Wednesday, November 25, 2009

பொட்டி சோறு - 2 (சிறு கதை - இரண்டாவது இறுதி பகுதி)

பொட்டி சோறின் முதல் பந்தி இங்கே பரிமாறப்படுகிறது

பூட்டி கெடந்த வூட்டை பாத்து கலவரமாகி போனான் சலீம். ரெண்டு விஷயம் மண்டைக்குள்ள நஹரா கொட்டியது. ஒண்ணு 'ம்மா வூட பூட்டிட்டு எங்கே, எப்போ போனாஹா..?' ரெண்டு, 'இந்த நிஜாம் பய வந்து சோத்த குடுத்துட்டானா, இல்லையா..?' -

அந்த சிறுமி 'இப்ப என்னா செய்றது..? எனக்கு அந்த சோறு வேணுமே..?' என்றாள்.

'வேணும் தான், தெரியுமே.. இப்ப ம்மா ஜேபா மாமி வூட்டுக்கு தான் போயிருப்பாஹன்னு நெனைக்கிறேன்.. நான் போய் பாத்துட்டு வந்துடறேன்,' என்று சொல்லி முடிக்கங் காட்டியும்

'நானும் உங்க கூட வர்ரேன்..' என்றாள்

'வாணா.. வாணா.. நீ வர வாணா.. நான் போய்ட்டு வர்ரதுக்கெடைல நிஜாம் சோற கொண்டுகிட்டு வந்துட்டாண்ணா நீ வாங்கி வச்சுக்க.. நான் இந்த ஓடியாந்துடுறேன்..' என்று ஓட்டமும் நடையுமாக நாலு தெரு தள்ளியிருந்த ஜேபா மாமி வீட்டுக்கு ஓடிநடைனான்

ஜேபா மாமி வீட்டு வாச கதவு உள்ளக்க பூட்டியிருந்ததால சலீம் வாச பில்லை அடிச்சான்

உள்ளே ஜேபா மாமி பேசும் சத்தம் கேட்டது, 'இந்தாம்மா ரஜியா.. வாச கதவ யாருன்னு கேட்டு தொறங்க..' என்றார்கள்

ரஜியா ஓடியாந்து 'யாரு?'ன்னு கேட்டுட்டு கதவை தொறந்து வுட்டு, 'சலீம் நானா..' என்று சொல்லி விட்டு ஓடிப் போய் அடுப்பங்கறையில் மறைந்து போனாள்.

'சலீமு.. வாயேன்.. ' என்றார் ஜேபா மாமி

'வூட்டு சாவி இங்கேயா இருக்கு.. ' என்று எப்போதும் சாவி இருக்கும் சாவி மாட்டுற கூடத்தறை வாச பக்கம் பார்வைய திருப்பி அங்கே இருந்த வூட்டு சாவிய பாத்ததும் 'அப்பாடா.' என்று எடுத்து திரும்பினான்..

'ம்மா.. நாவப்பட்டிணம் போயிருக்காஹா.. வூட்டுவொல்வோக்கு போயிட்டு கடத்தெருவுக்கும் போயிட்டு தான் வருவேண்டாஹா.. கூட பாத்திமா சபுரா போயிருக்கா..' என்றார் ஜேபா மாமி

'சரி.. நான் வூட்டுக்கு போயிட்டு வர்ரேன்.' என்று கெளம்பியதும்

'உட்காரு.. இப்ப தானே வந்தா.. அதுக்குள்ள கால்ல நெருப்ப அள்ளி கொட்டிகிட்டு எங்கே கெளம்புறா..? இங்கே சாப்புடேன்.. தர்ஹா சோறு கொஞ்சம் இருக்கு.. தொட்டுக்க மூளை இருக்கு.. முட்டை இருக்கு.. அப்டியே கடுவ பெரட்டிகிட்டு சாப்டா ரொம்ப ஜோரா இக்கும்.. ஒனக்கு புடிக்குமே.. சாப்டேன்..' என்றார்.

'தர்ஹா சோறா..?.. ம்மா எடுத்துட்டு வந்ததா..?' பதறினான்

'இல்ல.. இல்ல.. இப்ப தான் தர்ஹால இருப்பான்ல நிஜாம் அவன் வந்து கொடுத்துட்டு போனான்.. நம்ம வூட்டுக்கு எப்பவும் வரும்ல.. அதனால பரவால்லா.. நீ சாப்டேன்.. வச்சு தரவா..?' என்று கேட்டு முடிப்பதற்குள் போன் அடித்தது..

'செத்த போன எடும்மா..?' என்றார் ஜேபா மாமி

போன எடுத்து, 'ஹலோ.' என்றான் சலீம்

'யாரு சலீமா.. இங்கே தான் இக்கிறியா.. நல்லதா போச்சு.. அதான் சொல்லாம வந்துட்டேனேன்னு தான்.. ' என்றார் சலீமின் தாயார் ரஹ்மத்

'ஏம்மா.. எங்கேந்து பேசுறீங்க..' என்றான்

'நா ஹலிமா மாமி வூட்லேந்து தான் பேசறேன்.. காசிம் சொன்னாரா..?' என்று கேட்டார் சலீமின் தாயார்.

'நான் காசிம பார்க்கவேயில்லையே.. ஏன் என்னா சொல்வார்?' என்று கேட்டான் சலீம்

"ஒண்ணுமில்ல.. தர்ஹாலேந்து பொட்டி சோறு வந்துச்சு..  மேச மேல தான் துத்திப்ப போட்டு மூடி வச்சிருக்கேன்.. நான்  கொஞ்சம்  தப்ரூக்க வாயில  போட்டுகிட்டேன்.. எஜமாண்ட தலைக்கு மேல..  வாப்பாக்கும் தம்பிக்கும் கொஞ்சம் தப்ரூக் எடுத்து வச்சுட்டு நீயும் சாப்புடு.. அப்புறம் வூட்லேயே இருந்துக்க காசிம் ஒரு சாமான் கொண்டு வந்து கொடுப்பார்.. வாங்கி அலுமாரில வச்சுடு..' என்று படபடன்னு பேசிட்டே போவ சலீம், 'ம்மா.. ம்மா..' ன்னு இழுத்து விஷயத்தை சொன்னான்.

ம்மா விஷயத்தை பொறுமையா கேட்டுட்டு 'ம்'ன்னு சொன்னவொடனே சாவிய எடுத்து சட்ட ஜோப்புல போட்டுகிட்டு ஜேபா மாமிட்ட 'கதவ கொலுக்கு போட்டுகுங்க.. இந்த வந்துடறேன்னு..' சொல்லிட்டு தெரு வாச பக்கம் தலை தெறிக்க ஓடினான்.

மூச்சு முட்ட, வேர்வை சொட்ட, கண்ணு கட்ட, காலு கடுக்க ஓடி வந்தான்.

வாசல்ல இருந்த படில ஓரமா ஒக்காந்துட்டு ஓடி வர்ரத பாத்து எந்திரிச்சு நிக்கிற அந்த சிறுமியிடம், 'இன்னும் ஒரு நிமிஷத்துல ஒன் கைல பொட்டி சோறு.. எங்கே சிரி..' என்று சொல்லி விட்டு ஜோப்புல கைய வுட்டான்.. சாவிய காணோம்..

'அல்லாஹ்வே.. இது என்னா இது.. அதாபு.. எங் கூடவே அலையுது.. சாவிய எங்கே போட்டேன்..' என்று கீழே பார்த்தான்.. வாச படி கிட்டே கீழே இறங்காமலே பார்வையை நீட்டி அலைய விட்டான்.

'சாவிய எடுத்துட்டே வரலயா..?' கவலையோடு கேட்டாள்

'இல்ல.. எடுத்து ஜோப்புல வச்சேன்.. நல்லா தெரியும்.. வழில தான் எங்கேயோ வுழுந்திருக்கணும்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. நான் போய் தேடி பார்க்கிறேன்..' என்று வாசல வுட்டு எறங்கிய விநாடி 'டுப்..' கரண்ட் கட்டாயிடுச்சு..

'அல்லாஹ்வே.. இந்த இருட்டுல எங்கேந்து போய் சாவிய தேடுறது..கொஞ்சம் பொறு.. இப்ப கரண்ட் வந்துடும்.. எங்கேயும் போயிருக்காது நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்..' என்று இருட்டில் நின்ற அந்த சிறுமியை பார்த்து பேசினான்

போன கரண்ட் செத்த நேரத்துலேயே அதிசயம் ஆனால உண்மையாக வந்து விட்டது. 'இங்கேயே இரு.. சாவியோட வர்ரேன்..' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்த திசையையே வெறிச்சு வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்த அவளை, 'யாரும்மா நீ.. என்னா வேணும்..? இங்கே ஏன் ஒக்காந்து இருக்கிறே..?' - என்று ஒரு குரல் கேட்டு திரும்பினாள்.

அவள் பதில் சொல்ல வாயெடுத்த விநாடி சலீம் வந்து விட்டான் சாவியோடு 'இங்க பக்கத்துல தான் விழுந்திருக்கு..' என்று கூறிக் கொண்டு.

'சலீமு.. யாரிது?' - என்று கேட்டார் காசிம் என்ற பெயருடைய அவர்

'நமக்கு தெரிஞ்ச புள்ள தான்.. அது இருக்கட்டும்.. ம்மா ஏதோ சாமான் கொடுப்பியோம்னு சொன்னாஹலே..' என்றான்

'ஆமா.. இந்தாரும்..' என்று அந்த பையை எடுத்து தந்து, 'இத அப்டியே பத்தரமா வச்சுடும்.. நான் வந்து ம்மாட்ட பேசிக்கிறேன்..' என்று போய்ட்டு ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்ப வந்து, 'சொல்ல மறந்துட்டேனே.. ம்மா சொல்ல சொன்னுச்சு.. பொட்டி சோறு மேசைல இருக்காம்.. கொஞ்சம் தப்ரூக் எடுத்துக்கிட்டு வாப்பாக்கும் தம்பிக்கும் வக்க சொன்னுச்சு.. நா வரட்டுமா..?.. சாமான் பத்தரம்..' என்று போய் விட்டார்

சலீம் கதவை திறந்தான். 'உள்ளே வா..' என்று அவளையும் கூப்டுகிட்டு உள்ளே போய் வெளக்க அடிச்சு வுட்டு மேச மேல இருந்த பொட்டி சோற எடுத்து அந்த சிறுமி கைல கொடுத்து, 'அப்பாடா..! இப்ப சந்தோஷமா..? இது ஒன்னோட ரிஜ்க்' என்று கையில் கொடுத்தான்

அந்த சிறுமி அப்படியே நின்றாள், 'ஏன்.. அப்டியே நிக்கிறே? போய் உங்க ம்மா கூட சாப்டேன்.. தேடிகிட்டு இருப்பாஹல்ல..' என்றான்

'உங்க ம்மா வந்தா திட்டுவாங்க..' என்றாள்.

'நான் ம்மாட்ட டெலிபோன்ல சொல்லிட்டேன்.. நீ எடுத்துட்டு போ..' என்றான்.

'இல்லை.. நான் போறேன்..' என்று பொட்டி சோறை மேச மேலேயே வச்சுட்டு விறுவிறுவென திரும்பி பார்க்காமல், 'நில்லு..' ன்னு சலீம் கூப்ட்டு கத்துவதை காதுல வாங்காமல் ஓடிப் போய் மறைந்து போனாள்.

சலீம் 'ப்ச்ச்..' என்று அலுத்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு , பிறகு காசிம் கொடுத்த சாமானை அலமாரியில் வைத்தான்.

திரும்பவும் பள்ளிக்கு தொழுவ போவலாம்னு வாச கதவ பூட்டி தர்ஹாக்கு வந்தான். அலங்கார வாச கிட்டே வந்ததும் நவாப் சிரித்து கொண்டே  தர்ஹா உள்ளேயிருந்து வெளியே வந்தான்.

'ஏன்.. என்னா அது.. ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..' என்றான் சலீம்

'இப்ப தான்.. உம்பர் கூட வந்துச்சுல்ல அந்த புள்ளைய பாத்து பொட்டி சோற கொடுத்துட்டு வர்ரேன்..' என்றான் நவாபு

'அப்டியா..?.. உம்பர்க்கு ஏது..? உங்க வூட்றேயா?' - என்று ஆச்சர்யம் மேலிடவும் மகிழ்ச்சி பொங்கவும் கேள்வியையும் பதிலையும் கேட்டான் சலீம்

'ஆமா.. நீம்பர் கொடுக்க சொன்னதா சொல்லி கொடுத்துட்டேன்.சரி.. நான் ஹாரீஸ் நானா கடைக்கு போறேன்.. வர்ரீயமா..?' என்றான் நவாப்

'ம்.. வர்ரேன்.. இந்த போய் இஷா தொழுவிட்டு வந்துர்ரேன்..' என்று சொல்லிவிட்டு நவாப் பள்ளி என்கிற பெரிய ஹொத்துவா பள்ளில உள்ளே பூந்து செருப்பை வச்சிட்டு சட்டை கைல உள்ள பொத்தானை விடுவித்து கையை மடிச்சு வுட்டுகிட்டே ஹௌதை நோக்கி ஒலு செய்றதுக்காக போன போது பள்ளில இருந்த போர்ட்ல சாக்பீஸால் எழுதியிருந்த ஹதீஸ் சலீமின் கண்களில் பட்டது

'உங்களில் எவர் பெரியவர் மீது மரியாதையும் சிறியவர் மீது அன்பும் பாராட்டவில்லை அவர் என்னை சேர்ந்தவர் அல்ல.. - நபிமொழி"

No comments: