Sunday, May 02, 2010

உன்னிடமுள்ள என்னுடைய வேறு சில உடைமைகளையும் திரும்ப அனுப்பவும் - குல்ஜார் சாப் பாடல்கள்

கொட்டுகின்ற ஒரு மழை நாள் இரவில் மஹேனும் சுதாவும்  புகைவண்டி  நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் சந்தித்து கொள்கிறார்கள்.  மஹேனும் சுதாவும் திருமணமாகி பிரிந்து வாழ்கிறவர்கள். இருவரும் மறக்க நினைத்திருந்த அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்க்க அந்த அறையும் அன்று பெய்த மழையும் ஒரு சந்தர்பத்தை வழங்குகிறது.

அவர்களுடைய அந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மூன்றாவது நபராக அந்த அறையில் அவர்களுடனே விடியும் வரை வசிக்கிறது இல்லை இல்லை விடிந்த பின்னும் கூட தொடர்கிறது. அவர்களின் பிரிவுக்கு  மஹேனுக்கும் மாயாவுக்கு திருமணத்திற்கு முன்பிருந்த உறவு திருமணத்திற்கு பின்பும் தொடர்வதாக சுதா நம்புவதும் சுதாவின் உரிமை கொண்டாடுதலுமே காரணமாக அமைகிறது.

ஆனால் சுதாவை கரம் பிடித்த பிறகு மாயாவை மறந்து விட்டு சுதாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே மஹேன் ஆசைப்பட்டான். மஹேனுக்கு நடந்த ஒரு வகை கட்டாய திருமணத்திற்கு  முன்பு  திடிரென்று சொல்லாமல் கொல்லாமல் காணாமல் போன மாயா திருமணத்திற்கு பிறகு திடீரென்று வந்து நிற்கிறாள்.

மஹேனை பொறுத்தவரை அவனுக்கு அது கட்டாய திருமணம் அதுவும் மாயா திடீரென மறைந்ததால் எப்போது வருவாள் ஒருவேளை திரும்பவே வராமல் கூட போய்விடலாம் என்ற நிலையில் ஒத்துகொண்ட திருமணம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மாயா வந்தால் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்து நடந்தேறிய திருமணம். இப்போது திடுதிப்பென்று மறைந்த மாயா திரும்ப வந்து நிற்கிறாள். என்ன செய்வான் அவன்?

சுதாவை பொறுத்தவரை தனது கணவன் தனக்கு மட்டுமே முழுமையாக கிடைக்க வேண்டும் என்று எல்லோரையும் போல் ஆசைப்படும் பெண்மணி. திருமணத்திற்கு முன்னர் மஹேன் தனக்கும் மாயாவுக்கு உள்ள தொடர்பை நேர்மையாக வெளிப்படுத்திய போது மாயவையே திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒதுங்க நினைத்தாள் கஷ்டத்துடன் தான். ஆனால் மாயா மாயமாய் மறைந்து விட்ட நிலையில் மஹேனின் மாயாவை மறந்துவிடுகிறேன் என்ற வாக்குறிதியை நம்பி திருமணம் செய்து கொண்டாள்.

மாயாவை பொறுத்தவரை இப்படி ஒரு திருமணம் நடந்தேறும் என்று அவளுக்கு தெரியாது, அவளுக்கென்று யாருமும் கிடையாது. அவள் இப்படி தான் அடிக்கடி சொல்லாமல் கொல்லாமல் அமைதியை தேடி மறைந்து போவாள். ஒரு முறை அப்படி மறைந்து விட்டு திரும்பி வந்த போது கிடைத்து கொண்டிருந்த அன்பு இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்று நம்பவும் முடியாமல் வேறு எந்த ஆதரவும் கூட இல்லாமல் இல்லை பிற ஆதரவையும் விரும்பாமல் தவிக்கின்றாள்.

யார் மீதும் குற்றம் சொல்ல முடியாத அந்த சூழலில்  கைதிகளாகிறார்கள்  மூவரும். மஹேன் வீட்டில் குடியிருந்த போது மாயா புழங்கிய துணி மணிகளை அப்படியே போட்டு வைத்திருந்தால் கெட்டு போய் விடும் திருப்பி அனுப்பி வைத்தால் அவளாவது உபயோகப் படுத்திக் கொள்வாள் என்று அந்த துணிமணிகளை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள் சுதாவும் மஹேனும்.

மாயா திருப்பி வந்த சாமான்களை பெற்று கொண்டு அவளது வேறு சில உடைமைகளையும் அந்த வீட்டில் இருப்பதாக சொல்லி ஒரு பக்க கவிதையை தந்தியில் அனுப்புகிறாள்.

'இது தான் மாயா' என்று மஹேன் கவிதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பத்தில் கவிதை என்று எண்ணி ரசிக்க ஆரம்பித்த சுதா அவளுக்கு உரிமையான உடைமைகளையும் கேட்கும் போது எதிர்வினை செய்கிறாள்...

இனி..
மஹேனின் குரலில் மாயாவின் கவிதையை சுதாவோடு சேர்ந்து நாமும் கேட்க தொடங்குவோம்.. அதை தொடர்ந்து மாயாவே அவளது கவிதையை பாடுகிறாள்..




மஹேன்:
உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை நாம் இருவரும் விளக்குகள் பொருத்தப்படாத மிதிவண்டியில் ஓட்டி வந்ததற்காக பிடிபட்ட போது, நாம் பசியோடும், தாகத்தோடும் இருப்பதாகவும் கையில் காசில்லாத ஏழைகளை போலும் நடித்தோமே, அப்போது நம்மை பிடித்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள்  நம் மீது இறக்கப்பட்டதோடு நமக்கு 50 பைசாவும் கொடுத்து விட்டு சென்றாரே.. அதில் 25 பைசா என்னுடையது. அதையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்...

சுதா:
ஹௌ சுவீட்.. என்ன இனிமை? அப்புறம்...

மஹேன்:
உன்னுடன் கழித்த இளவேனில் கால ஈர இரவுகளில் ஒன்றினை என்னுடைய கடிதங்களில் ஒன்றில் மடித்து கிடக்கிறது. அந்த இரவினையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்..

என்னுடைய வேறு சில பொருள்களும் உன்னுடன் உள்ளது. அதனையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்.. அதில் இலையுதிர் காலமும் அடக்கம்.. அந்த காலத்தில் இலையுதிர்ந்த சப்தம் என் காதோரம் கவிதை பாடி சென்றது, அந்த மரத்தின் தண்டுகள் இன்னமும் நடுக்கத்தில் இருக்கின்றன.. அவைகளை திருப்பி கொடுத்து அனுப்பவும்..

நூற்றி பதினாறு சந்திர இரவுகளையும், உன் தோலில் உள்ள மச்சத்தையும், ஈரம் காயாத மருதானி வாசனைகளையும், ஒருவருக்கொருவர் செய்த பொய்யான சத்தியங்களையும்..

சுதா:
நான் ஏன் அதையெல்லாம் அவளிடம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்?
இதையெல்லாம் திருப்பி அனுப்பாத போதும், மாயா நம்மோடு தான் இரவும் பகலும் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய பொருள்களென்று அவள் திரும்ப கேட்பதை அனுப்பாமல் நம்மோடு வைத்திருந்தால் மட்டும் என்ன ஆகி விடும்..?

மாயா:
Mera kuch saamaan tumhare paas pada hai
o o o ! saavan ke kuch bheege bheege din rakhe hain
aur mere ik khat main lipti raat padi hai
vo raat bhujaa do, mera vo saamaan lauta do
mera kuch saamaan tumhaare paas pada hai
patjhad hai kcuh ... hai na ?
o ! patjhad main kuch patton ke girne kee aahat
kaanon main ek baar pahan ke laut aai thee
patajhad kee vo saakh abhi tak kaanp rahi hai
vo saakh gira do, mera vo saamaan lauta do

என்னுடைய வேறு சில உடைமகளும் உன்னிடம் உள்ளது
இளவேனிற் கால ஈர தினங்களை அங்கே உன் வீட்டில் வைத்துள்ளேன்
அத்தோடு இனிமை நிறைந்த இரவுகளையும் என் கடிதத்தில் மடித்து வைத்துள்ளேன்
அந்த இரவுகளை முடித்து விட்டு எனக்கு என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பவும்
இது அல்லாமல், என்னுடைய வேறு சில உடைமைகளும் உன்னிடம் உள்ளன
இலையுதிர்ந்த சில மரங்கள் இருந்தனவே.. இப்பவும் இருக்கின்றது தானே?
அங்கே மரத்திலிருந்து இலையுதிர்ந்த சத்தங்களும் உண்டு
ஒரு முறை அந்த சத்தம் என் காதோரம் வந்து விட்டு திரும்ப சென்று விட்டது
அந்த மரத்தின் தண்டுகள் இப்பவும் நடுங்கிகொண்டு இருக்கின்றது
அந்த தண்டை எடுத்து என்னுடைய உடைமகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------
ek akeli chhataree main jab aadhe aadhe bheeg rahe the
aadhe sookhe aadhe geele, sukha to main le aaye thee
geela man shayad bistar ke paas pada ho
vo bhijwa do, mera vo saamaan lauta do

நாம் ஒரு முறை ஒரே குடையில் பாதி நனைந்து சென்ற போது
பாதி நனைந்தும் பாதி நனையாமலும் இருந்தோம், நனையாமல் இருந்த பகுதியை என்னுடன் எடுத்து வந்து விட்டேன்
ஆனால் நனைந்த பாதி அங்கே தான் எங்கேயோ உனது படுக்கையில் ஓரமாக படுத்திருக்கலாம்
அதை திருப்பி அனுப்பி வைத்து விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து இதனையும் திருப்பி அனுப்பி வைத்து விடவும்
--------------------
ek so sola chaand ki ratain ek tumhare kaandhe ka til
geeli mahendi ki khushbu, jhoot mooth ke shikwe kuch
jhooth mooth ke wade sab yaad karaa do
sab bhijwa do, mera vo saamaan lauta do

ஒரு நூற்றி பதினாறு இரவுகளும், உன் தோல்பட்டையில் உள்ள மச்சத்தையும்
ஈரம் போகாத மருதாணியின் நறுமணத்தையும், போலியாய் கோபப்பட்டு கிறுக்கர்களை போல் நடந்த காட்சிகளையும்
ஒன்றுவிடாமல் எனக்கு அத்தனையையும் நினைவூட்டும் நாம் செய்து கொண்ட பொய்யான சத்தியங்களையும்
இன்னும் என்னுடையதான அத்தனையையும் திருப்பி அனுப்பி விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------------
ek ijaazat de do bas, jab isako dafanaaungee
main bhi vaheen so jaungee
main bhi vaheen so jaungee

அத்தோடு எனக்கு நீ ஒரு அனுமதியையும் வழங்கி அனுப்பி விடவும், எப்போது அந்த உடைமைகளை நான் எரிக்கின்றேனோ
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதர்கான  அனுமதியையும் வழங்கிவிடவும்
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதற்கான அனுமதியையும் வழங்கி விடவும்
---------------------
படம்: இஜாஜத்
கவிதை(கஜல்) வரிகள்: குல்ஜார்
இயக்கம்: குல்ஜார்
நடிப்பு: நசிருதீன் ஷா, ரேகா, அனுராதா படேல்
இசை: ஆர்.டி.பர்மன்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே (ஆர்.டி.பர்மனின் மனைவி)
படம் வெளியான ஆண்டு: 1987
தேசிய விருதுகள்:
சிறந்த பாடகி: ஆஷா போன்ஸ்லே (1988)
சிறந்த பாடலாசிரியர்: குல்ஜார் (1988)

No comments: