Friday, July 10, 2009

இந்தி நடிகர் சஞ்சீவ் குமார்

இந்தி திரையுலகின் மிக நேர்த்தியான நடிகர்களின் வரிசையில் திலீப் குமாருக்கு பிறகு சஞ்சீவ் குமாருக்கும் ஒரு இடம் உண்டு. திலீப் குமாருடன் இவர் சேர்ந்து படமும் நடித்துள்ளார் (சங்கர்ஷ், விதாதா போன்ற படங்கள்)

சோலே (தீச்சுடர் அல்லது தீசுவாலை) எனும் படத்தில் வில்லன் கப்பர் சிங்கிடம் (அம்ஜத் கான்) அமிதாப் மாட்டிக் கொள்ள ஒலிந்து கொண்டிருக்கும் தர்மேந்திரா சஞ்சீவ் குமாரின் காலடியில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து தூக்கி போடும் படி கண்களால் சொல்லுவார். சஞ்சீவ் குமார் துப்பாக்கியையும் தர்மேந்திராவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கப்பார் பக்கம் திரும்பி விடுவார். அவர் துப்பாக்கியை எடுத்து கொடுக்காததன் காரணம் ஒரு பிளாஷ் பேக்குக்கு பிறகு கதைப்படி தெரிய வரும்.

சொல்ல வந்த செய்தி இது தான், வசனங்கள் பேசி நடிப்பை காட்ட முடியும், பார்வையில் நடிப்பு திறனை வெளிப்படுத்த முடியுமா? மனுசன், வசனம் பேசும் போதை விட மௌனமாக இருக்கும் போது தான் அருமையாக நடிப்பார்.

1960ல் ஹம் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகம் கண்ட இவர் நடிகராக அடையாளம் காணப்பட்டது கிலோனா (பொம்மை) என்ற படத்தில் தான். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு பிலிம் பேர் அவார்டுக்கு சஞ்சீவ் குமாரின் பெயரும் களத்தில் இருந்தது.

இதன் பிறகு இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைத்துமே மிகவும் சவால் மிக்கது தான். அதிலும் முக்கியமாக குல்ஜார் சாப் (ஜெய் ஹோ புகழ்) இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும்.

இவர்களின் கூட்டணியில் நம்கீன், ஆன்ந்தி, பரிச்சே, அங்கூர், கோஷிஷ், மாசும் போன்ற படங்கள் குறிப்பிடதக்கவை. மிஸ்டர் பாரத் எனும் படம் இந்தி படமான திரிசுல் என்ற படத்தின் தழுவல், இந்த இந்தி படத்தில் சத்தியராஜ் வேடத்தில் சஞ்சீவ் குமார் அசத்தியிருப்பார். மாசும் (சீசன் - காலங்கள்) எனும் படம் சிவாஜி நடிக்க வசந்தத்தில் ஒரு நாள் என்று வெளிவந்தது என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

பரிச்சே எனும் படத்தில் அமிதாப்பின் மனைவி ஜெயபாதுரியின் தந்தையாக நடித்திருப்பார், சோலே படத்தில் அதே ஜெயபாதுரியின் மாமனாராக நடித்திருப்பார், அனாமிகா படத்தில் ஜெயபாதுரியின் காதலராகவும் நடித்திருப்பார். கோஷிஷ் படத்தில் ஜெயபாதுரியின் கணவராகவே நடித்துமிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயபாதுரியை தங்கையாக பாவிப்பதாக அறிவித்து அதிலிருந்து ஜெயபாதுரியுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் ஹேமா மாலினியிடம் காதல் வசப்பட்டு ஒரு முறை வெளிப்படுத்தவும் செய்தார். இருவரும் சேர்ந்து சீதா அவுர் கீதா எனும் படத்தில் நடித்திருப்பார்கள் (தமிழில் வாணிராணி - ஏர்ஹோஸ்டஸ் வானிசிரி நடித்தது)  ஆனால் ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவை திருமணம் செய்ய வேண்டி சஞ்சீவ் குமாரின் காதலை ஹேமாமாலினி ஏற்க மறுத்து விட்டார்.

47வது வயதிலேயே இதய நோயால் இறந்து விட்ட இவர், பெரும்பாலும் ஏற்று நடித்தது 50 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை. அதாவது 50 வயது வரை வாழ்ந்த அவர் 50 வயதுக்கு மேல் திரையில் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.

மிகவும் சிம்பிளான மனிதர், ஒட்டு போட்ட துணியை எல்லாம் உடுத்தியிருக்கிறார்.

பரிச்சேயில் இவர் நடிப்பை பார்த்து கண்கலங்கியதுண்டு. கோஷிஷ் படத்தில் காது கேளாத வாய் பேச முடியாதவராகவும் நடித்திருப்பார்.இந்த படத்திற்காக 1973 ம் ஆண்டு தேசிய விருதை தட்டி சென்றார். இது இவருக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது. முதலாவதாக 1971ல் தஸ்தக் படத்திற்காக கிடைத்தது. சிவாஜி 9 வேடங்கள் ஏற்று நடித்த நவராத்திரி இந்தி பதிப்பில் நடித்தவரும் இவர் தான். மேலும் 14 முறை பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இவர் பிறந்த வருடம் ஜூலை 9 - 1938
இவர் இறந்த வருடம் நவம்பர் 6 - 1985

இன்று ஜூலை 9 -
பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சீவ் குமார்

உங்களின் தீவிர விசிறி
நாகூர் இஸ்மாயில்

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்