Saturday, January 29, 2011

வாழ்க்கையே என்னை தழுவிக் கொள் - நீ கொடுத்த துயரங்களை முழுமையாக நான் தழுவிக் கொண்டது போல் - குல்ஜார் சாப் பாலுமகேந்திராவுக்காக..

மூன்றாம் பிறை - 


‘மின்னலே நீ வந்ததேனடி.. மண்ணிலே மறைந்து போன மாயம் என்னடி..’ - என்று ஒரு பாடல் வருமே மே மாதம் எனும் படத்தில். அது போல் தான் சீனு வாழ்வில் ஒரு மின்னலாய் வந்து மறைகிறாள் விஜி.


நான் நினைக்கிறேன், கமலஹாசன் கமலஹாசனாக நடிக்காத ஒரே படம் இது தான் என்று. மற்ற எவ்வளவோ பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கலாம், ஆனாலும் அதில் ஏனோ ஆழ்வார் பேட்டை கமல் தெரிவார் ஆனால் இந்த மூன்றாம் பிறையில் மட்டும் தான் அவர் ஊட்டியை சேர்ந்த சீனுவாகவே வசித்திருக்கிறார். 


சீனு அப்பாவித்தனம் நிறைந்த வெட்கம் மிகுந்த ஒரு வாலிபன். வயசுக்கேத்த ஆசை ஆட்டிப்படைக்க அடிமையாகி நண்பனின் அழைப்பில் போக கூடாத இடம் விபச்சார விடுதி செல்கிறான். ஆனால் அங்கே அவன் பார்க்க கூடாத எதையும் பார்க்கவில்லை, பார்க்க வேண்டிய தேவதையை பார்க்கிறான். 


பாக்யலட்சிமி என்ற பெயர் தாங்கியான அவளோ நண்பர்களுடன் பிக்னிக் செல்கையில் கார் ஓட்டி வரும் போது நடந்த விபத்தில் மண்டையில் அடிப்பட்டு அத்தனையையும் மறக்கிறாள். வெறும் ஆறு வயதே நிரம்பிய உள்ளத்துடனும் 18 வயது நிரம்பிய உடலுடனும் இருக்கிறாள். 


மருத்துவமனையில் சரியான கவனிப்பாரற்று அங்கிருந்து வெளியேறி இப்போது யார் கையில் சிக்கியோ இந்த விபச்சார விடுதியில் விஜியாகிறாள்.


‘என் பேரு பாக்யலட்சுமி.. எல்லாரும் ஏன் விஜி என்கிறார்கள்’ என்று கேட்கிறாள். ஏற்கனவே விபச்சாரம் வரை வந்திருந்தாலும் இன்னமும் குழந்தை மனத்துடனே இருக்கும் இந்த பருவ வாலிபன் அதே போல் ஒரு குமரியின் வடிவில் இருக்கும் குழந்தையை கண்டதில் இயல்பாகவே ஒரு நேசக் கயிறு இருவரையும் கட்டி போடுகிறது.


அவளை அழைத்துக் கொண்டு ஊட்டி வரை வந்து விடுகிறான். இப்பொழுது இவர்கள் இருவருக்கு இடையில் உருவான அன்பை மூன்று காட்சிகளில் பிராதனமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


1. ஒரு முறை சீனு விஜியை கோபத்தில் திட்டி விடுகிறான். அதன் பின்பு வீடு வந்து பார்க்கையில் வீடு திறந்து கிடக்க விஜியை காணவில்லை. வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஊட்டி முழுவதுமே சல்லடையாக தேடுகிறான். 


தேடலின் மிகுதியில் கண்ணீர் சிந்துகிறான், கால் வலிக்க தேடியும் கை நிறைய தோல்விகளோடு வீடு திரும்புகையில் உள்ளே விஜி நிற்கிறாள்.. அந்த கனம்.. அவர்கள் உடலின் தேடலை மீறிய உள்ளத்து தேடல் அங்கே பிரதிபலிக்கின்றது..


2. செப்பில் செய்த சிலையை ஒரு முறை அனுபவித்து விட துடிக்கிறான் ஒருவன். விஜி ஆசையுடன் வளர்க்கும் சுப்ரமணி என்ற நாய் குட்டிக்கு பெல்ட் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி தான் ஆசைக்கு பலியாக்க நினைக்கிறேன்.


அவன் தகாது நடந்து கொள்வதை 6 வயது சிறுமியால் கூட பொறுக்கத் தான் முடியாது, அவனிடமிருந்து தப்பித்து வருகிறாள். விஜியை கிழிந்த ஆடையுடன் பார்க்கும் சீனு செய்தியை தெரிந்து கொண்டு அந்த ஒருவனை தேடி அவன் இடத்திற்கு செல்கிறான். அவனோடு சண்டை பிடிக்கிறான். கோபத்தில் அவனை புரட்டி எடுக்கிறான். 


3. தான் வேலை செய்யும் பள்ளிக்கூட வயதான முதல்வரின் இள மனைவி சீனுவை படுக்கையில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஒரு நாள் அவளுக்கான சந்தர்ப்பம் அமைகிறது. சீனுவை வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு அவன் வருகைக்காக நவநாகரீக உடை அணிந்து நடக்க இருக்கும் அந்த கட்டிலறை காட்சியை கனவில் கண்டபடி அவளது பொன்மேனி உருகித் தான் போய் கிடக்கிறது. (பொன்மேனி உருகுதே பாடலில் கூட கமலஹாசன் தெரிய மாட்டார், சீனு தான் தெரிவார்)


சீனு வருகிறான். நினைத்து பார்க்க வெட்கப்படாதவள் அதை சீனுவிடம் தன் ஆசையை வெளிப்படுத்தவும் வெட்கமோ தயக்கமோ அடையவில்லை. சீனு என்ன தான் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள விபச்சார விடுதி வரை சென்றிருந்தாலும் அவன் இந்த கனத்தில் தனது உண்மையான உள்ளத்து தேவையை உணர்ந்தவனாக ”என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது” என்ற பதிலாள் அவளது ஆசைக்கு அங்கேயே முற்றுப் புள்ளி வைக்கிறான்.

இதற்கிடையில் பாக்யலட்சிமியின் பெற்றோர்கள் தேடிக் கொண்டு ஊட்டிக்கு வர, விஜி குணமாகி அதாவது விஜியாக இருந்த நினைவுகள் எல்லாம் மறந்து போய் பாக்யலட்சிமியாகி தனது பெற்றோருடன் புகை வண்டியில் சென்னைக்கு திரும்புகையில் சீனு தான் காதலித்த விஜியை நினைவு படுத்த கர்ணம் போட்டு நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்க புகைவண்டி அவனது வாழ்க்கையில் வந்த விஜியை போலவே மறைந்து போகிறது.

மூன்றாம் பிறை இறுதி கட்டம்:



எல்லோரும் பார்த்து ரசித்த மூன்றாம் பிறை படத்தை இந்தியில் சத்மா (அதிர்ச்சி) என்று எடுத்தார் பாலுமகேந்திரா. ஒரு நாள் இரவு தூர்தர்ஷனில் நானும் எனது தம்பியும் இந்த படத்தை பார்த்தோம்.

பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மூன்றாம் பிறையில் எடுக்க நினைத்து விடுபட்டதை எல்லாம் சத்மாவில் எடுத்திருக்கின்றோம் என்று.

அப்படி விடுபட்டவை வந்து விடாதா என்று விழித்திருந்து பார்த்து ஏமாற்றமடைந்தோம். எங்களுக்கு எங்கள் மொழி என்பதால் தமிழ் மூன்றாம் பிறை தான் பிடித்திருந்தது என்பதில் எந்த வித சத்மாவும் இல்லை.

சத்மா கிளைமேக்ஸ் சீன்..



ஆனாலும் எங்களுக்கு இந்த இந்தி படத்தில் ‘ஏ ஜிந்தகி’ பாடல் மனதை என்னவோ பண்ணியது. இதோ அந்த பாடல்..




Ae zindegi gale laga le!Hum ne bhi, tere har ik gham ko,
Gale se lagaya hai - Hai na?



வாழ்க்கையே..! 
என்னை 
இறுக்கமாக
அணைத்துக் கொள்..!
(அதாவது ஆதரவாக ஆரத் தழுவிக் கொள் அல்லது என்னை முழுமையாக ஏற்றுக் கொள் என்ற பொருள்கள் அடங்கி கிடக்கிறது)


வாழ்க்கையே..!
நீ வாரி வாரி
வழங்கிய
ஒவ்வொரு 
துயரத்தையும்,
துக்கத்தையும்
நான் 
அணைத்துக் 
கொண்டு விட்டேன்..
இல்லையா..?
(அதாவது வாழ்வில் கிடைத்த துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்து சுகமாக நினைத்து ஏற்றுக் கொண்டு அதிலே பழகியும் விட்டேன்.. அதே போல் வாழ்க்கையே என்னையும் நீ ஏற்றுக் கொள் என்று வாழ்க்கையிடம் முறையிடுகிறான் இந்த அற்புத கவிஞன்.. கவிஞர்களை தவிர வேறு யார் தான் இப்படியெல்லாம் முறையிடுவார்கள்..)
-------------

Hum ne bahane se, chhup ke jamane se
Palkon ke, parde mein, ghar bhar liya.
Tera sahaara mil gaya hai zindegi



ஏ வாழ்க்கையே..!இறக்கையை விரித்து
உலகத்திலிருந்து மறைத்துஇமைகளின் பர்தாவினுள்
என் இல்லத்தினை 
கட்டி வைத்தேன்..


(அப்படி பொத்தி பொத்தி வைத்து எனக்காக ஒரு இல்லத்தினை எழுப்ப..)
உன்னுடைய உதவியும்
கிடைத்தது..
என் அருமையான 
வாழ்க்கையே..!


(வாழ்க்கையோடு என்ன ஒரு அருமையான உரையாடல்..! - 
குல்ஜார் சாப்.. ஹேட்ஸ் ஆஃப்..)

la la lala la la lala la la la...



Tera sahaara mil gaya hai zindegi!


உன்னுடைய உதவியும்
கிடைத்தது..
என் அருமையான 
வாழ்க்கையே..!
--------------
Chhota sa saaya tha, aakhon main aaya tha
Humne do boondon se maan bhar liya
Humko kinaara mil gaya hai zindegi


சிறிய நிழல்
விழியோரம் வந்தது
இரண்டுசொட்டு கண்ணீரில் 
மனம் நிறைந்தது


நான் 
என் கரையை 
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!
La la lala la la lala la la la..

Humko kinaara mil gaya hai zindegi!
நான் 
என் கரையை 
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!--------------------------------------------------------------------------------------------------------
இதே பாடல் தமிழில்..



---------------------------------------------------------------------------------------------------------
இசைஞானி ’ஏ ஜிந்தகி’ டியுனை முதன் முதலில் பயன்படுத்திய ’தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் ’என் வாழ்விலே’ பாடல்..


Wednesday, January 19, 2011

அர்த் (அர்த்தம்) + மறுபடியும்

ஷபனா ஆஜ்மி - ரேவதி

ராஜ் கிரண் (என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் அல்ல) - அர்விந்த்சாமி

கய்ஃபி ஆஜ்மி (ஷபனா ஆஜ்மியின் தந்தை) - வாலி (என்று தான் நினைக்கிறேன்)

ஜக்ஜித் சிங் + சித்ரா சிங் (கணவன் மனைவி) - இளையராஜா

மகேஷ் பட் - பாலுமகேந்திரா





Tum itanaa jo muskuraa rahe ho
Tum itanaa Jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே


kyaa Gam hai jisako chhupaa rahe ho
Kyaa Gam hai jisako chhupaa rahe ho



நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்?
நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்? 
(உன் புன்னகையால் அதனை மறைக்கின்றாய்)


Tum itanaa Jo muskuraa rahe ho

நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே

Aankhon Mein Nami, Hansi Labon Par
Aankhon Mein Nami, Hansi Labon Par



விழிகளின் ஓரம் கண்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை
விழிகளின் ஓரம் கன்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை


kyaa haal hai kyaa dikhaa rahe ho
Kyaa haal hai kyaa dikhaa rahe ho



என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?
என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?


Kyaa Gam hai jisako chhupaa rahe ho


என்ன துக்கத்தை தொண்டைக்குள் அடைத்து வைத்திருக்கின்றாய்
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்?)

Tum itanaa Jo muskuraa rahe ho

நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே


Ban Jayenge Zehar Peete Peete
Ban Jayenge Zehar Peete Peete
Yeh Ashq Jo Piye JA Rahe Ho
Yeh Ashq Jo Piye Ja Rahe Ho



கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
kyaa Gam hai jisako chhupaa rahe ho


அப்படி என்ன துயரத்தை புதைத்து வைத்துள்ளாய்?
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்)


tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai



காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது
காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது

Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho
Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho



நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
kyaa Gam hai jisako chhupaa rahe ho

அப்படி என்ன துக்கத்தை (உன் புன்னகையால்) மறைக்கின்றாய்

tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Rekhaon Ka Khel Hai Muqaddar
Rekhaon Ka Khel Hai Muqaddar



வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
Rekhaon Se Maat Kha Rahe Ho
Rekhaon Se Maat Kha Rahe Ho



நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே

kyaa Gam hai jisako chhupaa rahe ho


அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?
அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?


-----------------------------------------------------------------------------





-------------------------------------------------------------------------------


உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?

Tuesday, January 18, 2011

மறந்து போன பொறுப்பு

எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து இதை முடித்து விடு என்று சொன்னார்கள். நான் விளையாட்டு போக்காக அதனை மறந்து விட்டேன்.

எங்க ஹஜ்ரத் அவர்கள் என்னை ஏசினார்கள், ‘ஏம்ப்பா பீ பேண்டுட்டு ... கழுவ மறப்பியா..?’ என்று.

நான் மறதிக்காக வெட்கப்பட்டு தலை குனிந்தேன்.

பல சமயம் மறதி நல்லது தான். என் துக்கங்களிலிருந்து எல்லாம் என் மறதி தான் என்னை காப்பாற்றி இருக்கிறது.
                                                                                                                                                                 ஒரு திருடனை துரத்திக் கொண்டு போலீஸ்காரர் ஓடினாராம். திருடன் வேகமாக ஓடவும் போலீஸ்காரருக்கு கடுங்கோவம் வந்து ’நீயாச்சு நானாச்சு’ என்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு வழியாக திருடனை நெருங்கி விட்டாராம். நெருங்கியவர் இப்போது ஈக்வலாக ஓட ஆரம்பித்தார், இன்னும் சிரத்தை எடுத்து மூச்சை பிடித்து அவனையே மிஞ்சி ஓடியே போய் விட்டாராம்.

இப்பொழுது நானும் இந்த போலீஸ்காரரை போல் தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நான் செய்ய வேண்டிய பொறுப்புகளை மறந்து போட்டியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் இன்னொரு ஒட்டமும் எனக்கு நினைவிற்கு வருகிறது. இங்கே சிங்கையில் கப்பல் கட்டுமான தொழிற்சாலையில் பற்றவைப்பு வேலையில் ஈடுபடும் போது தீ/வெடிப்பு ஆபத்துகள் இருப்பதால் பக்கத்திலேயே ஒரு தீ கண்காணிப்பாளர் தீயணைப்பு சாதனத்துடன் அந்த வேலை முடிந்தும் சிறிது நேரம் அதே இடத்திலேயே இருந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறை சட்டம் இருக்கிறது.

அப்படி ஒரு தீ கண்காளிப்பருக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு இப்படி இப்படி தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது அதை இப்படி இப்படி அணைக்க வேண்டும் என்ற விபரங்கள் செய்முறை விளக்கங்களோடு சொல்லி காட்டி அவரை பற்றவைப்பு வேலை நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற அவருடைய வேலை என்னவென்றால் திடீரென்று வேலையிடத்தில் தீ ஏற்பட்டால் உடனே முறைப்படி தீயை உடனே அணைத்து விட வேண்டும் என்பது தான்.

ஆனாலும் சில நிபந்தனைகள் உண்டு.. எல்லா நேரத்திலும் தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று அணைக்கப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

அந்த நிபந்தனைகளில் ஒன்று தீ அப்போது தான் பிடித்திருக்க வேண்டும் அதாவது தீயானது அதன் ஆரம்ப நிலையில் இருக்க வேண்டும் கொழுந்து விட்டு எறிந்துக் கொண்டிருக்கும் போது அணைக்க முற்படக் கூடாது.

எதிர்பார்த்த மாதிரியே (எதிர்பார்த்ததனால் தானோ என்னவோ?) தீ பிடித்து விட்டது, எல்லோரும் "ஃபயர் ஃபயர்" என்று கத்த அந்த எடத்த வுட்டு மொத மொதல்ல ஓடிப் போனது யாருன்னு நினைக்கிறீங்க..? சாட்சாத் நம்ம பையனே தான். அதான் அந்த தீ கண்காணிப்பாளர்.. இப்படி இப்படி பயிற்சி குடுத்து தொலைஞ்சாங்கள்ள.. அவரே தான்..

எனக்கு பயமாக இருக்கிறது, இந்த மாதிரி பல பொறுப்புகளை தட்டிக் கழித்து வருகிறேன் நான்.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் லைலா மஜ்னூன் கதையை அழகாக உதாரணமாக சொல்வார்கள், மஜ்னூன் லைலாவை நினைத்துக் கொண்டே ஒட்டகத்தில் ஏறி உட்கார்ந்தானாம், லைலாவை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் கரைந்து கொண்டிருந்த அவன் நினைத்துக் கொண்டானாம், லைலாவின் வீட்டை நோக்கித் தான் அவனது ஒட்டகம் சென்று கொண்டிருக்கிறது என்று.

மஜ்னூன் திடீரென்று உணர்வுபெற்று பார்த்த போது ஒட்டகம் லைலாவின் வீட்டை வெகு தூரம் அகன்று வந்து விட்டதாம். உடனே மஜ்னூன் ஒட்டகத்தை விட்டு இறங்கி விட்டானாம். அப்போது அவன் விளங்கிக் கொண்டானாம் தனக்கு தான் லைலாவின் மீது காதல் உள்ளது தனது ஒட்டகத்திற்கு அல்ல என்று.

நானும் ஒட்டகத்தை விட்டு இறங்க வேண்டும்..

Monday, January 17, 2011

பேச்சு தீவிரவாதிகள்

இறைவனையும் இறுதி நாளையும் நம்புகிறவர்கள் ஒன்று நல்லதைப் பேசட்டும் - அல்லது வாயை மூடிக் கொண்டு மௌனமாயிருக்கட்டும் - பெருமானார் (ஸல்)

எடை என்னவோ சிறியது தான், ஆனால் அது செய்யும் பாவமோ பெரிது - ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்.

--------------------------------------
பேச்சினால் விளைந்த தீமைகள் எத்தனை எத்தனை. நல்லா இருந்த குடும்பம் ரெண்டா பிரிஞ்சிருக்கு. குழாயடி சண்டை ஆரம்பித்து மாமியார் மருமகள் கேஸ் அடுப்பு பற்றி எறிந்த கதைகள் எல்லாம் பேச்சினால் விளைந்த தீமைகள் தான்.

எனக்கு தெரிந்து ஒரு விவாதம் நடந்தது. மிக காரசாரமான விவாதமது. நீ தான் நான் தான் என்று விவாதம் செய்ததில் நீயா நானாவெல்லாம் தோற்று போய் இருந்தது.

சுமார் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அந்த விவாதம் இரண்டரை மணி நேரமாகியும் முடிவு தெரிந்த பாடில்லை. ஆரம்பித்த இடத்திலிருந்து ஒரு புள்ளி கூட நகராமல் இருந்த இடத்திலேயே இருண்டு கிடந்தது.

அப்புறமாக இன்னொரு ஒன்றரை மணி நேர விவாதத்திற்கு பிறகு ஒரு மனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. நாளை மறுபடியும் விவாதத்தை தொடரலாம் என்பதே அது.

கல்லாய் இருந்து சாதித்த அந்த பிரச்சினை வேறொன்றுமில்லை. ‘அலுவலக பாத்ரூம் சாவி யார் கையில் இருப்பது?’ என்பது தான் அது.

இது ஏதோ வேடிக்கைக்காக எழுதியது தான் என்றாலும் நமக்கான செய்தி குறைந்த பட்சம் எனக்கான செய்தி இருக்கவே செய்கிறது.

அது என்னவென்றால், பேச்சை குறை என்பது தான் அது. பேச்சுக்களில் பல மாதிரி பேச்சுக்கள் இருக்கிறதாம். வீண் பேச்சு, தேவைக்கு மிஞ்சிய பேச்சு, தப்பான பேச்சு, கண்டனப் பேச்சு, வழக்கு பேச்சு, அடுக்கு பேச்சு, நிந்தனைப் பேச்சு, கவிதை, ஹாஸ்யப் பேச்சு, கேலியும் கிண்டலும், பொய்ப் பேச்சு, பாராட்டு பேச்சு, இப்படி அந்த பட்டியல் நீளுகிறது.

மேலே கண்ட அத்தனையையும் நான் சொல்லவில்லை. மாபெரும் அறிஞர் இமாம் கஜ்ஜாலி அவர்களே சொல்லியிருக்கிறார்கள். எங்கள் ஹஜ்ரத் அவர்கள் இதனை ‘நாவின் விபரீதங்களா(ஆபாதுல்லியான்)’க்கி எங்கள் கைகளில் தவழ விட்டார்கள்.

இந்த கிதாபை படித்து விட்டு நான் கொஞ்ச நாள் பெரும்பாலான நேரங்களில் மௌனமாகவே இருக்க முயற்சி செய்தேன். என் முயற்சி தோல்வியில் முடிந்தது.

"Do not speak unless you can improve the silence" - என்பது ஆங்கில பழமொழி.


இமாம் அபூஹனிபா தாவுத் தாயி அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கினார்கள், “மனப் பயிற்சிக்காக நீர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, நாலு பேருக்கு மத்தியில் உட்கார்ந்து கொள்ளும். பேசப்படும் விஷயத்தை கூர்ந்து கவனியும். ஆனால் மறுத்தும் ஒரு வார்த்தை பேசாதீர்” என்று.


ஒரு முறை நான் எங்கள் நாகூர் தலைமாட்டு தெருவில் இருந்த ஹஜ்ரத் வீட்டிற்கு எப்போதும் போல் சென்றேன், அங்கே ஊரிலிருந்த ஒரு பணக்காரர் ஹஜ்ரத் முன்னால் உட்கார்ந்து இஸ்லாம் மார்க்கம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். 


ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை பற்றியும் பஞ்சா எப்படி வந்தது என்பது பற்றியும்  கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்கள் பேசுவதையே வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஹஜ்ரத் அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 


வாய்க்கு சிறிது நேரம் கூட ஓய்வு கொடுக்காமல் பேசி முடித்த அவர்கள் அப்பொழுது புறப்படுகிறேன் என்று விடை கொடுத்தார்.


அதன் பிறகு நானும் கிளம்பி வந்து விட்டேன். அடுத்த நாள் ஹஜ்ரத் வீட்டிற்கு போன போது ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள், ‘நேத்து நீ கேட்டதில் உண்மையில்லை’ என்று.


‘மக்களுடன் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..’ என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் பேசினார்கள்.


‘ஒரு மனிதனின் உள்ளம் மற்றொரு மனிதனின் உள்ளத்தோடு தொடர்புகொண்டு உரையாடுகிறது. இத்தகையவர்கள் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. இந்த ஆற்றல் இல்லாதவர்கள் வார்த்தைகளை கட்டிக் கொண்டு அழுது தான் தீரவேண்டும்’ - மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் அருளியது.


அப்போது நான் ஒரு முடிவெடுத்தேன், வேலைக்கு போனால் பேசுவதை குறைக்க வேண்டும் என்று, அப்புறமாக எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ஒரு மாதத்திற்கு குறைந்தது 100 மணி நேரம் பேச வேண்டுமெ என்பதே அந்த வேலை.

"Harms of Tongue" - இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.lightofihsan.com/index.php?option=com_content&view=article&id=105:harmstongue&catid=29:islam&Itemid=37

Friday, December 31, 2010

திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ்

கதை சொல்றது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை.. ஆனால் கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும். இதெல்லாம் கதை என்று கழட்டி விடாதீர்கள்.

நான் சின்னவனா இருந்தப்போ எனக்கு தூக்கம் வரவைக்க எங்க வூட்ல எங்க பாட்டியா மாமரக்கா கதை, சபூர் கட்டை கதை, லவை கதை என்று ஏராளமான கதை சொல்வார்கள். எல்லா கதையிலும் கடைசியாக சுபம் போட்டு முடிக்கும் போது, ‘நானும் போனேன், வாய்க்கு ஒரு வெத்தலை கூட தரல..’ என்ற பன்ச் டயலாக்கோடு தான் முடிப்பார்கள்.

கதை சொல்வதோடு மட்டுமல்லாமல் எங்களது வாயால் கதையை கேட்டு மழலை மொழியில் சொல்லக் கேட்டும் மகிழ்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது அந்த கதையை அதன் ஆன்மா கெடாமல் சிறுவர்கள் நாங்கள் சொல்லி காட்டுவோம். அதை விட கவனிக்க வேண்டிய விஷயம் அப்படி மனதில் பதியும் படி கதை சொல்வார்கள் என்பது தான்.

சினிமாவில் காட்சி வடிவத்தில் கதை சொல்வது என்பது ரொம்பவே சிக்கலான விஷயம் தான். இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் ஒன் லைன் என்ன என்று கேட்கிறார்கள் என்று படித்ததுண்டு. ஒன் லைனில் கதை சொல்லுங்கள் என்று எங்கள் பாட்டியாவிடம் சொன்னால், ஒன் லைன்லயும் சொல்ல முடியாது டெலிபோன் லைன்லயும் சொல்ல முடியாது என்று லொல்லு சபா செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுவாக சினிமாவாகப்பட்டது,

கதாநாயகனுக்கு உயிரை குடிக்கும் நோய் - வாழ்வே மாயம்
கதாநாயகிக்கு உயிரை குடிக்கும் நோய் - பூவே பூச்சூடவா
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இருவருக்குமே உயிரை குடிக்கும் நோய் - இதயத்தை திருடாதே

கதாநாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் - எங்கிருந்தோ வந்தாள்
கதாநாயகிக்கு மனப்பிறழ்வு நோய் - மூன்றாம் பிறை
கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் மனப்பிறழ்வு நோய் - மீண்டும் ஒரு காதல் கதை

இப்படியாக, சினிமாவை பொறுத்த வரை கதை என்று புதிதாக எதையும் சொல்லி விட முடியாது அதே காதல் அதே கத்திரிக்காய், அதே அருவா அதே பழிவாங்கல் தான்.

ஆனால் திரைக்கதை அமைப்பதில் தான் படத்தின் வெற்றியும் சுவாரஸ்யமும் அடங்கி இருக்கிறது என்பது திரைப்படங்களை பார்த்து ரசித்தவன் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் கொண்ட எனது அனுபவ செய்தி.

அந்த வகையில் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை ஆசிரியர் யார் என்றால் அது நம்மவர் பாக்யராஜ் அவர்கள் தான் என்று ஒட்டு மொத்த இந்தியாவே ஒத்துக் கொள்ளும்.

இவரது திரைக்கதையில் இடைவேளை வரை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உறவு (அது காதலாகவோ அல்லது காதல் கைகூடி திருமணம் வரை சென்றதாகவோ இருக்கலாம்) நகைச்சுவையுடன் வளர்ந்து ஒரு சில காரணத்தால் பிரிவு வரை பயணிக்கும். இடைவேளை முடிந்து கதை வளரும் போது பிரிந்தவர் மீண்டும் இணைவதற்கு மிகவும் ஹெவியான ஒரு காரணத்தை புகுத்தி முடிவை சுபமாக்குவார் (ஓரிரு படங்களில் சுகம் கலந்த சோகமாக்குவார்)

இதை திரைக்கதை டிரீட்மெண்ட் என்று சொல்லலாம். அந்த வகையில் திரு.பாக்யராஜ் அவர்களை நான் திரைக்கதை வைத்தியர் என்கிறேன். இதற்கு ஒரே ஒரு படத்தை பற்றி மட்டும் உதாரணமாக சொல்கிறேன். (பிறிதொரு சமயத்தில் மேலும் இவரது படங்கள்)

படம்: மௌன கீதங்கள்

இந்த படத்தின் கதையை இவர் சொல்லும் அழகே தனி. பேருந்தில் பிரிந்து வாழும் கணவனும் மனைவியும் பயணம் செய்கிறார்கள். பயணத்தினூடே அவர்களது முதல் சந்திப்பு முதல் காதல் மலர்ந்து திருமணத்தில் கலந்து ஒரு காரணத்தால் பிரிவு வரை சென்றதை அசை போடுகிறார்கள்.

இடைவேளை வந்து விடுகிறது..

கணவன் இன்னொரு பெண்ணோடு சந்தர்ப்ப வசத்தில் வசமாக மாட்டிக் கொண்டு சந்தோஷம் கொண்டாடியதை தொடர்ந்து கடும் கோவத்தில் பிரிந்து இருக்கும் மனைவி திரும்ப என்ன காரணம் இருந்தால் அவனோடு சேர்ந்து வாழுவாள்..?

பல முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பார் திரைக்கதை ஆசிரியர்.(பின்னே முந்தானை முடிச்சு போட்டவருக்கு முடிச்சை அவிழ்க்க மட்டும் தெரியாதா என்ன..?)

அதில் முக்கியமாக..

 ஒரு வயதானவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து அதிர்ச்சியாகி மூர்ச்சையாகி விடுவார். அதை தொடர்ந்து அவர் மனைவி இறந்து விட்ட செய்தி அறிந்து அவருடன் வேலை பார்க்கும் கதாநாயகி உள்பட எல்லோரும் மயானத்தில் நின்றிருக்க மனைவியின் சிதை எறிக்கப்படும் இடத்தில் தானும் உடன் கட்டை ஏறுவது போல் நெருப்பில் விழ போக எல்லோரும் அவரை தடுக்கிறார்கள்.

கொஞ்ச நாள் கழித்து அவரே ஒரு பத்திரிக்கையை கொடுப்பார், தனக்கு கல்யாணம் என்று. கதாநாயகி கேட்பார் அவரது தோழியிடம், ‘என்னா இது.. அன்னைக்கு தான் தனக்கு வாழ்க்கையே போச்சுன்னு உடன்கட்டை ஏற போனாரு.. இப்ப இன்னொரு கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்கிறாரே..?’ என்று புருவத்தை மேலுயர்த்தி கேட்க..

தோழி சொல்கிறார், ‘பொண்டாட்டி செத்த மூணாவது நாளே இன்னொரு கல்யாணத்த பண்ணிக்கிற இவர பத்தி யோசிக்காம மூணு வருஷமாகியும் கல்யாணமே பண்ணிக்காம ஒன்னையே நெனைச்சிக்கிட்டு இருக்காறே.. அவர பத்தி கொஞ்சம் சீரியஸா நெனைச்சு பாரு..’ என்று (வசனம் எக்ஸேக்டா உள்ளது அல்ல..)

அதை தொடர்ந்து முத்தாய்ப்பாக ஒரு கட்டத்தில் கதாநாயகியை அவரின் நடத்தையில் அவர் வேலை செய்யும் அலுவலகமே சந்தேகம் கொள்கிறது.
அவரது தோழி கூட, ‘நான் ஒன்னை நம்புறேன்.. ஒன் வயச நம்ப நான் தயாரா இல்லை..’ என்பது போல் வார்த்தையை கொட்டி விடுகிறார். ஆனால் அதே அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் பிரிந்த கணவரின் அறையை திறக்க அவரிடம் பணியாள் ஒருவர் கதாநாயகி சுகுணாவை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொண்டிருக்க..

பிரிந்த கணவன் கொதித்தெழுகிறான், ‘ஷட் அப்..’ என்று.. அதோடு விடவில்லை, ‘சுகுணா நெருப்பு மாதிரி.. நெருப்பை கரையான் அறிச்சிடுச்சுன்னு சொன்னா நீ நம்புவியா..?’ என்று கேட்கிறார்.

வேறு என்ன வேணும் - அந்த சுகுணாவுக்கு..?

பிரிந்தவர் மீண்டும் சேருகிறார்கள்.. இனி பேச ஏதுமில்லை..

Thursday, December 30, 2010

ஃபஹ்மிதா அஃப்ஷீன்

1. 






இவர் - (கோபத்துடன்) நாய்.. நாய்..  


இவரின் தந்தை - ஏய், இதெல்லாம் சொல்ல கூடாது, இப்டிலாம் ஏசுறதுக்கு யார்ட்ட கத்துகிட்டே 


இவர் - இது டிவின்னு யார் கிட்டே கத்துகிட்டேனோ அஹ கிட்ட.. இது மேச இது சோபான்னு யார் கிட்டே கத்துகிட்டேனோ அஹ கிட்டே.. 


(கற்றுக் கொண்டவை: இனி இவருக்கு முன்னால் ஏசவே கூடாது)      


2.  






தமிழ் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது 


இவரின் தந்தை - அ 


இவர் - அ 


இவரின் தந்தை - ஆ 


இவர் - ஆ 


இவரின் தந்தை - இ 


இவர் - இ 


இவரின் தந்தை - ஈ 


இவர் - ஈ 


இவரின் தந்தை - உ 


இவர் - உ 


இவரின் தந்தை - ஊ 


இவர் - ஊ 


இவரின் தந்தை - எ 


இவர் - எ 


இவரின் தந்தை - ஏ 


இவர் - ஏ 


இவரின் தந்தை - ஐ 


இவர் - ஐ 


இவரின் தந்தை - ஒ 


இவர் சொல்ல மறுக்கிறார். 




இவரின் தந்தை - ஏம்மா, சொல்ல மாட்டேங்குறே, சொல்லு ’ஒ’ 


இவர் - போங்க வாப்பா, ஐ க்கு அப்புறம் அ ய்ய்ய்ய்ய்ய் ல்ல வரணும் நீங்க தப்பா சொல்லி கொடுங்கறீங்களே 


(கற்றுக் கொண்டவை: கற்றது ஐ அளவு கல்லாதது அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அளவு) 


3. 






ஷேக் ஹசன் சாபுவின் (தற்போதைய தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி) சாபுவாப்சி ஊரிலிருந்து வீட்டிற்கு வருகிறார்கள்.


வீடு கழுவி விட்டு ஈரமாக இருந்தது..


இவர்: சாபு, பாத்து வாங்க, மோப் பண்ணி வுட்டு கீழே ஒரே ஈரமா இருக்கு, எனக்கே வழுக்குது.. நானே வுழுந்துட பார்த்தேன் (என்னமோ எஹ பெரிய மனுஷி மாதிரி)


4.




இரண்டு மருந்து பாட்டில்கள் இருந்தது..


ஒன்றின் மேலிருந்த லேபில் பிரிந்து கொண்டு வந்ததால்.. இவரின் தாயார் முழுவதுமாக தாளை கிழித்து விட்டிருந்தார்.


இவர் (இரண்டு பாட்டில்களையும் பார்த்து விட்டு): ஒண்ணு மொட்ட மேலா இக்கிது.. ஒண்ணு டிரஸ்லாம் போட்டுகிட்டு இக்கிது.


5.








இவருக்கு 26 12 2010 அன்று பிறந்த நாள்


ஆகையினால்,


பிறந்த நாள் வாழ்த்துகள் 

Sunday, December 12, 2010

புர்தாஹ் ஷரீஃப்


எங்கள் வீட்டில் உள்ள சுவர்கள் யாவும் கவிதை போர்வையால்போர்த்தப் பட்டிருக்கும்.

யாரை பற்றிய கவிதையாக இருக்கும்..?

நிச்சயமாக, பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்பாடும் கவிதைகள் தான்.

பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி புகழப்படாத முஸ்லீம் நாவுகளே இருக்காது. அப்படி பாடப்பட்டவைகளிலேயே மிகவும் உயர்வானது என்று இன்றளவும் உலகம் முழுக்க பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகழ்ப்பாடல் தான் எங்கள் இல்லத்து சுவரை அலங்கரித்த கஸீதத்துல் புர்தாஹ் எனும் கவிதை போர்வை.

கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வார்கள் ’பெருமானாரை புகழ்வது என்பது நாவை புனித நீராட்டுவதாகும்’ என்று. மேலும், அவர்கள், ’இறைவனாலேயே புகழப்பட்ட ஒருவரை மனிதன் என்ன புகழ்ந்துவிட முடியும்?’ என்ற கேள்வியையும் முன் வைத்திருப்பார்கள்.

வாணியம்பாடி கவிஞரை தொடர்ந்து வானம்பாடி கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதினார்கள்..

எழுதப் படிக்கத்
தெரியாதவர் தான்...
ஆனால்
இவர் தான்
பூமியின் புத்தகம்!

என்று..

இந்த பூமியின் புத்தகத்தை பற்றிய புகழ்வரிகள் தான் இந்த கஸீதத்துல் புர்தாஹ் என்பது.

இது எங்களது ஹஜ்ரத் வீட்டில் அவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஞாயிறு இரவில் பயபக்தியோடு அமர்ந்து மெதுவான குரலில் (மைக் வைத்து சத்தம் போட்டு கத்து கத்துன்னு கத்திகிட்டு அல்ல) ஓதுவார்கள்.

இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமருவதற்கு எங்கள் ஹஜ்ரத்திடம் அனுமதி கேட்க வேண்டும். அவ்வளவு சீக்கிரம் அந்த அனுமதி கிடைத்து விடாது.

‘நாளைக்கு வா.. சொல்கிறேன்” என்று நிறைய நாள் ஓடி விடும். இது நமக்கு சரிபட்டு வராது என்று நாளோடு சேர்ந்துக் கொண்டு ஓடியவர்களும் உண்டு.

எனக்கு நான் கேட்ட உடனேயே உட்கார அனுமதி கிடைத்த அதிசயமும் பாக்கியமும் நிகழ்ந்தது.

ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் வாரா வாரம் புர்தா ஷரீஃப் அல்லாமல் மார்க்க விளக்க பாடமும் நடைபெறும். பல பயிற்சிகளுக்கான செய்முறை விளக்கமும் கொடுப்பார்கள். அந்த கூட்டத்திலே அமரும் அறிய வாய்ப்பினையும் நான் பெற்றுள்ளேன்.

ஒரு முறை ஹஜ்ரத் அவர்கள், “யாராவது நான் எழுதிய இஹ்யா உலுமித்தீனை  சமுதாய வாழ்வுங்கற புஸ்தகத்துல உயிரின் பிறப்பை பற்றி எழுதியிருக்கிறேன்.. படிச்சிருந்தா அத பத்தி தெரிஞ்சவங்க.. கைய தூக்குங்க..’ என்றார்கள்.

ஒருத்தர் கையை தவிர வேறு எந்த கையும் எழவில்லை..

அந்த கைக்குறியவரிடம்..

‘எங்கே அதுல என்ன எழுதியிருக்கேன்.. நீ சொல்லு..’ என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள்.

அவரும் அவருக்கு தெரிந்ததை சொன்னார் ‘... இது தான் எழுதியிருந்தீங்க ஹஜ்ரத்..’ என்று..

உடனே சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா அவரை பார்த்து ‘இவர் நல்லா வருவார்ன்னு’ சொன்னாஹா..

எனக்கு இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமர அனுமதி கிடைத்ததே நான் நல்லா வந்துட்டேன்னு தான் நான் புரிந்து கொண்டேன். சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா சொன்னது என்னை பார்த்து தான்.

உலகின் மிக சிறந்த மனிதரான புனிதரான உயிரினும் மேலான பெருமானாரை (ஸல்) பற்றிய புகழ்ப்பாவில் மிக சிறந்ததாக கருதப்படும் இந்த புர்தாஹ் ஷரீஃபை எழுதியவ்ர்கள் இமாம் ஷர்பத்தீன் முஹம்மது பூஸீரி (ரஹ்) அவர்கள்.

இவர்கள் பெருமானாரை நேரில் சந்தித்ததே கிடையாது. இவர்களின் காலம் ஹிஜ்ரி 608 முதல் 696 (அல்லது 697) வரை. 87 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்து போனார்கள். இவர்கள் பிறந்தது எகிப்தில் உள்ள அல் பூசிர் என்ற ஊரில்.

                                              
                                       இமாம் பூஸீரி (றஹ்) அவர்களின் மஜாரே - ஷரீஃப்

இவர்கள் இள வயதினராக இருக்கும் போதே திருக்குரானை மனனம் செய்து ஹாஃபிஸ் ஆனார்கள். பின்பு பிரபல அரபி மதரஸாவான ஜாமிஉல் அஜ்ஹரில் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சியும் பெற்றார்கள். அரபி இலக்கன இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இவர்கள் அரசாங்க உத்தியோகத்திலும் பதவி வகித்துள்ளார்கள்.

இமாமவர்களுக்கு ஒரு முறை ‘பாரிச வாய்வு’ நோய் ஏற்பட்டு உடலின் பகுதிகள் விளங்காமல் படுத்த படுக்கையில் இருந்தார்கள். அப்போது பெருமானார் (ஸல்) அவர்களை கனவில் கண்டு இந்த உலக பிரசித்தி பெற்ற புர்தாஹ் (போர்வை) எனும் கவிதையை பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே பாடினார்கள்.

இந்த கவிதையின் சிறப்பு இதன் 10 பகுதிகளில் உள்ள 160 பாடல்களும் ‘மீம்’ என்ற அரபு எழுத்தில் தான் முடிவடையும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்பெயரில் வரும் துவக்க எழுத்தும் இதே ‘மீம்’ என்ற எழுத்து தான்.

இந்த கவிதைக்கு புர்தாஹ் என்ற பெயர் வரக் காரணம் பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் இமாமவர்களுக்கு அவர்களது போர்வையை போர்த்தினார்கள்.

(இதே போல் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை காணாமலே அவர்கள் மீது உயிரையே வைத்திருந்த உவைஸ் கர்னீ (றலி) அவர்களுக்கு தக்க அடையாளத்தை சொல்லி போர்வையை பரி சாக கொடுத்து அனுப்பியுள்ளார்கள். )

இதன் காரணமாகவே இதற்கு கஸீதத்துல் புர்தாஹ் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த கனவிற்கு பிறகு இமாமவர்கள் பரிபூரண குணம் அடைந்து விட்டார்கள்.

ஒருவருக்கும் இந்த கஸீதாவை பற்றி தெரியாத நிலையில் அவ்வூர் வாசி ஒருவர் அடுத்த நாளே இமாமிடம் வந்து ‘உங்கள் கஸீதாவை காட்டுங்கள்..’ என்று கேட்க

‘எந்த கஸீதா வேண்டும்’ என்று இமாமவர்கள் பதிலுக்கு கேட்க

உடனே அந்த ஊர்வாசி, ‘அமின் ததக்குறி ஜீரானின் பி தீஸலமி என்று ஆரம்பிக்கும் கஸீதாவை தான் நான் கேட்கிறேன்..’ என்று சொல்லவும்..

(அமின் த தக்குறி ஜீரானின் பி தீஸலமி
மஜஜ்த தம் அன் ஜரா மின்ம் முக்லதின் பிதமி

தீ ஸலமெனும் (தீ ஸலமென்பது மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையில் உள்ள ஓரிடம்) ஸ்தலத்தின் அயலகத்தாரை (பெருமானார் (ஸல்) அவர்களையும் அவர்களின் அருமை தோழர்களான ஷஹாபா பெருமக்களையும் குறிக்கும்) நினைத்ததினாலோ
நேந்திரத்திலிருந்து ஓடும் கண்னீரை உதிரத்தால் கலந்தாய் (இரத்தக் கண்ணீர்) வடிக்கின்றாய்?

இமாமவர்களின் மனசாட்சி இமாமவர்களை பார்த்து கேட்பது போல் அமைந்திருக்கும் இந்த கவிதையே புர்தாஹ் ஷரீஃபில் இடம் பெற்றிருக்கும் முதல் புகழ்ப்பாவாகும்)

இமாமவர்கள் ‘இதை நான் வெளியிடாதிருக்கும் போது உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று வினவ..

‘நீங்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பாடி காண்பித்த போது நானும் கூட இருந்தேன்..’ என்று கூறினார்கள்.

அதை தொடர்ந்து இந்த கஸீதாவை பற்றி கேள்விப்பட்ட எகிப்து நாட்டு மன்னரான அத்தாஹிர் என்பவரின் மந்திரி பஹாவுத்தீன் அவர்கள் இமாமிடமிருந்து ஒரு பிரதியை பெற்று கொண்டார்கள்.

இதன் பின்பே உலகம் முழுதும் பாரசீகம், உர்து, பஞ்சாபி, பெர்பர், துருக்கிஷ், ஜெர்மன், பிரென்ச், மற்றும் நம் தமிழோடு சேர்த்து எண்ணற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சிரத்தையோடு பெருமானாரை (ஸல்) அவர்களை பற்றி என்பதால் புனிதமாகவும் கருதி ஓதி வரப்படுகிறது.

பொதுவாகவே நபிமார்கள் என்றாலே அவர்கள் ஏதாவது அற்புதங்கள் (முஃஜிஸாத்) நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அது அந்தந்த காலத்துக்கு ஏற்றவாறு அப்போது தோன்றிய நபிமார்களால் அவ்வாறான அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டும் வந்துள்ளது.

மூஸா நபியவர்கள் செய்த தடியை வைத்து கடலை பிளந்த அற்புதமும் ஈஸா நபியவர்கள் மரித்தவர்களையே உயிர்பித்த அற்புதமும் நிகழ்ந்தேறியிருக்கின்றன.

என்றாலும்,

இதே புர்தாஹ் ஷரீபில் ஒரு பாடல் வருகிறது...

46 ஆவது பாடல்

லவ் னாஸபத் கத்ரஹு ஆயாதுஹு இழமன்
அஹ்யாஸ்முஹூ ஹீன யுத் ஆதா ரிஸார்ரிமமி

அவர்களது (பெருமானார் (ஸல்)) கீர்த்திக்கு அவரது அற்புதங்கள்  மகத்துவத்தில் நிகராக இருப்பின்
அவர்களது திருநாமம் உச்சரிக்கப்படும் சமயத்து (மடிந்து) மக்கிப்போன எலும்பையும் உயிர்ப்பித்துவிடும்.
(ஆகவே, அவர்களது சொந்த கீர்த்திக்கு அற்புதங்கள் நிகரானவையல்ல)

என்று இமாமவர்கள் பாடுகிறார்கள்.


புர்தாஹ் ஷரீஃப் பற்றிய இணைப்பு:


http://www.deenislam.co.uk/burdah/burdah.htm 

Saturday, December 11, 2010

முரண்பாடுகள்

உலக நாட்டாமையின் முன்னாள் அதிபர் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டத்தை துவக்கிய போது இப்படி சொன்னார், “நீங்கள் எங்களுடன் இருங்கள், இல்லையென்றால் தீவிரவாதிகளாக இருங்கள்” என்று.

இவ்வகையான பேச்சை False Dichotomy என்பார்கள். 


கிட்டதட்ட இந்த நிலை தான் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பல முஸ்லீம்களுக்கு வந்திருக்கிறது.


குரைஷிகள் எனும் கோத்திரம் மக்கமா நகரிலே பெரிய குடும்ப கிளைகளை கொண்ட இனம். 


இதில் பல குடும்ப கிளைகளில் பனு அப்து முனாஃப் இப்னு குசை எனும் குலமும் ஒன்று.


இந்த குலத்தில்  உதித்த பனு ஹாஷிம் குடும்பத்தாரில் வந்தவர்கள் தான் பெருமானார் (ஸல்), அலி (ரலி), ஹம்ஜா (ரலி) அவர்கள் யாவரும்..


இதே குலத்தில் பனு ஷம்ஸ் குடும்பத்தில் வந்த பனு உமைய்யா குடும்பத்தாரில் (ஷம்ஸ் அவர்களின் வளர்ப்பு மகன் தான் உமைய்யா அவர்கள் என்றும் ரத்த சொந்தம் அல்ல என்பதையும் ஷியாக்கள் சுட்டி காட்டியிருக்கிரார்கள்) உஸ்மான் இப்னு அஃபான் (ரலி), அபு சுஃப்யான் அவர்கள்,  முஆவியா (ரலி) அவர்கள், யஜித் யாவரும்..


பனு ஹாஷிம் குடும்பத்தாருக்கும் பனு உமைய்யா குடும்பத்தாருக்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே ஒத்து போகாத நிலை இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.


அந்த பகை பெருமானார் (ஸல்) காலத்தில் நடந்த பத்ரு யுத்தத்தில் ஹாஷிம் குடும்பத்தாரில் வந்த ஹம்ஜா (ரலி) அவர்கள் உமைய்யா குடும்பத்தாரில் வந்த உத்பா இப்னு ரபியா அவர்களை கொன்றதிலிருந்து உஹது போரில் பதிலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக உத்பாவின் மகளான ஹிந்த் என்பவர்கள் ஹம்ஜா (ரலி) அவர்களின் கொல்ல வைத்து குடலை உருவியெடுத்தையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருந்தது.


பெருமானார் (ஸல்) அவர்களின் மக்கா வெற்றிக்கு பிறகு உமையாக்களின் குடும்பத்தாரில் வந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் கரம் பிடித்து தூய இஸ்லாத்தில் இணைத்து கொண்டாட்ர்கள். 


பகை இத்தோடு ஒழிந்தது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை..


மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், 


ஒரு பாம்பு ஒன்று நல்ல குளிர்காலத்தில் தன் உடலை வெளியே காட்ட முடியாமல் நடுங்கி ஒடுங்கி சுருங்கி படுத்து கொண்டதாம். ஆஹா பாம்பு இனி தலை தூக்காது என்று அதோடு நெருங்கி அதை அலட்சியமாக விட்டு விட்டால் கோடை காலம் தொடங்கியதும் அந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை தூக்க ஆரம்பிக்குமாம். 


மௌலானா அவர்கள் நம் உள்ளத்திலே தோன்றுகின்ற துர் எண்ணங்கள் நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் போது மறைந்திருப்பதை பார்த்து ஏமாந்து விடக் கூடாது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் கோடை காலம் பிறக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலே அவ்வாறு கூறியிருப்பார்கள்.


அப்படி தான் இரு குலத்தாருக்கும் ஏற்பட்ட பகையானது மூன்றாவது கலிபாவும் உமையாக்களின் குலத்தில் வந்தவர்களுமான ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீது வரை அடங்கி இருந்தது. அதன் பிறகு அந்த பகை தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது. 


அப்போது முஸ்லீம்களுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட அரசியல் பிளவு தான் ‘ஒன்று நீங்கள் எங்களோடு இருங்கள், அல்லது எங்கள் அரசியல் எதிரிகளாக இருங்கள்” 


அதாவது (நாகூர் பாஷையில்) ஒன்று சுன்னி மரைக்கானாக இருங்கள் அல்லது சியா மரைக்கானாக இருங்கள் என்ற false dichotomy எனும் கருத்தியலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.


ரெஸ்டாரண்ட்டில் ‘டீயா, காபியா’ என்று கேட்பது போல் 


‘நீங்க சுன்னியா சியாவா’ என்றெல்லாம் கேட்கப்பட்டது (இப்போது சுன்னியிலே இருந்தால் ‘சுன்னத்து ஜமாத்தா வஹ்ஹாபியா?’ என்ற கேள்வி)


நான் சொல்வது தான் முற்றிலும் சரி, நீ சொல்வது முற்றிலும் தவறு என்று இருபாலரும் இருபக்கமாக நின்று கொண்டு கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வது போல் ஒற்றுமை எனும் கயிற்றை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து இழுத்து பிச்சு போட்டு விட்டார்கள். 


ஜபருல்லாஹ் நானாவோ ஆபிதீன் நானாவோ சொன்னது போல் இனி புதிதாக தான் ஒரு கயிறு செய்ய வேண்டும்.

Saturday, November 27, 2010

எனது வேண்டுகோளை செவிமடுங்கள் - ’லெகின்’ பட குல்ஜார் சாபின் பாடல்



ஒரு மகளின் 
வேண்டுகோள் 
தனது 
அன்பான தந்தைக்கு..!


ஆ........ஆ..........ஆ.......... 
என்ற ஆலாபனையோடு 
துவங்கும்
அந்த வேண்டுகோள்
சுனியோ ஜி ஆரஜ் ஓ பாபுலா ஹமார்
என்று பயணிக்கிறது


துணையாக...
கொஞ்சம்
சுகம்
கொஞ்சம்
சோகம்
கூடவே
நானும்..
விரும்பினால் 
நீங்களும்..!


குல்ஜார் சாபின்
மையில் பிறந்த 
குழந்தை..!


லதாவின் 
குரலோடு கலந்த
இனிமை..!







(காட்சியில் நடிப்பு: டிம்பிள் கபாடியா, அலோக் நாத்)


Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Saavan aayo, ghar le jaiyho
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்

Saavan aayo, saavan aayo ghar le jaiho baabula hamaar
மழைகாலம்
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்

Sunio ji, sunio ji, sunio
செவிமடுங்கள்,
செவிமடுங்கள்,
செவிமடுங்கள்

Bheeje bheeje angana ki yaad jo aave

ஈரம் - ஈரம்
நிறைந்த
நம் வீட்டின் முகப்பு
என் நினைவலைகளுக்கு
வரும் போது

Rukhi rukhi ankhiyon mein reti udaave 

காய்ந்து போன -
காய்ந்து போன
என் கண்களில்
மணல் பறக்கிறது

Sooni sooni, sooni sooni

வெறுமை,
வெறுமை,
வெறுமை,
வெறுமை

Sooni sooni kori ankhiyaan bhejiyo phuhaar

(மரித்து போன) வெறுமையான
வெறுமையான
என் கண்களுக்கு
நீருற்றை
அனுப்பி வையுங்கள்

Sunio ji araj mhaari o

என் வேண்டுகோளை
செவிமடுங்கள்,

Sunio

செவிமடுங்கள்

Bisra diyo hai kaahe bides bhijaaike 

என்னை
ஒரு அறிமுகமில்லாத
புதிய இடத்திற்கு
அனுப்பி வைத்து
என்னை
ஏன்
மறந்து போனீர்கள்?


Hamka bulaai re baabul doliyaan livaaike 

ஒரு வண்டியை
அனுப்பி
என்னை
ஏன்
நீங்கள் திரும்ப
அழைத்துக்
கொள்ளக் கூடாது..?
என் தந்தையே!


Bhejo ji, bhejo ji

தயைகூர்ந்து அனுப்புங்கள்,
தயைகூர்ந்து அனுப்புங்கள்


Bhejo ji doli uthaaye chaaro kahaar

வண்டியோடு
சேர்த்து
ஒரு நான்கு பேரையும்
அனுப்புங்கள்
(என் ஜனாசாவை தூக்க)


Sunio ji araj mhaari o baabula hamaar

எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!

Saavan aayo, ghar le jaiyho baabula hamaar

மழைகாலம்
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
என் அன்பான தந்தையே!


Sunio ji, sunio ji, sunio ji


தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்