Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Thursday, February 11, 2010

குழந்தை பாதுகாப்பு

'வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்' ன்னு சொல்வாங்க, அதோட 'குழந்தைய வளர்த்துப் பார்'ன்னும் சேர்த்துக்கலாம்னு தோணுது.

இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.

(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)

(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)

குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.

எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள்,  வீடு  சுத்தம்  செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.

குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.

இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நான் ஒரு ரெண்டு மூன்று  வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.

சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?

ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.