Wednesday, December 02, 2009

பரிச்சே - பழைய இந்தி பட விமர்சனம்

பரிச்சே - அடையாளம் அல்லது அறிமுகப்படுத்துதல் என்று அர்த்தம் - ராய் சாஹேப் என்பவரின் கதை. ராய் சாஹேப் கண்டிப்பும் அன்பும் சம அளவில் கலந்த உருவம்.

அவருக்கு ஒரே மகன் நீலேஷ். நீலேஷ் இசையில் அதீத ஆர்வம் உடையவர். நீலேஷுக்கு அவர் வீட்டில் வேலை பார்க்கும் நாராயணன் மூலமாக பெண் பார்க்க போக இருப்பது தெரிய வருகிறது.

பெண் பார்க்க புறப்பட இருக்கும் சரியான நேரத்தில் ராய் சாஹேப் நீலேஷின் அறைக்கு வருகிறார், நீலேஷ் இன்னமும் தயாராகாமல் இருப்பதை கண்டு, 'நாராயணன் உன்னிடம் சொல்லவில்லையா..?' என்று வினவுகிறார்.

'இல்ல பாபுஜி.. நான் என்னுடைய குருநாதரோடு இன்றைக்கு கச்சேரி பண்ண இருக்கிறேன்.. இப்ப கிளம்பி விடுவேன்.." என்கிறார்

ராய் சாஹேபுக்கு கடும் கோபம் வருகிறது, 'நான் அங்கே முதலில் செல்கிறேன், நீ சரியாக வந்து விட வேண்டும்..' என்று கூறி விட்டு கோபமாக சென்று விடுகிறார்

அப்பாவை போலவே பிடிவாதமுடைய நீலேஷ் வீட்டை விட்டு வெளியேறி கச்சேரிக்கு செல்வதோடு தன்னுடைய குருநாதரின் மகளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

ராய் சாஹேபின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மருமகளுக்கு ஆசி வழங்கி விட்டு நீலேஷிடம் 'உள்ளே அழைத்து கொண்டு போ" என்கிறார்

ராய் சாஹேபை சந்திக்க நீலேஷ் வருகிறார், 'பாபுஜி.. கூப்பிட்டீங்களா..?' என்று கேட்கிறார்

'சாப்டியா." - அப்பா

'ம்' - மகன்

'பஹூ..' என்று மருமகள் சாப்பிட்டாச்சா என்று கேட்கிறார்

'ம்..' என்று சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார் மகன்

'அவங்க அவங்க வாழ்க்கைய அமைச்சுக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு..' என்பதோடு இரும்பு பெட்டியின் சாவியை கொடுத்து, 'எனக்கு பெத்த கடமை இருக்கு.. இதுல எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்க.. நான் எப்படி என் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டேனோ.. அதே மாதிரி நீயும் வெளியே போய்.. உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க..' என்கிறார்

தன்மானமும் பிடிவாதமும் நீலேஷுக்கு பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடவே தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்

2 பெண் பிள்ளைகள் 3 ஆண் பிள்ளைகள் என்று வரிசையாக பெற்று மனைவி இழந்த நிலையில் கடும் வறுமையில் வாடுகிறார். வறுமையோடு அதன் கூட பிறந்த சகோதரரான வியாதியும் ஒட்டிக் கொள்ளவே தனது முடிவு நெருங்குவதை உணர்கிறார்.

தனது அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறார், 'பாபுஜி, நீங்கள் சொன்ன மாதிரியே என் வாழ்க்கையை நான் அமைத்து கொண்டேன், இப்ப கூட நான் எனக்காக இந்த கடிதத்தை எழுத வில்லை, எனக்கு முடிவு நெருங்கி விட்டதாக உணர்கிறேன், உங்களை விட்டால் என் குழந்தைகளுக்கு ஆதரவில்லை..' என்று

கடிதம் வந்த போது ஊரில் இல்லாமல் கடிதம் பார்த்ததும் உடனே கிளம்பி சென்று 5 பேர பிள்ளைகளையும் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.

ஆனால், பிடிவாதத்திலே ராய் சாஹேப் கூட இந்த 5 குழந்தைகளுக்கு பேரன் தான், அவ்வளவு கோபம் ராய் சாஹேப் மீது, அதாவது ராய் சாஹேப் தான் தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணம் என்று நம்பும் குழந்தைகள் ராய் சாஹேபுக்கும் அவரின் தங்கை சாதி தேவிக்கும் அடங்காமல் தொல்லைகள் கொடுத்து கொண்டும் கொடுக்கும் தண்டனைகளை 'சாப்பாடு கிடையாது', 'இங்கேயே ராத்திரி முழுக்க தூங்காமல் நிக்க வேண்டும்' என்று அனுபவித்து கொண்டும் வருகிறார்கள்.

இந்த 5 பிள்ளைகளில் மூத்தவளான ரமா தான் வழிகாட்டி. அவளுக்கு கட்டுப்பட்டு தான் அத்தனை பிள்ளைகளும் ராய் சாஹேபின் கடும் டிசிபிளினுக்கு வளையாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ரவி என்பவர் வேலையில்லாத பட்டதாரி, ஒரு வேலைக்கு இண்டர்வியு செல்வார், அங்கே இவருக்கு ஒரு வயதான நபரை கூப்பிட்டு ரவிக்கு என்னென்ன வேலை என்று சொல்லி கொடுக்கும்படி முதலாளி கூறுவார்.

அந்த வயதான நபர் ரவியை அழைத்து சென்று, வேலையை பத்தி சொல்லி கொடுத்து விட்டு, 'முதலாளி ரொம்ப நல்லவர், என் மகள் கல்யாணத்துக்கு நான் கேக்காமலே பணமெல்லாம் கொடுத்தார், இப்ப அவர் என்ன ஒண்ணும் சொல்லல.. நான் தான் போறேன்னு சொல்றேன்.. எனக்கு வயசாயிடுச்சு.. கண்ணு சரியா தெரியலை.." என்று கண்கலங்க அந்த வேலையை ஒத்துக் கொள்ள ஏனோ மனமில்லாமல் வந்து விடுகிறார்.

இப்படி வேலையில்லாமல் இருக்கும் ரவி தன்னுடைய மாமா வீட்டிற்கு வருகிறார். அவர் ராய் சாஹேபிடம் அந்த 5 பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறார்.

அந்த குழந்தைகளுக்கு பாடமும் புத்தியும் சொல்லி கொடுக்க வந்தவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தால் 'பேய் போல் வருவது..', 'ஆமை முதுகில் மெழுகுவர்த்தி கொளுத்து இருட்டில் வாத்தியார் ரூமுக்கு போக விடுவது' இப்படியாக செய்ய போக துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட ஆரம்பிப்பார்கள்.

அந்த வேலைக்கு ரவி வருகிறார், ரவியிடமும் குழந்தைகள் குறும்பு தனங்கள் செய்ய ரவிக்கு நெற்றியில் அடிபட்டு விடுகிறது, இதை சாதி தேவி கண்டுகொண்டு, 'இது குழந்தைகளின் வேலை தான்..' என்று கூறும் போது, 'இது குதிரை வண்டியில் அடிபட்டது..' என்று பொய் சொல்லி குழந்தைகளை அன்றைய தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார்.

ராய் சாஹேபுக்கு ரவி மீது நம்பிக்கை வருகிறது, 'குழந்தைகள் செய்திருந்தாலும் அதை குழந்தைகளை காட்டி கொடுக்காமல் இருந்தீர்களே..' என்று ரவியிடமே சொல்கிறார்.

இந்த சூழலில் குழந்தைகளில் குறும்புதனமும் நின்றபாடிலை, ராய் சாஹேபும் சாதி தேவியும் வெளியூர் கிளம்புகிறார்கள்.

ரவி எப்படி குழந்தைகளை திருத்தி அவர்களது தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளுக்கு தாத்தாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார் (பரிச்சே) என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பார் குல்ஜார் சாப் இதற்கிடையே ரமா, ரவியின் கவித்துவமான காதல் வேறு.

குல்ஜார் சாபின் படங்கள் என்றாலே பிளேஷ் பேக்கில் தான் கதை சொல்வார். இந்த படமும் விதிவிலக்கல்ல.

ரவியாக ஜிதேந்திரா, ரமாவாக ஜெயபாதுரி, ராய் சாஹேபாக பிரான், நீலேஷாக சஞ்சீவ் குமார், ரவியின் மாமாவாக ஏ.கே.ஹங்கால் மாமியாக லீலா மிஷ்ரா, அப்புறம் அந்த மற்ற 4 குழந்தைகள் யாவரும் நம் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.

ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.

நீலேஷ் தன் மனைவியை இழந்து வறுமையில் வாடும் போது தனது மகள் ரமாவுடன் சேர்ந்து 'பீட்டி நா பிதாயி ரெய்னா..' என்ற பாடலை இங்கே பாருங்கள்





ரவி வேலை கிடைக்காமல் முஸாஃபிர் போல் அதாவது நாடோடி போல் வேலையில்லாமல் அலைந்து திரிந்து தனது மாமாவின் கடிதம் பார்த்து மாமாவின் ஊருக்கு வரும் போது வரும் , 'முஸாஃபிர் ஹுன் யாரோ..' என்ற இசை அற்புதங்களை இங்கே காணலாம்



பறவை கிளையில் உட்கார்ந்து ஆடி விட்டு பறந்த பிறகும் ஆடும் கிளையை போலே இந்த படத்தை எப்போதோ பார்த்த பிறகும் இன்னமும் இந்த படத்தை பற்றிய பாத்திரங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது

2 comments:

Jawahar said...

//ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.//

ஆஹா... நீங்க நம்ம ஜாதி. முசாபிர் பாடலை திரும்பத் திரும்பக் கேட்டு இசைத்தட்டைத் தேய்த்திருக்கிறேன்!!

http://kgjawarlal.wordpress.com

nagoreismail said...

நன்றி ஜவஹர்

நீங்களும் என் போல் அந்த இசைத் தீயில் கலந்தவர் என்பதை அறிந்தமைக்கு மகிழ்ச்சி