புதுசா படம் ரிலீசானா இந்த நாகூர் ஜமாக்கு (கூட்டத்துக்கு) ஹல்பெல்லாம் (மனசெல்லாம்) குளுந்த மண்டபமா (குளிர்ந்த மண்டம் - நாகூர் தர்காவில் உள்ள ஒரு இடம் - கோடையில் கூட குளிராய் இருக்கும்) மாறிடும்.
ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு.
ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.
அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை.
பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் எங்களை திரும்பி பார்த்தார்.
நான் அவரை கவனித்தேன், என்னா இவர் நம்மளை ஏன் திரும்பி பார்க்கிறார் என்று நினைக்கும் போதே முறைப்பது போல் தெரிந்தது. என்னா இவர் நம்மள பார்த்து முறைக்கிறார் என்று நினைக்கும் போதே எழுந்து விட்டார். என்னா எழுந்திருக்கிறார் என்று ..... எங்கள் குரூப்பை நோக்கி வந்தார்.
வந்தவர் கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, 'சார், படம் எப்ப போடுவாங்க.." என்ற கேள்வி தான் அது.
என் மச்சான், 'ஓய்..! படம் ஆரம்பிச்சு இடைவேளை உட போறான், படம் எப்ப போடுவானா..?' என்று கேட்க
'சூரியன்னு.. (சூரியன் படம் - சரத்குமார் நடித்தது - சூரியன யாரும் சுட முடியாது சார் - சூரியன் வெப்பம் தான் நம்மள சுடும் என்ற கவுண்டமனி காமெடி) போஸ்டர்ல பாத்தோமே ! அந்த படம் கிடையாதா சார்..!' என்று அப்பாவியாக கேக்க
'சூரியன் படம் ஆனந்த் தியேட்டர்ல..! இது லிட்டில் ஆனந்த்' என்றதும் அவர் மொகத்துல இருந்த லிட்டில் ஆனந்தமும் மறைஞ்சு போச்சு.
என் மச்சான் ஜாபர் சுல்தான் சிரித்து கொண்டே சொன்னான், 'இவர் வந்து சூரியன் படத்த பத்தி கேக்கலைன்னா கொடுத்த காசு தெண்டமா போயிருக்கும்.'
(இந்த டைரி குறிப்புல நிறைய 'take away' இருக்கு)
No comments:
Post a Comment