Thursday, November 10, 2011

அல்-கவ்ஸர் - குரான் ஷரீஃபின் சிறிய அத்தியாயம்

ஸூரத்து அல்-கவ்ஸர்

அல்-கவ்ஸர் - மிகுந்த நன்மைகள்

குரான் ஷரீஃபின் 108வது அத்தியாயம்

மக்காவில் அருளப்பட்டது



1. (நபியே!) நிச்சயமாக, நாம் உமக்கு கவ்ஸரை கொடுத்திருக்கின்றோம்

2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக

3. நிச்சயமாக, உம்முடைய பகைவன் - அவனே சந்ததியற்றவன்
----------------------------------------------------------------

குரான் ஷரீஃபின் சவால் என்று இதற்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன். இதனை இங்கே படிக்கலாம்:

http://nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_11.html

சுருக்கமாக:

குரான் ஷரீஃப் என்பது இறைவன் எனக்கு அருளியது - என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய போது, அதனை ஏற்காத குறைஷிகள் ‘இது மனிதனால் எழுதப்பட்டது’ என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.

அரபி பேசாதவர்களை ‘வாயே இல்லாதவர்கள்’ என்பது போல் ஏளனமாய் பேசியவர்களிடம், குரான் ஷரீஃப் சவாலை முன்வைத்தது - அந்த சவால் இது தான் - நீங்கள் எல்லாருமா சேர்ந்து குரான் ஷரீஃபை போல் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் - என்பது தான் அது.

மூன்றே வரிகளை கொண்ட மேலே கண்ட இந்த அத்தியாயத்தை மிஞ்சிய ஒன்றை படைக்க பெரும் கூட்டம் போராடியது. முடிவில் தோல்வியை ஒப்புக் கொண்டது - மா ஹாதா கலாமுல் பஷர் - இது மனிதனால் எழுதப்பட்டது அல்ல - என்று கஃபதுல்லாஹ்விலேயே எழுது கட்டி தொங்க விட்டார்கள் வார்த்தை விஞ்ஞானிகள்.

ஆம், மூன்று வரிதான் இந்த வசனம் - ஆனால் இதை போல் ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருப்பதையும், அதை சரியான இடத்தில் பொருத்தி இருப்பதையும், அர்த்த செறிவையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதையும் பார்த்தால் வேறு எந்த கிதாபிலேயும் இதை போல் ஒரு அத்தியாயமேனும் கிடையாது என்றே சொல்ல முடிகிறது.

இந்த அத்தியாயத்தின் ஒலி பெயர்ப்பு:

இன்னா அ அதய்னா கல் கவ்ஸர்


ஃப ஸல்லிலி ரப்பிக வன்ஹர்


இன்ன சானியக ஹுவல் அப்தர்


முதல் வரியில் வரும் ‘கவ்ஸர்’ என்ற வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு எந்த இடத்திலும் வரவில்லை.

’கவ்ஸர்’ என்றால் ஒரு மொழி பெயர்ப்பில் தடாகம் என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது சரியான அல்லது முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல.

அரபியில் ’காஃப், ஸெ, ரெ’ என்ற மூல வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை பிறந்திருக்கிறது.

இந்த மூன்று எழுத்துக்களை பயன்படுத்தி வரும்....

’கஸ்ரா’ என்ற அரபி வார்த்தைக்கு ’மிகுதியான’ என்று அர்த்தம்

‘கஸீர்” என்ற அரபி வார்த்தைக்கு ’இன்னும் மிகுதியான’ என்று அர்த்தம். ஆனாலும் இந்த வார்த்தைக்கு இன்னும் மிகுதியான எது? என்று கேட்டால் - நல்லது, கெட்டது இரண்டையும் குறிக்கும்.

ஆனால் ‘கவ்ஸர்’ என்ற வார்த்தை அளவிட முடியாத, கணிக்க முடியாத, முடிவுறாத, தொடர்ச்சியான, எல்லையில்லாத என்று அவ்வளவு வார்த்தைகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது.

அரபி வார்த்தைகள் பூராவையும் ஸ்கேன் பண்ணி பார்த்தாலும் ‘அளவிட முடியாத’ என்ற இந்த வார்த்தைக்கு ஈடாக ஒரு வார்த்தை கிடைக்காது.

இந்த வார்த்தை குரான் ஷரீஃபில் வேறு எந்த இடத்திலும் வராதது எதை குறிக்கிறது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது போல் வேறு யாருக்குமே வழங்கப்படவில்லை என்பதும் விளங்க முடிகிறது.

அதுவும் தவிர, ’கவ்ஸர்’ என்ற அளவிட முடியாத நன்மைகளை மட்டும் தான் குறிக்குமே தவிர இந்த வார்த்தைக்கு தீமை என்ற பொருள் எந்த விதத்திலும் பொருள்படாது.

இந்த வார்த்தை அமைந்திருக்கும் இடம் பிரம்மிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

அப்படி எங்கே அமைந்திருக்கிறது..?

முதல் வரியின் இறுதியில்..

அதனால் என்ன..?

இதன் பொருள்... ஏராளமான நன்மைகளை வழங்கியிருக்கிறான்... ஆனால் அது இன்னது மட்டும் தான் என்ற எல்லைகள் எல்லாம் கிடையாது...

சிலர் சொல்கிறார்கள், “பெருமானாருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை..’ என்று

சிலர் சொல்கிறார்கள், “பெருமானாருக்கு இன்ன இன்ன கட்டத்தில் மட்டும் அல்லது பதிவு செய்து வைக்கப்பட்டவை மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது..” என்று

- இந்த இரண்டு கூட்டத்தாரின் வாதத்தை உடைத்தெறிகிறது இந்த ‘கவ்ஸர்’ எனும் வார்த்தை பொருத்தப்பட்டிருக்கும் இடம்.

இதை எப்படி இறைவன் சொல்கிறான் என்பதை கவனியுங்கள்...

நிச்சயமாக, 

... இது இந்த அத்தியாயத்தின் முதல் வார்த்தை... அதாவது இந்த வார்த்தையில் ஒரு அழுத்தம்... ஒரு உண்மை...

நாம்


இங்கே ‘நாம்’ என்று இறைவன் தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்கிறான்..

இறைவன் ஒருவன் என்றால் ‘நான்’ என்று தானே வரவேண்டும்.. அதனால இறைவன் பலவன் தான் ஆதாரம் கிடைத்து விட்டது என்று கூப்பாடு போட்டு விடாதீர்கள் இலக்கியத்தை மருந்துக்கும் அல்ல மருசுக்கு கூட (நாகூர் பாஷையில் சுவை) தொட்டு பார்க்காதவர்களே..!

‘நாம்’ என்றால் ஒரு கம்பீரம்.. ஒரு மெஜஸ்டிக்...

அதாவது இப்படி அர்த்தம் கொள்ள வேண்டும்...

படைத்தவனாகிய, எதையும் செய்ய ஆற்றலுடையவனான நான் - இது தான் ‘நாம்’ என்று அர்த்தமாகிறது

வழங்கியிருக்கின்றோம்

இங்கே ’வழங்கியிருக்கின்றோம்’ என்ற வார்த்தை இறைவனிடமிருந்து பெருமானாருக்கு வழங்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தி விட்டது.

எதை வழங்கியிருக்கின்றோம்..?

கவ்ஸரை - மிகுதியான நனமைகளை

இந்த வார்த்தைக்கு பிறகு எந்த வார்த்தையும் குறிப்பிடாதது எதை குறிப்பிடுகிறது என்றால் ‘அனைத்தையும்’ என்பதை தான்.

சிலர் சொல்கிறார்கள் அல்லவா.. ‘இன்ன இன்ன கட்டத்துல மட்டும் இன்ன இன்னத மட்டும் தான் வழங்கியிருக்கின்றான்..’ என்று - அது தவறு - இந்த வசனம் - அதை யாரு இவர் சொல்வதற்கு..? - எல்லா அதிகாரமும் உடைய நான் உமக்கு எல்லையில்லாத நன்மைகளை வழங்கியிருக்கின்றேன். அவ்வளவு தான்.. இன்னது தான் என்றெல்லாம் வரையறுத்து கூற முடியாது.

ஆனால் மொழிபெயர்ப்பாளர்களில் உள்ள அறிஞர்கள் இதனை ‘சொர்க்கத்தில் அமைக்கப்பட்ட தடாகம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர்.

அதாவது அந்த நன்மை ‘தடாகம்’ என்பது தான் என்ற அர்த்தத்தில்.

ஆனால் ‘கவ்ஸர்’ என்றால் ‘தடாகம்’ என்ற அர்த்தம் வராது. அல்லது இது மட்டுமே என்று உறுதியாக கூறிவிட முடியாது.

அடுத்தது இரண்டாவது வரி..

எனவே

அதாவது இறைவனிடமிருந்து பெருமானாருக்கு குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது என்பது நிச்சயமான உண்மை தான் ஆனால் இந்த நன்மைகள் யாவற்றையும் எல்லாவற்றையும் சும்மாவெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது.

எந்த உலகத்துலயும் எதுவும் ஒண்ணும் செய்யாம எல்லாம் கிடைக்காது.

அதனால் தான் ‘அதனால..’ என்ற பொருள்படும் ‘எனவே..’ என்று வருகிறது..

அதாவது ‘சும்மா’ கிடைக்காதுல்ல...

என்ன செய்ய வேண்டும்..? என்பதை சஜ்ஜஸ்ட் செய்கிறது.

தொழுகை செய்யுங்கள்


வணங்குங்கள்.. நன்றி செலுத்துங்கள்...

யாரை?

உம்முடைய இறைவனை


முதலில் நான் உமக்கு மிகுந்த நன்மைகளை வழங்கியிருக்கின்றோம் என்ற போது ‘நாம் வழங்கியிருக்கின்றோம்’ என்று அதிகாரமாக பன்மையில் கூறி விட்டு ணங்குங்கள்என்று சொல்லும் போது பாருங்கள், ‘உம்முடைய இறைவனை..’ என்று ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறதை.

ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் From ’First Person Plural’ to ’Second Person Masculine Singular Possessive Pronoun’ க்கு என்று Grammatical Shift ஆகியிருப்பதை கவனியுங்கள்.


உமக்கு வழங்கியிருக்கின்றோம்... அது என்னால் முடியும்..


அதுக்காக.. 


நீர் என்ன செய்ய வேண்டும்?


நெருங்கி வரவேண்டும்... 


தொழுகை முஃமீன்களுக்கு மிஹ்ராஜ் தானே...?


மிஹ்ராஜ் என்பது இறை நெருக்கம் தானே...


அது மட்டுமல்ல.. தொழுகையோடு நிறுத்திக் கொள்ள முடியுமா?


அதோடு குர்பானியும் கொடுப்பீராக


தியாகமும் செய்ய வேண்டும்.. 


உதாரணமாக ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்..


இந்த வார்த்தையை இதற்கு முந்தைய அத்தியாயமான ஸூரத்துல் மாஊனையும் (அற்பப் பொருள்) ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.


http://nagoreismail786.blogspot.com/search/label/107%20%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D

எந்த அளவுக்கு உலோபியாக இருக்கக் கூடாது என்பதை அந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனமும் ஏழாவது வசனமும் தெளிவாக சொல்லி விடுகிறது.

மூன்றாவது வசனத்தில் - ஏழைகளுக்கு உணவளிப்பதை அவன் தூண்டுவதில்லை என்று அருமையாக வரும்... அதாவது இவனும் உணவளிக்க மாட்டான்... மத்தவங்க ஏழைகளுக்கு உணவு வழங்குவதை ஆதரிக்கவும் மாட்டான் -

ஏழாவது வசனத்தில் - அற்பமான பொருளை கூட மத்தவங்களுக்கு கொடுக்க விட மாட்டான் - ‘இதை ஏங்க அவருக்கு போய் கொடுக்குறீங்க..?’ என்று கெடுத்து வுடுவான்.

அதே மாதிரி இந்த வசனத்தில் வரும் தொழுகை செய்யுங்கள் என்பதையும் ‘மாஊன்’ அத்தியாயத்தோடு ஒப்பிட்டு பார்த்து எப்படியெல்லாம் தொழ கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மூன்றாவது வரி...

நிச்சயமாக

மறுபடியும் முதல் வரியில் வந்தது போல் எதையோ உறுதிபடுத்துகிறது.. நிச்சயமாக.. துளி கூட மாற்றமில்லாமல்...

உம்முடைய பகைவன்

மூன்று வரிகளிலும் ‘க’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது

அதாவது ‘உம்முடைய’ என்று பொருள்படுகிறது.

இது எதற்காக என்றால் இந்த வசனம் யாரிடம் பேசுகிறது என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்

அது யாரென்றால்..?

பெருமானார் (ஸல்) அவர்களிடம் தான் அவர்கள் தான் டார்கெட் ஆடியன்ஸ்.

பகைவனுக்கு நிச்சயமாக என்ன ஆகிறது என்று கேட்டால்...?

அவன்

இன்னும் தெளிவாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு யார் பகைவராக இருக்கிறார்களோ குறிப்பாக அவர்கள் தான்..

ஏன் அவர்களுக்கு.. என்ன..?

அவர்கள் தான்

சந்ததியற்றவர்கள்


இதற்கு பிறகு வார்த்தையே கிடையாது.. சந்ததியற்றவருக்கு எப்படி ஒரு தலைமுறை இருக்காதோ அதே போல..

தவிர, சந்ததியற்றவர்கள் என்றால் இறந்த பிறகு அவர்களை நினைத்து பார்த்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கூட ஆளிருக்காது. இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு வேறு காரணங்களும் இல்லாமல் இல்லை.

உதாரணமாக, பெருமானாரின் ஆண் குழந்தையின் மறைவிற்கு பிறகு எதிரிகளில் ஒருவர் ‘அப்தர்’ என்று இந்த வார்த்தையை தான் பயன்படுத்தி ‘வாரிசில்லாதவர்’ என்று கிண்டல் செய்தார்.
-------------------------
மேலே சொன்னவை மட்டுமல்லாது படிக்கும் போது வரும் ஓசை, ரைம்ஸ்

உதாரணமாக...

கவ்ஸர்

வன்ஹர்

அப்தர்

இப்படி இன்னும் சொல்லப்படாத செய்திகள் எவ்வளவோ இருக்கிறது இந்த அத்தியாயத்தில்.

ஒரு ஒப்பற்ற அற்புதமாய் குரான் ஷரீஃப் விளங்குகிறது.

No comments: