Thursday, July 16, 2009

அடையாளம்

நான் என்னுடைய வகுப்பில் காலையில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, ஒரு தமிழர் என்னிடம் வந்து “சார், சி.எஸ்.ஓ.சி, (பாடத்தின் பெயர்), கம்மிங், சாரி, லேட்..” இப்படியாக ஆங்கிலத்தை உ டை த் து பேசினார்.

நான் கேட்டேன், “இது தமிழ் வகுப்பு, நீங்க தமிழ்லேயே பேசலாமே..” என்றேன்.

கொஞ்சம் யோசித்து விட்டு,  ”சாரி சார்” என்றார்.

சிங்கப்பூருக்கு வந்து எத்தனை நாளாச்சு என்றேன், “6 வருஷமாச்சு” என்றார்

“அதனால தான் இப்படி..” என்று கூறி விட்டு அவரை கவனித்தேன். தலை முடியில் சிங்கப்பூர் ஸ்டைல் தெரிந்தது. 

”பாஸ்போர் இருக்கிறதா” என்று கேட்டேன்

எடுத்து காட்டினார்

அதில் இருந்த அவரது போட்டோவை காட்டி “இவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்

சிரித்து விட்டார்

---------------------

நாகூர் கவிஞர் சலீம் நானா நல்ல பாடல்கள் எல்லாம் எழுதுவார்கள், அந்த காலத்தில் அவர்கள் எழுதிய ஒரு பாடல் இப்படி ஆரம்பிக்கும், “ஆளே மாறிட்டியே! ஆளே மாறிட்டியே!!...” என்று -

அதாவது லாட்டரில பரிசு விழுந்த ஒருவர் உடை நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி விட அவரின் பழைய கூட்டாளி ஒருவர் பாடுவது போல் அந்த பாடல் அமைந்திருக்கும்.

இந்த பாடல் கவிஞர் சலீம் நானாவிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆபிதீன் நானா அவர்கள் தான் சொல்லணும்.

-----------------------

எங்கள் ஊரில் ஹஜ்ஜுக்கு போய் விட்டு திரும்புபவர்கள் ஹொத்துவாக்கு (வெள்ளி கிழமை தொழுகை) பள்ளிவாசலுக்கு வரும் போது அரபி உடுப்பை போட்டு கொண்டு தான் வருவார்கள்.

ஹஜ்ரத் வஹ்ஹாப் சாபு அவர்கள் இப்படி என்னிடம் சொன்னார்கள், “நீ சைனாக்கு போனா பாம்ப தின்னுட்டு வர கூடாது..” என்று

இன்னொரு தருணத்தில் ஹஜ்ரத் அவர்கள் இப்படியும் சொன்னார்கள், “பேசும் போது வழக்கத்தில் இல்லாத இங்கிலீஷ் வார்த்தைல பேசினீனா ஒனக்கு சரியா பேச தெரியலைன்னு அர்த்தம்..” என்று

---------------

நான் சொல்ல வருவது இதை தான், சிங்கப்பூருக்கு வந்துட்டோங்கறதுக்காக கழிவறைக்கு போய் தாளில் துடைத்து விட்டு வர முடியாது, எப்போதும் போல கழுவிட்டு தான் வரணும்.

சில நடைமுறைகளை நாம மாத்திக்க கூடாது, அது நம்முடைய அடையாளம்.

-----------------------

அப்துல்லாஹ் என்று ஒருவர் சிங்கப்பூருக்கு வந்து வேலைக்கு சேர்ந்தார். எல்லோரும் உடற்பயிற்சி செய்வதை பார்த்து விட்டு அவரும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை 6 பேக் 7 பேக் என்பார்களே அந்த அளவிற்கு உடலை கட்டுகோப்பாக ஆக்கி விட்டாராம்.

வந்து கண்ணாடியை பார்த்திருக்கிறார். உடல் இவ்வளவு அழகாக இருந்தும் தலை முடி ஸ்டைலாக இல்லையே என்று முடி திருத்தகம் சென்று தன்னுடைய முடியை “ஸ்போர்ட்டி லுக்” என்று சொல்லுவார்களே அந்த ஸ்டைலில் தனக்கு முடி வெட்டி விடும் படி கேட்டுக் கொண்டாராம்.

அவ்வாறே வெட்டப்பட்டதும், கண்ணாடியை பார்த்திருக்கிறார், அடுத்த நூற்றாண்டின் இளைஞன் போல் தான் இருப்பதாக உணர்ந்த அவர் வெளியே வந்தாராம், அந்த வழியாக வேகமாக போன கார் ஒன்று அவரை மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.

குத்துயிரும் கொலையிருமான அந்த நிலையில “கடவுளே! என்னய ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினாய்?,பல காலம் நான் கஷ்டப்பட்டு உடலை வளர்த்து இவ்வளவு அழகா முடி வெட்டி நல்லா இருக்கும் போது இப்படி ஒரு துயரத்தை விதிச்சிட்டாயே   ” என்று கதறினாராம்

அந்த நேரத்தில் ஒரு தெய்வீக குரல் அப்துல்லாஹ்விடம் இப்படி பேசியதாம், “அப்துல்லாஹ்! இது நீயாப்பா!! எனக்கு அடையாளமே தெரியலையே!!!” என்று

எந்த அடையாளத்தை நாம் தொலைத்தாலும்
இந்த அடையாளத்தை மட்டுமாவது
தொலைக்காமல் இருக்க வேண்டும்
அது நாம் மனிதர்கள்
என்ற அடையாளத்தை தான்..

2 comments:

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் இஸ்மாயில் @ துரை,

நல்ல நேரத்தில் இந்த இடுகையை உங்களது பதிவில் இட்டீர்கள். உண்மையில் அடையாளம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதனால் நான் பல பிரச்சினைகளை சந்தித்தேன். தமிழ் வலைப்பதிவு உலகில் என்னை நிறைய நபர்கள் நீங்கள் தான் என நினைத்தார்கள். அதனால் நான் ismail_ngr ஆக இருந்த நான் gnuismail ஆக மாறிவிட்டேன். போதாக்குறைக்கு நாங்கள் உருவாக்கிய கணையாழி-ஒன் அடையாள அட்டையை எனது ப்ரோபைலிலும் போட்டு விட்டேன்.

என்னதான் நான் இணையத்திற்கு பழைய ஆளாக இருந்தாலும் வலைப்பதிவிற்கு புதியவன் தான். நீங்கள் வலைப்பதிவில் என்னை விட சீனியர் தான். ஆபிதீன் மச்சான் தான் இந்த blog களை பற்றி எனக்கு சொன்னார்கள். அதற்கு முன்னால் geocities,tripod மற்றும் netfirms தான் உபயோகப்படுத்தி வந்தேன்.


ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப்பிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் சொன்ன தகவல். மனிதனின் பெருவிரல் ரேகைக்கு பாதிப்பு ஏற்பட்டால் மறுபடியும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது தான். அதனால் தான் இறைவன் குர்-ஆனில் கூறுவான்.
எனக்கு வசன எண் நினைவில் இல்லை. ஆனால் அதன் அர்த்தம் இது தான்.


'நாம் உங்களை மறுபடியும் அந்த விரல் நுனிகூட மாற்றமில்லாமல் திரும்பவும் படைப்போம்'


மனிதர்களுக்கு பெருவிரல் ரேகை மாற்றமுடியாத அடையாளம். அது போல மாடுகளுக்கு என்ன தெரியுமா? அதன் மூக்கு பகுதியில் உள்ள ரேகைகள் தான். மாடுகளை காப்பீடு செய்யும் போது அதை மை தடவி ஒரு காகிதத்தில் பதியவைப்பதை நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

அப்படியே என் வீட்டிற்கும் ஒரு நடை வந்து உங்களின் கருத்துகளை தரவும்.

with care & love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com

nagoreismail said...

நன்றி இஸ்மாயில் பாய்,

நலமாக இருக்கிறீர்களா?

உங்களின் அடையாளம் உங்களின் தலைமுடியும் அந்த சிரிப்பும் தானே..!