Sunday, July 03, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி - ஆனந்த் - பழைய இந்தி பட விமர்சனம் 1

'மறுமை' இருக்கின்றதா இல்லையா என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்த செய்தி. ஆனால் ஒட்டுமொத்தமா ஒரு ஆள் விடாம எல்லோரும் ஒத்துக் கொள்கிற செய்தி 'மரணம்' நிச்சயம் உண்டு என்பதை தான். 


ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயமாக இருக்கும் வீட்டை காலி பண்ண வேண்டிய நிலை வரும்.  ஒரு பாழாய்ப் போன வியாதியும் வலியும் வேதனையோடு நம்மை கரை சேர்த்து விடும். எப்படையை கொண்டும் இதனை தடுக்க முடியாது, எக்கு கோட்டையில் ஒலிந்தாலும் இதிலிருந்து தப்பவே முடியாது.                         


அந்த காலத்தில் எல்லாம் யாருக்காவது நோய் வந்து விட்டால் அவர் ’சீக்காளி’ என்று கிண்டல் செய்வார்கள். இன்றைக்கு ’இவர் தான் எங்க ஃபேமிலி டாக்டர்’ என்பதில் தான் குடும்ப கவுரவமே அடங்கியிருக்கிற மாதிரி, ’அந்த டாக்டர் தான் எங்களுக்கு ஃபேமிலி டாக்டர்’ என்கிறார்கள் அதாவது ஒட்டு மொத்த ஃபேமிலியும் சிக்காக நோயாளியாக இருப்பதில் பெருமை கொள்வது தான் நாகரீகமாக நம்பி தொலைக்கப்படுகிறது.   


-------------------------------------------------------------------------


பழைய இந்தி படங்களில் எனக்கு குல்ஜார் சாபின் படங்களுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி அவர்களின் படங்கள் தான். ஆனாலும் இவரின் படங்களுக்கு  குல்ஜார் சாப் அவர்களும் இவரின் படங்களுக்கு வசனங்கள், பாடல்களை எழுதி பங்காற்றியுள்ளார்கள்.


ஹ்ரிஷ்டா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவரை 27 ஆகஸ்ட் மாதம் 2006ஆம் ஆண்டு இவ்வுலகை விட வலியுறுத்தப்பட்டிருந்தாலும் இந்த சிப்பி சில முத்துக்களை நம்மிடம் கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறது.


இந்த சிப்பியின் முத்துக்களில் வலிய புகுத்தப்பட்ட தோல்சேவை (அருவருக்கத்தக்க ஆபாச) காட்சிகளோ (skin show) வசனங்களோ இருக்கவே இருக்காது. குடும்பத்தோட பார்க்கக்கூடிய படம், குடும்பப் படம் என்பதற்கெல்லாம் உண்மையான சான்றாக இவரின் படத்தை முதன்மையாக சொல்லலாம்.


இப்போது இருக்கும் இயக்குனர்களிடம் ஆபாசமாக இல்லாமல் ஒரு படம் எடுங்கள் என்று சொன்னால் இண்டஸ்ட்ரிய விட்டு ஓடியே போய் விடுவார்கள். இவர்களுக்கு பிழைப்பே இறக்குமதி செய்யப்பட்ட வட (வடை அல்ல) இந்திய தோலில் (தோல் பிஸினஸ்) தான் ஓடிக் (அல்லது ஒட்டிக்) கொண்டிருக்கிறது.


------------------------------------------------------------------------


இந்தியாவின் ஷோமேன் என்று அழைக்கப்பட்ட ராஜ்கபூரும் ஹ்ரிஷிகேஷும் நண்பர்கள். பெங்காலியான இவரை ராஜ்கபூர் ‘பாபுமூஷாய்’ என்று தான் அழைப்பார். பாபுமூஷாய் என்றால் பெங்காலியில் மிகவும் மரியாதையோடு அழைப்பதை குறிக்கும். (நம்ம கூட தமிழில் ‘சார்(?)’ என்று அழைப்போமே அந்த வார்த்தையை விட மிகவும் மரியாதையான நெருக்கமான வார்த்தை)


தன்னுடைய இதய நண்பர் ராஜ்கபூர் நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு கொண்டிருந்ததை பார்த்து சினிமாக்காரரான இவர் திரையில் நண்பனின் கதையை வடிக்க எண்ணினார். அத்தோடு இவருக்கு எம்.வி.மேத்திவ் என்ற இன்னொரு நெருங்கிய நண்பரும் இருந்தார். இவர் Epicurean Philosophyயில் நம்பிக்கை உள்ளவர். 


Epicurean Philosophy என்றால் வலிகள், வேதனைகள் எதையும் பொருட்படுத்தாமல் எந்த விதமான செண்டிமெண்ட்ஸுக்கும் இடம் கொடாமல் வாழ்க்கையை, வாழ்ந்து கொண்டிருக்கும் தருணங்களை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது தான்.


இரண்டு நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட அனுபவங்களை வைத்துக் கொண்டு செதுக்கிய சிற்பம் தான் ஆனந்த். 


----------------------------------------------------------------------------


ஆனந்தாக ராஜ்கபூரின் தம்பி ஷஷி கபூரை செண்டிமெண்டாக (?) நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் முடியாமல் போனது. பிரபல பிண்ணனி பாடகர் கோல்டன் வாய்ஸ் கிஷோர் குமாரை நடிக்க கேட்கும்படி இவரது இல்லத்திற்கு சென்றார்.


கிஷோர் குமார் காசு விஷயத்தில் ரொம்பவும் கறாரான பேர்வழி. தனக்கு தர வேண்டிய காசை எவரும் தராமல் பாக்கி வைத்திருந்தால் எந்த எடம் எந்த சபை என்றெல்லாம் பார்க்க மாட்டார், இப்படி தான் ஒரு முறை எம்.வி.ராமன் என்று ஒரு இயக்குனர் இவருக்கு 5000 ரூபாய் தராமல் பாக்கி வைத்திருந்தார். இவரின் படப்பிடிப்பு தளத்திற்கு கிஷோர் வரும் போதெல்லாம் ‘பாஞ்ச் ஹஜார் ருபியா (5000 ரூவா)’ என்று கத்திகிட்டே இருப்பாராம்.


இப்படிப்பட்டவரை தான் ஹ்ரிஷிகேஷ் நடிக்க வைக்க ஆசைப்பட்டார், கிஷோரும் பெங்காலி தான். ஆனால் கிஷோர் தனது வீட்டின் காவலாளியிடம் ‘ஒரு பெங்காலி வருவான், அவன் ஸ்டேஜ் நாடகத்துக்கு இன்னும் தர வேண்டிய காசை தரலை.. அதனால அவன் வந்தான்னா வீட்டு வாசற்படி ஏற விட்டுடாதே..’ என்று வேறொரு பெங்காலி காரரை பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்று விட்டார்.


அந்த நல்ல நேரம் பார்த்து பெங்காலியான ஹ்ரிஷிகேஷ் அவர்கள் ஆனந்த படத்தில் ஆனந்தாக நடிக்க கிஷோரை கேட்க சென்ற போது வீட்டு வாசலிலேயே காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த காவலாளி கிஷோர் சொன்ன பெங்காலி ஹ்ரிஷிகேஷ் தான் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே காரணம்.


எல்லாம் நல்லதுக்குத் தான், அப்படி ஒரு சம்பவம் நடக்க போய் தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவுக்கு உள்ள ராஜேஷ் கண்ணா அவர்கள் அந்த பாத்திரத்தை ஏற்று ஆனந்தாகவே இறந்து காட்டி உயிர் ஊட்டியதை பார்க்க முடிந்தது. எபிகூரியன் ஃபிலாசபியை மீறி எமோஷனலாக கண்ணீர் சிந்த முடிந்தது.


----------------------------------------------------------------------------
தொடரும்...

No comments: