Monday, November 23, 2009

பொட்டி சோறு - 1 (சிறு கதை - இரண்டு பகுதிகளாக வரும்)

பெரிய ஹொத்துவா பள்ளில மஹ்ரிபு தொழுவைய முடிச்சிட்டு வெளியே வந்து மனாராக்கு கீழே சாஞ்சு ஒக்காருரது தான் சலீமுக்கு வழக்கம். பருவே இல்லாத பளிங்கு முகம் அவனுடையது. தலையில அஜ்மீர் தொப்பி. வெள்ளை கைலி, ஊதா கலர்ல பிளேய்ன் சட்டை சகிதமாக மருவண்டி உடுற ராவண்ணக்கி ஒக்காந்திருக்கிற மாப்பிள்ளை மாதிரி உக்காந்திருந்தான்

அவன நாகூர்காரங்க பாத்தா 'வெளியூரா?..' ன்னு கேப்பாஹா..ஏன்னா வெளி தெருவு பழக்கம் அதிகமில்ல.. ஒரே ஒரு கூட்டாளி நவாபுன்னு பேரு.

வெளியூர் காரங்க பாத்தா நாகூரான்னு கேப்பாஹா..  மடிப்பு கலையாம கைலி உடுத்துர அழகும் ஒரு காரணம்.

தாழிச்ச சோறின் வாசம் காத்துல கலந்து வந்து பசியை கெளப்பி விட்டது சலீமுக்கு. தர்ஹால எப்போதும் யாரு பேர்லயாவது பாத்திஹா ஓதி சோறு கொடுத்துகிட்டே தான் இருப்பாஹா. ஒண்ணு தர்ஹாலயே சோறு ஆக்கி போடுவாஹா. இல்ல தர்ஹாக்கு வர்ர பக்தர்கள் யாராவது சோறு ஆக்கி போடுவாஹால்வோ. வருஷம் பூரா இப்படி தான், சோத்து மழை தான் பெய்யும்.

சோறை பொட்டில போட்டு பவுந்துகிட்டு இருந்தாஹா. அதுக்கு பொட்டி சோறுன்னு அல்லது தர்ஹா சோறுன்னு பேரு.

சின்ன புள்ளைல்வோலேந்து பெரிய மனுஷர் வரைக்கும் பெரும் கூட்டம். நான் நீன்னு  கையை நீட்டிகிட்டு முண்டியடிச்சிக்கிட்டு நிக்க கூகூன்னு சத்தத்துக்கு நடுவே அந்த கூட்டத்துலேயே சின்னதா இருந்த அந்த சிறுமியை கிட்டேயே நெருங்க வுடாம தடுத்து கொண்டிருந்தது அந்த கூட்டம்.

அந்த பொட்டி சோறு பசியும் பக்தியும் சம்மந்தப்பட்டது, அதை தர்ஹா  சோறு என்பார்கள்.  அதே சோறை அதே பண்டாரி வச்சு அதே பதத்துக்கு எடுத்து பார்த்தாலும் தர்ஹா சோத்து வாசத்துல பாதி வாசம் கூட வராது. எல்லா ஊருக்கும் மண் வாசனை என்றால், நாகூர்ல இந்த சோத்து வாசனை தான்.

'ஏம்மா.. நீ தான் மொதோவே வாங்கிட்டீல்ல..' - ஒரு சிறுமியை தடுத்து நிறுத்தினார் தர்ஹாவில் பணிபுரியும் ஒருவர்.

'இல்ல.. நான் வாங்கவே இல்ல..' என்றதும் 'சரி.. சரி.. இந்த கூட்டத்துல எங்கேத்து கெடைக்கிறது..' - அவர் வாய் முகூர்த்தம் சொன்ன மாதிரியே மொதோலேந்து டிரை பண்ணிக்கிட்டிருந்த அந்த சிறுமிக்கு பொட்டி சோறு கிடைக்கவேயில்லை.

தூரத்திலிருந்து சலீம் இதை கவனித்து கொண்டே இருந்தான். அந்த சிறுமியின் முகம் டிசம்பர் மாத மேகமாய் மாறியிருந்தது. சலீம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடந்து வந்தாள். அவன் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு சைடுல இருந்த திண்ணைல இருந்த ஒரு பொம்பள பக்கத்துல போய் உக்காந்தாள். கண்ணெல்லாம் கலங்கி இந்தோ இப்ப வந்துடுவேன் என்பது போல தயாரா ஒட்டுல நிண்டு கொண்டிருந்தது.

படுத்திருந்த அந்த பெண் எழுந்தார், 'ஏன்ம்மா..? என்னாச்சு..?..' ன்னு கேட்டார்
அந்த பெண் அந்த சிறுமிட தாயார இருக்கணும்னு தோன்றியது சலீமுக்கு.

அந்த சிறுமி பதில் ஏதும் சொல்லாமல் போகவே, 'பசிக்குதா..?... சாப்பிடுறியா?..' என்றவர், ஒரு பொட்டணத்தை பிரித்து அதிலிருந்த கொத்து புரோட்டாவை காட்டி, 'இந்தா இத சாப்பிடு..?' என்றார்

'வேண்டாம்..' தலையை ஆட்டி மறுத்தாள் அந்த சிறுமி

'ஏன்ம்மா..?' - பொட்டண கையோடு அந்த தாயார் கேட்டார்

'எனக்கு அந்த சோறு தான் வேண்டும்..' என்று கொஞ்சம் தள்ளி ஒக்காந்து பொட்டி சோத்துல எல்லா கோவத்தையும் காட்டிக் கொண்டிருந்த அந்த கூட்டத்தை கைகாட்ட.. அந்த அம்மா அந்த கூட்டத்தை திரும்பி பார்த்ததை தொடர்ந்து சலீமும் அந்த கூட்டத்தை ஒரு முறை பார்த்தான், அந்த சோத்தை பற்றி பசியும் பக்தியும் கலந்தது என்றேனல்லவா, இந்த கூட்டத்துக்கு பசி மட்டுமே காரணம்  என்பது  போல்  தோன்றியது  சலீமுக்கு - சலீம் திரும்ப அந்த சிறுமியிடமே தன் பார்வையை திருப்பினான். அவர்கள் பேசிக் கொள்வது நன்றாக கேட்டது அவனுக்கு.

அந்த அம்மாவுக்கு புரிந்து விட்டது, 'அல்லாஹ்வே, சோறு முடிஞ்சிருக்கும், நாளைக்கு சொல்லி வச்சு வாங்கி தர்ரேன்.. இப்ப இத சாப்பிடு..' என்றார்

பிடிவாதம் எதிர்வாதம் செய்தது, 'முடியாது, எனக்கு இப்ப தான் வேணும்..'

அந்த அம்மா எவ்வளவோ சொல்லி பார்க்கிறார், அந்த சிறுமி கேட்டா தானே, ஆனால் இத்தனைக்கும் அந்த அம்மா கொஞ்சம் கூட கோவமே படலை. பொறுமையாவே சொல்லிகிட்டு இந்தாங்க.

சலீம் எழுந்தான், மெதுவாக நகர்ந்து அந்த சிறுமியிடத்தில் வந்தான், இருவரும் விவாதத்தை நிறுத்தி 'இது யாரு?' என்று அதிசயமாக பார்த்தார்கள்,

அந்த அம்மா, 'என்னா தம்பி?' என்றார், தன் புடவை தலைப்பை எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னமும் சரி செய்து கொண்டு,

சலீம் மெதுவா பேச ஆரம்பித்தான், 'நான் அப்போலேந்து பாத்துகிட்டு தான் இருந்தேன், இந்த புள்ள கூட்டத்துல நிண்டது, எல்லாம்.. நான் வேண்ணா வாங்கிட்டு வந்து தர்ரேன்..' என்றான்

'அதெல்லாம் வேணாம் தம்பி, இவ இப்படி தான்..' என்றார் அந்த அம்மா

'நானும் வர்ரேன்.. எனக்கு வாங்கி தாங்க..' என்றாள் அந்த சிறுமி

சலீம் அந்த அம்மாவிடம், 'ஒண்ணும் பெரச்சனை இல்லம்மா.. நான் போய் வாங்கிட்டு வர்ரேன்..' என்றவன் அந்த சிறுமியிடம், 'நீ வர வாணா.. இங்கேயே இரு..' என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

சலீம் நேராக தனக்கு தெரிந்த தாவுது பாயிடம் போய் - தாவுது பாய் தான் பொட்டி சோறு பவுந்துகிட்டு இருந்தவர் - 'எங்க வூட்டுக்கு சோறு போயிடுச்சா..? - இருந்தா அத கொடுங்க.. நா கொடுத்துடறேன்.' என்றான்.

தர்ஹாலேந்து செல வூடுவோல்வோக்கு இந்த மாதிரி பொட்டி சோறு போவது உண்டு, தாவுது சொன்னார், 'உங்க வூட்டுக்கு கொடுத்து வுட்டாச்சு.. இப்ப தான் நாஜிம் கொண்டு போனான்..' என்றார்.

'வேற எதுவும் பொட்டி இருக்கா..? ஒரே ஒரு பொட்டி தேவைப்படுது..' என்றான்

அவர் பழைய தரோகா அறை உள்ளே போய் பார்த்துட்டு வந்து 'கொஞ்சம் முன்னாடி சொல்ல கூடாது தம்பி, எல்லாம் முடிஞ்சு போச்சு, என்னட தான் இக்கிது.. அத வேண்ட தரவா?..'

'இல்லல்ல வேணா.. பரவாயில்ல..' என்று எச்சில் விழுங்கி 'அல்லாஹ்வே..' என்று திரும்பியவன் காலை இடிச்சிகிட்டு பக்கத்துல நிண்டு கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து திடுக்கிட்டான், பயந்து போய், 'அல்லா வச்சு காப்பாத்த..' என்று தனக்கு தானே சொல்லி நெஞ்சுல ஊதிக் கொண்டு, 'ஏன்ம்மா.. இப்படியா வந்து காலுகிட்ட பின்னுறது..?'

"பொட்டி சோறு இல்லையா..?'- என்று கேட்டாள்

'ஏன் இல்லை..? - இருக்கு இருக்கு, சரி நான் என்னா செய்றேன்.. இப்ப எங்க வூட்டுக்கு போய் பொட்டி சோற எடுத்துகிட்டு வர்ரேன்.. நீ இங்கேயே ம்மா கிட்டே இரு..' என்றான்

'நானும் வர்ரேன்..' அடம் பிடித்தாள்

'வாணா.. வாணா... ம்மா ஏசுவாஹா..' என்று நெசமாவே பயந்தான் சலீம்

'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல.. நான் சொல்லிட்டேன்.' உறுதிபட சொன்னாள் அந்த சிறுமி

செத்த நேரம் அப்டியே யோசிச்சிட்டு 'சரி வா..' ன்னு பெரிய ஹொத்துவா பள்ளில பூந்தான், அங்கே  மக்ரிப்  தொழுகையை  ஜமாத்தோடு  குறிப்பிட்ட நேரத்துக்கு தொழுவதை தவற விட்டவர்கள் இன்னொரு ஜமாத் நடத்திக் கொண்டிருக்க ரெண்டு பேர் ஒலு செஞ்சுட்டு ஓடிப் போய் கரெக்டா ருகுவில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

செருப்பை எடுத்துகிட்டு தெரு வாசலுக்கு போற இன்னொரு கதவு வழியா படில இறங்கி சின்ன சாப்பிங் காம்ப்ளாகஸை கடந்து அலங்கார வாசலுக்கு வெளியே வந்து செருப்பை கீழே போட்டான், செருப்பை கால்ல மாட்டிகிட்டு தர்ஹா பக்கம் திரும்பி சலாம் சொல்லிட்டு நடந்தான். அந்த சிறுமி பின் தொடர்ந்தாள்.

இசை முரசு தனது சிங்கக் குரலில், 'அருள் மழை.. ' பொழிய ஒரு கடையில் ரஹ்மானிடம் (இறைவனிடம்) வேண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு கடையில் 'சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே..' என்று சிந்திக்க தூண்டிக் கொண்டுமிருந்தார்.

அந்த கடலை கடையில் கடலை போட்டுக் கொண்டிருந்த - வாயில் தான் - நவாப் சலீமை பார்த்து விட்டு ஊருக்கே கேப்பது போல் கத்தினான், 'சலீமு.. நில்லுங்கணி..'ன்னு - நவாபும் சலீம் ஒன்றாக படித்தவர்கள். சலீமின் ஒரே நண்பன் இந்த நவாப் தான். நவாபுக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் கண்டபடி கண்ட எடத்துல எச்சி துப்புவது.

குரான் ஷரீஃபை ராகமாக ஓதுபவர்களை 'காரி' என்று அழைப்பதுண்டு, சலீம் அப்படி தான் பிராமாதமாக ராகமாக ஓதுவான். அவன் ஒரு காரி. அதனால் நாகூர் பார்ட்டிகள் சலீமை 'காரி' என்று மரியாதையாக அழைப்பதோடு நவாபை 'துப்பி' என்று சொல்வதுமுண்டு. அதாவது இப்படி சொல்வார்கள், 'சலீம் காரி.. நவாபு துப்பி'

சலீம் நின்று விட்டான், நவாப் சலீமுடன் இருந்த அந்த சிறுமியை பார்த்த ஒடனே அவன் சொல்ல வந்த சேதியை மறந்து போனான், 'யாருங்கணி இது..? வூட்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கா..?' என்றான்

'இல்ல.. இல்ல' என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னான், 'சரி, பொட்டி சோறு இல்லாகட்டி என்னா..? நான் வந்து கடைல பராட்டா வாங்கி தர்ரேன், ஒக்கேயா?' என்று நவாபு கேட்டான்

சிறுமி வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்

'பிரியாணி..' என்றான்

'எனக்கு அந்த சோறு தான் வேணும்..' என்றாள்

சலீம் நவாபுடன் 'அப்புறம் பார்ப்போம்னு' சொல்லிட்டு வூட்டுக்கு வந்தான்.

வூடு பூட்டி கிடந்தது.

2 comments:

Sketch Sahul said...

VERY NICE.CONTINUE....

nagoreismail said...

நன்றி ராஜா,

கதை அடுத்த பகுதியில் முடியும்