ஜட்ஜப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்
ஜட்ஜப்பா - பகுதி 2 ஐ இங்கே படிக்கலாம்
முதன் முதலாக சிகரெட் குடிக்கும் போது இருமல் வருகிறதல்லவா? அது வெறும் இருமல் அல்ல - உடல் நம்மிடம் சொல்கிறது, அதாவது ”ஏதோ ஒரு அந்நிய உடலுக்கு ஒவ்வாத பொருளை உள்ளே இழுக்கிறாய்” என்று.
நாம் இதற்கெல்லாம் அசராமல் “எங்களுக்கு தெரியும், நான் சொல்றதை நீங்க செய்யுங்க, பேசாம நான் பிடிக்கிற புகையை நீங்க உள்ளே அனுப்புங்க..” என்பது போல் தொடர்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கவும் அது ஒரு பேச்சு பேசாமல் நாம் அனுப்புகிற கேடான புகையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
இப்படி நம் உடல் பல இடங்களில் முன்கூட்டியே நமக்கு வர இருக்கும் நல்லதையோ கெட்டதையோ சரியாக சொல்லி விடும்.
இதே போல் தான் நம் வாழ்க்கையும், சிலரது வாழ்க்கையை பார்த்தால் அவர்களது சிறு வயது வாழ்க்கையிலேயே சில சம்பவங்கள் அவர்கள் யாராக வருவார்கள் என்று சொல்லி விடும்.
இது ஒரு வகை ஜோசியம் மாதிரி, முன் கூட்டியே அறிவிக்கக் கூடியது, முன்னறிவிப்பு செய்வதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது பாவம் என்று வகைப்படுத்துவது சரியல்ல, இஸ்லாத்தை பொறுத்த வரை மறுமை வாழ்க்கை உள்பட முன்னறிவிக்கப்பட்ட விஷயங்கள் நிறையவே உள்ளன.
முன்னர் சொன்ன செய்திக்கு வருகிறேன், நம் வாழ்க்கையில் கூட சிறு வயதில் நடந்த சில சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான அஸ்திவார கம்பிகளையும் கற்களையும் காண முடியும். அது நல்லதை குறித்தாலும் சரி, அல்லதை குறித்தாலும் சரியே.
வக்த் என்ற இந்தி படத்தில் ஜோசியக்காரர் ஒருவர் பால்ராஜ் சாஹ்னியின் (பழைய இந்தி நடிகர்) கையை பார்த்து “நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்” என்பார்.
அதற்கு பால்ராஜ், “அதை ஏன் கையை பார்த்து சொல்றீங்க..? அதை விட என் முதுகை பார்த்தா இன்னும் தெளிவா சொல்லலாம்” என்று சட்டையை உயர்த்தி முதுகை காட்டுவார், அதில் அவர் மூட்டைகளை தூக்கி சுமந்ததற்கான வடுக்கள் இருக்கும்.
அதே போல் ஜட்ஜப்பாவின் வாழ்க்கையிலும் இரண்டு சம்பவங்கள் அவர்கள் யாரென்று முன்னரே ஜோசியம் சொல்லுகிறது.
முதல் சம்பவம்:
ஜட்ஜப்பாவின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவராக சீயத்துக்கு சென்று விட்ட படியால் எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்த வீட்டு வேலைகளை அவர்கள் மட்டுமே தனியாக பார்க்கும் படி ஆனது.
அத்தகைய வேலைகளில் ஒன்று கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து மாடுகளை குளிப்பாட்டுவது, மாட்டு கொட்டிலை துப்புரவு செய்வது, பால் கறப்பது என இப்படி எல்லா வேலைகளையும் வெட்கப் படாமல் செய்ய வேண்டும்.
அப்படி ஒருமுறை ஜட்ஜப்பா பசுமாட்டை குளிக்க வைத்து கொண்டிருந்த போது மாடு முட்டி விட்டது. இதனால் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் ஒரு கம்பை எடுத்து மாட்டை அடிஅடியென்று அடித்து விடுகிறார்கள்.
அதோடு விட்டுட்டு போக வேண்டியது தானே, அவர்கள் யோசித்து பார்க்கிறார்கள், ”மாட்டை போய் அடிக்கிறோமே, அதுக்கு என்ன பகுத்தறிவா இருக்கிறது” என்று - அந்த யோசனையின் முடிவாக அதே கம்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்கிறார்கள்.
இது யாருமே பொதுவாக செய்யாதது. யார் மீதும் கோபம் வந்தால் ஏசுவோம், அடிப்போம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து விட்ட பிறகு நம்மை நாமே ஏசிக் கொள்வதோ அல்லது அடித்து கொள்வதோ கிடையாது.
இவர்கள் என்னடா என்றால் யோசித்து பார்க்கிறார்கள், தவறை உணர்கிறார்கள், அத்தோடு நிற்காமல் தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்கிறார்கள்.
சிறு வயதிலேயே அவர்களிடம் இருந்த தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருந்த இத்தகைய குணம் தான் பிற்காலத்தில் அவர்கள் நீதி தவறாதவர் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.
இரண்டவது சம்பவம்:
நாகூர் மியா தெருவும் குஞ்சாலி மரைக்காயர் தெருவும் தைரியமாக சந்தித்து கொள்ளும் தெரு முனையில் இருந்த “நாகூர் முனிசிபல் முகம்மடன் பாய்ஸ் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்ற பள்ளிகூடத்தில் தான் அவர்களது நா அனா ஆவன்னா பழகியது.
அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் சென்னை ராஜதானி கவர்னராக இருந்த வெள்ளைக்கார துரை அப்போதைய வழக்கப்படி பதவிக்காலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் நாகூரின் மியா தெரு வழியாக போக போகிறார் என்றதும் பள்ளிகூடத்தில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் எதிரே இருந்த ஒரு வீட்டின் திண்ணை மீதேற்றி அந்த வழியாக போக இருக்கும் கவர்னரை பார்க்க காத்திருக்க வைத்தனர் ஆசிரியர்கள்.
அப்போது ஒரு ஆசிரியர் ஜட்ஜப்பாவை பார்த்து, ‘இப்படி தான் இஸ்மாயிலும் ஒரு நாள் கவர்னராகி பெரும் புகழ் அடைவான்” என்று கூறியிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே இல்லை இல்லை அவர் கற்பனை செய்த மாதிரியே 1980ம் வருடம் அக்டோபர் மாசம் ஜட்ஜப்பா தற்காலிக கவர்னராக பொறுப்பேற்கிறார்கள்.
அப்போது நாகூரில் எங்க வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஜட்ஜப்பாவுக்கு வந்தது.
அவ்வளவு தான், என்னுடைய தாயாரின் தந்தை சேத்தப்பா (கவுஸ் சேட் என்ற பெயருடைய இவர்களும் ஜட்ஜப்பாவும் தான் வீட்டு வேலைகளை ஒன்றாக பார்த்தது அதுவும் தவிர இவர்களின் தந்தையின் பூர்வீக சொத்தை தான் அப்துல் அஜீஸ் நிர்வகித்து வந்தது) எங்களது வீட்டிலிருந்து மியா தெரு பள்ளிகூடம் வரைக்கும் பந்தல் போட்டார்கள். வருகின்ற அத்தனை பேருக்கும் தங்க உண்ண குடிக்க என்று அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
அந்த வழியாக ஜட்ஜப்பா வருகிறார்கள், அவர்கள் படித்த பள்ளிகூடத்தை கார் கடக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் நின்ற திண்ணையை பார்க்கிறார்கள். அவர்கள் கண் முன் சிறிய வயதில் அவர்கள் நின்ற காட்சி கண்ணுக்கு தெரிகிறது.
அவர்களின் ஆசிரியர் சொன்னதை நன்றியுடனும் இறைவனின் அருளை எண்ணித் தாழ்மையுடனும் நினைத்துக் கொண்டதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
மேலே நான் சொல்லும் போது ஆசிரியர் சொன்ன மாதிரி இல்லை கற்பனை செய்த மாதிரி என்று எழுதியிருந்தேன். பேசிய ஆயிரம் மொழிகளை விட பேசாத நினைவுகளுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல பேசுகின்ற மொழியில் உணர்வுகளும் கற்பனைகளும் கலந்திருந்தால் பேசாத மொழிகளை போன்றே சக்தி உண்டு என்றும் நான் நம்புவதால் தான் அப்படி சொன்னேன்.
-------------------------------------------------------------------------------
நான் பாட்டுக்கு வூட்டு வாசல்ல ஒக்காந்து இருந்தேன், ஜட்ஜப்பா உள்ளக்கேயிருந்து வாசலுக்கு வந்தாஹா, கார்ல ஏறுனாஹா, ‘நீயும் ஏறிக்க’ன்னு எண்ட்ட சொன்னாஹா.
நான் மறு பேச்சு பேசாம ஏறி ஒக்காந்த ஒடனே, ‘சுல்தான் தைக்காவுக்கு போவணும். வழி சொல்லு” என்று என்னிடம் சொல்ல அவர்களின் மகனார் காசிம் காரை தெரு முனைக்கு கொண்டு வந்து விட்டார்.
எனக்கு ஒரே குழப்பம் “எந்த சுல்தான் தக்கா..? தெரியாதுன்னு சொன்னாக்கா ஏச்சு உழுவுமோ” என்று பேய் முழி முழித்துக் கொண்டு எச்சில் முழுங்கினேன்....
பகுதி 4 ல் தொடரும்
No comments:
Post a Comment