Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, December 08, 2012

ஹஜ்ரத் வீடு - இரண்டாம் பகுதி

தொடர்புடையவை:

ஹஜ்ரத் வீடு - முதல் பகுதி இங்கே:

http://nagoreismail786.blogspot.com/2012/03/blog-post_16.html 

---------------------------------------------------------------------------------------------------------------

என்னுடைய சிறுவயதில் நாகூர் வஹ்ஹாப் சாப் பள்ளியில் (தெருபள்ளி தெரு குளத்திற்கு எதிரே) உள்ள மதரஸாவில் அரபி பாடம் ஓத கற்றுத் தெரிவதற்கு சேர்த்து விட்டார்கள்.

முதல் நாள் ‘இக்ர.. (ஓதுவீராக..!)’ என தொடங்கும் வசனத்தை எனக்கு சாபு ஓத சொல்லி கொடுத்தார்கள். 

தொடர்ச்சியாக ஐந்து கலிமாவும் சொல்லி கொடுத்தார்கள்.

லா இலாஹா இல்லல்லாஹ்.. முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்..

அல்லாஹ்வைத் தவிர வேறு அல்லாஹ் இல்லை... முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.


நான் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் அப்படியே திருப்பி சொன்னேன்.

அப்போது அந்த குழந்தை பருவத்தில் எந்த மத குடும்ப சூழலில் நான் பிறந்திருந்தாலும் மேலே சொன்ன கலிமா ஷஹாதாவிற்கு பதிலாக வேறு ஒரு வாசகத்தை சொல்லி கொடுக்கப்பட்டிருந்தாலும் நான் அதனையே பின்பற்றி சொல்லியிருக்கத் தான் செய்வேன்.

ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ம்மாவுக்கு பயந்தோ வாப்பாவுக்கு பயந்தோ அல்லது ஓதி கொடுக்கின்ற சாபுவுக்கு பயந்தோ அப்படியே பின்பற்றி கலிமாவை ஒப்பித்து கொண்டிருந்தேன்.

அதாவது முறைப்படி முஸ்லிமாகியிருந்தேன். சமுதாயத்தில் என்னை நானே முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் உண்மையான நம்பிக்கை என் மனதுக்குள் நுழையவில்லை. குரான் ஷரீஃபில் வரும் வாக்கியத்தை கவனிக்கலாம்:

குரான் ஷரீஃப் - 49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) - 14 வது வாக்கியம்

“நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம்” என்று நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள். “நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் இஸ்லாத்தை தழுவினோம்” என்று (வேண்டுமானால்) கூறுங்கள்”, (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை; .............”

மேலே உள்ள வாக்கியத்தின் படி ‘முஸ்லிமாக இருப்பதற்கும்’ ”ஈமானுடன்  இருப்பதற்கும்” நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

முஸ்லிமாக இருப்பதை ஒரு வீட்டிற்குள் செல்வதை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு அந்த வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு அறைக்குள் செல்வதை குறிக்கும்.

முஸ்லிமாக இருப்பதற்கு வக்து தவறாமல் குனிந்து எழுந்து அவசரகதியில் தொழுகையை கடனாக கழித்து விட வேண்டுமென்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு உடலோடு சேர்த்து உள்ளத்தையும் ரூஹையும் வளைக்க கடமையாற்றியாக வேண்டும்.

முஸ்லிமாக இருப்பது வெளிப்படையானவற்றை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பது மறைவானவற்றை குறிக்கும், ஏனெனில் அல்லாஹ் குரான் ஷரீஃபில் “..அவர்கள் இதயங்களில் நுழையவில்லை..” என்று சொல்கிறான். 

இதயத்தில் நுழைவது என்பது வெளிப்படையாக தெரியக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சரி, ஈமான் கொள்வது என்றால், எதை ஈமான் கொள்வது? எப்படி ஈமான் கொள்வது?

இந்த கட்டத்தில் குரான் ஷரீஃபில் வரும் இன்னொரு வாக்கியத்தையும் நினைவில் கொள்வது நன்மை பயக்கலாம்.

குரான் ஷரீஃப் - 2 ஸூரத்துல்  பகரா (பசு மாடு) - 2 மற்றும் 3 வது வாக்கியங்கள்

2 - அது திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. முத்தகீன்களுக்கு நேர்வழிகாட்டியாகும்.

3 - (முத்தகீன்களான) அவர்கள், மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள், ...............”

மேலே சொன்ன 2வது வாக்கியத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் “இது  திருவேதமாகும்...” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும்,  ’இது’ என்றால் ’இந்த குரான் ஷரீஃப்’ என்று பொருள்படும் படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், 

ஆனால் ‘இது’ என்ற வார்த்தைக்கு அரபியில் ‘ஹாதல்” என்ற வார்த்தை தான் வர வேண்டும். அப்படி வராமல் ‘தாலிகல்” என்ற வார்த்தை வந்திருக்கிறது, தாலிகல் என்ற வார்த்தைக்கு ‘அந்த’ என்பது தான் சரியான நேரடி பொருளாகும்.

ஆனால் ‘அந்த’ என்று எந்த மறைவான வேதநூலை பற்றி இறைவன் சொல்கிறான். இது ஒரு கேள்வி?

அடுத்து ‘முத்தகீன்கள்” என்ற அரபி வார்த்தை.

 ’தக்வா உடையவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்க பயன்படுகிறது. ‘தக்வா’ என்ற வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் ‘பயபக்தியுடைவர்கள்’ என்று தமிழ்சொல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் ‘தக்வா’ என்றால் ஆங்கிலத்தில் self-awareness,  the act of shielding/protecting oneself, (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Taqwa).

’விழித்திரு’ என்று சொல்வார்கள் அல்லவா, விழித்திரு என்றால் ”தூங்காமல் ராத்திரி பூரா கண்ணு முழிச்சிகிட்டு இரிக்கிறது” என்று அர்த்தமல்ல, எப்போதும் சுய கவனிப்போடு, சுய நிதானத்தோடு, எப்போதும் தயாராக இருப்பது, புலன்களின் உணர்வுகளோடு இருப்பது இப்படி குறிக்கும்.

உங்கள் விரல் அசைவது, உங்கள் கண்ணில் வரும் கருப்பு விழி அசைவதிலிருந்து அது எதை பார்த்துக் கொண்டிருக்கிறது, அதில் எந்த பொருள்கள் எல்லாம் கண்ணில் தெரிந்துக் கொண்டிருக்கிறது என்பது உள்பட உங்களை பற்றிய ஒரு closed observationல் இருப்பதை குறிக்கும்.

அதாவது எப்போதும் ‘தன்னை அறிந்த நிலை’யில் இருப்பதை ’தக்வா’ எனும் வார்த்தை குறிக்கும் என்றால் ‘தன்னை அறிந்த நிலையில் இருப்பவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீது ஒன்று நினைவிற்கு கட்டாயம் வந்தாக வேண்டும்.

’தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ 

(-எல்லாம் ஒரு சர்க்கிளுக்கு குள்ளேயே சுற்றி வருவதை உணர்ந்து கொள்ளலாம்.)

இது வரை:

’அந்த திருவேதம்’ என்றால் எது?’
- இதற்கு குரான் ஷரீஃப் என்று பொருள் தர்ஜூமாவில் கிடைத்தாலும் அது தான் சரியானது என்று உறுதியிட்டு கூறிவிட முடியாது.

இதை பற்றி மிக அற்புதமாக இங்கே சொல்லாடப்பட்டிருக்கிறது: http://pirapanjakkudil.blogspot.sg/2011/08/blog-post_27.html

’அந்த திருவேதம் யாருக்கு வழி காட்டுகிறது?’
-Self-awarenessஓடு இருந்து தன்னை காத்து கொள்கின்றவர்களுக்கு

இப்போது அடுத்த கேள்வி - 

“அப்படி Self-awareness சுயநினைவோடு இருப்பவர்களின் குணாதிசியங்கள் என்ன?”
- அவர்களில் முதன்மையான குணாதிசியமானது ‘அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்’

’யுமினூன’ என்ற அரபி வார்த்தை ஈமான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. அதாவது ‘மறைவான வற்றின் மீது ஈமான் கொண்டிருப்பார்கள்’

இப்போது முதலில் மேலே சொன்ன ‘ஹுஜுராத்’ எனும் அத்தியாயத்தில் வந்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்போம்.

“...ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை..”

நம்பிக்கை என்றால் என்ன?

உதாரணமாக, ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி ஒரு நண்பர் சொன்னார், “இன்னும் கொஞ்ச நாளில் மொபைல் போனிலேயே இண்டர்நெட் பார்ப்பார்கள்..” என்று

அதற்கு இன்னொரு நண்பர் சொன்னார், “முட்டாளாய்யா நீ... எவனாவது மவுஸை போனில் கனெக்ட் பண்ணி ஊரெல்லாம் எடுத்துகிட்டு போவானாய்யா.. அதெல்லாம் நடக்குற காரியமா?” என்றார்

ஆனால் இன்றைக்கு காலம் ‘யார் முட்டாள்’ என்று காட்டி கொடுத்து விட்டது.

முதலாம் நண்பர் வைத்திருந்தது அவர் புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பினார்.

ஆனால் இன்றைக்கு மொபைல் போனில் இண்டர்நெட் என்பது மறைவான ஒன்றல்ல.

இப்போது ஒருவர் வந்து, “மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம்’ என்றால் அதை ஒருவர் ஏற்றுக் கொள்வதை நம்பிக்கை என்று சொல்ல முடியாது.

வெளிப்படையான ஒன்றை நம்புவது என்பது தேவையில்லாத ஒன்று.

மறைவான ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவைப்படுகிறது.

அப்படியா, அப்போ, மறைவான வற்றின் மீது நம்பிக்கை கொள்வது விளங்குகிறது, ஆனால் ’மறைவானவை’ என்றால் என்ன?

இன்னைக்கு மறைவான ஒன்று காலப்போக்கில் வெளிப்படையாகக் கூடிய ஒன்ரையா இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, உதாரணமாக மொபைல் போனில் இண்டர்நெட், etc, etc,..?

எந்த மறைவானவற்றை பற்றி இந்த இடத்தில் குரான் ஷரீஃப் குறிக்கிறது.

’மறைவான’ என்ற வார்த்தைக்கு ‘அல்-கைப்’ என்ற வார்த்தை பயன்படுகிறது.

அதாவது, ‘அல்-கைப்’ என்றால் அது இறைவன் தான்.

ஏனெனில் ஸுரத்துல் பகறாவில் 3 (தொடர்ச்சி), 4 மற்றும் 5 என தொடரும் வசனங்களில் நம்பிக்கை வைக்க வேண்டிய மற்றவைகளை பற்றி குறிப்பிடும் போது அருளப்பட்ட வேதங்கள், மறுமை உள்பட இன்றைக்கு பார்க்க முடியாத மறைவான ஒவ்வொன்றும் தனியே குறிப்பிடப்பட்டே உள்ளது, அப்போது தனித்தனியாக குறிப்பிடப்படாத ஒன்றான ஒன்றை பொதுவாக ‘அல்-கைப்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது ‘அல்-கைப்’ (unseen)  என்பது இறைவனையே குறிக்கும் என்பது சூஃபியாக்களின் கருத்தாகும்.

இதை தான் பெருமானார் (ஸல்) அவர்களும் ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்றார்கள்.

சுயநினைவோடு இருக்கும் இவர்கள் மறைவான இறைவன் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

ஆனால் இறைவன் மறைவாக தான் இருக்கின்றானா?

குரான் ஷரீஃப் - ஸூரத்துல் ஹதீத் (இரும்பு) - 4 வது வாக்கியம்

”..... நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்...”

ரொம்ப அலர்ட்டாக இருக்க வேண்டும். நீங்கள் இருக்கின்ற இடத்தில் எல்லாம் இறைவனும் இருக்கின்றான். உதாரணமா, வகுப்பில் வாத்தியார், ‘இஸ்மாயில்’ - இஸ்மாயிலாகிய நான், ‘உள்ளேன் அய்யா’ என்று விளித்தால் அவன் என்னுடனே சேர்ந்து ‘உள்ளேன் அய்யா’வாக தான் இருக்கிறான்.

ஆனால் இந்த ‘உள்ளேன் அய்யா’வை நம்ப வேண்டும். அப்படி வரும் நம்பிக்கைக்கு பல படித்தரங்கள் உண்டு.

என் நண்பர் மொபைல் போன் இண்டர் நெட் சொன்னேன் அல்லவா, அந்த உதாரணத்தோடு ஒப்பிடுவோம்.

இரண்டாம் நண்பர் மறைவான வற்றை நம்பவில்லை, எப்படி?

மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம் என்ற செய்தி பிற்காலத்தில் நிறைவேறக் கூடிய ஆனால் அதே சமயத்தில் உரையாடல் நடந்த அந்த காலகட்டத்தில் மறைவாக இருந்த செய்தி. அதை இரண்டாம் நண்பர் ஏற்கவில்லை.

முதலாம் நண்பர் மறைவானவற்றை நம்பினார், எப்படி?

‘மொபைல் போனில் இண்டர்நெட் வராத போதே, அவ்வாறு வரும் என்று நம்பினார்.

ஆனால் மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்க கூடிய இந்த காலகட்டத்தில் இரண்டு நண்பர்களுமே நம்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது நம்பிக்கை கூட அல்ல, ஏனெனில் முன்னர் சொன்னது போல் மறைவானவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவை. இப்போது இரண்டு நண்பர்களுமே  நம்பவில்லை, அனுபவிக்கிறார்கள்.

ஆக,

1. மறைவானவற்றை நம்ப மறுப்பது ஒரு நிலை

2. மறைவானவற்றை ஒப்புக்கொள்கிறேன் என்று கேள்வி கேட்காமல் சொல்வது அடுத்த நிலை - இது தான் நான் குழந்தையில் கலிமா சொன்ன நிலை - இது தான் நான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் நுழைந்து விட்ட நிலை

3. மறைவானவற்றை அதாவது முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை நம்புவது அடுத்த நிலை - இது தான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் இருக்கும் ஈமான் எனும் அறைக்குள் நுழையும் நிலை

முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை அதாவது மறைவானவற்றை நம்புபவர்கள் தான் முத்தகீன்களான சுய உணர்வோடு இருப்பவர்கள்.

இப்படி சுய உணர்வோடு இருப்பவர்களான அல்-கைபை நம்புபவர்களுக்கு தான் ’அந்த’ வேதநூல் நேர்வழியை காட்டுகிறது.

அப்படி காட்டியதோடு முடிவடையவில்லை, வழிகாட்டுதல் என்பது ஊர் போய் சேர்ந்து விடுவது ஆகாது. அந்த வழிகாட்டுதலோடு சென்றால்... அடுத்த நிலை வரும்...

4. மறைவானவற்றைஅல்-கைபை நம்புவதில் இருந்து உணர்வுப்பூர்வமாக உள்ளுணர்வுகளால் அனுபவிப்பது என்பதே அந்த அதற்கும் அடுத்து இருக்கும் மேலான நிலை - இது தான் சூஃபியாக்களின் நிலை.

நான் எனக்கு குழந்தை பருவத்தில் ஓதி கொடுத்த வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்து சொன்ன போது அதை திரும்ப சொல்லி ஒப்புக் கொண்டேன். அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணின் படி இரண்டாவது நிலையில் இருந்தேன், ஆனால் எங்கள் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது தான் ஈமான் எனும் வீட்டிற்குள்ளேயே நுழைந்தேன்.

ஆனால் எங்கள் ஹஜ்ரத் அவர்கள் இருந்ததோ......
எனக்கும் அந்த நிலைக்கு உயர ஆசை எனும் துவா பிறந்தது....

Wednesday, July 18, 2012

உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் இறந்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள்

சத்தியம் அவர்களிடம் வந்த போது எதை அவர்கள் வேண்டுமென்றே சத்தியம் என்று தெரிந்த நிலையிலும் கூட அவர்கள் பிடிவாதத்திற்காகவும் கௌரவத்திற்க்காகவும் கேட்க அல்லது ஏற்றுக் கொள்ள மறுத்தார்களோ அவர்களை தான் இறந்தவர்கள் - அவர்கள் பிஸிக்கலாக உயிருடனே இருந்தாலும் கூட அவர்கள் இறந்தவர்கள் - என்று திருமறை கூறியிருப்பதாக நான் புரிந்து வைத்ததை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

http://nagoreismail786.blogspot.com/2012/05/blog-post.ht

இனி..

பிஸிக்கலாக இறந்தவர்கள் உயிரோடு இருக்க முடியுமா என்ற கேள்விக்கான விடை..

மனிதன் மட்டுமல்ல, ஆடு, மாடிலிருந்து பூச்சி புழுவுக்கு கூட இனப்பெருக்க உறுப்பு இருக்கத் தான் செய்கிறது, பிறக்கிறது வாழ்ந்து மடிகிறது.

மனிதர்கள் எல்லோரும் தனியாக எடுத்துக் கொண்டால் கூட அனைவருக்கும் ஒரே மாதிரி பிறப்பு, வாழ்வு, இறப்பு இருக்கத்தான் செய்கிறது.

(குறிப்பு: ஒட்டு மொத்த மனிதர் அனைவருக்கும் பிறப்பு ஒரே மாதிரி இருந்தாலும் ஈஸா நபியவர்களுடைய (அலை) பிறப்பில் ஒரு பெரிய அற்புதம் இருக்கிறதை பார்க்கிறோம். இதை பற்றி பிறிதொரு இடத்தில் பேசுவோம்)

மரணம் எல்லோருக்கும் அனுபவித்தே தீர வேண்டிய ஒன்று. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்பது திருமறையின் வாக்கு தான்.

ஆனால் குரான் ஷரீஃபில் ஒரு வசனம் வருகிறது. அதை கவனியுங்கள்.

39. ஸூரத்துஜ்ஜுமர் - கூட்டங்கள்  - 39வது வாக்கியம்


அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் மற்றொரு) மனிதரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் -  எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.


39. ஸூரத்துஜ்ஜுமர் - கூட்டங்கள்  - 40வது வாக்கியம்


நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.

மேலே கண்ட வசனத்தில் அல்லாஹ் ஒரு உதாரணம் மூலம் சொல்கிறான், பல எஜமானர்களுக்கு (இங்கே எஜமான் என்ற வார்த்தை ஒரு உதாரணமாக தரப்பட்டிருக்கிறது. எஜமான் என்ற வார்த்தை எல்லாவற்றையும் குறிக்கும், பணம், பதவி, கோபம், சோம்பல், எரிச்சல், புகைச்சல், குழப்பம் விளைவித்தல், குடி, பெண் மோகம், இன்னும் எண்ணில் அடங்கா எஜமானர்களை குறிக்கும்) சேவகம் செய்யும் ஒருவரும், ஒரே எஜமானுக்கு (இங்கே எஜமான் என்ற வார்த்தை அல்லாஹ்வை மட்டும் குறிக்கும்) சேவகம் புரிபவரும் சமமாவார்களா? என்று கேட்கிறான்.

அவ்வாறு கேட்டு விட்டு ”சமமில்லை” என்று சொல்லாமல் சொல்லி ”ஆனாலும் இதனை யாரும் அறிய மாட்டார்கள்” என்று சொல்கிறான்.

இதற்கு அடுத்த வசனத்தில் “நிச்சயமாக நீரும் மரிப்பவர் - யாரு? ஒரே எஜமானுக்கு சேவை புரிபவரும் மரிப்பவர் தான், நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்கள் தான் - யாரு? பல எஜமான்களுக்கு சேவை புரிபவர்களும் இறந்து போக கூடியவர்கள் தான்.

இப்படி கூறியிருப்பதை ஒரு வஹ்ஹாபிய உளவியல் படைத்த ஒரு மனம் படிக்கிறது என்றால், என்ன நினைக்கும்? - பார்த்தீங்களா? யாருக்கு சேவகம் புரிந்தாலும் சரி, எல்லோரும் இறந்து போக கூடியவர்கள் தான் என்று தான் படித்து புரிந்து கொள்ளும், ஆதாரம் வைக்கும், வாதாட முற்படும்.

ஆனால் சஹ்ஹாபிய அதாவது சுஃபிய சிந்தனை படைத்த ஒரு மனம் படிக்கிறது என்று வையுங்களேன், அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்றால் ரஸுலுல்லாஹ்வும் தான் இறந்து போனார்கள் மற்றவர்களும் தான் இறந்து போனார்கள் ஆனால் இவர்கள் ஒரே எஜமானுக்கு சேவை புரிந்தவர்கள் - மற்றவர்கள் பல எஜமானர்களுக்கு சேவை புரிந்தவர்கள் - இரு வேறு மரணமும் எப்படி சமமாகும் என்று சிந்திப்பார்கள், இவ்வகை சிந்தனையோடு ஒத்து வருகிறவர்களுக்கு மட்டும் எடுத்து புரிய வைப்பார்கள், விளக்கம் கொடுப்பார்கள்.

வாழ்வில் சமமாகாத இரண்டு பேரும் மரணத்திலும் சமமாக மாட்டார்கள், ஏனெனில் கீழே வரும் வசனத்தை கவனியுங்கள். இந்த முறை நேரடியாக மரணித்தவர்களை பற்றியே கூறுகிறான்.

2. ஸூரத்துல் பகரா - பசுமாடு - 154 வது வாக்கியம்


இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை (யுக்தலு என்ற அரபி வார்த்தை) “இறந்துவிட்டவர்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.


3. ஸூரத்து ஆல இம்ரான் - இம்ரானின் சந்ததிகள் - 169 வது வாக்கியம்


அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை (குதிலு என்ற அரபி வார்த்தை) மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் (யுர்ஜகுனா என்ற அரபி வார்த்தை).

மேலே கண்ட இரண்டு வசனங்களையும் கூர்ந்து கவனித்தால் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள் என்றும் மரித்தவர்கள் என்று எண்ணுவது கூட கூடாது என்றும் கூறுகிறான். அதோடு மட்டுமல்லாது அவர்கள் உணவளிக்கப்படுவதாகவும் கூறுகிறான்.

ஆனாலும் ரிஜ்க் என்ற வார்த்தை உணவு என்ற நேரடி அர்த்தத்தை கொடுத்தாலும் அதற்குள் அனைத்தும் அடங்கி விடுகிறது. ‘எனக்கு ரிஜ்க் எங்கே இருக்குன்னு தெரியலை” என்றால் ரிஜ்க் என்ற வார்த்தை மொத்த வாழ்க்கையையுமே குறிக்கும்.

அதாவது என் புரிதலின் படி அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர்கள் என்று சொல்வதோ எண்ணுவதோ ஹராம் ஆகும். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு அல்லாஹ்வின் புரத்திலிருந்து நேரடியாக அனைத்து தேவைகளும் all the provisions பூர்த்தி செய்யப்படுகிறது.

இது அப்படியே இருக்கட்டும்... பிறகு மீண்டும் இதை பற்றி பேசுவோம். இதற்கிடையில் இன்னொன்றை சிந்திப்போம்.

அல்லாஹ் சிலவற்றை சாப்பிடக் கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறான். நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

பார்க்க:

குரான் ஷரீஃப்


2. ஸூரத்துல் பகரா - பசுமாடு - 173வது வாக்கியம்


5. ஸூரத்துல் மாயிதா - உணவு மரவை - 3வது வாக்கியம்


6. ஸூரத்துல் அன் ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம் - 145வது வாக்கியம்


16. ஸூரத்துந் நஹ்ல் - தேனி - 115வது வாக்கியம்

மேலே கண்ட வசனங்களில் அல்லாஹ் முக்கியமாக நான்கு உணவுகளை தடுத்திருக்கிறான்.


1. தானாக இறந்தது


2. இரத்தம்


3. பன்றியின் மாமிசம் 
(குறிப்பு: இதை வைத்து ஒரு வஹ்ஹாபிய சிந்தனைவாதி மாபெரும் தலைவர் ஒரு காமெடி செய்ததை காண நேரிட்டது. பன்றியின் இதயமாம், மனிதனுக்கு 70 பெர்சண்ட் சூட் ஆகுதாம், எழவு, ஏன் இதெல்லாம்... எனக்கு பன்றி சூப் குடிக்க ஆசை என்று சொல்லி தொலைக்கலாமே என்று நினைத்தது இந்த பதிவுக்கு தேவையில்லாதது)


4. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது.


மேலே சொன்ன நான்கு உணவு வகைகள் தான் அவை.


இங்கே நமது கவனத்தை ஈர்ப்பது நான்காவது வகை தான். இப்போ ஒரு உதாரணத்திற்காக வேண்டு கோழியை எடுத்துக் கொள்வோம்.


கோழி ஹலால் தான்.


1.ஆனால் கோழி தானாக செத்து விட்டால் ஹலால் கிடையாது.

2. அதே கோழியை இஸ்லாமிய முறைப்படி அறுத்து கொள்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் உதாரணத்திற்கு வேறு ஒரு கடவுளாக கருதப்படுபவரின் பெயரை உச்சரிக்கிறார்கள். அப்போதும் ஹலால் கிடையாது.

3. ஆனால் கோழி அறுக்கப்படுகிறது, அவ்வாறு அறுக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹ்’ன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னவுடன் அது ஹலால் ஆகி விடுகிறது.

நன்றாக கவனியுங்கள். நான் மேலே எழுதியிருக்கும் 3 முறையிலும் அந்த கோழி இறந்து விட்ட ஒன்று தான். இறந்து போன கோழிக்கே இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுக்கப்பட்டவுடன் மற்ற முறையில் இறந்து போன கோழிக்கும் இதற்கும் ஒரு சம்மந்தமுமில்லை இரண்டும் சமமாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆக, நான் என்னா சொல்றேன், சாதாரணமாக ஒருவர் இறந்து போவதும், அல்லது பல எஜமானர்களிடம் (கோபம், பொறாமை, திமிர், எடுத்தெரிந்து பேசுவது, மேதாவித்தனம், மரியாதை கெட்டத்தனம், எக்ஸட்ரா எக்ஸட்ரா) சேவகம் புரிந்தவரும் அல்லாஹ்வின் பாதையில் இறந்தவரும் அதாவது ஒரே எஜமானிடத்தில் (அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்) சேவகம் புரிந்தவரும் சமமாகவே மாட்டார்கள்.


இங்கே இன்னொன்று “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்” என்று வருவதை வைத்து போரில் சண்டையிட்டு கொல்லப்படுபவர்களை மட்டும் தான் குறிக்கும் என்று நினையாதீர்கள்.


அல்லாஹ்வின் பாதையில் தங்களை அழித்துக் கொண்டவர்கள் யாவரையும் இது குறிக்கும்.


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே போரில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுபவன் வீரனல்ல, தன்னுடைய நஃப்ஸை அடக்கியாள்பவனே வீரன் என்று.

அவர்கள் மேலும் சொன்னார்கள், களத்தில் வாளோடு வாள் மோதிய பேர் முடிந்திருக்கும் தருவாயில் சொன்னார்கள், பெரிய போருக்கு தயாராகுங்கள் என்று.

ஆகவே ஒரு வேளை போரில் கொல்லப்பட்டவர்களை மட்டும் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டாலும் சின்ன போரில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களையே இறந்தவர்கள் என்று சொல்ல வேண்டாம், நினைக்க வேண்டாம் என்கிறான் இறைவன்.

பெருமானார் (ஸல்) அவர்கள் பெரிய போர் என்று அறிவிப்பு செய்த நப்ஸூடனான போரில் வெற்றி கண்டவர்களுக்கு மரணம் என்ன செய்து விடப் போகிறது.

அவர்கள் இறந்தாலும் உயிருடன் தான் இருக்கிறார்கள். ரூமி (றஹ்) அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால்...

Everyone is so afraid of death,

but the real sufis just laugh:
nothing tyrannizes their hearts.
What strikes the oyster shell
does not damage the pearl.

RumiRumi Daylight: A Daybook of Spiritual Guidance by Camille & Kabir Helminski



http://www.towardtheone.com/PirZia/Hayy.htm

Tuesday, July 10, 2012

தௌஹீது-பலதில் ஒன்று - சூஃபி ஆவணப்படம்

வரலாற்றின் அடிப்படையில் நாம் பல மக்களாக, பல குழுக்களாக, பல நிறங்களாக, பல பிரிவினர்களாக, பல நம்பிக்கையுடைவர்களாக (அல்லது எந்த நம்பிக்கையும் இல்லாதவராக), பல நாட்டினராக, பல தேசத்தினராக, இப்படி பல பலவென பலவாறாக பிரிந்து கிடந்தாலும் இந்த பூமி என்ற ஒன்றில் தான் வசிக்கிறோம்.

எல்லை கோடுகள் போட்டு நம்மை நாமே பிரித்து வைத்திருக்கலாம், ஆனால் ஒரு சுனாமி வந்து காட்டி கொடுத்து விட்டது.. நாம் எல்லோரும் இருப்பது ஒரு பூமியில் தான் என்பதை.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியானது நாட்டின் எல்லை கோடுகளை கொஞ்சமும் மதிக்காமல் இந்தியா, சிரிலங்கா, தாய்லாந்த் எல்லா நாட்டிலும் அதன் அழிச்சாட்டியத்தை காட்டி விட்டு தான் சென்றது.

இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும், ஏனெனில் நாம் யாரும் Independent கிடையாது Inter-dependent தான்.

Yes, the world is inter-dependent.

டாக்டர். தாரிக் எம். காதிர் என்பார் மிக அழகான ஒரு ஆவணப்படத்தை எடுத்து நம் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

அந்த படம் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொண்ட உலகில் வாழும் பல பாகத்தினர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. 

கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ல இந்த படம் 3 பாகங்களை உடையதாக அமைந்திருக்கிறது.

முதல் பாகம்: The Way of Salat 
இரண்டாம் பாகம்: The Way of Zikr - Allah is the first and last (starts from 28:40)
மூன்றாம் பாகம்: The Way of Sadaqah - To give is to be true (begins from 1:10:01)


Wednesday, May 02, 2012

உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் இறந்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள்

நாகூரில் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதுஷா நாயகமவர்களின் நினைவு தினம்  அவர்களை பெரிதும் மதித்து போற்றும் என் போன்றவர்களால் நேற்றைய/ இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

யாரையுமே மதிக்காமல் பேசும் போக்கு இன்று நம்மில் பலரிடையே வந்திருக்கிறது. இவர்களின் கேலி பேச்சு யாரையும் விட்டு வைக்கவில்லை, அவர்கள் அலி (றலி) அவர்களையே “எடுப்பார் கைப்பிள்ளை” என்று மிக சாதாரணமாக சொல்லி விட்டார்கள்.

இவர்களுக்கு இறை நேசர்கள் எல்லாம் எம்மாத்திரம்? இவர்கள் தொடுக்கும் கேள்விக் கனைகளில் சில..

குரான் ஷரீஃபிலோ பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீதிலோ ஒருவரை இறை நேசர் என்று அடையாளப் படுத்தியிராவிட்டால் நாங்கள் ஒருவரின் வரலாற்றையோ அல்லது வாழ்க்கை குறிப்பையோ படித்து விட்டு இவர் இறை நேசர் என்ற முடிவுக்கு வர முடியாது?

ஒருவர் இறைநேசர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அதை அல்லாஹ் தான் சொல்ல வேண்டும், அதாவது ஆதாரம் வேண்டும்? 

துறவி எனும் போர்வையில் ஒரு நடிகையிடம் சல்லாபம் புரிந்த நித்தியானந்தாவை போல் இறை நேசர்கள் எனும் பெயரோடு மண்ணறைகளில் உள்ளவர்கள் வாழ்ந்திருந்தால்...? 

அப்படியே அவர்கள் இறை நேசர்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இறந்து விட்டார்கள்.. ஆகையினால் இந்த உலகத்தோடு அவர்களுக்கு தொடர்பு இல்லை.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். இறந்தவர்களிடம் சென்று உயிரோடிருப்பவர்களிடம் உதவி தேடுவது போல் உதவி தேடக் கூடாது. இறந்த பிறகும் ஒருவருக்கு உயிரோடிருந்து உதவி செய்ய முடிகிறது என்று நம்பினால் அது ஷிர்க் ஆகும்.

மண்ணறைகளில் உள்ளவர்களை பெருமானார் (ஸல்) அவர்களே கூட செவியேற்க வைக்க முடியாது.

(இதற்கு ஆதாரம்:

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது)

ஆக, பெருமானாராலேயே (ஸல்) அவர்களாலேயே கேட்க வைக்க முடியாத மண்ணறை வாசிகளிடம் போய் ‘எனக்கு இத செஞ்சு கொடுங்க..” என்று அல்லாஹ் அல்லாதவர்களிடம் அல்லாஹ் மட்டுமே முடித்து கொடுக்கக் கூடிய காரியங்களை ஒப்படைப்பது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.

- எனக்கு இவர்கள் அலி (றலி) அவர்களை அப்படி பேசியதையோ இன்னும் கௌது நாயகம் (றஹ்) அவர்களை ஏக வசனத்தில் அவர் இவர் என்று பேசியதையோ இறை நேசர்களை நம்பாமல் போவதை பற்றியோ அல்லது வேறெதையும் பற்றியோ நமக்கு விமர்சனம், எதிர்ப்பு இருந்தாலும் அதை பற்றி பேசப் போவதில்லை.

ஆனால் மேலே வரும் குரான் ஷரீஃபில், “நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..” என்ற வாக்கியத்தை எப்படி விளங்க வேண்டும் என்பதில் எனது புரிதலை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன்.

குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை மட்டும் மறுபடியும் எழுதுகிறேன்..

நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..

- இது தான் அந்த வாக்கியம். 

இப்படி நினைத்து பாருங்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்து போனவர்களிடம் அதாவது கப்ரில் அடங்கியிருப்பவர்களிடம் நான் போய் இஸ்லாத்தை போதிக்கலாமா? என்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் என்று வையுங்கள்.

உடனே இறைவன் மேலே கூறிய வசனத்தை சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி கேட்டு இருப்பார்களா என்று இந்த வசனம் தொடர்பான தப்ஸீர்களை படித்து பார்த்தால் அப்படி ஏதும் அவர்கள் கேட்கவில்லை.

அல்லது இப்படி இருக்குமோ...?

”கப்ரில் உள்ளவர்களை நான் பேச வைக்கிறேன்” என்று யாரிடமாவது வாக்குறுதி அளித்து விட்டு ”அப்படி நான் கேட்க வைக்க வேண்டும்” என்று இறைவனிடம் துவா ஏதும் கேட்டுள்ளார்களா என்று பார்த்தால் அப்படியும் ஏதும் நடைபெறவில்லை.

பிறகு ஏனிந்த வாக்கியம், “நீர் மரித்தோர்களை கேட்கும்படிச் செய்ய முடியாது...”

இதற்கு முந்தைய வாக்கியங்களை தொடர்பு படுத்தி பார்ப்பதோடு பெருமானார் (ஸல்) அவர்களின் குணங்களையும் தொடர்பு படுத்தி சிந்தித்து பார்த்தால் ஒரு வேளை விளங்கி விடும் என்று நினைக்கிறேன்.

உதாரணமாக இதற்கு முந்தைய 79வது வாக்கியத்தை படித்து பார்ப்போம்.

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 79வது வாக்கியம்

எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான் உண்மையின் மீது இருக்கின்றீர்.

இந்த வாக்கியத்தில் இரண்டு செய்திகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சொல்கிறான்.

1. எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக

 - அதாவது, உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் ’நேரான வழிக்கு’ அழைப்பது என்பதை பலரும் தட்டி கழிக்கிறார்கள் என்று கவலை கொள்ள வேண்டாம், அல்லாஹ்வின் மீதே உங்களின் எல்லா காரியங்களிலும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அழைப்பு பணி விடுத்துக் கொண்டே இருங்கள்.

2. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்

- அதாவது அவர்களிடம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளோடு வந்த போது அவர்கள் எதிர்ப்பதனால் உங்களை (பெருமானார் (ஸல்) அவர்களை) பொய்யை கொண்டு வந்திருக்கிறீர் என்று சொல்வதனால் எல்லாம் நீங்கள் பொய்யுரைத்தவர் ஆக மாட்டீர்கள், மாறாக, நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் இஸ்லாத்தின் மீது இருக்கின்றீர்.

ஆக, பெருமானார் (ஸல்) அவர்கள் ரொம்ப கவலைப்படுகிறார்கள், ‘என்னா இது? மக்கள் நேரான பக்கம் வர மாட்டேங்கிறார்களே.. நம்மை ஏற்காததோடு நமக்கு எதிராக சூழ்ச்சியும் அல்லவா செய்கிறார்கள்..” என்று..

இதே அத்தியாயத்தில் 70 வது வாக்கியத்தை கவனியுங்கள்

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 70வது வாக்கியம்

அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியை பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்

இதை அப்படியே வச்சுகிட்டு நாம் மேலே எடுத்துக் கொண்ட வாக்கியத்தை படித்து பாருங்கள்

இந்த கட்டத்தில் தான் இறைவன் சொல்கிறான்..

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது




குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 81வது வாக்கியம்


இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்வர்.

ஆக, 80ம் வாக்கியத்தையும் 81வது வாக்கியத்தையும் கவனித்து படித்து பாருங்கள். 

”நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது” என்றால் என்ன அர்த்தம் என்றால், உங்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் அல்லவா அவர்கள் மரித்தவர்கள் போலாவார்கள்.

உங்கள் பேச்சை எவர்கள் புறங்காட்டித் திரும்பி விடுகிறார்களோ அவர்கள் தான் செவிடர்கள்.

உங்களின் அத்தாட்சிகளை எவர்கள் காண வில்லையோ அவர்கள் தான் குருடர்கள்

இந்த மரித்தவர்களை, செவிடர்களை, குருடர்களை - அதாவது முத்திரை வைக்கப்பட்டவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த முடியாது.

நீங்கள் யாரை நேர்வழியில் செலுத்த முடியும், உங்கள் பேச்சை கேட்க வைக்க முடியும் என்றால், இறைவனின் வசனங்களை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்க வைக்க, விளங்க வைக்க, புரிய வைக்க (hear, listen and understand) முடியும் என்பதாக சொல்கிறான்.


இந்த வசனத்தில் physical ஆக இறந்தவர்களை பற்றியோ,  physical ஆன செவிடர்களை பற்றியோ, அல்லது  physical ஆன குருடர்களை பற்றியோ பேசவில்லை என்பது தான் நான் விளங்கி வைத்திருப்பது ஆகும்.


இது தான் உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் என்ற இந்த கட்டுரையில் தலைப்பில் வரும் பாதிக்கான விளக்கம்.


அப்போ இறந்து விட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது எப்படி?


இன்ஷா அல்லாஹ் பிறகு...

Thursday, April 26, 2012

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் - 4


பொறுமையாளன் - அஸ்-ஸபூர் - The Patient One

குரான் ஷரீஃப்

அத்தியாயம்: ஸூரத்து அன்ஃபால் (8) - போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்

வசனம்: 46

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.



மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து:

நீங்கள் முழுக்க முழுக்க குழப்பத்திலும் துன்பத்திலும் சிக்கி இருந்தால்,
பொறுமையை கையாளுங்கள் - பொறுமை தான் இன்பங்களின் திறவுகோல்



Credit:
http://sufism.org/foundations/ninety-nine-names/as-sabur-the-patient-one-2

குரான் ஷரீஃப் தமிழில்:
http://www.tamililquran.com/qurandisp.php?start=8

Image Credit:
http://www.madaniwallpaper.com/view-99_as_sabur_6-1024x768.html

Audio chants of  99 asmaul husna:
http://wahiduddin.net/words/99_chants/99_Names_chanted_Seemi_Ghazi.mp3   

Monday, March 26, 2012

ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

ஸூரத்துந் நஸ்ர் - உதவி

குரான் ஷரீஃபின் 110வது அத்தியாயம்



1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும் போதும்,


2.மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,


3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்

------------------------------------------------------------

இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்தான். உண்மையையும் சத்தியத்தையும் கொண்டு மக்களிடம் வந்த போதெல்லாம் அவர்களின் கூற்றை உதாசீனப்படுத்தி வழிகேட்டிலேயே இருந்து வந்தார்கள்.

ஓராண்டு அல்ல ஈராண்டு அல்ல முழுதாக பதிமூன்று ஆண்டுகள் கடுமையான அழைப்பிற்கு பிறகும் மக்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவே இல்லை சொற்பமானவர்களை தவிர.

பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனைப்படுகிறார்கள், எந்த அளவிற்கு என்றால் ஒரு கட்டத்தில் இறைவனே இப்படி சொல்கிறான்...

26. ஸூரத்துஷ்ஷூஃரா (கவிஞர்கள்) - 3வது வாக்கியம்


அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!

- பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கள் வழிகேட்டில் இருப்பதை எண்ணி கவலையுற்று அவர்கள் நேர்வழியில் வராமல் இருப்பதற்காக மிகுந்த வேதனையுற்றார்கள் என்பதை தான் இறைவன் “உங்களையே நீங்கள் அழித்துக் கொள்வீங்க போல..” என்று கூறுகிறான்.

அவர்கள் இறைவன் தனக்கு விதித்த மிஸ்ஸனில் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு மக்கள் மீது அதிக அன்பு செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள் அதாவது அவர்கள் இறைவனின் கோபத்திற்கோ வேதனைக்கோ ஆளாகக் கூடாது என்பதால் மிகவும் வருந்தினார்கள் என்பதையுமே இந்த ஆயத்து சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

(http://www.theholybook.org/content/view/7786/2/)

இறைவன் சொல்கிறான்,

முதல் வாக்கியம்:

அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வரும் போதும்

- இங்கே உதவி என்ற வார்த்தைக்கு ”நஸ்ர்” என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதே ‘நஸ்ர்’ என்ற வார்த்தை பிறிதொரு இடத்திலும் வருகிறது.

3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) - 123வது வாக்கியம்


“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான் (நஸரகுமுல்லாஹ்); ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


இங்கே “நஸ்ர்” எனும் வார்த்தை வினைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அரபியில் வினைச்சொல் என்பது பெயர்ச்சொல்லை விட வலிமை குறைந்தது.

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயத்தில் “நஸ்ர்” எனும் வார்த்தை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அதாவது, பத்ரு போரில் குறைவான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இருந்த போதிலும் அல்லாஹ்வுடைய உதவி கிடைத்ததில் வெற்றி பெற்றார்கள் அல்லவா அந்த உதவியை compare பண்ணும் போது இந்த ஆயத்தில் வரும் உதவி மிகவும் வலிமை மிகுந்தது.

சாதாரணமாக உதவி என்றாலே அது உயர்வான செயல், ஒரு மனிதர் சரியான நேரத்தில் இன்னொரு மனிதருக்கு செய்யும் உதவியானது இந்த உலகத்தை விட மிகப் பெரியது என்று எனக்கு தமிழ் வாத்தியார் திருக்குறள் பாடத்தில் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

ஆனால் இந்த உதவி எப்பேர்பட்ட உதவி என்றால் எதனோடும் compare பண்ண முடியாத வெற்றி - இது நஸ்ருல்லாஹ் - அதாவது அல்லாஹ்வின் உதவி.
-
அடுத்து வெற்றி எனும் வார்த்தை, இந்த வார்த்தைக்கு அரபியில் “ஃபத்ஹு” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதெ “ஃபத்ஹு” என்ற வெற்றியை குறிக்கும் வார்த்தை குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

48. ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி) - 1வது வாக்கியம்


நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக (ஃபத்ஹன்) உமக்கு வெற்றி (ஃபதஹ்னா) அளித்துள்ளோம்.


பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் அரசியல் வெற்றியாக குறிப்பாக இரண்டு வெற்றியை சொல்லலாம்.

1. ஹுதைபிய்யாவில் கிடைத்த வெற்றி

2. மக்கா வெற்றி

மேலே குறிப்பிட்ட இந்த வெற்றி ஹுதைபிய்யாவில் கிடைத்த வெற்றியை குறிக்கிறது.

ஹுதைபிய்யா எனும் இடத்தில் பெருமானாரோடு குறைஷிகள் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் போட முன்வந்தார்கள். ஒப்பந்தத்தில் என்னவோ முஸ்லீம்களுக்கு எதிரான வாசகங்கள் நிரம்பி தான் இருந்தன. உதாரணமாக எந்த நோக்கத்திற்காக முஸ்லீம்கள் புறப்பட்டு வந்தார்களோ ஹஜ் செய்வதற்காக அந்த ஹஜ் யாத்திரையை அந்த ஆண்டு நிறைவேற்றாமல் திரும்பிவிட வேண்டும் என்று இருந்தது.

இதை பெரும்பாலான முஸ்லீம்கள் மிகப் பெரிய தோல்வியாக கருதினார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இவ்வாறு ஒப்பந்தம் செய்ததை “தெளிவான வெற்றி” என்று வர்ணிக்கின்றான்.

இத்தனை ஆண்டு காலமாக பெருமானார் (ஸல்) அவர்களை சொல்லணா துன்பமிழைத்தனர்.

பைத்தியக்காரர்கள் என்று கூறினர்

கல்லை விட்டெறிந்தனர்

டெர்ரரஸிட் என்றனர்

எக்ஸ்டிரீமிஸ்ட் என்றனர்

இவர்கள் மனிதநேயமற்றவர்கள் என்று புலம்பினர்

இவர்கள் பெண்களை அடிமைபடுத்துகிறார்கள் என்று உளறினர்

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டனர்

வீட்டை விட்டு ஊரை விட்டு வெளியேற்றினர்

- இப்படியெல்லாம் பெருமானாரை (ஸல்) அவர்களை recognize செய்யாமல் இருந்த மக்கத்து குறைஷிகள் இங்கே ஒரு மிகப் பெரும் தலைவராக மதித்து ஒப்பந்தம் போட முன்வந்தனர். 


பெருமானார் (ஸல்) அவர்களின் மக்காவில் 13 ஆண்டுகள் அடைந்த தொல்லைகளுக்கும், மதினாவில் 6 ஆண்டுகள் அடைந்த மன உளைச்சலுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் இறைநம்பிக்கைக்கும் பொறுமைக்கும் அவர்களை recognize செய்வதை விட அந்த நேரத்தில் மக்கத்து குறைஷிகளுக்கு வேறு வழியில்லாமல் கொண்டு வந்து விட்டிருந்தது.


இந்த ஒப்பந்த செய்தி அக்கம் பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவ ஆரம்பித்ததும் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை மிகப் பெரும் தலைவராக பார்க்கத் துவங்கினார்கள். இதை தான் அல்லாஹ் தெளிவான வெற்றி என்று மிக அழகாக குறிப்பிடுகிறான்.


ஆனால் இந்த வெற்றி கூட “பத்ஹன்” என்று கடைசியாக அரபி எழுத்தான “நூன்” என்ற வார்த்தையோடு வருகிறது.


ஆனால் நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த அத்தியாயத்தில் வரும் “வல் ஃபத்ஹு” என்ற வார்த்தையோ “அந்த வெற்றி The Victory” என்று கம்பீரமாக தனித்து நிற்கிறது. ஆகையினால் இது ஹுதைபிய்யா வெற்றியை விட மிக பெரிய வெற்றியை குறிக்கிறது.


இரண்டாவது வாக்கியம்:


மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்


இந்த வசனத்தில் அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களிடம் குறிப்பாக ஒன்றை சொல்கிறான், அது தான் “நீங்கள் கண்களால் பார்ப்பீர்கள்...” என்று -


எதை?


மக்கள் அணியணியாக group after group அல்லாஹ்வின் மார்க்கத்தில் (தீனில்லாஹி) பிரவேசிப்பதை


மற்ற நபிமார்களை போல் அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளிலேயே மக்கள் அணியணியாக பிரவேசிப்பதை பார்ப்பார்கள். அல்லாஹ் பெருமானர் (ஸல்) அவர்களின் மனதை ஆறுதல் படுத்துகிறான், பொறுமைக்கு கூலி வழங்குகின்றான்.


உமர் (றலி) அவர்கள் இந்த ஆயத்திற்கான விளக்கத்தை சுல்தானுல் முஃபஸ்ஸிரீன் (the king of all those who explain) என்றழைக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (றலி) அவர்களிடம் வினவிய போது பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட mission முடிவுக்கு வந்துவிட்டதை உணர்த்துவதாக விளக்கமளித்துள்ளார்கள்.


பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பான அல்லாஹ்வின் மார்க்கத்தில் அழைப்பு பணி மக்கள் எல்லோரும் அணியணியாக வந்து சேர்ந்தால் உதாரணமாக யெமன் நாட்டிலிருந்து 700 பேர்கள் வந்து இஸ்லாத்தில் இணைந்தனர் அவர்களின் பொறுப்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பது தான் பொருளாகும் என்ற அவர்களின் வியக்கத்தக்க ஒரு view pointஐ வெளிப்படுத்தினார்கள்.


(இப்னு அப்பாஸ் (றலி) அவர்களை பற்றிய ஒரு ஹதீது:
Narrated By Ibn 'Abbas: Once the Prophet embraced me and said, "O Allah! Bestow on him the knowledge of the Book (Qur'an)." [Sahih Bukhari, Vol 1, Book 3, Hadith #075])

மூன்றாவது வாக்கியம்:

3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்


இதன் ஒலிபெயர்ப்பு:

ஃபஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தக்ஃபிருஹு இன்னஹு கான தவ்வாபா

பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி வெற்றிகரமாக முடிவுற்றவுடன் அவர்கள் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.

1. இறைவனின் புகழை கொண்டு தஸ்பீஹ் செய்வது

2. இறைவனிடம் மன்னிப்பு கோருவது

பொதுவாக ஏதேனும் துன்பமோ துயரமோ நம்மை அடைந்து விட்டால், அல்லாஹ்வை ஒரு மனதாக நினைத்து கேட்க வேண்டியதை பட்டியலிட தொடங்கிவிடுவோம், அதுவே ஒரு நல்லது நடந்து விட்டால் பேருக்கு அல்லாஹ்வின் பேரை ஒரு வார்த்தையில் புகழ்ந்து விட்டு கிடைத்த நல்லதை அனுபவிக்க அதில் மூழ்கி விடுவோம்.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறோ நமக்கு வேறு விதமாக இருக்க கற்று தருகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை பெரும் படை கொண்டு எந்த இரத்தவெறியாட்டம் இல்லாமலும் வன்முறை இல்லாமலும் அமைதியான வெற்றியை கண்ட போது எந்த போர் வீரரும் மக்களின் மீதோ அல்லது அவர்களின் உடைமைகள் மீதோ உரிமை கொண்டாடவில்லை. இராணுவ அணிவகுப்பு நடைபெறவில்லை, கொலைவெறி கோஷங்கள் இல்லை, ஒரு /பார்ட்டி இல்லை, டான்ஸ் இல்லை, மாறாக போர்வாள் உறைக்குள் மறைந்து ஒலிந்து கொண்டிருந்தது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் தாழ்மையோடு இறையில்லத்தில் அமைதியாக தவாப் செய்ததையும், இறைவனை புகழ்ந்து வணங்கியதையுமே பார்த்து வியக்க முடிகிறது.

இறைவன் முதலாவதாக தஸ்பீஹ் செய்ய சொல்கிறான். குரான் ஷரீஃபின் கீழ்வரும் வாக்கியத்தை கவனிப்போம்:

29: ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) - 45வது வாக்கியம்


இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.  நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (நினைவு கூறுவது) மிகவும் பெரிதாகும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

ஆகவே
அல்லாஹ்வின் உதவி என்பது பெரியது
அல்லாஹ்வை நினைவு கூர்வது, புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்வது என்பது மிகப்பெரியது.

Friday, March 16, 2012

ஹஜ்ரத் வீடு - சிறுகதை


 1

தெருவாடிகள் சேர்ந்து கிட்டிபில்லு, கபடி, ஐஸ்பால் ரெடி விளையாடும் பருவம். பெருசா ஒண்ணும் வெளையாடி கிழிச்சதில்லை என்றாலும் தெருவாடிகள் யாவரும் ஒன்று கூடி ஆச்சிகனிமா வீட்டு வாசலில் கூடி பைசா பிரயோஜனம் இல்லாத - ஆனாலும் கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காத வீண் பேச்சுக்கள் பேசி மகிழ்ந்த காலமது.

சோத்தை விடவும் சினிமா முக்கியமாக தோன்றிய காலமது. வீடியோ வந்த புதுசு. சின்னாப்பாவுக்கு சினிமா காட்ட வேண்டுமென்பது ஆசை. வீட்டு வாசலில் அட்டையில் ‘இன்று புதுக்கவிதை” என்று எழுதி தொங்க விடப்படும். அதை பார்த்து விட்டு ஒரு ஜமா வீடியோவில் படம் பார்க்க வந்து விடுவார்கள். 

ஒரு முறை சங்கத்த பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு சுரேஷ் நாய் குட்டியோடு நடித்த 'செல்வி' எனும் படம் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக செவத்தை ஒட்டி ஒக்காந்து படம் பார்த்து கொண்டிருக்க, தூரத்திலிருந்து ம்மா பார்த்து விட, கிட்டே வந்து சட்டையை பிடித்ததும், ‘சும்மா வுடுங்கனி..’ என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க.. வுட்டேன் ஓட்டம்.. வாசல் பக்கம்.. 

மூச்சிறைக்க நின்ற இடம்.. சங்கத்த பள்ளி.. (நாகூர் முஸ்லீம் சங்கம், குஞ்சாலி மரைக்காயர் தெரு). நல்ல பிள்ளை மாதிரி ஓதிகிட்டு இருக்கும் போது துப்பட்டியோடு வாசலில் ம்மா வந்து நல்ல பிள்ளையாட்டம் ஓதிக்கிட்டு இருந்த என்னை ஒண்ணும் பேசாமல் வூட்டுக்கு கூட்டிட்டு வந்து.. வாங்க வேண்டியத வாங்கியது எல்லாம் சிரிப்பா சிரிச்ச கதைகள்.

அப்படி ஒரு நாள் ஆச்சிகனிமா வூட்டு வாசல்ல உக்காந்து இக்கிம் போது தான் ஒருத்தஹ வந்து இறங்குனாஹா, ‘கண்ணுல கண்ணாடி, ஒரு பெரிய மேஜர் ஜெனரல் மாதிரியான தோற்றம், கைலி தான், அரை கை சட்டை” இப்படி சகிதமா வந்திறங்கிய அவர்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை.

சின்னாப்பா யாரையும் சத்தம் போடக் கூடாது என்று சைகை காட்டி விட்டு மிகவும் பவ்யமாக அவர்கள் முன்னால் நடந்து சென்றார்கள். 

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வீடியோ ஓடும் சத்தம் கேட்டு நாங்களும் வீடியோ பார்க்க ஓடினோம்.

வீடியோவில் ஓடிக் கொண்டிருந்த படத்தை விடவும் நான் வந்த அது புது மனுஷரை தான் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கையில் சிகரெட். 
நிலைத்த பார்வை.

மொத்த வீடும் கர்ச்சீஃப் விழுந்த சத்தம் கூட இல்லாமல் கப்சிப் என்று இருந்தது.

கொஞ்ச நேரம் காட்சி முடிந்ததும் வெளியே கிளம்பும் போது என்னிடம் வந்து கன்னத்தில் கை வைத்தார்கள்.

சின்னாப்பா இன்னாரின் மகனார் என்று என்னை அறிமுகப்படுத்தி சொன்னதும்..

“வாப்பா நல்லா இக்கிறாஹலா.. சலாம் சொல்லுங்க..”

அடுத்தடுத்த பிள்ளைகள்..

மறைந்து போனார்கள்.

எனக்கு யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

-------------------

2

ஹிலுரு (அலை) அவர்களை பற்றிய வரலாறு குரான் ஷரீஃபில் வருகிறது. அந்த பெயரோடு அல்ல.. ‘நம் அடியார்..’ என்ற அடைமொழியோடு வருகிறது. அவர்களின் பெயரில் தெருமுனையில் ஒரு பள்ளி இருந்தது.

தொழுவுற அந்த பள்ளிக்கு போய் பெண்கள் எல்லாம் கபுரடிக்கு ஜியாரத் செய்ய போவது போல் போய் வந்தார்கள்.

கேட்டால், “ஹிலுறு நபி அங்கே ஹாலிற் ஆகிறார்கள்’ என்று காரணம் சொன்னார்கள்.

சின்னாப்பா தான் டெய்லி பள்ளிக்கு போய் ஹிலுறு நபியின் நினைவாக ஃபாத்திஹா ஓதி வந்தார்கள்.

கொஞ்ச நாளாக போக வில்லை. ஏன் என்று கேட்டால், ‘ஹஜ்ரத் அங்கே போய் ஜியாரத் எல்லாம் செய்யக் கூடாது’ என்றார்கள் என்றும் ‘ஹிலுறு (அலை) அங்கே ஹாலிற் ஆக வில்லை என்றும் கூறுவதாகவும்’ சொன்னார்கள்.

ஹிலுறு (அலை) ஹாலிற் ஆகிறார்கள் என்பதை 101 சதவிகிதம் நம்பி வந்த எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னவர்கள் மீது எனக்கு ஆத்திரமாக வந்தது.

‘இவர்களுக்கு என்னா தெரியும்?’ என்று கேட்டேன்.

’அப்படி சொன்ன ஆள் யார்?’ என்ற தேடலின் விளைவாக தெரிந்து கொண்டது ‘கையில் சிகரெட்டோடு கன்னத்தில் தடவியவர்கள் தான் அது’ என்று தெரிந்த போது கலவரம் கண்ட எங்க ஊர் மாதிரி கதிகலங்கி போனேன்.

அப்படி கலவரமடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தது, அதில் முதன்மையானது, “இவர்கள் ஹஜ்ரத்தா?’ என்பதே அது.

தோற்றம் தான் காரணம்.

கையில் தஸ்பீஹ் இருக்க வேண்டிய இடத்தில் சிகரெட் இருந்தது
முகத்தில் தாடி இல்லை. கிளீன் ஷேவ் பண்ணி இருந்தது.
உட்காரும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்..’ இல்லை
எந்திருக்கும் போது, ‘அல்லாஹு அக்பர்’ இல்லை

இவர்களா ஹஜ்ரத்?

-------------------------

3

நண்பர்கள் ஹஜ்ரத் வீட்டில் நடப்பதை பற்றி கிண்டலடித்தார்கள்.

அவர்கள் வீட்டில் புர்தாஹ் ஷரீஃப் மஜ்லிஸ் ஓதப்பட்டது.

வாரா வாரம் ஞாயிறு இரவன்று ஓதப்படும் இந்த மஜ்லிஸுக்கு வீட்டை கழுவி சுத்தம் செய்யப்படும்.

வஹ்ஹாபிகள் எல்லாம் விரல் நீட்டாத தலையெடுக்காத காலத்தில், ஒரு பக்கத்து தெருவாசி இப்படி கேட்டார், “குரான் பெருசா? (பெருசு என்றால் அதன் சைஸால் அல்ல, புனிதமானதா என்ற அர்த்தத்தில்) புர்தா பெருசா?”

நான், “இதென்ன கேள்வி, ‘குரான் ஷரீஃப் தான் பெருசு..” என்றேன்

அவர், ‘குரான் ஓத கழுவி வுட மாட்டாஹலாம், புர்தாவுக்கு வூட்டையே கழுவி வுடுவாஹலாம்.. பாருங்க.. இதெல்லாம் பித்ஆவாக்கும்.. ஷிர்காக்கும்..’ - வஹ்ஹாபிகளுக்கே முன்னோடி நாங்கள்

இன்னும் ”அதாக்கும் இதாக்கும்” என்று கண்டபடி பேசி கலைந்து போனோம்..

கொஞ்ச நாள் கழித்து, எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, டாக்டர் ஊசி போட்டார், மருந்து மாத்திரை கொடுத்தார், எது கொடுத்தும் தேவலையா போகலை.

எனக்கு எடுத்த பிளட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், எல்லா டெஸ்டுகளுமே என்னை தவிர நார்மலாகவே இருந்தது.

அப்புறம் என்ன...? - ஓதி பார்த்தா என்ன...?

வேறு யார் கிட்டே ஓதி பார்க்குறது? அவங்கள விட்டா...?

கூட்டிட்டு போனார்கள்...

அங்கே உள்ளே போன போது எனக்கு என்னவோ போல இருந்தது.

என்னடா ‘எஹல பத்தி எஹ வூட்ல ஓதுற புர்தா ஷரீஃபை பத்தி அப்படி இப்படி பேசியிருக்கிறோம்.. இப்போ அஹல்ட்டயே ஓதி பாக்க வந்திருக்கிறோமே..” என்று

தெருவாடிகள் பார்த்து விட்டால் என்ன செய்வது? - யோசனையாக உள்ளே போன எனக்கு அதிர்ச்சி...

எந்த பக்கத்து தெருவாசி குரான் பெருசா? புர்தா பெருசா? என்றெல்லாம் கேள்வி கேட்டாரோ - அதே அவர் ஹஜ்ரத்தின் காலை தன் கண்ணில் வைத்து ஒத்தி கொண்டு இருந்தார் -

----------------------------------

4

அந்த பக்கத்து தெருவாசியான அவர் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது அவர் ரூம்மெட் ஒருவர் தூக்கு போட்டுக் கொண்டு உயிரை விட்டார்.

தன்னை சாகடித்துக் கொண்ட அந்த நண்பரிடன் உயிருக்கு உயிராக பழகியிருந்த அவர் அன்றிலிருந்து மனம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.

போகாத ஊரில்லை, பார்க்காத டாக்டரில்லை.. கொஞ்சம் கூட சரியாகாமல் இருந்து வந்தார்.

கடைசியாக அவரது வீட்டில் ஹஜ்ரத்திடம் கூட்டி வந்தார்கள்.

பத்து ஆளுடைய பலத்தோடு கட்டுக்கடங்காமல் கிடந்த அவரை பெரும் படையே கட்டி இழுத்து போய் அவர்கள் முன்னால் நிறுத்தியது.

ஹஜ்ரத் அவர்கள் அப்பொழுது தான் தூங்கி எழுந்த மாதிரி இருந்தார்கள்.

‘அவரை விடுங்கள்..” என்றார்கள்..

ஒரு பார்வை தான் பார்த்தார்கள்...

சுருண்டு விழுந்து விட்டார் அந்த நண்பர்.

அப்பொழுது விழுந்தவர் தானாம். எழுந்திருக்கும் போது புதிய மனிதராக எழுந்து இருந்தார்.

எனக்கு அவர்கள் தலை வைத்து ஓதி பார்த்தில் மருந்தில் காணாத நலம் அன்னாரின் மகத்துவத்தில் நலமாக தான் போயிருந்தேன்.

ஆனாலும் இவையெல்லாம் எனக்கு குழப்பத்தை அதிகரித்தனவே தவிர தெளிவான நிலைக்கு இன்னும் நான் வரவில்லை.

பொதுவாக சூஃபியிசம் வாயிலாக இஸ்லாத்திற்கு நுழைபவர்கள் முதலில் பெரும்பாலும் நோய் வாய்ப்பட்டிருப்பார்கள். யாராலும் குணமாக்க முடியாமல் போயிருக்கும். அதன் பிறகு ஒரு சூஃபியின் சகவாசத்தால் இவரது உடல் குணமாகியிருக்கும்.

இப்படி குணமாக்கும் சூஃபிகள் தங்களை குணமாக்கும் வைத்தியர்களாக விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. போஸ்டர் அடித்து ஒட்டுவதில்லை. அவர்கள் பாட்டுக்கு ஓரிடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களை பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.

இவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, முக்கியமாக மதம், ஜாதி இவைகள் ஒரு தடையே அல்ல. இது முழுமையான மனித சேவை.

சரி, நோய் என்றால் என்ன? அது குரான் ஷரீஃபின் ஒரு வாக்கியத்தையோ அல்லது அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமோ அந்த நோய் குணமாகி விடுமா என்ன? கெட்டுப் போன உடல் உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுமா? மேலே சொன்ன வாசகத்தையோ திருநாமத்தையோ இவர்கள் என்றூ அல்லாமல் வேறு யார் சொன்னாலும் குணமாகி விடுமா? அவ்வளவு சுலபமானது தான் நோய் குணமாகி விடும் என்றால் இவ்வளவு மருத்துவமனைகள் உயிரைக் காப்பாற்ற உயிரை எடுப்பது ஏன்?

- இப்படியாக தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து கொண்டிருந்ததில் மூன்று முடிவுகள் இருப்பதாக ஒரு முடிவுக்கு வந்தேன்.

1. இப்படியெல்லாம் குணமாக்க யாராலையும் முடியாது.

2. இப்படி குணமாக்க இவர்களால் மட்டுமே முடியும். நம்மாலெல்லாம் முடியாது.

3. இவர்களை போல் குணமாக்க நம்மாலும் முடியும்.

இந்த மூன்று முடிவுகளில் ஒன்றே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதை தேர்ந்தெடுப்பது?

5

இறுதியாக, மூன்றாவதை தேர்ந்தெடுத்தேன். ஏன் நாமும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை முயன்று பார்த்து அனுபவத்தில் சரி அல்லது தவறு என்று தெரிந்து கொள்ள கூடாது.

நீச்சல் கற்றுக் கொள்ள முடிவெடுத்தவுடன் டைனிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் எப்படி?

ஹஜ்ரத் அவர்களது வீட்டிற்கே புறப்பட்டேன்.

ஒவ்வொரு நாளும் போய் வாசலில் அமர்ந்து இருப்பேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு என்னை உள்ளே வர அனுமதி தந்தார்கள்.

உள்ளே போய் உட்கார்ந்து இருப்பேன்.

நான்கு மணி நேரம் போய் இருக்கும். நாலு வார்த்தை கூட சேர்ந்தாப்ல பேசியது கிடையாது.

இப்படியே ஒரு வாரம், ஒரு மாதம் கடந்தது.

ஒரு முறை ஒருவர் ஹஜ்ரத் வீட்டிற்கு வந்தார், ஒரு பேப்பர் கட்டிங்கை கொண்டு வந்திருந்தார்.

அதை கொண்டு வந்து, ஹஜ்ரத் அவர்களிடம் காட்டி, “இங்கே பாருங்க... ஹஜ்ரத்.. ஒரு மீனோட படம் இது... இதுல அல்லாஹ்ன்னு எழுதியிருக்கு... நம்ம மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்... இதெல்லாம் குதரத்..” - அது இதுன்னு பில்டப் கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.

எனக்கு அவர் பேச்சை கேட்ட போது புதிதாய் ஒரு வீரம் வந்த மாதிரி..”மாஷா அல்லாஹ்..” என்று பெருமை உணர்வோடு சொல்லிக் கொண்டே திரும்பி  ஹஜ்ரத் அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

அவர்கள் முகத்தில் ஒரு சொட்டு மாறுதல் கூட இல்லை. ஒரு பெருமிதம் இல்லை. இந்த செய்தியை கேள்விபடும் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்பவும் இருந்தது.

என்னா இது, இப்படி இருக்கிறார்கள்...? இதற்கு ஒரு சின்ன ஆச்சர்யம் கூட இல்லையே...?

- யோசித்துக் கொண்டிருந்த போது...

ஹஜ்ரத் அவர்கள் என் பக்கம் திரும்பி சொன்னார்கள், “இந்த மாதிரி செய்திலாம் கேள்வி பட்டுட்டு உங்க ஈமான வளர்த்துகாதீங்க... நாளைக்கு மாட்டுட கன்னுல இவர் உருவம் தெரியுதும்பாங்க... அப்போ அதையும் ஈமான் கொள்ளுவீங்களா...?”

- இப்படியாக இருந்தது அவர்களின் பேச்சு..

உடல் நோய் குணமாக்குவதில் அனுபவம் கிடைப்பது இருக்கட்டும்... எனக்குள் நிறைய மன நோய் இருக்கிறதே அதனை முதலில் குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பட்டது.

அதற்கு எங்கள் ‘ஹஜ்ரத் வீடு’ தான் சரியான இடம் என்பதே நான் கண்ட முதல் அனுபவம்.

Friday, March 09, 2012

லஹப் - ஜுவாலை

ஸூரத்து அபுலஹப்

அபுலஹப் - யார் இவர்? இவர் பெயரில் ஒரு அத்தியாயமா? அப்படி என்ன இவருக்கு முக்கியத்துவம்? - தெரிந்து கொள்ளுமுன் -

இவரை பற்றிய சிறு குறிப்பு:

  • மக்காவில் வாழ்ந்த மிகப் பிரபலமானவரும் செல்வந்தரும் ஆவார். 
  • பெருமானார் (ஸல்) அவர்களின் தந்தையாரின் சகோதரரும் ஆவார். 
  • இவரின் உண்மையான பெயர் அப்துல் உஜ்ஜா. 
  • உஜ்ஜா என்பது மக்காவில் கஃபத்துல்லாஹ்வில் கற்பனையால் வடிவமைக்கப்பட்டிருந்த கடவுள் சிலைகளின் ஒன்று. அந்த கற்பனை கடவுளின் அடிமை என்ற பொருள் படும் படி அமைந்திருக்கிறது இவரது பெயர்.
  • ஆனால் இவருக்கு ஒரு சிறப்பு பெயர் இருந்தது. அது தான் அபுலஹப்.
  • லஹப் என்றால் தீஜுவாலை, தீச்சுடர். இது ஏனெனில், இவரது முகம் நெருப்பு மாதிரி ”செக்கசெவேன்னு செவப்பா” என்பார்களே அதே போல் இருக்கும். அதாவது அவ்வளவு அழகாக இருப்பார்.
  • இவரின் மனைவி பெயர் உர்வா.
  • உர்வா என்பவர் மிகப் பெரிய குடும்ப வம்சத்தில் வந்தவர்.
  • இவர் எப்போதும் தனது குடும்ப அந்தஸ்த்தை உயர்த்தி மற்றவர்களிடத்தில் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்.
  • இவருக்கும் இவரது கணவருக்கு இருந்தது போலவே இன்னொரு பெயரும் இருந்தது, அது தான் உம் ஜமில் (அழகி)




1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடையட்டும்; அவனும் நாசமாகட்டும்


2. அவனுடைய பொருளும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை


3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்


4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ 


5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான்
--------------------------------------------------------------------------------------------

அப்பப்பா... எவ்வலவு கடுமையான வார்த்தைகள். அப்படி அபுலஹப் செய்த தவறு தான் என்ன...?

அபுலஹப் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய இன்னல்களை கொடுத்து வந்தான். பெருமானார் (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வந்த இவன் (ஸல்) அவர்கள் குரான் ஷரீஃபை ஓதினால் குப்பைகளை வீசி எறிவான்.

இவனது மகன்களுக்கு தான் பெருமானார் (ஸல்) அவர்களின் மகளார்களை மணமுடித்து வைக்கப்பட்டிருந்தது. மகன்களை ஏவி விட்டு அருமை மகளார்களை மணரத்தை செய்ய வைத்தான்.

பெருமானார் (ஸல்) அவர்களின் மகனார் காஸிம் அவர்கள் மரணத்தை எய்திய போது அந்த கனமே ஆனந்த கூத்தாடினான். இத்தகைய மோசமான ஒரு செயலை பெருமானார் (ஸல்) அவர்கள் மீது போரை ஏவி விட்டவர்கள் கூட செய்ததில்லை. வரலாற்றில் படித்ததுமில்லை. மேலும் வாரிசில்லாதவர் என கேலி பேசினான்.

இன்னும் சொல்லிலடங்கா இன்னல்களையும் கேடுகளையும் விளைவித்தான். தன்னுடைய ஹபீபை கிண்டலாகவும், கேலியாகவும் பேசும் இக்கயவனுக்கு இறைவன் இவன் பெரும் செல்வாக்கோடும், உடல் ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருந்த போது மேலே படித்த ஆயத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக இறக்கி வைத்தான்.

--------------------------------------------------------------------------

‘தப்’ என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகுதல் என்று பொருள்படும்.

அதாவது அந்த கால அரபிகள் ஒரு பெண்ணை பார்த்து “நீங்கள் குமரியா அல்லது வயசானவரா?” என்று கேட்க “அ ஷ்ஷாபா அம் தாப்பா..” என்று கேட்பார்களாம். அதாவது “நீங்கள் குமரியா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருபவரா? (இறப்பை அடைந்து வருபவரா?)” என்று

இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு அபுலஹப் இந்த அத்தியாயத்தை வைத்தே மிகவும் கேலி பேசினானாம்.

பொதுமக்கள் கூடும் இடத்தில் இருக்கும் போது வேண்டும் என்றே கைகளை தூக்கி காண்பித்து, ”தபன் லகுமா” - “நீ அழிந்து போவாயாக” என்பான். மேலும் கைகளை பார்த்து “முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதில் ஒரு அடையாளத்தையும் கானோமே..?” என்பானாம்.
---------------------------------------------------------------------------------

இந்த அத்தியாயம் இறங்கும் வரை “அபுலஹப்” என்றால் அழகானவர், தீயின் சுடரைப் போன்ற கன்னமுடையவர் என்ற பெயரே இருந்தது. ஆனால் இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு “அபுலஹப்” என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தம் கற்பிக்கப்பட்டது.

அதாவது “லஹப்” என்றால் அழகை குறிக்காமல் - (”சயஸ்லா - பொசுங்கி விடுவான்; நாரன் தாத - நெருப்பு; லஹபின் - தீச்சுடர், ஜூவாலை”) - தீச்சுடர் பொசுக்கும் நரக நெருப்பில் அதாவது லஹபில் என்றென்றும் தங்கியிருப்பவன் என்று பொருள் கிடைக்கப் பெற்றது.
-------------------------------------------------------------------------------------

Monday, February 20, 2012

மால்கம் எக்ஸ் - மெக்காவிலிருந்து கடிதம்

I am not a racist. I am against every form of racism and segregation, every form of discrimination. I believe in human beings, and that all human beings should be respected as such, regardless of their colour.

 - (Malcom X)  Malik al Shabbaz

------------------------------------------------------------------------------------


இன்றைக்கு மனிதர்கள் பலவிதமான் முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறார்கள். விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் இப்படி மனித சமுதாயம் அடைந்திருக்கும் முன்னேறம் விண்ணை முட்டுகிறது.

ஆனால் இவ்வளவு ஸ்ட்ராங்கான பில்டிங்கின் முன்னேற்றத்திலும் வீக்கான பேஸ்மெண்ட்டாக ஒருவருக்கொருவர் விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்துள்ளனர். இதன் வளர்ச்சியோ முன்னதைக் காட்டிலும் அதிவேகமான வளர்ச்சியாக விண்ணையே துளைத்துக் கொண்டு சென்று விட்டது எனலாம்.

குரான் ஷரீஃபின் அறிவிப்புப் படி மனிதர்கள் யாவரும்  ஒரே குடும்பமாக தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்களிடையே ஒட்டிக் கொண்டே வந்த பொறாமையின் காரணமாக அவர்களுக்குள் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் பார்க்க துவங்கினார்கள்.

குரான் ஷரீஃப்
2: ஸூரத்துல் பகர (பசு மாடு)
213வது வாக்கியம்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

மேலே படித்த வசனத்தின் படி மனிதர்களிடையே உண்டான பொறாமை அவர்களை ஒருவருகொருவரை வேறுபடுத்தி காட்டியது.

எதையெல்லாம் முன்னெடுத்து வைத்து வேறுபடுத்தி பார்க்க துவங்கினார்கள் தெரியுமா?

பேசும் மொழிகள்
தோலின் நிறங்கள்
- இப்படியாக, 


இன்னும் நிறையவே வேறுபாடுகளை கண்டுபிடித்தார்கள் இந்த பொறாமை கொண்டவர்கள், 


உதாரணமாக, பிறப்பை வைத்து வேறுபாடு, சேர்த்து குவித்திருக்கும் செல்வம், மண்டையில் அடைத்திருக்கும் கல்வியறிவு, இவ்வளவு ஏன், நம்மடவர்கள் ஆதார ஹதீதுகளை வைத்துக் கொண்டே நாங்க வேற என்று வேறுபடுத்தி பார்க்க தொடங்கி விட்டர்கள்


குரான் ஷரீஃப்
30: ஸூரத்துர் ரூம் (ரோமானிய பேரரசு)
22வது வாக்கியம்


மேலும் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

மனிதர்களுக்கு இடையேயான இந்த வேறுபாடுகள் இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளது தான். ஆனால் இது கற்றரிந்தோருக்கு மட்டுமே தெரிகின்றது என்கிறது குரான் ஷரீஃப்.

மன்சூர் ஹல்லாஜ் என்ற சூஃபி ஞானி சொல்வார்கள் - “இறைவனை பார்க்க வில்லையென்றாலும் குறைந்த பட்சம் இறைவனின் அத்தாட்சியையாவது கண்டுகொள்” என்று -

இந்த வேறுபாடுகள் எதற்காக இருந்தாலும் நிச்சயமாக மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு பேசி பகைத்துக் கொள்வதற்காக அல்ல - இதை குரான் ஷரீஃப் அழகாக ஓர் உதாரணத்துடன் சொல்லிக் காட்டுகிறது.

குரான் ஷரீஃப்
35: ஸூரத்துர் பாத்திர் (படைப்பவன்)
27வது வாக்கியம்


நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.


28வது வாக்கியம்


இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.


மேலே கண்ட உதாரணத்தில் மழை நீர் ஒரே மூலத்திலிருந்து இறங்கினாலும் பல விதமான கனிகளை வெளியாக்குகின்றன, அதே போல் தான் மனிதர்களிடையே பலவிதமானவர்களும் இருக்கிறார்கள், ஆனால் எவர்கள் அறிஞர்கள் என்றால் இந்த வேறுபாட்டை வைத்து பிரிவினை ஏற்படுத்தி அதன் மூலம் பிழைப்பு நடத்தாமல் அவனுக்கு அஞ்சி நடப்பவர்கள் தாம் என்ற கருத்தே இதன் அடிப்படையாகும்.


இன்னொரு வசனம் இப்படி வருகிறது...



குரான் ஷரீஃப்
49: ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
13வது வாக்கியம்


மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும் (shu'uban - அதாவது தேசத்துடையவர்களாகவும் nations), கோத்திரங்களாகவும் (qabaila - அதாவது குழுக்கள், வம்சாவளிகள் tribes) ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக (atkakum - most righteous of you)  இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர் (most noble of you). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

(Refer: the book "qabila - tribes" - http://books.google.com.sg/books/about/Qabila.html?id=rE2FAAAAMAAJ&redir_esc=y)



இஸ்லாத்தை பொறுத்த வரை மனிதர்கள் குரங்கிலிருந்தோ அல்லது சிங்கம் புலியிலியிருந்தோ அல்லது வேறு எந்த மிருகத்திடமிருந்தோ வந்தவர்களல்ல, 
மனிதனை மிருகத்தோடு எல்லாம் ஒப்பிட்டு ஒரு வகையாக கேவலப்படுத்தவில்லை மாறாக மனிதனை சிரத்தையோடு படைத்தான், அவனுடைய ஆவியை ஊதினான் என்று தான் மனிதனை கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.


மேலே கண்ட இந்த வசனத்தில் ரொம்பவும் கவனிக்க வேண்டிய வாசகம் “மனிதர்களே!..” என தொடங்கும் இந்த வசனம் தான்.


அப்படி என்ன இதில் முக்கியத்துவம் என்றால்...?


இதற்கு முந்தைய வசனங்கள் அனைத்தும் “முஃமீன்களே!..” என்று தொடங்கியிருக்கும் போது இந்த வசனம் மட்டும் சட்டென்று “மனிதர்களே..!” என்று மாற்றியிருப்பது தான்.


இந்த வசனத்திற்கு லீடாக தான் முந்தைய வசனங்களை என்னால் பார்க்க முடிகிறது. முந்தைய வசனங்கள் எதுவுமே ஆழ்ந்து படித்து புரிந்துக் கொண்டு பின்பற்ற வேண்டியவை தான் என்றாலும் நான் குறிப்பிட்டு இங்கே எழுத நினைக்கும் வசனம் இதே அத்தியாயத்தில் வரும் 11வது வசனமாகும்.


இந்த அத்தியாயத்தில் முஃமீன்களை பார்த்து இறைவன் கட்டளையிடுகிறான். ஒரு சமூகத்தார் இன்னொரு சமூகத்தாரை பார்த்து பரிகாசம் செய்ய வேண்டாம் என்று.


இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால், ஒரு சமூகத்தை பார்த்து, “காலா”, “சப்பாத்தி”, “மதராஸி”, “பச்சை”, “மாவு”, “மஞ்சள்” - இன்னும் எப்படி எப்படி எல்லாமோ ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்து கொள்கிறார்கள் - இப்படி எல்லாம் செய்யவே கூடாது.குறிப்பாக சாதியை குறிப்பிட்டு பழித்து சொல்வது அறவே வெறுக்கப்பட வேண்டிய ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று.


இதையெல்லாம் சொல்லி விட்டு “மனிதர்களே!” என்று ஆரம்பித்து நீங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான், பல தேசத்தவர்களாக, பல குடும்பம் குழுக்களாக பிரிந்திருப்பது உங்களில் ஒருவரை ஒருவர், “இன்னாரின் மகன், இன்னாரின் குடும்பம் இன்ன நாட்டுக்காரர்” என்ற அடையாளத்திற்காக மட்டும் தான். இதனால் உங்களுக்கு அல்லாஹ்விடத்திலே எந்த கண்ணியமும் நிச்சயமாக கிடையாது, அதாவது நான் சவுதி அரேபிய சிட்டிசன், அமெரிக்க சிட்டிசன் என்பதிலெல்லாம் கண்ணியம் கிடையாது, யார் கண்ணியம் உடையவர்கள் என்றால் யார் நேர்மையாக, நீதமாக, பயபக்தியோடு நடந்து கொள்கிறீர்களோ அவர்கள் தான், இதனால் அப்படி நடந்து கொள்வதால் உங்களுக்கு நீங்கள் யாராக இருந்தாலும் சரியே கண்ணியம் உண்டு என்று இறைவன் தீர்ப்பளித்து இருக்கிறான்.


மனிதர்கள் மாறுபட்டு இருந்தாலும் மேலே கண்ட வசனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களிடையே கூட ஆப்கானி, பாகிஸ்தானி, ஈரானி, ஷியா, சுன்னி என்ற பல வேறுபாடுகள் நாடுகள், மொழிகள், நிறங்கள், உயரங்கள் செல்வங்கள் கல்வியறிவு இப்படியாக வேறுபட்டு இருந்தாலும் ஹஜ் என்று வரும் போது ஒரே அணியாக அதாவது “உம்மத்” என்ற ஒரே அடையாளமாக இணைந்து விடுகிறார்கள் என்பதே இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

இந்த ஹஜ் எனும் பயனம் தான் மால்கம் - எக்ஸ் என்பவரின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

-------------------------------------------------------------------------------------------------

True Islam taught me that it takes all of the religious, political, economic, psychological, and racial ingredients or characteristics, to make the Human Family and the Human Society complete

- (Malcom X)  Malik al Shabbaz

----------------------------------------------------------------------------------------------------

மால்கம் எக்ஸ் என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், அவர் சார்ந்த இன மக்களின் உரிமைக்காக போராடிய மிகப் பெரிய சக்தியாக விளங்கியவர், முஸ்லிமாக மாறிய பிரபலங்களில் மிக முக்கியமானவர்.

இவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் ஹஜ்ஜின் போது இவருக்கு ஏற்பட்ட தாக்கம். ஹஜ் என்பது உலகின் பல பாகங்களிலிருந்து மனிதர்கள் தனது நாடு இனம் மொழி குலம் கோத்திரம் அடையாளம் பால் இப்படி எல்லா பிரிவுகளையும் உடைத்தெறிந்து படைத்த ஒரே இறைவனின் முன்னால் முழுமையாக சரணடைந்தவர்களாக இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற செல்லும் ஒரு மிகப் பழமையான பயணமாகும்.

இந்த பயணத்தை பற்றி மால்கம் எக்ஸ் குறிப்பிடும் போது, “இந்த பூமியில் நான் வாழ்ந்த இந்த 39 வருடத்தில், புனித நகரான மக்காவில் மட்டுமே முதன் முறையாக அனைத்தையும் படைத்தவனின் முன்பாக நிற்பதாக உணர்ந்ததோடு ஒரு முழுமையான மனிதனாக நான் உணர்த்துக் கொண்டதும் ஆகும்” என்றார்.

மறைந்த சகோதரருக்கு இந்த (பிப்ரவரி) மாதம் 21ந் தேதி நினைவு நாள்..

இறைவன் இவருக்கு மேலான ஆஹிர் வாழ்க்கையை அருள்வானாகவும்..!

அன்னாரின் நினைவாக...

அல் ஃபாத்திஹா...
---------------------------------------------------------------------------------------

I am and always will be a Muslim and my religion is Islam


- (Malcom X)  Malik al Shabbaz
--------------------------------------------------------------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------

All praise is due to Allah - the Lord of all the Worlds


- (Malcom X)  Malik al Shabbaz


-------------------------------------------------------------------------------------------------------------------