கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தானிருக்கும்.

Tuesday, September 15, 2009

துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானது சம்மந்தமாக..

தட்ஸ் தமிழ் டாட் காமில் படித்த செய்தி

2 துப்புரவு தொழிலாளிகள் கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட போது விஷ வாயு தாக்கி பலியாகி விட்டதாக படித்தேன்.

அதன் இணைப்பு  இங்கே உள்ளது

இன்றைய தேதிக்கு மனித உயிர்களுக்கு அப்படி ஒன்றும் மதிப்பு கிடையாது. மனித உயிர்கள் என்று கூட என்னால் சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், நாடு, மொழி என்று பிரிந்து கிடக்கிறார்கள்.

ஒரு கதை கூட சொல்வார்கள். அமெரிக்காவின் நியுயார்க் நகரின் சாலையில் ஒரு குழந்தையை நாய் ஒன்று கடித்து கொன்றிருந்ததாம். அப்போது அதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் குழந்தையை காப்பாற்ற வேண்டு நாயை அடித்து கொன்று விட்டார்.

அதை பார்த்துக் கொண்டிருந்த அந்நகரின் காவல் அதிகாரி ஒருவர், ஓடி வந்து குழந்தையை காப்பாற்றிய அவரின் கையை பிடித்து , "வீரமிக்க நியுயார்க் வாசி ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று பாராட்டினாராம்.

அதற்கு அவர், "நான் நியுயார்க் வாசி அல்ல.." என்று பதிலுறைத்தாராம்

உடனே காவலதிகாரி, "பரவாயில்லை.. ஒரு வீரமிக்க அமெரிக்கர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று புன்னகைத்திருக்கிறார்

அதற்கும் அவர், "நான் அமெரிக்கரும் அல்லர்.." என்று கூறினாராம்

"அப்படி என்றால் யார் தான் நீங்கள்" என்று கேட்டதற்கு "நான் பாகிஸ்தானி" என்றாரம்

உடனே அடுத்த நாள் செய்தி தாளில் "தீவிரவாத பாகிஸ்தானி அநியாயமாக நடு ரோட்டில் நாயை அடித்து கொன்றார்.." என்று வந்ததாம்.

இப்படி மனிதர்கள் தான் மனிதர்கள் என்பதை மறந்து அவர்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கும் பல் வேறு சாதி மத நாடு மொழி இனம்  வர்க்கம்  போன்ற முகமூடிகளை அணிந்து சுய முகங்களை இழந்து பல காலங்கள் மறைந்தோடி விட்டது.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் துப்புரவு தொழிலாளிகள் இறந்தால் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேச வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காகத் தான்.

சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

ஊழியர்கள் சாக்கடை அமைக்க, சுத்தம் செய்ய, இருப்பதை மூட, இன்னும் பல்வேறு பணிகளுக்காக பூமிக்கு அடியில் இறங்கி வேலை பார்க்க வேண்டி உள்ளது.

பூமிக்கு கீழுள்ள இடங்களை ஆங்கிலத்தில் கன்ஃபைண்ட் ஸ்பேஸ் என்றும் தமிழில் வரையறுக்கப்பட்ட இடம் என்றும் அழைப்பார்கள்.

இத்தகைய இடங்களின் விளக்கமாவது..

1. உள்ளே செல்வதற்கும் உள்ளிருந்து வெளியேறுவதற்கும் குறைவான வழிகளே இருக்கும்
2. இயற்கையான காற்றோட்டம் இருக்காது
3. இயற்கையான வெளிச்சம் கிடைக்காது
4. அது வேலை செய்வதற்கான இடமல்ல (அதாவது அலுவலகம் போன்றோ கடைகள் போன்றோ அமைக்கப்பட்ட இடமல்ல)

மேற்கூறிய விளக்கங்களையுடைய இடங்களில் ஊழியர்கள் இறங்கும் போது அவர்களுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு ஆபத்துகள் உள்ளது.
அவையாவன..

1. உயிர்வாயு பற்றாக்குறை (ஆக்ஸிஜன் டெஃபிஸியன்ஸி)
2. தீயும் விபத்துகளும் கூட ஏற்படும்
3. நச்சுத்தன்மையுடைய அல்லது விஷத்தன்மையுடைய வாயுக்கள்

இதில் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷ வாயு பத்து லட்சம் பங்கு காற்றில் வெறும் பத்து பங்கு அளவு மட்டுமே கலந்து இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து உள்ளது.

ஆகவே ஊழியர்களை ஆபத்தான வரையறுக்கப்பட்ட இடங்களில் இறங்க சொல்வதற்கு முன்பு தேவையான உயிர்வாயு உள்ளதா என்று சோதிப்பதுடன் எரியக்கூடிய வாயுக்கள், விஷ வாயுக்கள் இல்லை எனவும் 100 சதவிகிதம் உறுதியாக தெரிந்தவுடன் தான் இறங்க சொல்ல வேண்டும்.

மேற்கூறிய இடத்தில் வேலை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அதிகாரிகள் இடத்தை சோதனையிட வேண்டும். அனைவருக்கு பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்.

விபத்துகள் விடுமுறைக்கு செல்வதே இல்லை. "இன்றைக்கு எங்க ஊட்டு காலண்டர்ல நல்ல நேரம்னு போட்டிருக்கு அதனால விஷ வாயு வந்தா கூட எனக்கு ஒண்ணும் ஆவாது" என்றெல்லாம் சொல்லி ஏமாந்து போக கூடாது. பாதுகாப்பு தான் உயிருக்கு உத்திரவாதம்

உயர்நீதி மன்றம் இத்தகைய விபத்துகளை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை இந்த மாத துவக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நல்ல துவக்கம் தான்

இது போன்ற வேலையிட விபத்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்

Sunday, September 13, 2009

ஹலீம் கஞ்சி செய்வது எப்படி?

பகுதி 1:

கடலை பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
துவரம் பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
பச்சை பயிறு - கால் (ரைஸ் குக்கர்) கப் அளவு
பாஸ்மதி அரிசி (அல்லது) பச்சரிசி - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
மேற்கூறிய அனைத்தையும் தண்ணீரில் ஒரு 15 நிமிடத்திற்கு அப்படியே போட்டு வைக்க வேண்டும்

15 நிமிடம் கழித்த பிறகு பருப்புகளை களைந்து அனைத்து தண்ணீரையும் வடித்து விட்டு
உடைத்த கோதுமை யை (முக்கால் ரைஸ் குக்கர் கப் அளவு)
அந்த பருப்புகளில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்

பகுதி 2
கோழியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) அல்லது இறைச்சியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) சின்னசின்ன துண்டுகளாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் (அல்லது) கொத்துகறியும் (கால் கிலோ) வாங்கி வைத்துக் கொள்ளலாம்

பகுதி 3

குக்கரை (பிரஸ்டிஜ் வகை) அடுப்பில் வைத்து
அந்த குக்கரில்
எண்ணெய் (4 சோறு வைக்கிற ஆப்பை அளவு) ஊற்றி
பட்டை (சின்ன துண்டு 1), கிராம்பு (4),
வெங்காயம் (பெரியது 1 1/2), (நன்றாக வதங்கணும், கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால் பொண்ணிறமாக வந்துவிடும்)
இஞ்சி பூண்டு (5 டேபிள் ஸ்பூன்), (மீண்டும் வதங்கணும்)
நன்றாக மீண்டும் வதக்கிய பிறகு
தக்காளி (2),
பச்சை மிளகாய் (4),
மல்லி கீரை (கொஞ்சம்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு தாளித்து

அதுலேயே
மிளகாய் தூள் (1 1/2 டேபிள் ஸ்பூன்),
மிளகு தூள் (1 டேபிள் ஸ்பூன்),
ஜீரக தூள் (1 டேபிள் ஸ்பூன்),
மஞ்சள் தூள் (1 டேபிள் ஸ்பூன்),
உப்பு தூள் (தேவையான அளவு),
கரம் மசாலா (அல்லது) இறைச்சி மசாலா (4 டேபிள் ஸ்பூன்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி

பகுதி 2 ல் உள்ள கோழி அல்லது இறைச்சி அல்லது கொத்துகறியை கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

அடுத்து

பகுதி 1ல் உள்ள அனைத்து பருப்புகளையும் கொட்டி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி குக்கரை மூடி கொஞ்சம் ஆவி வந்தவுடன் குக்கர் வெயிட்டை போட வேண்டும்

குக்கரில் 4 சத்தம் வந்தவுடன் அடுப்பை அடக்கி விட வேண்டும்

ஆவி போனவுடன் குக்கரை திறந்து ஆப்பையில் பருப்பை நன்றாக மசித்து பார்க்க வேண்டும்.

எல்லாம் நன்றாக வெந்து கஞ்சி போல வந்தவுடன் தேங்காய் பால் - 5 கரண்டி (டேபிள் ஸ்பூன்) - ஊற்றி கஞ்சியை எறக்கி விட வேண்டும்

ஹலீம் கஞ்சி தயார்

5 அல்லது 6 பேர் வரை நன்றாக சாப்பிடலாம்

நன்றாக இருந்தால் சொல்லி அனுப்பவும்

Monday, September 07, 2009

ஜட்ஜப்பா (ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில்) - பகுதி 1

நாகூரில் இந்து முஸ்லீம் கலவரம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். நான் லுகாஸ் டிவிஎஸ் ஸில் வேலையில் சேர ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு பயணமானேன். சென்னையில் நான் தங்கியிருந்த வீடு மிக பிரம்மாண்டமான, கம்பீரமான வீடு. மயிலாப்பூரில், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் இருந்த அந்த வீட்டிலிருந்து அண்ணா நகரில் இருந்த இன்னொரு  வீட்டிற்கு  இரவு சாப்பாட்டிற்கு பிறகு புறப்பட  தயாராகிக்  கொண்டிருந்தேன்.

இறைச்சி கறியை கேள்வி கணக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த போது அங்கே அவர்கள் வந்தார்கள், "இந்து, முஸ்லீம்ன்னு சண்டைலாம் போட்டுகிட்டிருக்க கூடாது, வேலைய மட்டும் பார்க்கணும்.." என்று என் கிட்டே வந்து இத மட்டும் சொல்லி விட்டு இல்லை இல்லை சிங்கம் போல் கர்ஜித்து விட்டு நகர்ந்து போகிறார். வாயில் இறைச்சி துண்டோடு எழுந்து நின்று ஒரு பேச்சு பேசாமல் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும் என் வயிற்றுக்குள்ளே இறைச்சி போகவே இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு லுகாஸ் டிவிஎஸ்ஸில் நேர்முக தேர்வு நடந்த போது சென்னையில் எங்கே தங்குவாய்? என்று பாலாஜி என்ற பார்ப்பனர் வாயில் வெத்தலையை போட்டுக் கொண்டே கேட்க,

நான் "மயிலாப்பூரில்.." என்று சொன்னேன்.

"மயிலாப்பூரில் உனக்கு யாரிருக்கா..?" என்று கேட்க

நான் எனக்கு தாத்தா முறையுடைய அன்னாரின் பெயரை சொன்னதும், ஒரு கனம் அவர் பேசவே இல்லை, "அவர்கள் உங்களுக்கு என்ன உறவு..?" என்றார்

நான், "என்னோட தாத்தா" என்று சொன்னேன்

அதற்கு அந்த பாலாஜி என்பவர், "நான் அவரோட படத்த என் பூஜ ரூம்ல வச்சிருக்கேன், தெனமும் கையெடுத்தும் நம்ஸ்காரம் பண்ணிட்டு தான் வேலைக்கே வருவேன்.." என்று பக்தி பெருக்குடன் இணைவைக்க நான் கண் விழி பெருசாவதை உணர்ந்தேன்
-------------------------------------------------------------------------------------------------------------
எனது சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பிடிக்காது என்பதை விட எனக்கு ஒரு கேடும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பள்ளிகூடத்தில் படிக்கிற பசங்க பாகிஸ்தான் வெற்றி பெற்றால் "நீங்க ஜெயிச்சிட்டீங்க.." என்றும் இந்தியா வெற்றி பெற்றால், "என்ன பாய்.. மண்ண கவ்விட்டீங்க போல.." என்பதும் என்னை அவர்கள் மீது பெரிதாக கோவம் வருவதற்கு பதிலாக கிரிக்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆவலை மட்டுமே தூண்டியது.

நாளடைவில் முஸ்லீம்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இரசிகனாகவும் ஆகி போனேன். அதன் பிறகு பாகிஸ்தான் வெற்றி பெற்றால், "எப்படி..? தவுடு பண்ணிட்டான்வோ..?" என்று பீற்றிக் கொள்வதும் உண்டு. இதற்காக நான் தேச துரோகி என்று வர்ணிக்கப் பட்டேன். சில நண்பர்கள் (?) "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் நீ பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே, நீயெல்லாம் பாகிஸ்தானுக்கு போ" என்று மிகுந்த அன்புடன் என்னை வற்புறுத்துவார்கள்.

அதையெல்லாம் நினைக்கையில், எனக்கு மர்ஹூம் பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது, "பாகிஸ்தான், காலிஸ்தான், ஏண்டா எங்களுக்கு என்ன கபுருஸ்தானா?" என்று கேட்பார்.

சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன், மேலே சொன்ன மயிலாப்பூர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது, மரியாதைக்குறிய அவர்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்றோடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த ஆவலோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அப்போது சயீது அன்வர் வேகமாக வந்த பந்தை ஒரே விளாசு விளாச அது தென்னை மர உயரத்துக்கு பறந்து போய் காய்ஞ்சு போய் விழுற மட்டையாட்டம் ஒரு பீல்டரின் கைக்கு லட்டு போல் வந்து கொண்டிருக்க,  நான் சும்மா இல்லாமல், பாகிஸ்தான் அணி ஏனக்கு விருப்பத்திற்குறிய அணியாக இருந்த காரணத்தினால் "போச்சு.. போச்சு.." என்று என்னை மறந்து கத்தி விட, அவர்கள் என்னை திரும்பி பார்த்தார்கள். நான் எச்சில் விழுங்கினேன்.

அன்னாரின் மகளார் வேறு சும்மா இல்லாமல், "இவரு பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட்.." என்று மாட்டி விட்டு விட்டார்.

நான் பதறி போய், "இல்ல..இல்ல.." என்று கத்தி வைக்க

"விளையாட்டு தானே.. இருந்து போவட்டும்..." என்று சொன்னதும் "அப்பாடா.." என்றிருந்தது எனக்கு. இது பாகிஸ்தான் அந்த மேட்சில் தோற்று போய் நான் வருத்தப்பட்டது சம்மந்தமில்லாத செய்தி
-------------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள். முக்கிய நபர்கள் வர வேண்டி இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நேரமும் வந்து விட்டது.

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களிடம் சென்று, "ஐயா, இன்னும் முக்கிய புள்ளிகள் வரவில்லை.. என்ன செய்ய?' என்பது போல் கேட்க, நிகழ்ச்சியை குறித்த நேரத்துக்கு தொடங்கியாக வேண்டும் என்று உத்திரவிட்டார்கள். "அப்ப கரெக்ட் டயத்துக்கு வந்து ஒட்கார்ந்து இக்கிறவன்லாம் என்ன கேனையனா..?" என்பது போல் கேட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.

இதன் காரணத்தினால் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூட அன்னாரின் வீட்டு திருமணத்திற்கு வந்த போது, கடிகாரத்தை காட்டி, "குறித்த நேரத்துக்கு சரியா வந்துட்டேன்.." என்று அன்பொழுக சொல்லி தழுவிக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------

மேலே தொகுக்கப்பட்ட அத்தனை செய்திகளிலும் நாயகர் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஜட்ஜ் அப்பா என்று எங்கள் குடும்பத்தார்கள் எல்லோரும் மரியாதையுடன் அழைக்கும் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்ம்மாயீல் அவர்கள் தான்.

தொடரும்...