”குஷ்பு" என்றதும் நடிகை குஷ்பு நடித்த படமோ என்று நினைக்க வேண்டாம். இது ஹேமா மாலினி அற்புதமாக நடித்த படம் அல்லது அவரை குல்சார் அவ்வாறு அற்புதமாக நடிக்க வைத்த படம். இந்த படம் என்னுடைய ஞாபகசக்தி எனக்கு ஒழுங்காக சேவை செய்தால் ஷோலே படம் வந்த காலகட்டத்தில் தான் இந்த படமும் வந்தது. ஆனால் ஷோலேவில் வரும் பசந்திக்கும் குஷ்புவில் வரும் குசுமுக்கும் தீச்சுடருக்கும் (ஷோலே) நறுமணத்துக்கும் (குஷ்பு) உள்ள வித்தியாசம்.
குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.
அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.
ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.
குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.
சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.
இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.
குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.
இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.
குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.
இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.
படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.
அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.
இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.
அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.
அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.
சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.
இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.
பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.
குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று
தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று
குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று
தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று
குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று
ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க இருக்கின்ற தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.
தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்
சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்
பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்
சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.
உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.
‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்
பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்
குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.
குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.
ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து
சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?
பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?
இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!
நடிப்பு
பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்
இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.
-----------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!
No comments:
Post a Comment