Wednesday, September 22, 2010

டி.ராஜேந்தர் - சகலகலா வல்லவன்




சரியாக அந்த நபர் வந்து கொண்டிருந்த போது அந்த கைக்குழந்தை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த விளையாட்டு பொருளை தூக்கி எறிந்தது.

நல்ல காலம். அந்த நபரின் மேலே எல்லாம் படவில்லை. கால் கிட்டே வந்து விழுந்தது. அந்த நபர்  பொறுமையாக கீழே குனிந்தார், 


'சாரி.. சார்.. இல்லை சார்.. பரவாயில்லை சார்.. இருக்கட்டும் சார்..' 
- இப்படி பல குரல் கோரஸாக அவர் காதுகளுக்குள் விழுந்ததை பொருட்படுத்தாமல் குனிந்த அவர் அந்த பொருளை எடுத்து குழந்தை கையில் கொடுத்து விட்டு குழந்தையை பார்த்து புன்னகைத்து விட்டு குழந்தையாய் நகர்ந்தார்.

அந்த ஜெண்டில்மேன் வேறு யாருமல்ல.. தமிழ் திரைப்படங்களில் 80களில் கட்அவுட் கட்டி தொங்கிய டி.ராஜேந்தர் அவர்கள் தான்.

டி.ராஜேந்தர் தாய்லாந்த் நாட்டில் - பேங்கோக் நகரில் - பிளோட்டிங் மார்க்கெட்டில் (மிதக்கும் சந்தை) - எடுத்த படம்


இவரை பற்றி கிண்டல் செய்வதற்கு ஆயிரம் பேர் வரிந்து கட்டிக் கொண்டு ஆயிரத்தியோரு காரணங்களை எடுத்துக் கொண்டு வந்தாலும் பாராட்டுவதற்கு குறைந்தது ஆயிரத்து ரெண்டாவது இருக்கத்தான் செய்கிறது என்பது என் கருத்து. அதில் ஒன்றாக நான் மேலே சொன்ன ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு தலை ராகம் மூலம் தமிழ் சினிமாவில் ’வாசமில்லா மலரை’ கொண்டு ஆர்மோனியப் பெட்டியில் ‘அ’னா எழுதினார். 





இந்த படத்தில் 'கூடையில கருவாடு..' பாடலில் ஆடிய மூன்று அரவாணிகளில் நாகூரை சேர்ந்தவரும் ஒருவர்.




தயாரிப்பாளர்களால் இவரின் உழைப்புகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்து விடவே துவண்டு போய் விடாமல் தனது திரைப் பயணத்தை 'இரயில் பயணங்களில்' தொடர்ந்தார். 


பேங்கோக்கில் எனது மாமாவுடன் டி.ராஜேந்தர்

ஒரு தலை ராகத்தின் காதல் மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியிலும் புகைவண்டியிலும் வளர்ந்துக் கொண்டிருக்க கதையின் இரண்டாம் நாயகியான உஷா என்பவருடன் இவருக்கு காதல் இரு தலை ராகமாகவே இனிதாக இசைக்க தொடங்கியது.

அவரது உயிரில் கலந்தவரை ’உயிருள்ளவரை உஷா’வாக்கி கவுரவித்தார். செயின் செயபாலின் புயல் தமிழ்நாட்டையே சுழற்றி அடித்தது. 

சூலகருப்பனாய் ‘தங்கைக்கோர் கீதம்’ பாடிய அவரை தமிழ் சினிமா ‘பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாட’ விட்டது.

நளினிக்கும் அமலாவிற்கும் முகவரி கொடுத்தார். ’மைதிலி என்னை காதலி’ என்று திரையில் கவிதை எழுதினார். 

இந்தி ஜங்கை ’ஒரு தாயின் சபத’மாக்கினார். திமுகவின் கொள்கை பரப்பினார். பூங்கா நகர் பூக்கள் கொடுத்து வரவேற்றது. 


பேங்கோக்கில் (நடிகைகளே தொடாமலே நடித்த) டி.ராஜேந்தருடன் (நடிகைகளை விடாமலே நடிக்கும்) சிம்பு

உயிருள்ளவரை உஷாவில் ஒரு காட்சி, கடைசி வரை கத்தி கத்தியே பேசி நடித்திருந்தாலும், கடைசியில் ஒரு காட்சியில் கதைப்படி சரிதாவிடம் தொலைபேசியில் உரையாடும் காட்சியில் மிகவும் அமைதியாக பேசி நடித்திருப்பார்.

அதே அமைதியுடன் புதிய டிரெண்டிற்கு ஏற்றவாறு இசையமைக்கிறேன் பேர்வழி என்று எல்லாம் கொடுமை படுத்தாமல் அவருடைய பாணியிலேயே மிகவும் யதார்த்தமான ஒரு தலை ராகத்தையோ அல்லது மைதிலி என்னை காதலியையோ பார்க்க வேண்டும் என ஆவலாய் இருக்கிறது.

No comments: