Friday, January 02, 2009

பொம்மலாட்டம்

நாற்றம் அடித்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு மண்வாசனையோடு முதல் மரியாதை தந்து கடலோர கவிதைகளையும் பாடிய பாசத்துக்குறிய பாரதிராஜா இனிய தமிழ் மக்களுக்காக இவர் கொடுத்திருக்கும் மாற்றம் தான் பொம்மலாட்டம்.

பாரதிராஜா கதை சொல்லும் விதமே குழப்பமாக தான் இருக்கும். நேரடியாக கதை சொல்லவே மாட்டார். பின்நினைவு காட்சிகள் கூட நேர்கோட்டில் வராது. முன்னாடி உள்ளதை பின்னாடியும் பின்னாடி உள்ளதை முன்னாடியும் காட்டுவார்.

மனைவி உள்பட உடன் பணியாற்றுபவர்கள் அனைவரும் கிறுக்கன் (eccentric) என்று கூறினாலும் தான் கிறுக்கன் அல்ல முழுமையானவன் அல்லது பிழையில்லாமல் கச்சிதமாக செய்பவன் (perfectionist) என்று தனக்கு தானே சான்றிதழ் வழங்கி கொள்ளும் ஒரு இயக்குனர்.

தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி தான் சொன்னபடி நடிக்காததால் அந்த கடல்நீரில் கால் நனைக்காத அந்த நடிகையை விலக்கிவிட்டு வேறு ஒரு நடிகை கிடைக்கும் வரை படப்பிடிப்பை ஒத்தி போடுகிறார்.

அதன் பின்னர் மக்கள் கடலில் மூழ்கி முத்து ஒன்றை கண்டெடுத்து படப்பிடிப்பை தொடங்குகிறார். பொத்தி பொத்தி வைத்து பாதுகாத்த அந்த நடிகையை பற்றி பத்திரிக்கைகாரர்களுக்கு பேட்டி கொடுக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலம் தாழ்த்துகிறார்.

அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு பத்திரிக்கைகாரர்கள் அந்த விடுதிக்கு செல்லும் போது அங்கிருந்து அந்த கதாநாயகியுடன் தப்பி ஓடி கதாநாயகியை காரில் வைத்து மலையிலிருந்து தள்ளி விடுகிறார்.

இந்த கொலையுடன் படப்பிடிப்பின் போது நடந்த இரண்டு கொலைகளையும் சேர்த்து மூன்று கொலைகளையும் விசாரிக்க சிபிஐ வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பதை உணர்வு பூர்வமாக ஆடியிருக்கும் படம் தான் பொம்மலாட்டம். வழக்கமான திகில் படங்களில் கொலைக்கான நியாயங்கள் சொத்து அல்லது பழைய பகை என்று இருக்கும். இந்த படத்தில் இது வரை கண்டிராத நியாயங்களும் இருக்கிறது.

டைனோசருக்கு தீனி போட பாரதிராஜாவால் தான் முடியும். காமோஷியில் (இந்தி படம் - மௌனம் என்று பொருள்) பேசாமலே நடித்து அனைவரையும் ஊமையாக்கிய நானா படேகரே அந்த டைனோசர். இவரின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு நடிப்பு பாடம். நிழல்கள் ரவியின் குரல் அப்பட்டமாய் பொருந்தியிருக்கிறது.

நல்ல ஒரு திரைப்பட அனுபவம் வேண்டுமா? பார்க்க வேண்டிய படம் பொம்மலாட்டம்.

No comments: