Wednesday, March 16, 2011

ஜட்ஜப்பா - பகுதி 6


முந்தைய பகுதிகளின் இணைப்பு:

1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html 

2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html 

3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html 

4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html


5. http://nagoreismail786.blogspot.com/2010/08/5.html 


_________________________________________________________________


ஜட்ஜ் அப்பாவுடன் கலைஞர் அப்பா


வாரா வாரம் நான் ஜட்ஜப்பா வீட்டிற்கு வந்தாக வேண்டும். ஒரு வாரம் வரவில்லை என்றாலும் சேச்சிமா (ஜட்ஜப்பாவின் துணைவியார்) “ஓய்.. ஏங்கணி, போன வாரம் வரலை..?, அப்பா தேடுனாஹல்ல..!” என்பார்கள்.

அப்படி வந்தால் தவறாமல் அவர்களிடம் போய் சற்று பக்கத்தில் நின்று பேசிவிட்டு வருவேன். அப்படி தான் ஒரு முறை அவர்களிடத்தில் போகும் போது அவர்கள் தொலைபேசியில் இருந்தார்கள்.

தொலைபேசி முடித்ததும் அவர்களாகவே சொன்னார்கள், ‘கலைஞர் தான் பேசினார்.. கேரளாவிலிருந்து ஒரு வைத்தியர் காலுக்கு வைத்தியம் பண்ணி விடுகிறாராம்.. காலையில் கோட்டையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்..’ என்றெல்லாம் சொன்னார்கள்.

ஜட்ஜப்பாவின் மீது மறைந்த காஞ்சி பெரியவருக்கு தொடர்பு உண்டு, மரியாதை உண்டு என்றால் எல்லோரும் ஆச்சர்யப்பட மாட்டார்கள். ஆனால் கலைஞரோடு அவர்களுக்கு என்ன தொடர்பு..?

கலைஞர் முதல்வராக இருப்பதால் ஏதேனும் ஆதாயம் தேடி தான் இவர்களும் நட்பு வளர்த்திருப்பார்கள் என்பதற்கு பொய்யான ஆதாரம் கூட இல்லை. இவர்களின் நேர்மை உலகறிந்த உண்மை.

இவர்களின் நட்பை பற்றி அறிய குல்ஜார் சாபை பின்பற்ற வேண்டியிருக்கும், அதாவது காலத்திலிருந்து பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும்..

அப்போது அரசியலில் அதிரடியான நிகழ்வுகள் வரிசையாக நிகழ்கிறது. இந்திரா காந்தி அவர்கள் மீது தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகாரை தொடர்ந்து இந்தியா முழுவதும் ‘அவசர நிலை’ பிரகடனப் படுத்தப்படுகிறது.

பொதுவாக மக்கள், பத்திரிக்கை துறையினர், எதிர்கட்சியினர் முக்கியமாக தமிழ்நாட்டில் திமுகவினர் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் குரல் அதிகார வர்க்கத்தினர் குரல்வளை சுருக்காக போய் விட வேறு மார்க்கமின்றி நீதிபதி இஸ்மாயில் கமிஷன் விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்ப்பானது.

‘அல்லாஹ்வை தவிர எவருக்கும் பயப்படாத’ நீதிபதி இஸ்மாயில் அவர்களோ அழகிய தமிழில் ஒரு தேர்ந்த இலக்கியம் போல் எப்போதுமே சுடுகின்ற உண்மைகளை செறிக்கும் படி உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதிகார வர்க்கத்தினர் நேர்மையின் எதிரிகளாயிற்றே..!

சொந்த மாநிலத்தில் ஒருவர் நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற  சட்டத்தை ஒரே ஒருவரை இட மாற்றுவதற்காகவே புதிதாக கொண்டு வந்தனர்.

முறையான அறிவிப்பு ஏதுமின்றி ஜட்ஜப்பாவை ‘சென்னை தமிழ்நாடு தலைமை நீதிபதி’ பொருப்பிலிருந்து ‘கர்நாடக நீதிமன்றத்திற்கு’ மாற்றல் செய்தனர்.

உண்மையை உரைத்தவர் மீது உதவாத சட்டம் பாய்ந்தது.

தலைமை நீதிபதி பதவியையே ராஜினாமா செய்தார்கள் எங்களில் சிறந்தவரான அவர்கள்.



ஹிந்து நாளிதழ் ஜஸ்டிஸ் இஸ்மாயிலை ‘மேன் ஆஃப் இண்டெகிரிட்டி” என்று கூறியது

ஜட்ஜப்பாவை பற்றி இந்து நாளிதழில் வந்த அந்த நாளைய கட்டுரை

பதவிக்கும் படாடோபத்துக்கும் ஆசைப்படாதவரே உங்களில் சிறந்தவர் - நபிகள் நாயகம் (ஸல்)

The best Jihad (struggle) is to speak the truth before a tyrant ruler. - Hazrath Mohamed (Sal) - Bukhari

மறைந்த மூப்பனார் அவர்கள் ஜட்ஜப்பா வீட்டிற்கு வந்து ‘டெலிபோன் போட்டு தர்ரேன்.. பேசிட்டா பிரச்சினை முடிஞ்சிடும்..’ என்றெல்லாம் சொல்லி பார்த்தார்.

கலைஞருக்கு இவர்கள் மீது தனி மரியாதையும் வந்தது.

 

No comments: