Sunday, March 13, 2011

இடம்

சில பேர்களுக்கு என்ன ஆசை என்றால் இந்த பூமியில் தமக்கென்று ஒரு இடமாவது வாங்கி போட வேண்டும் என்பது, இது நியாயமான ஆசை தான்,

ஆனால் இந்த உலகத்தில் பல பேர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த பூமியில் எல்லா இடத்தையும் வாங்கி சொத்து எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே போக வேண்டும் என்பது தான். இது அநியாய ஆசை.

ஆபிதீன் நானா 'இடம்' என்று ஒரு சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்கள். சரி, வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர்ல ஒரு எடம் கூட வாங்கி போடலை.. ஆபிதீன் நானாட எடத்தயாவது வாங்கி போடலாம்னு பார்த்தா எங்கே தேடியும் கிடைக்கலை. தேடவே இல்லை என்பது பொய். தேடிய இடத்தில் இல்லை அல்லது இல்லாத இடத்தில் தேடியிருக்கிறேன் என்பதே மெய்.

நான் சிங்கப்பூரில் இருந்து எங்க ம்மாக்கு ஒரு கடிதம் எழுதினேன், ’இங்கே சுத்தமான சிங்கப்பூர் சோறு போட்டாலும், நாகூரில் கிடக்கும் குப்பைகளை கூட என் மனம் தேடுகிறது’ என்று. எனக்கு பிடித்த ஊர் நாகூர். பிடித்த இடம் எங்கள் வீடு தான்.

ஆனா எங்க ம்மா என்னய வீட்ல இருக்கவே உடலை. அதுக்கு காரணம் நான் தான். சரி விஷமம். அப்போ எட்டாவது பரீட்சை முடிஞ்சு லீவு. வூட்ல வெசமம் தாங்கலைண்டு எங்க ம்மா அப்பாஸ் அவர்களை கூப்பிட்டு (இப்போ இந்த அப்பாஸ் அவர்கள் தான் நாகூர் தவ்ஹீது ஜமாத்தின் முக்கிய பேச்சாளர் - நான் நினைக்கிறேன் நாகூர் தவ்ஹீத் ஜமாத்துக்கே தலைவர் என்று) 

'இந்தாம்மா ஒன் கடைல (அதாவது அவர் வேலை பார்க்கும் சிங்கப்பூர் கடையில்) இவன வச்சுக்கம்மா.." என்று சேர்த்து விட்டார்கள்.  

அப்போது கடையில் என்னய எந்த வேலையும் செய்ய சொல்ல மாட்டார்கள், அது நான் பணக்கார வீட்டு புள்ளை என்று ஒரு உண்மை கலந்த பொய்யான கருத்திருந்ததாலும் என் மேல் எல்லோருக்கும் பிரியம் என்ற பொய் கலந்த உண்மை என்பதாலும் இருக்கலாம்.

புடவை எடுத்து காட்டுவது, காச வாங்கி கல்லால போடுவது, தேத்தணி வாங்கிட்டு வருவது, தேத்தணி ஊத்தி கொடுப்பது என்று வழக்கமாக கடையில் இருந்தால் என்னென்ன வேலை செய்யணுமோ இப்படி எதையுமே செய்ய மாட்டேன். 

இது அங்கே வேலை பார்த்த ஒரு நானாக்கு ரொம்ப நாளாவே உறுத்திகிட்டு இருந்துச்சு.. அஹ பரம ஏழை..

ஒரு தடவை என்னய கூப்பிட்டு 'தம்பி எல்லாருக்கும் தேத்தணி ஊத்துங்க' என்றார்கள். 

நான் திமிரெடுத்து போய் காதுலேயே வாங்காதது போல் இருந்த போது  அப்பாஸ் மறுத்தார், 'அதெல்லாம் தம்பிய சொல்லாதீங்க.." என்று -

'ஏன் சொல்லக் கூடாது? கடைல வேலைக்கு தானே வந்திருக்கிறாரு.. அப்றம் சும்மா ஒக்காந்து இருப்பாராம்மா..?' என்று கேட்டதற்கு

அப்பாஸ் 'இஹ பெரிய எடம்.." என்று பதில் சொல்லவும்,

வந்ததே கோவம் அந்த வயசான நானாவுக்கு, 'என்னா.. பெரிய எடம்.. பொல்லாத பெரிய எடம்.. அப்படி என்னா எடம்.. மனாரா ஒசக்கயா..? எல்லாம் ஒண்ணு தான் ஊத்த சொல்லுங்கன்னி..' என்று.. 

ஒவ்வொரு வியாழன் மாலை வெள்ளி இரவு (எங்க ஊர் வழக்கப்படி) எங்களது ஹஜ்ரத் வீட்டில் சன்மார்க்கம் பற்றிய சொற்பொழிவு நடக்கும். அந்த கூட்டத்தில் அமர எனக்கும் அனுமதி கிடைத்தது.

கேட்டவுடன் எல்லோருக்கும்  அனுமதி கிடைத்து விடாது.

அந்த பேச்சு அப்படிப்பட்ட பேச்சு. உதாரணமாக,

"எந்த பொருளை நாம் அடைய வேண்டுமோ அந்த பொருளை விட நாம் பெரியதாக இருக்க வேண்டும்"

"கடன்படும் போது இருக்கும் உற்சாகம் கடனை திருப்பி செலுத்தும் போதும் இருக்க வேண்டும்"

"அழுகையையும் வேதனையையும் கண்ட்ரோல் பண்ண சிரிப்பை கண்ட்ரோல் பண்ண வேண்டும்"

மேலேஇருப்பது துளியில் இருந்த எடுத்த அணு. அந்த பேச்சுக்கள் சொல்லப்படும் இடம் ஏதோ நரகத்தை காட்டி பயமுறுத்தியோ சுவர்க்கத்தை காட்டி ஆர்வமூட்டியோ நடக்கும் வழக்கமான இடமல்ல.

ரொம்ப அமைதியான மரியாதையான இடம்.

வீண் பேச்சு, வெடிச் சிரிப்பு எல்லாம் சென்சார்ட் செய்யப்பட்ட இடம்.

அப்படியாபட்ட இடத்தில் தான் எனக்கு அமர அனுமதி கிடைத்தது.

எனக்கு எதை எந்த இடத்தில் பேச வெண்டும் என்று தெரியாது. ஒரு முறை எங்க ஹஜ்ரத் அவர்களிடம் ஏதோ தவறாக கேட்டு மாட்டிக் கொண்டேன்.

அது என்ன கேட்டேன் என்று நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் நான் கேட்டது பிர்அவ்னை பற்றி.

ஹஜ்ரத் அவர்களிடம் நான் ஹதீதுகளை பற்றி நிறைய கேள்விகள் கேட்டதுண்டு. ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை 'ஹதீது' என்றே அழைக்கலானார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

‘எங்கே அவர் ஹதீது..?’ என்று தான் என்னை பேசுவார்கள்.

எனக்கு 'என்னடா இது இப்படி தவறாக கேட்டுவிட்டோமே' என்று உறுத்தலாகவே இருந்தது.

ஹதீதுகளில் ‘ஜிப்ரயீல் (அலை) ஹதீஸ் என்றும், இஹ்சான் ஹதீஸ்’ என்றும் ஒரு ஹதீஸ் இருக்கிறது.

அந்த ஹதீதில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன? (இறுதி) நேரம் எப்போது வரும்? அதற்குறிய அடையாளங்கள் என்ன? என்றெல்லாம் கேட்பார்கள்.

அந்த ஹதீஸில் ஜிப்ரயீல் (அலை) பாடம் கற்க வந்த இடத்தில் மிகவும் மரியாதையாக அமர்ந்து அடக்கமாக கேள்விகள் கேட்பார்கள். இந்த ஹதீத் மரியாதையாக எப்படி பாடம் படிப்பது என்பதையும் கற்றுத் தரும் சிறப்பான ஹதீதாகும்.

பார்க்கவும்: http://fortyhadith.iiu.edu.my/hadith02.htm  


பாடம் கற்க சென்ற நான் மரியாதையாக நடந்து கொள்ளாதது போல் பேனதாக என்னுள் உறுத்திக் கொண்டே இருந்தது.

நான் என்னா செஞ்சேன், அடுத்த நாள் காலையில் ஹஜ்ரத் அவர்களிடம் சென்று 'தெரியாம அப்படி முட்டாள்தனமா கேட்டுட்டேன் ஹஜ்ரத்.. என்னை மன்னிச்சுடுங்க.. என்ன செஸ்ஸனுக்கு மட்டும் வரக்கூடாதுன்னு சொல்லிடாதீங்க.." என்று கேட்டுக் கொண்டு அறிவுப் பசியை தீர்க்க அடுத்த வாரமும் அதே இடத்திற்கு வந்தேன்.

ஹஜ்ரத் சொன்னார்கள், 'இவர் ஒரு தப்பை ஒரு எடத்துல நாலு பேரு இருக்கும் கூட்டத்துல இருக்கும் போது செஞ்சாரு.. ஆனா மன்னிப்பை வேற எடத்துல தனியா வந்து கேட்டுட்டாரு.." என்று

அப்போது தான் எனக்கு புரிந்தது, எந்த செட் பிள்ளைகள் கூடியிருக்கும் சபையில் பொருந்தாத தவறான கேள்வியை கேட்டேனோ அதே பிள்ளைகள் கூடியிருக்கும் செஸ்ஸன் நடக்கும் இடத்திலேயே மீண்டும் "என்னை மன்னித்து விடுங்கள்" என்று உடனே கேட்டேன்.

இடங்களுக்கு இஸ்லாத்தில் கூட நிறைய முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும். இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூற சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.

குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும்,  ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”

மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் - ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)  - வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.

அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.

’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு

மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.

அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.

அது மட்டுமா, இன்னொரு இடத்தில், (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்)  இன்னும் "என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.  

குரான் ஷரீஃப் 2:125

சூரியன் படத்துல வர்ர கவுண்டமணி அவர்கள் மாதிரியே ‘எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும்’ என்று பேசக்கூடிய (அந்த படத்தில் வருவதை போல் அரசியல்வாதி அல்ல - இவர் வியாபாரி) வெளிநாட்டில் வியாபாரம் செய்து வந்தார்.

ஊருக்கு வந்தால் தான் தான் எல்லங்குற மாதிரி தான் பேசுவார், இவருடைய கூட்டாளிகளில் இருவர் இவர் வசித்த நாட்டிற்கு வர ஆசைப்பட்டார்கள்.

அவர்களாகவே ஏற்பாடு செய்து விட்டு அங்கே சென்று விட்டார்கள்.

நாகூர் சூரியன் அவர்களை வரவேற்று, ‘ஒரு பெரிய ஃபங்ஷன் இஸ்தானா எனும் இடத்தில் (அதிபர் மாளிகை) நடக்கிறது, அங்கே சென்று வாசலில் நிற்கும் காவலாளிகளிடம், நான் தான் இன்னாரோட (அவர் பெயரை சொல்லி) ஆளுன்னு சொல்லுங்க.. அப்ப தெரியும் நான் எவ்ளோ பெரிய எடம்ன்னு..” என்று சொல்ல

அவர்கள் சொன்னது போலவே அங்கே போய் நின்று, ‘நான் தான் இன்னாரோட ஆளு உதாரணமா மஸ்தானோட ஆளு..’ என்று சொல்லவும்..

அந்த இடத்தில் இருந்த காவலாளி, ‘ஆப்படா மஸ்தான்.. ஈலாங் டரி சினி..’ என்று புடிச்சு ஒரு தள்ளு..

அந்த எடத்துல புடிச்ச ஓட்டம்.. நாகூர் மணராஅடில தான் நின்னுச்சு..

(குறிப்பு: ஆப்படா மஸ்தான் ஈலாங் டரி சினி.. என்ற மலாய் வார்த்தைக்கு என்னா மஸ்தான்... இங்கேந்து ஓடி போயிடு அல்லது காணா போயிடு’ என்று அர்த்தம்)

4 comments:

ஆபிதீன் said...

//வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர்ல ஒரு எடம் கூட வாங்கி போடலை..// உங்க லாத்தா மனசுல எடம் வாங்கி போட்டிருக்கேனே இஸ்மாயில்.. அது ஒண்ணு போதும் எனக்கு.

நானா

ஆபிதீன் said...

//சரி, வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர்ல ஒரு எடம் கூட வாங்கி போடலை.. // தவறுக்கு மன்னிக்கவும். உங்களை சொல்வதை இப்போதுதான் கவனித்தேன். குடும்பத்தார்கள் மனதில் இடம் வாங்கிப் போட்டிருக்கிறீர்களே..அது போதாதா துரை? ஆப்படா மஸ்தான் ஈலாங் டரி சினி...!

நானா

nagoreismail said...

ஆபிதீன் நானா.. உங்களோட இரண்டு வலையும் தக்வாவா இக்கிது..

மனதில் இடம் போதுமானது தான் நானா..! ஒப்புக் கொள்கிறேன்..!

nagoreismail said...

ஆப்படா மஸ்தான்.. கதை ரொம்பவும் சுவாரசியமானது நானா.. இஜட்.ஜஃபருல்லாஹ் நானா வாயால தான் அதை கேக்கணும். உண்மையிலேயே மஸ்தான் அல்ல அது வேற பேரு..