(படிச்சு கிடிச்சு ஏச ஆரம்பிச்சுடுதாங்க... வார்னிங்: பெரிய பதிவு)
மகேந்திரன் படங்கள் என்றதும் முதலில் மனதில் தட்டுப்படுவது உதிரிப்பூக்கள் அல்லது முள்ளும் மலருமாகத் தான் இருக்கும். ஆனால் எனக்கு தட்டுப்படுவது “பூட்டாத பூட்டுக்கள்” தான்.
அதற்காக ’உதிரிப்பூக்களோ” முள்ளும் மலருமோ” பிடிக்காத படமென்று ஆகிவிடாது.
உதிரிப்பூக்களில் எனக்கு பிடித்த ஒரு அற்புதமான இரு காட்சிகள் ஒன்று உள்ளது,
மூத்த மருமகன் மாமனாருக்கு கடன் கொடுத்திருப்பார், அந்த கடனை திருப்பி தர முடியாத சூழலில் திருமணமாகாத இன்னொரு மகளோடு வசிக்கும் மாமனாரிடம், ”மூத்த மகள் நோயாளியாகி விட்டாள், அவளோடு தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும் - கடனை உங்களால் திருப்பி கட்ட முடியாது என்றும் - ஆதலால் மனைவியின் தங்கையை எனக்கே கட்டி கொடுங்கள் - அக்காள் தங்கைகள் இரண்டு பேரும் ஒத்துமையாக இருப்பார்கள் என்று பெண் கேட்பார்.
அப்போது துக்கமும் கையாலாகாத தனமும் கட்டி போட்டிருக்க ஆழ்ந்த நிலையில் இருக்கும் மாமனாரிடம், “என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க..” என்பார்
மாமனார், “வேற ஏதாவது பேசலாமே”
மருமகன், “நான் இத பேசத்தான் வந்தேன்..”
மாமனார், “ஸ்கூல் எப்படி நடக்குது..”
மருமகன், “நீங்க இன்னும் பதில் சொல்லலையே..”
மாமனார், “இதுக்கு லட்சுமியும் செண்பகமும் சம்மதிக்க மாட்டாங்க..”
மருமகன், “நீங்க உங்க நிலமைய எடுத்து சொல்லி சம்மதிக்க வைங்க..”
இரு பெண்களின் தந்தை, “நான் அவங்களுக்கு அப்பாவாவே இருக்கேன், புரோக்கரா இருக்க விரும்பலை..”
மருமகன், “அப்போ என்ன சொல்றீங்க..” மாமனார் “வெளியே போ..” என்பதை சிம்பாலிக்காக நாற்காலியை விட்டு எழுவதன் மூலமாக சொல்வார், உடனே “நீங்க உக்காருங்க.. நான் போயிக்கிறேன்..” என்பது போல் கையை பிடிப்பார், பிறகு சென்று விடுவார், உள்ளே இருக்கும் இரண்டாவது மகளான செண்பகம் வந்து அப்பாவிடம், “அவர் என்னப்பா பேசிட்டு போனாரு..” என்பார்.
அப்பா, “நாங்க பேசுனது எதுவும் உன் காதுல விழலயாமா..?”
மகள் தலையை சொறிந்து கொண்டே ‘ம்ஹூம்’ என்பார்.
அப்பா சொல்வார், “நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்..” என்று
இன்னொரு காட்சியின் இதே மருமகன் இதே மாமனாரிடம் இதே கேள்வியை கேட்டு வருவார், ஆனால் இந்த முறை அமைதியாக அல்ல, மிரட்டலாக, “பஞ்சாயத்தை கூட்டி ஊர் கூட்டத்துக்கு முன்னால எங் பொஞ்சாதி எனக்கு துரோகம் பண்றான்னு ஆதாரத்தோட நிருபிப்பேன், மரியாதையா எனக்கே செண்பகத்தை கட்டி வைங்க” என்று இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது இந்த முறை அதிர்ஷ்டம் இல்லாத அந்த மகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பாள், அவள் தனது தகப்பனாரிடம் வந்து,
“அப்பா இவருக்கு நான் தானேப்பா வேணும், நான் இந்த கல்யாணத்துக்கு தயாரா இருக்கேன்” என்பார்
தந்தை மகள் பக்கம் திரும்பி, “சாப்டியாம்மா...”
தலை குனிந்திருந்த மகள் புரியாமல் அப்பாவை பார்க்கிறாள், அப்பா தொடர்கிறார்,
“சாப்டியா.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.. போ.. போம்மா.. போ..”
மகேந்திரனின் காட்சி அமைப்பில் இருக்கும் நுணுக்கத்துக்கு மேலே சொன்னது கடலில் ஒரு துளி தான். முன்னுரையாக எழுதினாலே முன்னூறு பக்கத்தை தாண்டிவிடும்.
மிக அற்புதமான காட்சிகளை கொண்டிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் என்னவோ பூட்டாத பூட்டுக்கள் தான்.
பூட்டு என்பது எதற்காக உள்ளது? பூட்டி வைப்பதற்காக தான். அது தான் இண்டெண்டெண்ட் பர்பஸ். ஒரு பூட்டு என்று ஒன்று இருந்தால் அதற்குறிய சாவி என்று ஒன்று இருக்க வேண்டும், அதற்குறிய சாவி இருக்கிறது பூட்டும் இருக்கிறது, ஆனாலும் அது பூட்டவில்லை.
பூட்டு என்பது மனைவி
சாவி என்பது கணவன்
பூட்டுவது என்பது மணவாழ்க்கை
இங்கே இவர்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லை..
அதாவது பூட்டு பூட்டவில்லை
அது தான்
பூட்டாத பூட்டுக்கள்..
(இங்கே பூட்டுக்கள்.. என்று பன்மையில் வந்திருந்தாலும்.. ஒரு பூட்டை பற்றி தான் சொல்லப்படுகிறது)
இனி பூட்டாத பூட்டுக்களுக்கு வருவோம்...
நன்றி காட்டுபுதூர் கிராம மக்களுக்கு... என்று தொடங்குகிறது...
இசைஞானி ‘மாமன் மச்சானை..” தாலாட்டாய் ஒலிக்க விடுகிறார்.
அந்த பெண் இன்னொரு பெண் துணையுடன் நடுநிசியில் கையில் அரிக்கண் விளக்கேந்தி சாமியாரிடம் வருகிறாள். சாமியார் அக்னி குண்டத்தை வளர்த்து, அவருக்கு உதித்ததை இப்படி சொல்கிறார்,
“கல்யாணமான உனக்கு என்ன குறைங்குறது ஈஸ்வரனுக்கு தெரியும், ஏழு வருச தாம்பத்யத்துல இன்னும் நீ தாயாகலை..இதுக்கு எந்த தோஷமும் காரணமில்லை.. பயப்படாதே.. நேரம் வரும்..”
சாமியாரின் உத்திரவின் பேரில் கடுமையான விரதமும், உடல் வறுத்தும் வேண்டுதலும் செய்வதை பார்த்த அவளது கணவன் - தனக்கு குழந்தை இல்லை என்பதை விட மனைவியின் வேதனையை பற்றி கவலையுறுகிறான், தனது கூட்டாளியான ஊழியரிடம், “டேய், எல்லாரையும் போல தனக்கு குழந்தை இல்லைன்னு கன்னியம்மா படுற வேதனை இருக்கே..” சொல்லி புலம்புகிறான்.
அவனது கூட்டாளி சொல்கிறார், “இந்த பாரு சொன்னா கோச்சுக்காதே... உன்ன்னால.. ஒன் பொண்டாட்டி புள்ளை பெத்துக்க போறதுல்ல.. இத அந்த பொண்ணுகிட்ட சொல்லாம ஏமாத்திகிட்டே இருக்கிறே.. பாவம்பா.. அந்த பொண்ணு..”
உப்பிலி சுடுகின்ற உண்மையை கேட்க சகியாமல், “சும்மா இர்ரா நாயே..” என்கிறான்.
“என்னய ஏண்டா கோச்சுக்குறே... ஒன்னால புள்ள கொடுக்க முடியாதுன்னு தானே ரொம்ப பொண்ணுங்க ஒன் பின்னாடி சுத்துறாளுங்க.. எனக்கு தெரியாதா..” என்கிறான்.
கணவனான அவன் தான் உப்புலி.. ஊரில் ஒரு டீக்கடை வைத்திருக்கிறான். தனது மனைவியை ”வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்பலவே..” பாடி காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்கிறான்.
மகிழ்ச்சியான ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டமான குழந்தை செல்வம் இல்லாததால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் கணவனுக்கு மனைவிக்கு இடையே இடைவெளி நீளுகிறது.
உப்பிலி ஒரு முறை தனது நண்பன் ஒருவனின் மகனை தான் வளர்க்க போவதாகவும், தாயில்லாத புள்ளை என்றும் சொல்லி அழைத்து வருகிறான்.
கன்னியம்மா, “என்னை ஒரு வார்த்தை கேக்காம நீங்க ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க..” கோபப்படுகிறாள்.
“அதனால இப்ப என்ன நட்டம் வந்துடுச்சு...” உப்புலி கொப்புளிக்கிறான்..
அழைத்துட்டு வந்த புள்ளையோ மகா கள்ளனாக இருக்கவே - வீட்டு பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்க்கிறான் - காதை திருகி தலை முழுகுகிறான்.
அவன் பிறந்த குழந்தையை எடுத்து வரவில்லை,
அவனது தம்பியின் மனைவி கேட்கிறாள், “ஏன்ப்பா... 20 வயசுல ஒரு பையனை கொண்ணாந்து இருக்க கூடாது..”
உப்பிலிக்கி கூட பொறந்த ஒரு பொறப்பு இருக்கு.. வழக்கம் போல சொத்து சண்டையில் சொந்தம் இடம் தெரியாமல் ஓடி ஒலிந்து விட்டது.
அண்ணன் தம்பிக்கு தான் சண்டை, தம்பியின் மனைவி இந்த சண்டையை எல்லாம் பொருட்படுத்தாமல் சொந்தம் என்ற உரிமையோடும் அண்டை வீடு என்ற உணர்வோடும் குடும்பத்தோடு கலந்து உறவாடுகிறார்.
உப்பிலி வீட்டில் வேலை பார்க்கும் வேலம்மா தனது கண்ணான கணவனின் கண் ஆபரேஷனுக்காக தெரிந்த மனிதர்களிடம் கடனாய் வாங்கி கடன் காசை திருப்பி அடைக்க முடியாமல் கடை தெருக்கு போறது, சாமான்வோ வாங்கி கொடுக்குறது, துணி துவைச்சு கொடுக்குறது இப்படியாக வேலை செய்து கடனை அடைத்து வருகிறாள்.
உப்பிலி டீக்கடை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பிரம்மச்சாரியான மூர்த்தி என்பவருக்கு எல்லா வேலையும் சாப்பாடு ஆக்கி போட்டு மாதம் நூறு ரூபாயும் வாங்கி வருகிறான்.
மூர்த்தி வந்து தனது அலுவலகத்தில் இன்னொருவர் வரப் போகிறார், அவருக்கும் சாப்பாடு சேர்த்து சமைச்சு போடணும் என்று கேட்கவே, உப்பிலி சம்மதிக்கிறார்.
மூர்த்தியின் நண்பனாக ஒரு தரித்திரம் வரப்போவதை உப்பிலி அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
இதற்கிடையில் கன்னியம்மா வாந்தி எடுக்கவே.. பிள்ளை உண்டாகியிருக்கிறாள் என்று நினைத்து மருத்துவரிடம் வண்டியேற்றி அழைத்து செல்வார் உப்பிலி.
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
என்று சென்ற போது இருந்த மனதில் இருந்த மகிழ்ச்சி திரும்ப வரும் போது மருத்துவரின் இடிசொல் தலையில் இறங்கி மறைந்து போயிருந்தது.
வண்டி கூடவே திரும்ப நடக்கிறான் உப்பிலி, மருத்துவரின் இடிசொல், “உன்னை பாத்தா பரிதாபமா இருக்குது.. ஒன் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா என்ன டானிக் கொடுக்குறதுன்னு கேக்குறியே.. அவள் கர்ப்பமா இருக்கான்ன்னு யாரு உனக்கு சொன்னா......
உப்பிலி கன்னியம்மா என்னைக்கும் தாயாக ஆக முடியாது.. இது கன்னியம்மாட குற்றமல்ல.. உன்னோட குற்றம்.. இத நான் மூணு வருசத்துக்கு முன்னாடியே ஒன்கிட்டே சொல்லியிருக்கேன்.. எல்லாத்தையும் மறந்துட்டியா..”
கன்னியம்மா மருத்துவரிடம் சொல்கிறாள், “நான் அணுஷ்டிக்காத விரதமில்லை பண்ணாத பூஜையில்லை.. நான் கும்புடுற தெய்வம் என்னை என்னிக்கும் கைவிடாது டாக்டர்..”
டாக்டர் சொல்கிறார், “விரதத்துனாலயும்.. பூஜையினாலயும் குழந்த பெத்துக்க முடியும்னா.. உலகத்துல யாரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியமில்லை..”
அன்றைய இரவு அவர்களின் தாம்பத்ய சந்தோஷமில்லாத வேதனையை கூட்டுவதாக அமைகிறது.
இந்த கட்டத்தில் தான் மூர்த்தியின் நண்பன் தியாகு உப்பிலி வீட்டில் சாப்பிட வருகிறான். ஒரு பெண் விடாமல் ரசிப்பதோடு இது எப்படி சரிபடுமா? படியுமா? என்கிற ரீதியில் பொறுக்கித்தனம் நிறைந்த படித்தவன்.
உப்பிலி வீட்டில் சாப்பிட வந்திருக்கும் போது, உப்பிலியின் வீட்டில் வேலை செய்யும் வேலம்மாவை பார்த்து அவளுக்கு தெரியாத ஆங்கிலத்தில், ‘வாவ்... ஷி இள் ரியலி டெர்ரிஃபிக்.. செக்ஸ் பாம்... ஐ ரியலி காம்ப்ளக்ஸ் ஷி இஸ் மேரிட்.. ஹெர் ஹஸ்பண்ட் இஸ் எ லக்கி கை..” என்று ஆங்கிலத்தில் உளர..
அதை சலனமில்லாமல் கேட்டு கொண்டிருந்த வேலம்மா அவளது குழந்தையை கொஞ்சுவது போல், “டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்.. ஹவ் ஐ வண்டர் வாட் யு ஆர்.. அப் அபவ் த வேர்ட் ஸோ ஹய்.. லைக் அ டயமண்ட் இன் த ஸ்கை..” என்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் பேசும் தொனியில் பேசுவதோடு “...ஸ்கை..” என்று அந்த ரைம்ஸை முடிக்கும் போது ”மேலே அண்ணாந்து பாரு..” என்று வீட்டின் மேற்கூறையை தியாகுக்கு உணர்த்துகிறாள்.
தியாகு திடுக்கிட்டு போய் மேலே கூரையை பார்க்கிறார். அங்கே விளக்குமாறு அவனை பார்த்து ஒரு கேவல பார்வை பார்த்து கொண்டு திமிறாக இருக்கிறது.
தியாகு இலையை மடிக்கிறான்.
வேலம்மா குழந்தையை தூக்கி கொண்டே, “என்ன சார்.. போதுமா... இன்னும் வேணுமா?” என்று கேக்க
மூர்த்தி பயந்து போய், “போதும் போதும்..எல்லாம் போதும்” என்று துண்டையும் துணியையும் காணாமல் தேடுகிறான்
மூர்த்தி தியாகுவிடம், “வேலம்மா படிச்சிருக்கு.. இங்கிலிஷ்லாம் தெரியும்.. பர்மால நல்லா வாழ்ந்த குடும்பம்.. புருஷனுக்கு கண்ணு போய்.. சொத்து போய்..” என்று வேலம்மாவின் சோக கீதத்தை சொல்லி காட்டுவதோடு அவனை ஒழுங்காக இருக்குமாறு எச்சரிக்கவும் செய்கிறான்.
உப்பிலியின் மாமானார் அங்கே வர உப்பிலிக்கி குழந்தை பாக்கியம் இல்லை என்ற விபரம் தியாகுவிற்கு அவர் மூலமாக தெரிய வருகிறது. அவன் பார்வையாலேயே தப்புக்கணக்கு போட ஆரம்பிக்கிறான்.
தியாகுவிடம் மூர்த்தி வேலம்மாவை பத்தி சொல்கிறான், “... அவள நீ சோறு போடுற கரண்டி மாதிரி தான் நீ பயன்படுத்தணும்.. சோத்த வுட்டுட்டு கரண்டிய முழுங்கணும்னு நெனைச்சே...” என்று
தியாகு, “நமக்கு ஏன்ப்பா வம்பு..” என்று கூறி விட்டு, “அந்த டீக்கடை காரன் பொண்டாட்டி இருக்காலே.. ம்ம்ம்ம்...” என்று கூற மூர்த்தி கோபப்பார்வை பார்த்து அடிக்க வருகிறான்.
தப்புகணக்கின் ஆரம்பமாய் தியாகு மூர்த்தியை விட்டு விட்டு தனியாக உப்பிலி வீட்டிற்கு சாப்பிட வருகிறான்.
கன்னியம்மாவின் தந்தை, “.. நீங்க பேய் பசில வந்திருப்பீங்க.. போய் சாப்பிடுங்க...வேலம்மா மார்க்கெட்டுக்கு போயிருக்குது.. நான் கன்னியம்மாவை பரிமாற சொல்றேன்..”
ஆபத்து இங்கே தான் அபவுட் டெர்ன் போட்டு அடியெடுத்து வைக்கின்றது.
கன்னியம்மா உணவு பரிமாறும் போது கையில் ஒரு காயம் இருப்பதை கவனிக்கிறான் தியாகு. வேலம்மா சிறிது நேரம் கழித்து வரவே, ‘உங்க எஜமானியம்மா கையில் என்ன காயம்..” என்று வினவுகிறான்.
”ஆனி குத்தி பத்து போட்டிருக்கு..”என்கிறாள்.
“செப்டிகாகி உயிருக்கே ஆபத்து.. நான் ஆயிண்ட்மெண்ட் தர்ரேன்.. நீ கொண்டாந்து குடு” என்று ரொம்ப அக்கறை உள்ளவன் போல் காட்டிக் கொள்கிறான்.
கன்னியம்மா இந்த மாதிரி அக்கறையை கணவனிடம் தற்காலத்தில் குறைந்திருப்பதை புதிதாக ஒருவன் காட்டும் கரிசன வார்த்தையை அவள் உள்ளம் அவளையும் மீறி ஒரு சுகத்தை அனுபவிக்க செய்கிறது. அவள் என்ன செய்வாள் பாவம்?
ஆயிண்ட்மெண்ட் வாங்க போன வேலம்மாவையே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்து விட்டு வேலம்மாவிடம் அந்த ஆயிண்ட்மெண்ட்டை தடவ விரும்பாதவள் போல் பேசுகிறாள்.
இதற்கிடையில் உப்பிலி மூர்த்தியிடமும் தியாகுவிடம் தனது நண்பன் ஒரு பொண்ணை தள்ளிவிட்டு வந்து விட்டதாகவும் அந்த பெண்ணோடு பெரிய கூத்தா போச்சு என்றும் சொல்கிறான்.
மூர்த்தி, “ஓஹோ அந்த மாதிரி கேசா..” என்று கேட்க
உப்பிலி, “அட நீங்க வேற சார் நல்ல குடும்பத்து பொண்ணு.. கல்யாணம்லாம் ஆச்சு..” என்று விளக்கவே..
மூர்த்தி, “ஏம்மா இதெல்லாம்.. தப்பில்லை.. கல்யாணம் ஆனவன்னு வேற சொல்றே..” என்று கேட்டு வைக்க
உப்பிலி, “இதுல என்னா சார் தப்பிருக்கு... அவளா வர்ரேன்னு சொல்றப்ப.. எவன் சார் வேணாம்பான்..” என்று கூறவே தியாகுவுக்கு அடைத்திருந்த கதவு திறந்து விட்டு விஷ காற்று சுதந்திரமாக உள்ளே பரவ தொடங்கியது.
ஒரு கோயில் குருக்களிடம் பணம் கேட்டிருப்பாள் வேலம்மா, அவர் செண்டெல்லாம் போட்டுகிட்டு அந்த பணத்தை கொடுக்கும் சாக்கில் அவளை கெடுக்கலாம் என்ற கெட்ட எண்ணத்தோடு அந்த குருக்கள் வேலம்மாவின் வீடு தேடி வருகிறார்.
வேலம்மாவின் கண் தெரியாத கணவர், “என்ன செண்ட் போட்டிருக்கீங்க..” என்ற கேள்விக்கு.. பதறி போய், “செண்டா.. ஒரு செண்ட்பாய் மோதிட்டு போயிட்டான், இன்னைக்கின்னு பார்த்தா மோதணும்..வேலம்மா இல்லையா..”
என்கிறார்.
“இல்ல.. வேலைக்கு போயிருக்கு..” கணவர்
“ஆமாமா.. வொர்க் வொயில் யு வொர்க்.. பிளே வொயில் யு பிளே.. நாம் ஏதாவது வெளையாடலாமா..”
வேலம்மா வருகிறாள், குருக்கள் அவளிடம், “15 ரூபா வேணும்னு கேட்டிருந்தீயே.. இந்தா..” என்கிறார்.
“.. அதை நீங்களே வச்சு.. செண்ட் வாங்கி போட்டுக்குங்க..” என்று வாங்காமல் அனுப்பி வைக்கிறாள்.
அவர், “எனக்கு கோயில்ல வேல இருக்கு..” என்றவாறு புறப்படுகிறார்.
வேலம்மாவின் கணவர் கேட்கிறார், “எத்தனை நாளைக்கி தான் இது..”
“எது?” - வேலம்மா
”இப்படி நீ கண்டவங்க் கிட்டேயும் பணம் கேக்க.. அவங்க.. உன்னய தப்பா நெனைக்கிறது..ம்ம்... இதெல்லாம் எதுக்கு?” என்று கேட்க
வேலம்மா சொல்கிறாள், “..... தப்பா நடந்து சம்பாதிக்கிறத விட இப்படி கடன் வாங்கி சம்பாதிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?” என்று இன்னொரு குற்றத்தை கம்பேர் செய்து தனது யாரையும் பாதிக்காத காரியத்திற்கு நியாயம் சொல்கிறாள்.
அந்த மழை இரவு...
மூர்த்தியை கழட்டி விட்டு விட்டு தியாகு மட்டும் தனியாய் உப்பிலி வீட்டில் உணவருந்தும் சாக்கில் உப்பிலியின் மனைவியை நெருங்குவதற்கு இப்போது அவர்கள் வீட்டில் அமர்ந்து இருக்கிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை புகழ்ந்து பேசி அவளின் உள்ளத்தை மயக்கியிருப்பான்.
கன்னியம்மா உணவை எடுத்துக் கொண்டு ஒரு வித வெட்கத்தோடு வருகிறாள்.
கிட்டே வருகையில் அவளது தலையில் வசித்திருந்த ஒரு பூ கட்டுபாடிழந்து அவனது இலையில் விழுகிறது..
பூவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு “இந்த் புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு..” என்று விஷ ஊசி போடுகிறான்.
அவள் பரிமாறும் போது மார்பு மறைத்த சேலை விலக, கையில் எடுத்து வைத்திருந்த பூவை அவளது மார்பில் விசிறி எரிகிறான்.
அவள் அதை அங்கீகரித்தவளாக சாதத்தை பரிமாறும் போது கையை பிடித்து விடுகிறான். யார் ஆட்சியோ தெரியவில்லை. மின்சாரம் தடையேற்படுகிறது. அந்த நேரடி தொடுதலை அப்போது அவளால் அங்கீகரிக்க முடியவில்லை. உள்ளே ஓடி மறைகிறாள்.
உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்க வேண்டிய நடு இரவில் மயான அமைதியின் எரிச்சலில் துடிக்கிறான் உப்பிலி.
உப்பிலியின் மனைவியுடனான தியாகுவின் சந்திப்பு உள்ளே தாண்டி வெளியேயும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
உப்பிலிக்கி செய்தி தெரிய வருகிறது. கொதிக்கிறான்.
வேலம்மாக்கு செய்தி தெரிய வருகிறது, அவளோ, “உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகும்.. கொஞ்சமாவது நெனைச்சு பாத்தியா...? சரி.. அவன் உன்னய அழைச்சுட்டு போயி கல்யாணம் பண்ணிப்பானா..?....
... இது குழப்பத்துல தான் போயி அதனால யாருக்கும் எந்த லாபமும் இல்லை..” என்று கூறவே..
கன்னியம்மா திரும்பி வேலம்மாவின் குழந்தையை பார்க்கிறாள். அது தான் லாபம் என்பது போல். குழந்தை முகத்தை எல்லாம் சாயத்தை பூசிக் கொண்டு ஒரு காரணமும் இல்லாமல் சிரிக்கிறது.
உப்பிலி இரவு வீடு திரும்புகிறான். கன்னியம்மா படுத்து இருக்கிறாள்.
“என்ன தூங்குறியா.. இல்ல தூங்குற மாதிரி படுத்திருக்கியா?
என்ன நகைய எல்லாம் எடுத்து போட்டிருக்கே... கிளி கூண்ட விட்டு பறக்க பாக்குதா..?
எங்கேயோ போறியாம்? எவனையோ பார்க்குறீயாம்? எல்லா நாயும் சொல்லுதே... உண்மை தானா...?
பூவெல்லாம் வச்சிருகியே... அவன் வாங்கி கொடுத்தானா..?
என்னாடி பேச மாட்டேங்குறே..?”
கன்னியம்மா விடுக்கென்று எந்திரித்து போகிறாள்..
உப்பிலி கையை பிடித்து, “எங்கேடி போறே? அவன் கிட்டேயா?”
கன்னியம்மா கணவனது ஆண்மை இல்லாத தனத்தை சுட்டி காட்டி வாயசைக்க..
“இப்படி எல்லாம் வார்த்த போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியாடி.. இதெல்லாம் அவன் கத்துக் கொடுத்தானா” என்று அடிக்க கட்டையை எடுக்க..
அவள் திரும்பி நேருக்கு நேராக நிற்கிறாள். மனைவிக்கு முன்னே ஒலித்து வைக்க முடியாத தன் குறைகள் அவனுக்குள் ஒரு நிதானத்தை கொண்டு வர.. கட்டையை வீசி எரிகிறான்...
”ஏன் நிறுத்திட்டே... அடிச்சு கொல்லு..” என்று சேலையை கழட்டி வீசி எரிகிறாள்.”உன்னோட வாழ்ந்து என்னத்த கண்டேன்.. செத்து தொலையறேன்..” என்று செவிட்டில் அறைய கோபத்தில் கையை ஓங்குகிறான் தான் ஆசையோடு தூக்கி சுமந்த மனைவியை.
ஆத்திரம் நீங்கி சமாதானம் பேசுகிறான்.
காதில் போட்டுக் கொள்ளாமல் கால் கட்டை அவிழ்க்கிறாள். வீட்டை விட்டே வெளியேறிவிட்டாள்.
தியாகுவின் ஊருக்கே அவனது வீட்டிற்கே வந்து விடுகிறாள். அவள் யாரென்று தெரிந்து அவளை அங்கிருந்து துரத்தி விடுகிறார்கள். வரும் வழியில் குளித்து விட்டு வரும் தியாகுவை சந்திக்கிறாள்.
“.. இனிமே உங்களோட வாழ்றத தவிர வேற வழியே இல்ல..” - உப்பிலியின் மனைவி தியாகுவின் காதலி என்ற நினைப்பில்...
“...இப்ப நான் ஒன் கிட்டே பேசிகிட்டு இருக்கிறதே தப்பு.. உடனே புறப்பட்டு ஊருக்கு போயிடு... இல்லைன்னா உன்னோட சேர்ந்து என் பேரும் அசிங்கப்படும்...” குளித்ததில் சாயம் வெளுத்த தியாகு
சந்தர்ப்பவாதி தியாகுவோ அவளை ஏற்க மறுத்து அவளை அங்கிருந்து துரத்தி அடிக்கிறான்.
திரும்ப ஊருக்கும் போக முடியாமல் நம்பி வந்த தியாகுவோடும் இருக்க வழியில்லாமல் போகவே திக்கு திசையின்றி கால் போன போக்கில் நடை போடுகிறாள்.
வேலம்மாவின் கணவர் வேலம்மாவிடம், “ஒன்ன நெனைச்சு.. நான் எவ்ளோ பெருமைப்படறேன் தெரியுமா? புருஷன் கண்ணோட இருக்கும் போதே ஒருத்தி ஓடியிருக்கா.. நீ நினைச்சிருந்தா எனக்கு என்னென்ன துரோகம் செஞ்சிருக்க முடியும்..”
வேலம்மா சொல்வாள், “பொம்பள துரோகம் பண்ணனும்னு நினைச்சுட்டா, புருஷனுக்கு ஆயிரம் கண்ணு இருந்தாலும் துரோகம் பண்ணுவா... இத்தனை வருஷம் வாழ்க்கைல... எம்மேல.. ஏதாச்சும் சந்தேகம் இருக்கா..”
வேலம்மாவின் கணவர் தலையை ஆட்டி மறுத்து, ‘இல்லை...”
தியாகுவை அடித்து நொறுக்கி எடுக்க உப்பிலி வரும் போது, மூர்த்தி தடுத்து, “....இவன் இங்கே இருக்குறப்ப.. கன்னியம்மா இவன் கூட்டிட்டு ஓடிட்டான்னு நீ நெனைச்சா அது முட்டாள் தனம் இல்லையா... கேக்குறவன்லாம் சிரிப்பாங்கப்பா...?........”
கன்னியம்மாவை ஊர் ஊராய் போய் தேடனும்.. கடையும் தொறக்கல.. கைல காசும் இல்ல.. என்று தம்பியிடம் போய் உதவி கேக்க சொந்த உறவோ எதிரியாய் நடத்துகிறது.
வேலம்மாவை பார்க்க செல்கிறான். கடையை விற்று விடப் போவதாக கூறுகிறான்.
வேலம்மா தனது கணவனின் தோளை தொடுகிறாள், உடனே கணவன் அதை விளங்கி கொண்டு, “நானும் அதை தான் நினைக்கிறேன்..” என்கிறார்.
வேலம்மா உள்ளே போய் கடன் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் மொத்த காசையும் எடுத்து வந்து கணவனின் கையை எடுத்து அந்த காசு பையில் வைக்கிறாள்.
கணவன் “நீயே கொடு” என்று கூற வேலம்மா உப்பிலியிடம் மொத்த பணத்தையும் கொடுக்கிறாள். ”கடையை விற்க வேண்டாம்.. இதுல பணம் இருக்கு...அவர் கண் ஆபரேசனுக்காக நான் சேர்த்து வச்ச பணம்... ”
கண் தெரியாத கணவர், “வாங்கிக்குங்க.. எனக்கு எந்த குறையும் இல்லை... வேலம்மா இருக்கா...”
வேலம்மா, “எங்களுக்கு கன்னியம்மா வந்தா போதும்...”
மனிதர்களை சந்தித்த மகிழ்ச்சி உப்பிலிக்கு... நன்றி பெருக்கோடு அவர்களை பார்க்கிறான்.
ஊரார் இவனை பற்றி கிண்டலாக அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஏதோ சொல்ல மல்லுக்கு நிற்கிறான் இவன்.
கன்னியம்மா போனதற்கு தியாகு காரணமல்ல... அவன் தப்பாக நினைத்து அடித்தது தான் காரணம் என்று தானாக விளங்கிக் கொண்டு தியாகுவிடம் மன்னிப்பு கேட்கிறான், “...நீங்க நல்லங்கன்னு விளங்கிகிட்டேன்...”
தியாகுவோ, பெரிய உத்தமன் மாதிரி ”....நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க....”ஆறுதல் பேசுகிறான்.
ஊர் பெரியவர் ஒருவர் கன்னியம்மா ஓரிடத்தில் சித்தாள் வேலையில் ஈடுபடுவதை பார்த்து விட்டு உப்பிலியிடம் போய் சொல்கிறார், கன்னியம்மாவை தானே அழைத்து வருவதாக சொல்கிறார்.
ஊர் உறங்கிய போது கன்னியம்மா வண்டியில் அந்த ஊர் பெரிய மனுஷரோடு வந்திறங்குகிறாள். அந்த உண்மையான பெரியவருக்கு உப்பிலி நன்றி சொல்கிறான்.
கன்னியம்மா திரும்பி விட்டாள், ஆனால் வந்ததிலிருந்து திரும்ப போய் விடுவதாகவும், தன்னை வேண்டாமென்று தள்ளி வைத்து விட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறாள்.
இதை போய் உப்பிலி தியாகுவிடம் சொல்வதோடு தியாகுவிடம் படித்த நீங்கள் எல்லாம் வந்து சொல்ற மாதிரி சொன்னா நிச்சயம் கன்னியம்மா கேக்கும்.. வாங்க சார்... வந்து சொல்லுங்க.. என்று தியாகுவை கன்னியம்மாவை காண அழைத்து வருகிறான்.
கன்னியம்மா மூலையில் முடங்கி கிடக்கிறாள். தியாகு வருகிறான், அவளது அருகில் துடைத்து போடப்படும் நாற்காலியில் அமர்கிறான், வேலம்மா பார்க்கிறாள், மிக அருமையாக புரியும் படியாக எடுத்து சொல்கிறான்,
”நான் சொல்றத தயவு செஞ்சு நீங்க கேக்கணும்.. ஏதோ நானும் இந்த குடும்பத்துல ஒருத்தனா இருந்து சொல்றேன்.. நீங்க போனதிலிருந்து உப்பிலி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாரு வேதனைப்பட்டாருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்...
நீங்க கடவுள் புண்ணியத்துல வந்து சேர்ந்துட்டீங்க..ஆனா மறுபடியும் இங்கேந்து போறேன்னு சொல்றீங்களாம்.. எங்களுக்கெல்லாம் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு..
இப்ப என்ன நடந்து போச்சு...இதுவரைக்கும் ஒரு சுடு சொல் அவர் வாயிலிருந்து வரல.. அப்படிபட்ட மனுசர விட்டு போறேன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது.. இந்த மாதிரி ஒரு புருஷன் கெடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும்...
எங்க பெரியப்பா ஒருத்தர் இருக்காரு.. பெரிய குடிகாரர்... எங்க பெரியம்மா.. ஆங்... அதுக்காச்சு.. ஒரு 60 வயசு இருக்கும்.. கல்யாணமான நாள்லேர்ந்து இன்னைக்கி வரைக்கும் குடிச்சிட்டு வந்து எங்க பெரியம்மாவ அடிக்கிறது இம்ச பண்ணுறதும் தான் அவருக்கு வேல..
எங்க பெரியம்மா நெனைச்சிருந்தா என்னைக்கோ அவர விட்டு போயிருந்திருக்கலாம்.. ஆனா.. போகல.. ஏன்? அது தான் குடும்பங்குறது..
எங்க பெரியப்பாவோட வச்சு பார்க்கும் போது உப்பிலி... தெய்வம் மாதிரி...
பெரியவங்கள்ளாம் திரும்ப திரும்ப சொல்றது என்ன? நல்லதோ கெட்டதோ.. எல்லாத்தையும் தாங்கிகிட்டு ஒத்துமையா குடும்பம் நடத்துற புருஷன் மனைவி தெய்வத்துக்கு சமம்னு சொல்லியிருக்காங்க...
நம்ம சுத்தி சொந்தம் பந்தம்னு ஆயிரம் பேரு இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு புருஷன் தான் துணை.. மத்தவங்கல்லாம் இன்னைக்கி வருவாங்க நாளைக்கு போயிடுவாங்க..
இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு வீட்டோட இருந்து குடும்பம் நடத்துறத பார்த்து நாங்க எல்லாரும் சந்தோஷப்படணும்..மறுபடியும் நீங்க சமைச்சத எங்கள மாதிரி உள்ளவங்க எல்லாம் சாப்பிடணும்.. உங்கள வாழ்த்தணும்..
அந்த பழைய நாட்கள் திரும்பி வரணும்.. இது தான் எங்க எல்லோரோட பிரார்த்தனையும்... தயவு செஞ்சு உங்க முடிவ மாத்திக்குங்க..கெஞ்சி கேட்டுக்குறேன்..”
எழுந்து விடுகிறான். உப்பிலி அகமகிழ்ந்து பின்னால் இருப்பதாக கூறி வேலம்மாவிடம் தேநீர் போட்டு எடுத்து வரும்படியும் சொல்லி தியாகுவை நன்றி கூற அழைத்து செல்கிறான்.
பின்னாடி தியாகுவும் உப்பிலியும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே மூலையில் அமர்ந்து தியாகு பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கன்னியம்மா தியாகுவின் மீது சாணியை கரைந்து கொண்டு வெளக்குமாறை கையில் ஏந்தி வந்து ”ஏண்டா.. எனக்கு நீ வந்து புத்தி சொல்றியா..?” என்று கேட்டு தியாகுவின் மீது ஊற்றுகிறாள், உப்பிலி தடுப்பதையும் மீறிக் கொண்டு விளக்குமாறால் விளாசுகிறாள். ஹி டிஸ்ர்வ்ட் இட்.
பஞ்சாயத்து கூடப்போவதாகவும் கன்னியம்மா இந்த ஊரிலேயே இருக்க கூடாது எனவும் ஊர் கூடி வந்து உப்பிலியின் வீட்டு வாசலில் கூப்பாடு போடுகிறார்கள் ஊர் மக்கள், இது அத்தனையும் உப்பிலியின் தம்பியின் ஏற்பாடு. உப்பிலி அருவாளை தூக்கவே சண்டை பிடிக்கிறது.
உப்பிலி வேலம்மாவிடம், ‘வேலம்மா.. கன்னியம்மா சொன்ன மாதிரி அதுக்கு சேர வேண்டியதை எல்லாம் எடுத்து கட்டி வை.. நான் வண்டி கொண்டாறேன்..”
வேலம்மா, “அது தான் பைத்தியக்காரத்தனமா பேசுதுன்னா... நீ அதுக்கு மேலேயே இருக்குறீயே..:
“எல்லாம் எனக்கு தெரியும்.. நீங்க யாரும் எதுக்கும் கவலைப்பட வேணாம்”
தம்பியின் மனைவி, “என்ன அத்தான் சின்னபிள்ளை மாதிரி பேசறீங்க.. கடைசியில நீங்களும் ஊர்காரங்களுக்கு பயந்துட்டீங்களா?”
வேலம்மா உண்மையான தோழமையோடு, “இந்தா உனக்கு தைரியம் இல்லைன்னா சொல்லு... கன்னியம்மாவ என் வூட்ல வச்சு நான் காப்பாத்துறேன். நீ போவ சொன்னாலும்.. நான் போக வுட மாட்டேன்..”
தம்பியின் மனைவி, “அது தான் புத்தி பேதலிச்சு பேசுதுன்னா.. நாமும் அது கூட சேர்ந்து கை தட்டுறதா.. கன்னியம்மா இனிமே இங்கிருந்து போறது உங்களுக்கும் கவுரவம் இல்ல... அதுக்கும் கவுரவம் இல்ல..”
உப்பிலி, “பேசிட்டீங்களா?.. நீங்க சொன்ன கவுரவம், மானம் அது இத பத்தியெல்லாம்.. எனக்கும் தெரியும்..”
வேலம்மா, “தெரியுமுல்ல.. ஆம்பளயா லட்சனமா கன்னியம்மாவ வீட்டோட வச்சு காப்பாத்துவேன்னு தைரியமா சொல்லு..”
உப்பிலி, “அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. நான் சொல்றத கொஞ்சம்..”
வேலம்மா, “நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. எங்க வேதனைய கெளறாம.. கொஞ்சம் வெளியில போய் உட்காருங்க..”
உப்பிலி கோபப்படுகிறான், “சொல்ல சொல்ல இப்படி ஆளாளுக்கு கத்திகிட்டிருந்தா எப்படி? என் மனசுல என்ன இருக்கு.. அவ மனசுல என்ன இருக்குன்னு உங்கள்ள யாருக்காச்சும் தெரியுமா? சொன்ன மாதிரி எல்லாத்தையும் எடுத்து வைங்க... நான் போயி வண்டி கொண்டாறேன்...”
எழுந்து விடுகிறான்.
வண்டி வருகிறது.
வேலம்மாவும் தம்பியின் மனைவியும் கண்களில் நீர் தழும்ப எவ்வளவு சொல்லியும் கேக்காமல் பிடிவாதத்தோடு நடத்தப்படும் காட்சியை பார்க்கிறார்கள்.
கன்னியம்மா கிளம்புகிறாள், “வேலம்மா.. நான் வர்ரேன்..” - எரிகின்ற அடுப்பாய் வேலம்மா
கன்னியம்மா வண்டியருகே வருகிறாள். உப்பிலியை தேடுகிறாள். கொஞ்சம் தள்ளி நிற்கிறான். அவன் கிட்டே வர வேண்டி வண்டியில் ஏறாமல் நிற்கிறாள். புரிந்து கொண்டு அருகே வருகிறான் உப்பிலி.
கன்னியம்மா ஏறிட்டு உப்பிலியை பார்க்கிறாள். கண்களில் கண்ணீர் வடிகிறது.
உப்பிலி, “ஏன் அழுவுறே.. ஏறி உட்காரு..”
கன்னியம்மா, “எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நடந்தே போயிடறேன்...
உப்பிலி, “இதெல்லாம் இனிமே இந்த வீட்ல இருக்க வேண்டிய அவசியமில்ல...”
கன்னியம்மா, “உங்களுக்கு கெட்ட பேரை உண்டாக்கிட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க..”
உப்பிலி, “வேலம்மா அந்த பசுமாட்ட வண்டி பின்னால கட்டு...”
கன்னியம்மா, “எனக்கு வேண்டாம்..”
உப்பிலி, “கன்னியம்மா... நானும் ஒன் கூட வர்ரேன்...”
கன்னியம்மா அதிர்ச்சியாய் பார்க்கிறாள்...
உப்பிலி தொடர்கிறான், “நீ இல்லாம இந்த ஊர்ல நான் மட்டும் எதுக்கு இருக்கணும்.. வா போவலாம்.. நீ போனதுக்கு அப்புறம் எனக்கு யாரு இருக்காங்க... நீ போயிட்டியானா.. நான் அநாதை ஆயிடுவேன்.. என்னயும் ஒன் கூட அழைச்சிகிட்டு போயிடு...”
பூட்டும் சாவியும் இணைந்து கொள்கின்றன...
வண்டி நகர்கின்றது..
இது பூட்டாத பூட்டுக்கள் தான்.. ஆனாலும் இது புரிந்து கொண்ட பூட்டுக்கள்..
உப்பிலியாக நடித்திருப்பவர் ஜெகன் என்ற மலையாள நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர், இவர் நடிக்கும் சண்டை காட்சிகளிலெல்லாம் டூப்பே போடாமல் நடிப்பார். சென்னை அருகே நடந்த சூட்டிங்கில் பைக்கில் வந்து ஹெலிகாப்டரில் தொங்குவது போல் காட்சியில் ஃபெர்ஃபெக்டாக வரவில்லை என்று சொல்லி ரீடேக் எடுங்கள் என்று கேட்டுக் கொண்டு மீண்டும் படமாக்கப்படும் போது விபத்தில் இறந்து போனதாக தகவல் சொல்கிறது.
இந்த படத்தில் இவர் என்னமா நடித்திருக்கிறார், யார் துணிவார்கள்? ஆண்மை இல்லாதவராக நடிக்க என்னா தில் இருந்திருக்கணும் இவருக்கு...ஒரு ஹீரோ.. எப்படி தான் ஒப்புக் கொண்டாரே..?
மகேந்திரனின் இயக்கத்திற்கும் அசோக்குமாரின் ஒளிப்பதிவுக்கும் இந்த படத்தில் ஒரு திருமணமே நடந்து முடிந்து இருக்கிறது, அவ்வளவு ஒன்றோடு ஒன்று கலந்து காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
நல்ல படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் தவிர்க்க கூடாத படம் இது, ரொம்ப இயல்பாக இருக்கும், உடுத்தும் உடைகளிலிருந்து பேசும் பேச்சிலிருந்து யதார்த்தம்.