Monday, March 29, 2010

துளசி - என் கதை - இரண்டாம் பாகம்

துளசி - என் கதை - முதல் பாகம்

2 - திருப்பம்


'சுதாகருக்கும் எனக்கும் தான் திருமணம்னு சின்ன வயசுலேயெ பெரியவங்க பேசிக்கிடாங்க, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம், படிப்போம், அப்பலாம் சுதாகர் இல்லாமல் எதையும் நான் செய்ய மாட்டேன், அப்புறம் அவங்க வெளிநாடு பயணம் போன பிறகு எப்பவாவது போன் பேசிக்குவோம்.. ஆனா இந்த காதல்.. கல்யாணம்.. இத பத்தி எல்லாம் நாங்க எப்பவுமே பேசிக்கிட்டது கிடையாது..' என்றவள் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, 'இப்ப அத்தை கல்யாணத்த பத்தி பேச தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..' என்றாள்.

துரை மௌனமாக இருந்தான், அவனது முகத்தில் இருப்பது ஏமாற்றமா..? சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

துளசி அவனையே கவனித்து விட்டு கேட்டாள், 'என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க..' என்று.

துரை வாய் திறந்தான், வார்த்தை தடுமாறியது,, 'இப்ப எப்படி..?, உங்களுக்கு சுதாகர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே..?' தயங்கியவாறு கேட்டான் தரையையும் துளசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே..

துளசி துரையை கவனித்தாள், அவன் அவளின் பதிலுக்கு ஆர்வமாக இருப்பது தெரிந்தது, 'எனக்கு இப்ப இல்ல.. எப்பவுமே.. அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியம்..' என்றாள்.

துரை கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்து விட்டு, ' சுதாகர் இஸ் லக்கி..' என்றான்.

அந்த அத்தை அடுத்த முறை வரும் போது கல்யாணம் பேசி துளசியை கையோடு கூட்டிட்டு தான் போவேன் என்று துளசியின் பெற்றோரிடம் கறாராக சொல்லி விட்டு போயிருந்தார். அந்த அடுத்த முறை இப்போது வந்தது, கல்யாணம் சம்மந்தமாக அத்தை பேசிக் கொண்டிருந்தார், 'என் புள்ள சுதாகர பத்தி சொல்ல வேண்டியதே இல்ல.. அப்படியே இந்தி நடிகர் மாதிரியே இருப்பான், நிறைய செலவு பண்ணி எம்.பி.ஏ. படிக்க வச்சிருக்கோம், இப்ப நல்ல உத்தியோகத்துல இருக்கான், இன்னும் கொஞ்ச வருஷத்துல கம்பெனி சொந்தமா வைக்கிற அளவுக்கு பெரிய ஆளாயிடுவான்.. உங்களுக்கும் ஒரே பொண்ணு, நான் கேட்குறத கேட்டு நீங்க கொடுத்தா தான் இந்த கல்யாணத்துக்கே பெருமை, 300 பவுன் போட்டுடனும், பையனுக்கு கார் வாங்கி தந்துடணும், நுங்கம்பாக்கத்துல ஒரு பிளாட் அப்புறம் ரொக்கமா 20 லட்சம் கொடுத்துடுங்க, எல்லாம் நான் எனக்கு கேக்கல, உங்க மருமகனுக்கு தான், கடைசில பாத்தீங்கன்னா உங்க மகளுக்கு தான்..' என்றார்.

ராஜாராமன் லட்சுமியை பார்த்தார், லட்சுமியின் அகத்தில் விருப்பம் இல்லாதது அவரது முகத்தில் கண்ணாடி போல் தெரிந்தது.

அத்தை தொடர்ந்தார், 'கல்யாண செலவு பூரா உங்களோடது தான்.. நீங்க யோசிக்கவே வேண்டியதில்லை.. பட்டுன்னு சம்மதம் சொல்ல வேண்டியது தான்' ஓவராக உளறி கொட்டினார்.

ராஜாராமன் கையமர்த்தினார், 'ராஜம்.. துளசி எனக்கு ஒரே பொண்ணு.. என் கிட்ட இருக்கிறது எல்லாம் அவளுக்கு தான், ஆனா.. என் பொண்ணை மருமகளா எடுக்குறவங்க என் பொண்ண பத்தி தான் கேக்கணும், பேசணும், பொண்ண விட்டுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே பேசிக்கிட்டு இருக்கக் கூடாது..' என்றார்.

ராஜத்திற்கு புரியவில்லை, 'என்ன அண்ணே! இப்படி சொல்லிட்டே.. நம்ம சுதாகருக்கு வேற நல்ல இடத்துல இன்னும் கொட்டி கொடுக்குறேன்னுட்டு வரிசை கட்டி நிக்கிறாங்க.. நான் சொன்ன சொல் ஆச்சே.. சொந்தம் விட்டு போகூடாதுன்னு வந்தா.. நீ இஷ்டம் இல்லாத மாதிரி பேசறியே..'என்று கேட்க

'அப்படி நிறைய கொட்டி கொடுக்கிறேன்னு வந்தா நல்லா முடிச்சுக்க வேண்டியது தான்.. யாரும் தடுக்க போறதில்லை..' என்றார்.

'அப்படின்னா சரி.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊருலேந்து யு.எஸ். போய் செட்டிலான குடும்பத்திலேந்து கூட பேசி வருது.. எல்லாம் நம்ம சாதி சனம் தான்.. கல்யாணத்த ரொம்ப கிராண்டா நடத்துறேன்னு பேசிக்கிறாங்க.. நல்லா யோசிச்சுக்க.. ' என்றார்.

'இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல..' என்றவர் ராஜம் போனவுடன் லட்சுமியிடம் சொன்னார், 'இவ கேட்டத விட அதிகமா கொடுத்து நம்ம பொண்ண கட்டி கொடுப்போம்.. கவலைப்படாதே..' என்று.

லட்சுமி, 'நமக்கு எப்படியோ போகட்டுங்க.. சின்ன வயசுலேந்து சுதாகர் தான் இவளுக்குன்னு பேசுனது.. துளசி மனசுல ஆசய வளர்த்து இருந்தான்னா.. அவள்ட்ட ஒரு வார்த்தை கலந்துக்கறது நல்லது..' என்று.

ராஜாராமன் லட்சுமி சொல்வது தான் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

துளசி அழைக்கப்பட்டாள், நடந்த சம்பவங்கள் விளக்கி சொல்லப்பட்டாள், இப்பொழுது அவளது வார்த்தைக்காக காத்திருந்தார்கள், "என் கல்யாணம் உங்க ரெண்டு பேரோட இஷ்டப்படி தான் நடக்கும்..' என்று கல்யாண குணத்தோடு சொன்னாள்.

சில நாட்கள் கழித்து, சுதாகர் போன் பேசிய போது துளசி தான் எடுத்தாள்,

சுதாகர், 'யேய்.. துளசி என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. நீ அத்தை மாமா எல்லோரும் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்... நீ வரலேன்னா ஒன் கூட பேசவே மாட்டேன்....' இப்படியாக இன்னும் ஏதேதோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசிவிட்டு வைத்து விட்டான்.

சுதாகரின் மனைவி ராஜத்தை சரியாக மதிப்பதில்லை, 'எனக்கு டயர்டா இருக்கு.. நீங்க போய் காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க ஆன்ட்டி.. உங்க கையால தான் சாப்பிடணும்..' என்று மாமியாரை வேலை வாங்க ஆரம்பித்து விட்டாள். ராஜமும் முதலில் 'என் மருமகள் என் மேல ரொம்ப பிரியமா இருக்கா, என் கையால தான் எதுவும் சாப்பிடுவாள்' என்று வாய் நிறைய சொல்ல ஆரம்பித்தவர் போக போக தன்னை ஓரங்கட்ட தான் எல்லா வேலையும் என்று புரிந்தவுடன் வாயடைத்து போனார், 'ஐயோ தெரியாம சேத்துல கொண்டு போய் கால உட்டுட்டேனே...' என்று. கடைசியில் ராஜம் சொந்தங்கள் இருந்தும் பணக்கார அனாதை ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்.

கொஞ்ச நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த துரை கல்லூரிக்கு திரும்ப வந்த போது துளசியின் கல்யாணம் நின்று போன செய்தி எல்லாம் கேள்விப்பட்டு துளசியை பார்க்க வந்தான், துளசி கேட்டாள், 'ஆளே இளைச்சு போய், யாரோ மாதிரி ஆயிட்டீங்களே?, உடம்பு இப்ப எப்படி இருக்கு?'

துரை, 'இருக்குது.. அத விடுங்க.. உங்க கல்யாணம் சம்மந்தமா நான் கேள்விப்பட்டது பொய்யா இருக்கணும்னு விரும்பறேன்..' என்றான்.

துளசி அவன் முகத்தையே உற்று பார்த்து விட்டு சொன்னாள், 'அப்ப பொய் தான் சொல்லனும்'

இதற்கிடையில் துளசிக்கு வட நாட்டிலிருந்து ஒரு நல்ல இடத்தில் வரன் பேசி வந்தது. பேச்சுக்கள் எல்லாம் நல்ல விதமாக இருந்ததால் எல்லோருக்கும் பிடித்து போய் விட்டது. படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று முடிவானது. ஆனால், நடக்க இருக்கும் இந்த கல்யாணத்தில் துளசி பல கசப்பான அனுபவங்களை பெற போகிறாள் என்று அப்போது ஒருத்தர் கூட உணர்ந்தாரில்லை.

படிப்பு முடிந்தது..

கல்யாணம்..

ராஜம் கல்யாணத்திற்கு வந்திருந்தார், துளசி ராஜத்தின் காலை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டாள், 'கடவுளே! என் வீட்டுக்கு வர வேண்டியத இப்படி ஊர் பேர் தெரியாத எடத்துக்கு அனுப்பி விட நானே காரணமாயிட்டேனே..! காசு, பணம்ல என் கண்ண மறச்சுடுச்சு' என்று கண்ணீர் விட்டு புலம்பினார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்க துரைக்கு ராஜத்தை போலவே அழுது புலம்ப வேண்டும் போல் இருந்தது. ஏதோ ஒரு புதிய உணர்வு அவன் மனதில் மின்னலை போல் வெட்டி விட்டு போனது, இவன் அந்த உணர்வின் வெட்டில் துண்டு பட்டது போல் துடித்தான். அது காதலின் அவஸ்தை என்று அவன் உணர்ந்த போது துளசி மூர்த்தி என்பவருக்கு சொந்தமாகி இருந்தாள்.

தொடரும்

No comments: