Thursday, October 22, 2009

மாமியாரா..? என்னோட அம்மா..!

எனக்கு பிடித்த விளம்பரம்

Sunday, October 18, 2009

ஆன்ந்தி - (புயல்) - பழைய இந்தி பட விமர்சனம்

அரசியலுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இது மத்த எல்லா மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு ரொம்பவே பொருந்தும். பாபா என்ற சுமாராக கூட இல்லாத படத்தை திரையிட விடாது பொட்டியுடன் பொட்டியை கட்டியது தமிழக அரசியலின் அல்லது  சினிமாவின்  வரலாற்று  சிறப்புகளில் ஒன்று.

இதே போல் குல்சார் சாப் அவர்கள் இயக்கிய ஆன்ந்தி என்ற படத்தை அன்றைக்கு (1975 வாக்கில்) வெளியிட விடாமல் தடுத்து நிறுத்தியதும் அரசியல் செல்வாக்கு தான், அது மட்டுமல்ல அந்த படத்தில் பாடிய கிஷோர் குமாரின் பாடல்களை இரண்டு வாரத்துக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாது தடை செய்திருந்தார்கள் என்றும் படித்ததுண்டு.

அவ்வாறு ஆன்ந்தி - புயல் என்று தமிழில் அர்த்தம் - படத்தை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கு காரணம் என்ன என்றால், படத்தின் கதை இந்திரா காந்தி அவர்களின் கதையை ஒத்து இருந்தது தான். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படம் வெளியாக முடிந்தது.

குல்சார் சாப் கதை சொல்லும் அழகே தனி. பிளேஷ் பேக் காட்சிகள் இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் படங்களில்  பிளேஷ் பேக் காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரே தடவையில் பிளேஷ் பேக் காட்சிகள் வந்து முடிந்து விடாது, இடையிடையே பிளேஷ் பேக் காட்சிகள் வந்தவண்ணம் இருக்கும். குல்சார் சாபின் படங்களான பரீச்சே, கோஷிஷ், இஜாஜத், அங்கூர், நம்கீன் இன்னும் அத்தனை கவிதை(யான படங்க)ளும் இதற்கு சாட்சி, அதற்கு, இந்த ஆன்ந்தியும் விதிவிலக்கல்ல..

ஆர்த்தி தேவி (சுசித்ரா சென் - இவர் 12B படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன் சென் என்ற நடிகையின் தாயார் மற்றும் தாஜ்மஹால் படநாயகி ரியா சென், ரய்மா சென்ஆகிய நடிகைகளின் பாட்டி)என்ற சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் சந்திரசேன் (ஓம்சிவ்பூரி) மேடையில் காட்டமாக கேள்விகள் கேட்டு இடைதேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் நாடகம் நடத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது.

ஆர்த்தி தேவியை இடை தேர்தல் நடக்கும் ஊருக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர் வந்தால் தங்குவதற்கு இருக்கும் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் எரிந்து சாம்பலாகிய நிலையில் அவர் தங்குவதற்கு ஹோட்டலில் வசதி செய்ய திட்டமிடுகிறார் அவரின் பிரச்சார குழு தலைவர் (ஓம்பிரகாஷ்).

ஒம்பிரகாஷ் ஹோட்டல் மேனேஜர் ஜே.கே.யை (சஞ்சீவ் குமார்) சந்தித்து தங்களுக்கு தெற்கு கிளையில் உள்ள எல்லா அறைகளையும் வேண்டும் என்று புக் செய்கிறார்.

ஜே.கேவுக்கு ஆச்சரியத்துடன், "இவ்வளவு ரூம் தேவைப்படுகிறதே அப்படி யார் வருகிறார்கள்?" என்று கேட்க, "ஆர்த்தி தேவி வருகிறார்", என்றதும் சற்று தடுமாறுகிறார்.

ஆர்த்தி தேவி ஹோட்டலில் வந்து இறங்கியவுடன் அங்கு இருக்கும் ஊதுவர்த்தி, மண் பானையில் தண்ணீர் போன்று அவருக்கு பிடித்தமான அத்தனையும் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார். அவருக்கு பிடித்த பூவையும் ஹோட்டல் சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது. எல்லாம் ஜே.கே.யின் ஏற்பாட்டின் படி தான் நடந்திருக்கின்றது.

ஆர்த்தி தேவி மகிழ்ந்து தனக்கு பிடித்தவைகளை யாரோ தெரிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்.

ஜே.கே விடம் சமையல்காரராக இருக்கு பிந்தா காக்கா (A.K.ஹங்கல்)  என்பவரிடம் "நீங்கள் (ஆர்த்தி தேவியை) பார்த்தீங்களா?" என்று ஜே.கே. கேட்கிறார்

பிந்தா காக்கா, "உங்கள்ட்ட கேக்காம எப்படி போய் பாக்குறது?" என்கிறார்

"இதுல எண்ட்ட கேக்க என்ன இருக்கு? என்னய விட அதிக உரிமை உங்களுக்கு தான் இருக்கு, நீங்க ஆர்த்திய சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்திருக்கிறீங்க.. அப்புறமா பிஸியா இல்லாத நேரமா பார்த்து போய் பாருங்க" என்கிறார்

தொடர்ந்து பிந்தா காக்கா போய் பார்க்க ஆர்த்தி தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார், "நீங்கள் எப்படி இங்க..?" என்று ஆச்சர்யம் கொள்கிறார்

"நான் சாபோடு தான் இருக்கேன்.. இப்ப சாப் இந்த ஹோட்டல்ல தான் வேல பார்க்குறாங்க.." என்கிறார்

ஊதுபத்திக்கும், மண்பானைக்கும், பூக்களுக்கும் அர்த்தம் புரிந்து விடுகிறது ஆர்த்தி தேவிக்கு, "காக்கா, நான் இங்கே கொஞ்ச நாளைக்கு இருப்பேன், நீங்க அடிக்கடி வந்து பாருங்க.." என்று விடைபெறுகிறார்.

"இஸ் மோடு (சாலையில் உள்ள வளைவுகள்) ஸே ஜாதே ஹேய்ன்" - என்ற நினைவுகள் பாடலாக பின்னோக்கி ஜே.கேயின் பார்வைகளில் நகர்கின்றது.

அதாவது குழப்பமான பல வளைவுகளை உடைய சாலையில் நின்று ஆர்த்தி தேவி ஜே.கேயை நினைத்து பாடுகிறார்,

எந்த வளைவுகள் வழியாக நான் போவது?

கற்களாளான அரண்மனை அல்லது மாளிகை(கோடீஸ்வரர்கள் வசிக்குமிடம், கண்ணாடி வீடுகள் (நடுத்தர வர்க்கம் வசிக்கும் வீடுகள் என கொள்ளலாம்), பறவையின் கூடு போன்ற சிறிய வீடு (ஏழைகள் வசிப்பது)

இப்படி பல இடங்களுக்கு வழிகள் இருக்கிறது? - எந்த வழியில் சென்றாள் தன் காதலனிடம் (காதலியிடம்) தன்னை கொண்டு போய் சேர்க்கும்? என்று -

பல பேருக்கு இந்த பாட்டு பிடிக்காது என்று  தான்  நான்  நினைக்கிறேன்   ஏன்னாக்கா  இது மிகவும் அருமையான கருத்தாழமிக்க பாடல் - எங்கே இப்போ உள்ள கவிஞர்களை இதே போல் எழுத சொல்லுங்களேன் பார்ப்போம்? - அவங்க "போடா போடி" என்று எழுதுவார்கள்.

பாடல் நினைவுகள் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முடிவுறுகிறது. ஜே.கே போய் கதவை திறக்கிறார். வாசலில் ஆர்த்தி தேவி. இருவரும் ஒரு கனம் திகைத்து போய் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.

இருவரும் கணவனும் மனைவி என்றும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்சிகள் அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கவிதைகளாகவும் பதிகின்றன.

படத்தில் ஒட்டு மொத்த கதை..

ஆர்த்தி தேவி மிகவும் பிரபலமானவர்.தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறார். ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டல் மேனேஜர் தான் தனது கணவர் என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு பிறகு தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் ஈடுபாடுகள் இருந்ததால் குடும்பத்தையும் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது, இதன் காரணமாக கணவனுக்கு மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 9 வருடம் கழித்து மறுபடியும் இந்த ஹோட்டல்ல் சந்தித்து இருக்கிறார்கள்.

ஆர்த்தி தேவி பிரபலமாக இருப்பதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை அரசியலுக்கு பிரச்சினையாக வரக் கூடாது என்று கருதினாலும் தனது கணவரை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது, வெளியே போய் வருவது என்று இருக்கிறார்.

அப்படி வெளியே முதன் முறையாக ரொம்ப நாளைக்கப்புறம் வரும் போது ஒரு பாடல் வருகிறது.

"தேரே பினா ஜிந்தகி சே கோய் சிக்வா தோ நஹி சிக்வா நஹி..
தேரே பினா ஜிந்தகி சே லேகின் ஜிந்தகி தோ நஹி ஜிந்தகி நஹி.."
- என்று வரும் அந்த பாடல்..

அந்த பாடல் காட்சியில் இருவரும் பேசிக் கொள்வது போல் வசனமும் இடம் பெறுகிறது, ஏதோ எனக்கு தெரிந்த மொழியில்.. எனக்கு தெரிந்த வரையில்..

பெண்: ரொம்ப நாளைக்கப்புறம்... வெளியே வர்ர மாதிரி ஒரு உணர்வு...

ஆண்: என்ன அது..?

பெண்: ஒரு யுகம் தாண்டி வந்த மாதிரி இருக்கு

ஆண்: ம்.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு.. (ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை காட்டி) இந்த கட்டடம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அந்த காலத்துக்கு..

பெண்: ம்.. இன்னொரு ஜென்மம் கெடைச்சு வந்த மாதிரி..இல்ல?

ஆண்: நாம் ஒண்ணு செய்வோம்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும் தெனமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரி இருக்கும்.. (ஆர்த்தி தேவி குளிரில் நடுங்குவதை பார்த்து) ஒன் ஷால் எங்கே?

பெண்: நான் மறந்துட்டேன்

ஆண்: நீ இன்னும் மாறவே இல்லை.. இத வச்சுக்க.. (மாட்டி விடுகிறார்)

பாடல் ஆரம்பமாகிறது..

பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை

சரணம் 1:
பெண்:
நான் போய் சேர வேண்டிய இடம் உன் பாதங்களை பின்பற்றியதாக இல்லாமல் வேறு எங்கேயோ தூரமாக விலகி சென்று விட்டது
நீ என்னுடன் இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து நான் போக வேண்டிய இடங்கள் குறைவில்லாமல் இருந்திருக்கும்

வசனம்:

ஆண்: ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..? அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள்.. நீ பகல்ல பார்த்தா தான் தெளிவா தெரியும்

(எதிரே கையை நீட்டி) இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..

(வேறொரு பக்கம் கையை காட்டி)பகல்ல இங்கே.. (என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)

பெண்: ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..

ஆண்: இந்த நிலவை பாரு.. இது ராத்திரியில மட்டும் தான் வரும்.. பகல்ல வெளியே வர்ரதில்ல..

பெண்: இது தான் எப்போதும் வருதே

ஆண்: ஆமா வரும்.. ஆனா எடைல.. அமாவாசை இருக்கு.. உண்மையில.. எப்போதும் அமாவாசை வர்ர நாள்லேந்து தொடர்ந்து 15 நாளைக்கு இருட்டாவே இருக்கும்.. ஆனா இந்த தடவை அமாவாசை வந்ததிலிருந்து ரொம்ப வருஷமா வரவே இல்ல..

பெண்: (தன்னை தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு) 9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..

சரணம் 2:
பெண்:
உன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கிறது..
உன்னுடைய கண்களிலும் அழுததற்கான தடங்கள் தெரிகிறது..

சரணம் 3:
ஆண்:
நீ மட்டும் ஒரு வார்த்தை சொன்னால் இந்த நிலவு மறைந்து போகாமல் தங்கி விடும், இந்த நிலவின் இரவுகள் நீடித்து இருக்கும்..
ஆனால் அப்படி நீ சொன்னால் கூட அது இந்த ஒரு இரவுக்கு மட்டும் தான்.. தொடர்ந்து வாழ்க்கை பூராவும் இருக்குமா என்று தெரியவில்லை


பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை

- இப்படியாக முடிகிறது அந்த பாடல்

கணவன் மனைவியின் பிரிவுகளின் வலியை இவ்வளவு உணர்வு பூர்வமாக எந்த வசனங்களும் பாடல்களும் சொன்னதில்லை என்பது என்னுடைய கருத்து.

படத்தில் ஆர்த்தி தேவியின் அரசியல் எதிரிகள் ஹோட்டல் மேனேஜருடன் ஆர்த்தி தேவிக்கு உறவு என்ற ரீதியில் குழப்பம் ஏற்படுத்த பல பிரச்சினைகள் புயலாக (ஆன்ந்தி) புறப்பட்டு வருகிறது.

ஆர்த்தி தேவியின் அரசியல் வாழ்க்கை, தேர்தல் முடிவு என்னாயிற்று? கணவருடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? சிம்லாவில் படித்து கொண்டிருக்கும் தனது குழந்தையை கண்டாரா? என்பதை எல்லாம் உணர்வு பூர்வமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸை பொறுத்த மட்டில் இந்த படத்தில் சஞ்சீவ் குமாரும், சுசித்ரா சென்னும் நடிப்பு பாடம் நடத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். எக்ஸலண்ட்.
அவுட் ஸ்டேண்டிங்.. மாஸ்டர் பீஸ்..

இந்த படத்தில் வேறு ஏதேனும் நுண்ணரசியல்கள் இருக்கலாம், எனக்கு தெரியவில்லை, ஏனெனில் அந்த பாடத்தில் நான் நர்ஸரி தான் படித்து வருகிறேன்.

பாடல்களை பொறுத்த வரை,

1.
சலாம் கீஜியே என்ற அரசியல் கிண்டல் பாடலும் முஹம்மது ரஃபி வாய்ஸில் கேட்டு மகிழலாம்.



2.
இஸ் மோடு ஸே ஜாதே ஹேய்ன் என்ற அர்த்தமுள்ள கணவன் மனைவிக்கான பாடலும் உள்ளது



3.
தும் ஆகயிஹே நூர் ஆகயா ஹே (நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது) என்ற காதல் பாடலும் உள்ளது



4.
தேரே பினா ஜிந்தகி சே கோயி என்ற பிரிவின் வலியும் உள்ளது




கிஷோர் - லதா - ஆர்.டி.பர்மன் - குல்ஜார் சாப் சேர்ந்தால் பாடல் ஹிட் தானே

சாப்பாட்டிலிருந்து கக்கூஸ் போறது வரை புயல் வேகத்தில் அவசரமாக போய் விட்ட இந்த உலகத்திலிருந்து என்னை அமைதியான மென்மையான் உலகத்துக்கு சில நேரங்களுக்காவது அவ்வப்போது அழைத்து செல்லும் படங்களில் இந்த புயலும் - ஆன்ந்தியும் - ஒன்று என்று தான் நான் சொல்வேன்

Wednesday, September 16, 2009

குரான் ஷரீஃப் - ஓர் அற்புதம்

1

முஸ்லீம்களுக்கிடையே குரான் ஷரீஃப் இறைவனுடைய பேச்சா இல்லையா என்பதில் சர்ச்சையே இல்லை.  ஆஹா..! இந்த விஷயத்திலாவது சர்ச்சை இல்லாமல் இருக்கிறதே என்று ஆறுதல் அடைய முடியாது.

ஏனெனில் அவர்களுடைய சர்ச்சை அது எந்த நாளில் இறக்கப்பட்டது என்பதில் உள்ளது. என் போன்றோர் அது ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவன்று இறங்கியிருக்கலாம் என்றும் இல்லை இல்லை அது கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவில் ஏதாவது ஒரு இரவில் இறங்கியது என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் மறுசாரார் பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.

சரி, இந்த சர்ச்சை கியாமத் (இறுதி நாள்) வரை நடந்து கொண்டு தானிருக்கும். அதில் நான் அதிகம் கவனம் எடுத்து கொள்ள போவதில்லை.

குரான் ஷரீஃப் உலகத்தின் மிகப்பெரிய அற்புதம் என்று நான் உளப்பூர்வமாக அனுபவித்து கூறுகிறேன். நான் அவ்வாறு கூறுவதற்கு தர்க்க ரீதியான காரணமும் உண்டு.

மூஸா (மோஸல்) நபியவர்கள் கடலை பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்கள். ஈஸா (ஜீஸல்) நபியவர்கள் இறந்தவர்களை உயிர்பித்தார்கள். இன்னும் புராணங்கள், இதிகாசங்கள் போன்ற எல்லா வற்றிலும் தீர்க்கதரிசிகள் அல்லது அவதாரங்கள் அற்புதங்களை நிகழ்த்தியதாக தான் காண்கிறோம்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதம் குரான் ஷரீஃப் தான். இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். "இறைவனிடமிருந்து என்ன அற்புதத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.." என்ற கேள்வி அவர்கள் முன் எழுப்பப் பட்டது.

இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் ஆச்சர்யமில்லை. தீர்க்கதரிசிகளாக தோன்றியவர்கள் ஏதாவது ஒரு அற்புதத்தை செய்து காட்ட வேண்டும் என்பது நியதி.

மேற்கூறிய இந்த கேள்விக்கு முஹம்மது நபிகள் எந்த மந்திரங்களையும் செய்து காட்டவில்லை, எந்த தந்திரங்களையும் செய்து காட்டவில்லை. "குரான் ஷரீஃபே இறைவனிடமிருந்து நான் பெற்ற அற்புதம்" என்றார்கள்.

என்ன அற்புதம் செய்து காட்ட போகிறீர்கள் என்ற  வினாவிற்கு  கடலை  பிளக்கிறேன், மலையை தூக்கிறேன் என்றெல்லாம சொல்லாமல் மக்களுக்கு இறைவன் தன்னை எடுத்து கூற சொன்ன கருத்துக்கள் அடங்கிய நூலை (சிறுநூலுக்குள் அடங்கிய பெருநூலகம் - குரான்  ஷரீஃப் பற்றி அடியார் அவர்கள்) அற்புதம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய அற்புதமான விஷயம் தானே.

2

சஅது பின் ஹிஷாம் என்பவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "திருத்தூதரின் நற்பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா? அவர்களிடம் என்னென்ன குணங்கள் இருந்தன என்பதை விளக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

சஅது பின் ஹிஷாம் அவர்கள் கேட்டது அன்னை ஆயிஷா அவர்களிடம், அதாவது பெருமானார் அவர்களின் மனைவியிடம். ஒருவரை பற்றி சரியாக அவர் மனைவியை தவிர வேறு யார் சொல்லி விட முடியும். வெளியிலே ஆயிரம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டு உள்ளுக்குள் அதற்கு நேருக்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். இப்படி நடப்பது வெளியே நண்பர்களுக்கு கூட தெரியாது. ஆனால் மனைவிக்கு தெரிந்து விடும், "ஆமா எஹ தானே.." என்று மனைவிமார்கள் ஆரம்பித்தால் முடிந்தது கதை..

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நீங்கள் குரான் ஷரீஃபை ஓதுவது இல்லையா?" என்று கேட்டனர்.

'ஆம் ஓதுகிறேன்.." என்றார்கள்

"குரான் ஷரீஃப் போதித்த அத்தனை நற்பண்புகள் அனைத்தும் திருத்தூதரிடம் இருந்தன" என்று தீர்க்கமாக தெளிவாக சொன்னார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இதில் இரண்டு செய்திகள் கவனத்திற்குறியவை. ஒன்று பெருமானார் அவர்கள் எதை போதித்தார்களோ அதுவாகவே பெருமானார் வாழ்ந்தது, அதுவும் அவர்களின் மனைவியின் வாயாலேயே அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இரண்டாவது, பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியது.

3

இரண்டாவதாக சொன்ன கருத்தில் ஒரு சிறு குழப்பம் உள்ளது. பெருமானாரை குரான் ஷரீஃப் நற்பண்புகளுடையவராக மாற்றியதா? அப்படி என்றால் பெருமானாரிடத்தில் குரான் ஷரீஃபுக்கு முந்தைய வாழ்க்கையில் நற்பண்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததா? என்பதே அந்த குழப்பமாக இருக்கலாம்.

உண்மையில் பெருமானார் அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் தான் தன்னை இறைதூதர் என்று அறிவிக்கிறார்கள். நபிபட்டம் வழங்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்திலேயே பெருமானார் அவர்கள் தெருவில் நடக்கும் போது அவர்களை சுட்டிகாட்டி "அதோ அல் அமீன் (நேர்மையின் இருப்பிடம்) செல்கின்றார் என்றும் அதோ அஸ்ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) போகின்றார் என்றும் மக்கா நகர மக்கள் மனமுவந்து கூறி வந்தனர்.

அல் அமீன் அஸ்ஸாதிக் போன்ற பட்டங்கள் நம்மூரில் கிடைக்கும் டாக்டர் பட்டங்கள் போன்று என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உள்ளபடி அப்படி வாழ்ந்தார்கள். பெருமானாரின் வாழ்க்கையை படித்து பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

சரி நான் சொல்ல வந்த செய்தி பெருமானாரை (ஸல்) குரான் ஷரீஃப் மேன்மேலும் பண்படுத்தியது என்பது தான் உண்மை. அது எப்படி என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் விளக்குகிறது.

4

அந்த காலத்தில் மக்கா நகர மக்கள் தியானத்தில் மூழ்க தனிமையை நாடி மலை குகைக்கு செல்வது வழக்கம். அப்ரஹா என்பவன் யானை படையுடன் மக்காவில் அமைந்துள்ள தேவாலயத்தை இடிக்க வந்த போது பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தனிமையை நாடி ஹீரா குகையிலிருந்து விட்டு தான் திரும்பினார்கள்.

அப்படி தான் பெருமானாரும் தனிமையை நாடி ஹீரா எனும் மலை குகைக்கு சென்றார்கள். இரவு பகல் பாராமல் நாள், மாதம், வருடம் தெரியாமல் விளிப்பு நிலையில் இருக்கிறோமா உறக்க நிலையில் இருக்கிறோமா அல்லது இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கிறோமா என்று கூட தெரியாமல் அந்த இருளில் தவம் செய்தார்கள்.

அப்போது ரமலான் மாதம், நள்ளிரவு, தேய்பிறை, ஒளிப்பிழம்பான உருவம் ஒன்று அவர்கள் முன் தோன்றியது, பெருமானார் (ஸல்) அந்த ஒளிப்பிழம்பை பார்த்து பயந்து நடுங்கினார்கள்,  பேச துணியவில்லை, என்ன செய்வது என்றே விளங்க வில்லை, எனினும் சில நாட்களாகவே அந்த உருவம் தான் தன்னை கனவிலும் நினைவிலும் பிடிக்க வந்த  அதே உருவம்  என்றும் அதுவே இப்போது முழுமையாக தன்னிடத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்.

அந்த உருவம் அவர்கள் முன் வந்து, "ஓதுவீராக!" என்று கூறியது

'எனக்கு ஓத தெரியாதே..' என்றார்கள் எழுத படிக்க தெரியாத பெருமானார் (ஸல்) அவர்கள்

அந்த உருவம் அவர்களை இறுக கட்டி அணைத்தது. இதயத்தோடு இதயம் இணைத்தது. (இதை தான் சூபியாக்கள் (இறையன்பர்கள்) இதயத்திலிருந்து இதயத்திற்கு என்று கூறுகிறார்கள்)

இப்படியாக மேலே கூறியபடி மூன்று முறை நடந்த பிறகு குரான் ஷரீஃபின் முதல் அத்தியாயமானது அந்த உருவத்தில் தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஓதிக் காண்பிக்கப்பட்டது. அதையே பெருமானாரும் ஓதினார்கள்.

ஒதி முடித்த பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அந்த நிலையில் பெருமானாரின் நிலையை சொல்லவே வேண்டாம். அச்சமும் திடுக்கமும் நிறைந்தவர்களாக ஹீரா குகையை விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டி அன்னை கதீஜாவிடம் "என்னை போர்த்துங்கள்!" என்று ஏக்கத்திலும் பயத்திலும் சொன்னார்கள்.

எந்த ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த போது பயந்து நடுங்கினார்களோ அதே ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை, இஸ்லாம் மற்றும் முக்கியமாக இஹ்ஸான் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்க முடிந்ததற்கு காரணம் அதே குரான் ஷரீஃப் தான். (இதனை பற்றி விளக்கமாக இங்கே எழுத முடியாதமைக்கு வருந்துகிறேன்)

5

இப்படியாக குரான் ஷரீஃப் பல் வேறு சமயங்களில் அதாவது குறிப்பிட்ட ஒரே தடவையாக அல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதி 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், முந்தைய தூதுவர்கள் மற்றும் பிறர்களின் வாழ்க்கை சரித்திரங்கள், இறைவனை பற்றி அவனின் வல்லமை, ஆற்றல், அழகிய திருநாமங்கள்  பற்றிய வசனங்கள், சட்ட திட்டங்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்கள் இப்படியாக மனிதனுடைய அறிவு ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் உதவும் வசனங்களை கொண்டவையாக இறக்கியருளப்பட்டது.

இதில் உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்று வரும் போது ஒரு முறை உஹது யுத்தத்தின் போது சத்தியத்தின் எதிரிகளால் பெருமானாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் முகம் எங்கும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அதை துடைத்துக் கொண்டிருந்த அவர்கள், "தங்களிடம் அனுப்பப்பட்ட தூதரின் முகத்தை இப்படி உதிரத்தால் கோரப்படுத்தும் இவர்கள் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள்?" என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களாக முன் வந்து நான் தான் தூதுவர் என்று கூறவில்லை, அவர்களை இறைவன் அவ்வாறு தேர்ந்தெடுத்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்காக அவர்கள் எந்த கூலியையும் மக்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இறைவனுக்காக அனுப்பப்பட்ட அவர்களை மக்கள் இவ்வாறு துன்புறுத்துகிறார்களே என்ற வருத்தத்தில் அவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள்.

ஆனால் இறைவனிடமிருந்து இப்படி செய்தி வந்தது, "உபதேசம் செய்வதை தவிர்த்து அவர்கள் விஷயத்தில் உமக்கு வேறு எந்த பொறுப்பும் கிடையாது!"

இன்னொரு இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்து, "உமக்கு ஏற்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையோடு செயலாற்றும்" என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான்

இப்படியாக பெருமானார் அவர்களின் சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் இறைவன் உடனே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுவான்.

பெருமானார் (ஸல்) அவர்களும் இறை கட்டளைக்கு அறிவுரைக்கு இணங்கி செயலாற்றி வெற்றியும் பெற்றார்கள்.

பெருமானாரை குரான் ஷரீஃப் மூலமாக பண்படுத்திய இறைவன், "நீர் சிறந்த குணசீலர்.." என்று சான்றிதழையும் அதே குரான் ஷரீஃபிலேயே வழங்கி விட்டான்.

இப்போது நான் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் சொன்னதன் பொருள் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

6

குரான் ஷரீஃபிலே அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? முஹம்மது தன் வாயாலேயே தான் சொல்கிறார். இது இறைவனின் வார்த்தையன்று என்றும் தனது வாய்க்கு வந்தவாறு சொல்லினர்.

ஆனால் இப்படி பொய்யுரைத்தவர்களை அல்லது ஏற்க மறுத்தவர்களை பார்த்து இறைவன் குரான் ஷரீஃபின் மூலமாகவே சவால் விடுத்தான். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இதை விட சிறப்பான ஒரு வேதத்தை கொண்டு வாருங்கள் என்றும் அப்படி கொண்டு வரவே முடியாது என்றும் கூறினான். பிறகு ஒரு பத்து அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றான், அதுவும் முடியாது போகவே ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் என்றும் சவால் விடுத்தான்.

இறைவன் சவால் விடுத்தது அரேபிய இலக்கிய புலமையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்களே அவர்களிடத்தில். அத்தகைய இலக்கிய மேதைகள், கவிஞர்கள் படித்து பார்த்தனர்.

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்

- குரான் ஷரீஃப் 108 : 1 - 3

இத்தகைய அழகும் ஆழமும் இலக்கிய நடையும் இலக்கன பிழையில்லாமையும் உள்ள அத்தியாயத்திற்கு போட்டியாக அவர்கள் ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முயன்றார்கள்;

அவர்களால் இப்படி தான் கடைசியில் கொண்டு வர முடிந்தது, உண்மையில் குரான் ஷரீஃபிடம் சரணடைய முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்

மா ஹாதா கலாமுல் பஷர் (இது நிச்சயமாக மனிதனுடைய சொல்லன்று)

7

இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியான அபுஜஹ்ல் தீப்பொறி கக்கினான், ".. முஹம்மதின் தலையை கொன்று வருபவர்களுக்கு என்னிடமிருந்து நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பு.." என்று கஃபாவின் ஹூபல் சிலையின் முன்னே ஆணையிட்டு சத்தியம் செய்தான்.

முப்பத்து மூன்று வயதுடைய இளைஞர் உருவிய வாளுடன் பாய்ந்து சென்றார் முஹம்மதின் தலையை கொய்து வருவதற்கு. வழியில் எதிர்பட்டவர் "எங்கே செல்கின்றீர்?" என்று கேட்டதற்கு "முஹம்மதின் தலையை துண்டிக்க" என்றார் அந்த இளைஞர்.

வழியில் எதிர்பட்ட அவரோ, "முஹம்மதின் தலையை துண்டிப்பது இருக்கட்டும், உம்முடைய தங்கையும் மைத்துனரும் முஹம்மதின் மார்க்கத்தில் சேர்ந்து விட்டனரே.." என்றதும் முஹம்மது நபிகளின் இல்லம் நோக்கி விரைந்த கால்கள் அவர் தம் தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தது அப்போது.

கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக் குரல். ஒட்டுக் கேட்டார். கப்பாப் என்பவர் குரான் ஷரீஃபை அழகொழுக ஓதும் குரல் கேட்டது. அந்த ஒலி நாதத்தில் லயிப்பு ஏற்பட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்து தங்கையிடம் என்ன "ஓதிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்

தங்கையும் மைத்துனரும் நடுக்கத்தில். கப்பாப் பயந்து போய் மறைவில். இளைஞரின் கோபம் தாக்குதலை தொடுத்தது. காயத்துடன் தங்கை இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதாகவும், ஓதிக் கொண்டிருந்தது குரான் ஷரீஃபின் வசனங்கள் என்றும் சொல்லவே அந்த குரான் ஷரீஃபின் வசனங்களை தன்னிடம் காண்பிக்குமாறு வலியுறுத்தி அதனை ஓதினார்.

கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, ஓதிக் கொண்டிருக்கும் போதே, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று அவர்களை அறியாமலேயே வாய் விட்டு கூறினார்கள்.

அப்படி கூறியது இஸ்லாத்திற்கு மாறிய தனது அடிமையை அடித்து ஓய்ந்து, "உன் மீது இரக்கப்பட்டு நான் உன்னை அடிப்பதை விடவில்லை நான் களைத்துப் போனதால் அடிப்பதை நிறுத்தி விட்டேன்" என்று முன்பு கூறி தங்கை வீட்டில் மேற்கூறிய சம்பவத்தில் இஸ்லாத்தை தழுவி பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாவது கலிபாவாக (ஆட்சி தலைவர்) இஸ்லாமிய உலகை ஆண்ட ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தான்.

இவ்வாறு குரானின் ஒலியே எத்தனையோ பேர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து இருக்கிறது.

8

குரான் ஷரீஃபில் நபியே நீர் கூறும் என்று ஆரம்பிக்குமே தவிர நபி இன்னது கூறினார் என்று இருக்காது. அதாவது குரானில் இருப்பது அனைத்துமே இறைவனின் பேச்சு தானே தவிர முஹம்மது நபிகளின் பேச்சு கிடையாது

குரான் ஷரீஃப் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. அந்த அரபி மொழி வேத மொழி மட்டுமல்ல இன்றைக்கு சவுதி அரேபியா மட்டுமின்றி துபாய் ஈராக் முதல் மொரோக்கோ வரை வழக்கு மொழியாகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் குரான் ஷரீஃப் இருந்தாலும் அவை எல்லாம் மூல மொழியான அரேபிய மொழியிலிருந்து அருளப்பட்டதை பதிவு செய்து பிற்காலத்தில் முறையாக தொகுக்கப்பட்டு அப்படியே ஒரு புள்ளியேனும் மாற்றமில்லாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டவையே ஆகும்

இன்னும் சில வார்த்தைகள், வேதங்கள் மக்களுக்காக என்றால் அதை ஏன் மக்களிடமிருந்து மறைக்க வேண்டும். ஒரு வேளை திருமறை என்பதில் வரும் 'மறை' என்பதை தவறாக 'மறைத்து வைப்பது' என்று புரிந்து கொண்டார்களோ என்னவோ?


ஆனால் குரான் ஷரீஃபை மக்களுக்கு எடுத்து கூறும்படியும் மக்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆகவே குரான் ஷரீஃபை மக்களுக்கு போதிக்க மதில் சுவர் மேல் எல்லாம் ஏற வேண்டியதில்லை. எல்லா சம்பூகன்களுக்கும் ஓதுவதற்கு அனுமதியுண்டு. குரான் என்றாலே "ஓதக்கூடியது" அல்லது "ஓதவேண்டியது" என்று தான் பொருள்

நான் எனது ரிபோர்டிங் ஆபிஸருடன் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க போயிருந்தேன். அங்கு கிராஅத் ஓதினார்கள். அதை கேட்டவுடன் இஸ்லாம் அல்லாதவரான அவர் கண் கலங்கி விட்டார்.


குரான் ஷரீஃப் அற்புதம் என்றால் அது வினைத் தொகையை போன்று அற்புதம் நிகழ்த்தியது, நிகழ்த்தி கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டு தானிருக்கும்.

Tuesday, September 15, 2009

துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானது சம்மந்தமாக..

தட்ஸ் தமிழ் டாட் காமில் படித்த செய்தி

2 துப்புரவு தொழிலாளிகள் கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட போது விஷ வாயு தாக்கி பலியாகி விட்டதாக படித்தேன்.

அதன் இணைப்பு  இங்கே உள்ளது

இன்றைய தேதிக்கு மனித உயிர்களுக்கு அப்படி ஒன்றும் மதிப்பு கிடையாது. மனித உயிர்கள் என்று கூட என்னால் சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், நாடு, மொழி என்று பிரிந்து கிடக்கிறார்கள்.

ஒரு கதை கூட சொல்வார்கள். அமெரிக்காவின் நியுயார்க் நகரின் சாலையில் ஒரு குழந்தையை நாய் ஒன்று கடித்து கொன்றிருந்ததாம். அப்போது அதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் குழந்தையை காப்பாற்ற வேண்டு நாயை அடித்து கொன்று விட்டார்.

அதை பார்த்துக் கொண்டிருந்த அந்நகரின் காவல் அதிகாரி ஒருவர், ஓடி வந்து குழந்தையை காப்பாற்றிய அவரின் கையை பிடித்து , "வீரமிக்க நியுயார்க் வாசி ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று பாராட்டினாராம்.

அதற்கு அவர், "நான் நியுயார்க் வாசி அல்ல.." என்று பதிலுறைத்தாராம்

உடனே காவலதிகாரி, "பரவாயில்லை.. ஒரு வீரமிக்க அமெரிக்கர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று புன்னகைத்திருக்கிறார்

அதற்கும் அவர், "நான் அமெரிக்கரும் அல்லர்.." என்று கூறினாராம்

"அப்படி என்றால் யார் தான் நீங்கள்" என்று கேட்டதற்கு "நான் பாகிஸ்தானி" என்றாரம்

உடனே அடுத்த நாள் செய்தி தாளில் "தீவிரவாத பாகிஸ்தானி அநியாயமாக நடு ரோட்டில் நாயை அடித்து கொன்றார்.." என்று வந்ததாம்.

இப்படி மனிதர்கள் தான் மனிதர்கள் என்பதை மறந்து அவர்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கும் பல் வேறு சாதி மத நாடு மொழி இனம்  வர்க்கம்  போன்ற முகமூடிகளை அணிந்து சுய முகங்களை இழந்து பல காலங்கள் மறைந்தோடி விட்டது.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் துப்புரவு தொழிலாளிகள் இறந்தால் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேச வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காகத் தான்.

சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

ஊழியர்கள் சாக்கடை அமைக்க, சுத்தம் செய்ய, இருப்பதை மூட, இன்னும் பல்வேறு பணிகளுக்காக பூமிக்கு அடியில் இறங்கி வேலை பார்க்க வேண்டி உள்ளது.

பூமிக்கு கீழுள்ள இடங்களை ஆங்கிலத்தில் கன்ஃபைண்ட் ஸ்பேஸ் என்றும் தமிழில் வரையறுக்கப்பட்ட இடம் என்றும் அழைப்பார்கள்.

இத்தகைய இடங்களின் விளக்கமாவது..

1. உள்ளே செல்வதற்கும் உள்ளிருந்து வெளியேறுவதற்கும் குறைவான வழிகளே இருக்கும்
2. இயற்கையான காற்றோட்டம் இருக்காது
3. இயற்கையான வெளிச்சம் கிடைக்காது
4. அது வேலை செய்வதற்கான இடமல்ல (அதாவது அலுவலகம் போன்றோ கடைகள் போன்றோ அமைக்கப்பட்ட இடமல்ல)

மேற்கூறிய விளக்கங்களையுடைய இடங்களில் ஊழியர்கள் இறங்கும் போது அவர்களுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு ஆபத்துகள் உள்ளது.
அவையாவன..

1. உயிர்வாயு பற்றாக்குறை (ஆக்ஸிஜன் டெஃபிஸியன்ஸி)
2. தீயும் விபத்துகளும் கூட ஏற்படும்
3. நச்சுத்தன்மையுடைய அல்லது விஷத்தன்மையுடைய வாயுக்கள்

இதில் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷ வாயு பத்து லட்சம் பங்கு காற்றில் வெறும் பத்து பங்கு அளவு மட்டுமே கலந்து இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து உள்ளது.

ஆகவே ஊழியர்களை ஆபத்தான வரையறுக்கப்பட்ட இடங்களில் இறங்க சொல்வதற்கு முன்பு தேவையான உயிர்வாயு உள்ளதா என்று சோதிப்பதுடன் எரியக்கூடிய வாயுக்கள், விஷ வாயுக்கள் இல்லை எனவும் 100 சதவிகிதம் உறுதியாக தெரிந்தவுடன் தான் இறங்க சொல்ல வேண்டும்.

மேற்கூறிய இடத்தில் வேலை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அதிகாரிகள் இடத்தை சோதனையிட வேண்டும். அனைவருக்கு பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்.

விபத்துகள் விடுமுறைக்கு செல்வதே இல்லை. "இன்றைக்கு எங்க ஊட்டு காலண்டர்ல நல்ல நேரம்னு போட்டிருக்கு அதனால விஷ வாயு வந்தா கூட எனக்கு ஒண்ணும் ஆவாது" என்றெல்லாம் சொல்லி ஏமாந்து போக கூடாது. பாதுகாப்பு தான் உயிருக்கு உத்திரவாதம்

உயர்நீதி மன்றம் இத்தகைய விபத்துகளை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை இந்த மாத துவக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நல்ல துவக்கம் தான்

இது போன்ற வேலையிட விபத்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்

Sunday, September 13, 2009

ஹலீம் கஞ்சி செய்வது எப்படி?

பகுதி 1:

கடலை பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
துவரம் பருப்பு - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
பச்சை பயிறு - கால் (ரைஸ் குக்கர்) கப் அளவு
பாஸ்மதி அரிசி (அல்லது) பச்சரிசி - 1 ரைஸ் குக்கர் கப் அளவு
மேற்கூறிய அனைத்தையும் தண்ணீரில் ஒரு 15 நிமிடத்திற்கு அப்படியே போட்டு வைக்க வேண்டும்

15 நிமிடம் கழித்த பிறகு பருப்புகளை களைந்து அனைத்து தண்ணீரையும் வடித்து விட்டு
உடைத்த கோதுமை யை (முக்கால் ரைஸ் குக்கர் கப் அளவு)
அந்த பருப்புகளில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்

பகுதி 2
கோழியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) அல்லது இறைச்சியையோ (முள் இல்லாமல் - துண்டாக கால் கிலோ) சின்னசின்ன துண்டுகளாக அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் (அல்லது) கொத்துகறியும் (கால் கிலோ) வாங்கி வைத்துக் கொள்ளலாம்

பகுதி 3

குக்கரை (பிரஸ்டிஜ் வகை) அடுப்பில் வைத்து
அந்த குக்கரில்
எண்ணெய் (4 சோறு வைக்கிற ஆப்பை அளவு) ஊற்றி
பட்டை (சின்ன துண்டு 1), கிராம்பு (4),
வெங்காயம் (பெரியது 1 1/2), (நன்றாக வதங்கணும், கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால் பொண்ணிறமாக வந்துவிடும்)
இஞ்சி பூண்டு (5 டேபிள் ஸ்பூன்), (மீண்டும் வதங்கணும்)
நன்றாக மீண்டும் வதக்கிய பிறகு
தக்காளி (2),
பச்சை மிளகாய் (4),
மல்லி கீரை (கொஞ்சம்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு தாளித்து

அதுலேயே
மிளகாய் தூள் (1 1/2 டேபிள் ஸ்பூன்),
மிளகு தூள் (1 டேபிள் ஸ்பூன்),
ஜீரக தூள் (1 டேபிள் ஸ்பூன்),
மஞ்சள் தூள் (1 டேபிள் ஸ்பூன்),
உப்பு தூள் (தேவையான அளவு),
கரம் மசாலா (அல்லது) இறைச்சி மசாலா (4 டேபிள் ஸ்பூன்)
மேற்கூறிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி

பகுதி 2 ல் உள்ள கோழி அல்லது இறைச்சி அல்லது கொத்துகறியை கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

அடுத்து

பகுதி 1ல் உள்ள அனைத்து பருப்புகளையும் கொட்டி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி குக்கரை மூடி கொஞ்சம் ஆவி வந்தவுடன் குக்கர் வெயிட்டை போட வேண்டும்

குக்கரில் 4 சத்தம் வந்தவுடன் அடுப்பை அடக்கி விட வேண்டும்

ஆவி போனவுடன் குக்கரை திறந்து ஆப்பையில் பருப்பை நன்றாக மசித்து பார்க்க வேண்டும்.

எல்லாம் நன்றாக வெந்து கஞ்சி போல வந்தவுடன் தேங்காய் பால் - 5 கரண்டி (டேபிள் ஸ்பூன்) - ஊற்றி கஞ்சியை எறக்கி விட வேண்டும்

ஹலீம் கஞ்சி தயார்

5 அல்லது 6 பேர் வரை நன்றாக சாப்பிடலாம்

நன்றாக இருந்தால் சொல்லி அனுப்பவும்

Monday, September 07, 2009

ஜட்ஜப்பா (ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில்) - பகுதி 1

நாகூரில் இந்து முஸ்லீம் கலவரம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். நான் லுகாஸ் டிவிஎஸ் ஸில் வேலையில் சேர ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு பயணமானேன். சென்னையில் நான் தங்கியிருந்த வீடு மிக பிரம்மாண்டமான, கம்பீரமான வீடு. மயிலாப்பூரில், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் இருந்த அந்த வீட்டிலிருந்து அண்ணா நகரில் இருந்த இன்னொரு  வீட்டிற்கு  இரவு சாப்பாட்டிற்கு பிறகு புறப்பட  தயாராகிக்  கொண்டிருந்தேன்.

இறைச்சி கறியை கேள்வி கணக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த போது அங்கே அவர்கள் வந்தார்கள், "இந்து, முஸ்லீம்ன்னு சண்டைலாம் போட்டுகிட்டிருக்க கூடாது, வேலைய மட்டும் பார்க்கணும்.." என்று என் கிட்டே வந்து இத மட்டும் சொல்லி விட்டு இல்லை இல்லை சிங்கம் போல் கர்ஜித்து விட்டு நகர்ந்து போகிறார். வாயில் இறைச்சி துண்டோடு எழுந்து நின்று ஒரு பேச்சு பேசாமல் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும் என் வயிற்றுக்குள்ளே இறைச்சி போகவே இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு லுகாஸ் டிவிஎஸ்ஸில் நேர்முக தேர்வு நடந்த போது சென்னையில் எங்கே தங்குவாய்? என்று பாலாஜி என்ற பார்ப்பனர் வாயில் வெத்தலையை போட்டுக் கொண்டே கேட்க,

நான் "மயிலாப்பூரில்.." என்று சொன்னேன்.

"மயிலாப்பூரில் உனக்கு யாரிருக்கா..?" என்று கேட்க

நான் எனக்கு தாத்தா முறையுடைய அன்னாரின் பெயரை சொன்னதும், ஒரு கனம் அவர் பேசவே இல்லை, "அவர்கள் உங்களுக்கு என்ன உறவு..?" என்றார்

நான், "என்னோட தாத்தா" என்று சொன்னேன்

அதற்கு அந்த பாலாஜி என்பவர், "நான் அவரோட படத்த என் பூஜ ரூம்ல வச்சிருக்கேன், தெனமும் கையெடுத்தும் நம்ஸ்காரம் பண்ணிட்டு தான் வேலைக்கே வருவேன்.." என்று பக்தி பெருக்குடன் இணைவைக்க நான் கண் விழி பெருசாவதை உணர்ந்தேன்
-------------------------------------------------------------------------------------------------------------
எனது சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பிடிக்காது என்பதை விட எனக்கு ஒரு கேடும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பள்ளிகூடத்தில் படிக்கிற பசங்க பாகிஸ்தான் வெற்றி பெற்றால் "நீங்க ஜெயிச்சிட்டீங்க.." என்றும் இந்தியா வெற்றி பெற்றால், "என்ன பாய்.. மண்ண கவ்விட்டீங்க போல.." என்பதும் என்னை அவர்கள் மீது பெரிதாக கோவம் வருவதற்கு பதிலாக கிரிக்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆவலை மட்டுமே தூண்டியது.

நாளடைவில் முஸ்லீம்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இரசிகனாகவும் ஆகி போனேன். அதன் பிறகு பாகிஸ்தான் வெற்றி பெற்றால், "எப்படி..? தவுடு பண்ணிட்டான்வோ..?" என்று பீற்றிக் கொள்வதும் உண்டு. இதற்காக நான் தேச துரோகி என்று வர்ணிக்கப் பட்டேன். சில நண்பர்கள் (?) "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் நீ பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே, நீயெல்லாம் பாகிஸ்தானுக்கு போ" என்று மிகுந்த அன்புடன் என்னை வற்புறுத்துவார்கள்.

அதையெல்லாம் நினைக்கையில், எனக்கு மர்ஹூம் பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது, "பாகிஸ்தான், காலிஸ்தான், ஏண்டா எங்களுக்கு என்ன கபுருஸ்தானா?" என்று கேட்பார்.

சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன், மேலே சொன்ன மயிலாப்பூர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது, மரியாதைக்குறிய அவர்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்றோடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த ஆவலோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அப்போது சயீது அன்வர் வேகமாக வந்த பந்தை ஒரே விளாசு விளாச அது தென்னை மர உயரத்துக்கு பறந்து போய் காய்ஞ்சு போய் விழுற மட்டையாட்டம் ஒரு பீல்டரின் கைக்கு லட்டு போல் வந்து கொண்டிருக்க,  நான் சும்மா இல்லாமல், பாகிஸ்தான் அணி ஏனக்கு விருப்பத்திற்குறிய அணியாக இருந்த காரணத்தினால் "போச்சு.. போச்சு.." என்று என்னை மறந்து கத்தி விட, அவர்கள் என்னை திரும்பி பார்த்தார்கள். நான் எச்சில் விழுங்கினேன்.

அன்னாரின் மகளார் வேறு சும்மா இல்லாமல், "இவரு பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட்.." என்று மாட்டி விட்டு விட்டார்.

நான் பதறி போய், "இல்ல..இல்ல.." என்று கத்தி வைக்க

"விளையாட்டு தானே.. இருந்து போவட்டும்..." என்று சொன்னதும் "அப்பாடா.." என்றிருந்தது எனக்கு. இது பாகிஸ்தான் அந்த மேட்சில் தோற்று போய் நான் வருத்தப்பட்டது சம்மந்தமில்லாத செய்தி
-------------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள். முக்கிய நபர்கள் வர வேண்டி இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நேரமும் வந்து விட்டது.

அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களிடம் சென்று, "ஐயா, இன்னும் முக்கிய புள்ளிகள் வரவில்லை.. என்ன செய்ய?' என்பது போல் கேட்க, நிகழ்ச்சியை குறித்த நேரத்துக்கு தொடங்கியாக வேண்டும் என்று உத்திரவிட்டார்கள். "அப்ப கரெக்ட் டயத்துக்கு வந்து ஒட்கார்ந்து இக்கிறவன்லாம் என்ன கேனையனா..?" என்பது போல் கேட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.

இதன் காரணத்தினால் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூட அன்னாரின் வீட்டு திருமணத்திற்கு வந்த போது, கடிகாரத்தை காட்டி, "குறித்த நேரத்துக்கு சரியா வந்துட்டேன்.." என்று அன்பொழுக சொல்லி தழுவிக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------

மேலே தொகுக்கப்பட்ட அத்தனை செய்திகளிலும் நாயகர் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஜட்ஜ் அப்பா என்று எங்கள் குடும்பத்தார்கள் எல்லோரும் மரியாதையுடன் அழைக்கும் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்ம்மாயீல் அவர்கள் தான்.

தொடரும்...

Saturday, August 22, 2009

நோன்பு

பெண்ணாசையை போலவே மனிதனுக்கு வரும் ஆசைகளில் உணவாசையும் மிக வலிமையானது இன்னும் சொல்ல போனால்  பெண்ணாசையை விட உணவாசை வலிமையானது என்றே நான் சொல்வேன்.

ஏனெனில் உணவுக்கும் மனிதனுக்குமான பந்தம் தாயின் கருப்பையிலிருந்தே தொடர்கிறது அல்லவா?. வயிற்றுக்குள் இருக்கும் சிசு தாயின் உணவை தானும் உண்கிறது. கருத்து தெரிந்த பின்னர் வேண்டுமென்றால் பெண்ணாசை அல்லது பொன்னாசை வரலாம். கருப்பையில் இருக்கும் போதே உணவு பழக்கம் தொடங்கி விடுகிறது.

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரு வயிறுக்கு சாப்பிட்டால் எங்க ஊரில் (நாகூரில்) மட்டும் ஏழு வயிறுகளுக்கு சாப்பிடுவார்கள். எனது சின்னாப்பா அவர்கள் அவர்களது நண்பர் ஒருவரை காலையில் தேநீர் அருந்த வீட்டிற்கு அழைத்தார்கள்,  இப்படியாக, "வாருங்கணி, தேத்தனி குடிக்கலாம்", அதற்கு அந்த நண்பர், "இருங்கணி கடைல போய் குடிச்சிட்டு வர்ரேன்.." என்று கிளம்பி போய் கடையில் தேத்தணி குடித்து விட்டு விறுவிறுவென்று வீட்டிற்கு போனார், காலைக் கடனை முடித்தார், திரும்ப வீட்டிற்கு வந்து தேத்தணி குடித்தார், ஏன் இந்த மாதிரி என்றால் வீட்டில் குடிக்கும் நல்லா போட்ட தேத்தணி வயித்துல கொஞ்சம் நேரம் இருக்கணும் அதுக்காக தான் என்கிறார்.

இத்தகைய உணவாசையை கட்டுப்படுத்துவது என்பது கொஞ்சம் அல்ல அதிகம் சிரமமான காரியம். கடவுள் பாதி மிருகம் பாதி என்று தொடங்கும்  பாட்டில் மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்ப்பதாகவும் கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே என்றும் தவிக்கிறது.

மிருகத்தை கொன்று கடவுள் வளர்க்க என்ன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அந்த  பாடல் சொல்லவில்லை. 

காட்டுக்கே ராஜாவான சிங்கம் கூட சர்க்கஸில்  ரிங் மாஸ்டரின் குச்சிக்கு கட்டுபட்டு நிற்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் அவரது தலையை சிங்கத்தின் வாயில் விடும் போதும் அந்த சிங்கம் (மிருகம்) ஒன்றும் செய்யாமல் இருக்கிறதே. அந்த ரிங் மாஸ்டர் எப்படி அந்த சிங்கத்தை சொல்பேச்சு கேக்கும் கிளிபிள்ளையாக மாற்றியிருப்பார்.

அங்க தான் இருக்கு விஷயம். பட்டினி போட்டு பழகுவது. கிட்டதட்ட நமக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுப்படுத்துவது கூட அந்த முறையில் சாத்தியமாகும்.

மோசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) மற்றும் ஜீசஸ் (அன்னாரின் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களும் 40 நாட்கள் நோன்பு இருந்ததாக எக்ஸோடஸ் 24:18 மற்றும் மேத்திவ் 4:2 லும் முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம்" என்று குரான் ஷரீஃப் கூறுகிறது (2:183)

மேலே கண்ட வசனத்தில் "தக்வா" என்ற அரபி வார்த்தைக்கு "பயபக்தி" என்ற தமிழ் வார்த்தையாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. வேறு சில மொழிபெயர்ப்பில் இதே "தக்வா" எனும் வார்த்தைக்கு "சுயக்கட்டுபாடு" என்பது போலவும் அர்த்தம் காணப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்து வீட்டில் எல்லாம் இருக்கும் போதே கோபித்துக் கொண்டு பிடிவாதமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி சாப்பிடாமல் சுயகட்டுபாட்டோடு நோன்பிருந்தாலும் பயபக்தி வந்து விடாது.

இப்படியும் சில நண்பர்கள் கேட்கிறார்கள், "நோன்புங்கறீங்க.. நோன்பு தெறக்கும் போது சேத்து வச்சு சாப்பிடுறீங்களே?" என்று

அதாவது எப்படா நோன்பு திறக்குற நேரம் வரும் என்று பார்த்துக்கிட்டிருந்து நோன்பு திறந்தவுடனே அடக்கி வச்சதை தொறந்து விட்ட மாதிரி 10 சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து தள்ளுவது.

நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு இஸ்லாத்தில் தோன்றிய முதல் புதுமை (பித்அத்) வயிறு முட்ட சாப்பிடுவது தான் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் இஹ்யாவில் எழுதியுள்ளார்கள்.

பெருமானார் பெரும்பாலும் தண்ணீரும் பேரிச்சம்பழம் கொண்டு தான் நோன்பு வைப்பார்கள் நோன்பு திறப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க  வேறு சிலரோ , "ஏன் நீங்கள் இப்படி உங்களையே நீங்கள் எல்லாரும் வருத்திக் கொள்கிறீர்கள்.." என்று மிகவும் அக்கறையாக கேட்கிறார்கள்

எனக்கு மௌலானா ரூமி எழுதி நாகூர் ரூமி அவர்கள் மொழி பெயர்த்த கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது

பால்குடி மறக்கடிப்பது
பட்டினி போடுவதற்கல்ல!
காம்பு மறுக்கப்படுவது
கருணையின் பொருட்டே!

இப்படி உணவு மறுக்கப்படுவது கூட
இறைவனின் கருணையின் பொருட்டு தான்.

நோன்பில் இன்னொரு விசேசம் நோன்பு திறக்கும் நேரம் தான். நம்ம இஷ்டத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நோன்பு திறக்க முடியாது. எல்லோரும் காத்திருப்பார்கள். குறித்த நேரம் வந்தவுடன் நோன்பு திறந்து விடுவார்கள். இதில் என்ன பெரிய விசேசம் இருக்கிறது என்று கேட்கலாம்.


சிலர் தன்னை எப்போதும் மற்றவர்களை விட பெரிய பக்திமானாக காட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. அவ்வாறு நினைத்து கொண்டு மற்றவர்களை விட நான் தான் அதிக நேரம் நோன்பிருந்தேன், ஆகவே நான் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவன் என்று கதை விட முடியாது.


நோன்பு என்பது ஒரு பயிற்சி
நோன்பு என்பது சுத்தப்படுத்துதல்

பேசப்பட்ட வார்த்தைகளை விட பேசாத மௌனங்களுக்கு தான் வலிமை அதிகம். வெளிப்படையான வணக்கத்தை விட மறைவான வணக்கத்திற்கு தான் வலிமை அதிகம்

நோன்பு ஒரு மறைவான வணக்கம்.
நீங்கள் யாரிடமும் சொல்லாத வரை யாருக்கும் நீங்கள் நோன்பாளி என்பது இறைவனையும் உங்களையும் தவிர.வேறு யாருக்கும் தெரியாது.

சில ஒழுக்கங்களை கடைபிடிப்பதை தான் "தக்வா" என்று இறைவன் கூறுகிறான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அது இறைவனின் எண்ணம் தான் என்று எல்லாம் என்னால் அடித்து கூறி மேடைக்கு அழைத்து வாதாட முடியாது.

அதுவும் தவிர வாதாடுவதற்கு என்று பிறை பார்ப்பது, தராவிஹ் தொழுகையா இரவு தொழுகையா? அப்படியே எதுவோ ஒன்று என்று வைத்துக் கொண்டாலும் அது 8ஆ 20ஆ? என்று வாதாட நிறைய செய்திகளும் ஆட்களும் மன்னிக்கவும் ஆலிம்களும் இருக்கும் போது நான் வேறு எதற்கு வாதாட வேண்டும்.

நாகேஷ் கௌரவம் படத்தில், "நான் 3 மாசம் தான் கஷ்டப்படுவேனாம்.. " என்பார்

அதற்கு இன்னொருவர் ஆர்வமாக, "அதற்கப்புறம்.." என்று கேட்பார்

'அதுவே பழகிடுமாம்.." என்பார்

இது அர்த்தமுள்ள நகைச்சுவை.

உண்மையில், நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி பழக்கப்படுத்தி விட்டால் கஷ்டமே இருக்காது அல்லது தெரியாது. இது மனித இயல்பு

பசியை பழகுவோம்
ஒழுக்கம் பேணுவோம்

Wednesday, July 22, 2009

விஜய் டிவி - தமிழ் பேச்சு - பெரியார்தாசன் - VARK - பயிற்றுவிக்கும் முறை

எனக்கு தெரிந்து இங்கே சிங்கப்பூரில் சன் டிவி, விஜய் டிவி மட்டும் தான் பார்க்க முடியும். நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் சன் டிவியின் தமிழ் மாலை மாறன் குடும்பத்தார்களின் தமிழ் மாலையாகவே மாறி விட்ட நிலையில் விஜய் டிவி நடன் நிகழ்ச்சி, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவே தமிழ் பேச்சு ... என்ற நல்ல நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பாகிறது.

எனக்கு பெரியாரை முழுமையாக பின்பற்றாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் கிட்டதட்ட பெரியாரின் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அதே போல் பெரியார்தாசனையும் பிடிக்கும்.  விளம்பரத்தில் பெரியார்தாசனை பார்த்து விட்டதால் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு வாரம் பார்த்தேன்.

அதில் பெரியார்தாசன் பேசும் பயிற்றுவிக்கும் முறைகளை பற்றி மிக அழகாக குறிப்பிட்டார். மொத்தம் மூன்று விதமான மாணவர்கள் இருப்பார்கள்.

சிலருக்கு படித்தால் தான் புரியும். இவர்களை  Reading   என்று குறிப்பிடலாம்.
அதனால் தான் வகுப்பறையில் ஆசிரியர் செய்திகளை சொல்லுவார்.

சிலருக்கு கேட்டால் தான் புரியும். இவர்களை  Auditory  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் பலகையில் எழுதி போடுவார்.

சிலர் தொடு உணர்ச்சிகாரர்கள், இவர்களை   Kinesthetic  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் மாணவர் அருகிலேயே சென்று அவனை தொட்டு தடவி கொடுத்து எடுத்து சொல்லி புரிய வைப்பார் என்று விளக்கம் கொடுத்தார்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் மொத்தம் நான்கு வகையினர் இருக்கிறார்கள்.
1. படத்தை பார்த்து புரிந்து கொள்பவர்கள் - Visual learners

2. கேட்டு புரிந்து கொள்பவர்கள் - Auditory learners

3. படித்து புரிந்து கொள்பவர்கள் - Reading learners
4. பங்கேற்று புரிந்து கொள்பவர்கள் - Kinesthetic learners

மேற்கூறியபடி நான்கு வகையில் பாடங்களை புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் ஒரு புது வகை உணவு பதார்த்தத்தை அல்லது ஒரு புது திறனை பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் வகைப்படி நீங்கள் படிப்பது என்றால் டிவியில் சமைப்பதை பார்த்து தெரிந்து கொள்வது

இரண்டாவது வகை என்பது நண்பரிடம் அல்லது ஆசிரியரிடம் அல்லது நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்வது

மூன்றாவது முறையில் நீங்கள் புத்தகங்களில் உள்ள ரெஸிபியை படித்து தெரிந்து கொள்வது

நான்காவது வகையினர் சமைத்து பார்த்து தெரிந்து கொள்வது,

இதில் நான்காவது வகை தான் சிறந்த முறை என்று சொல்கிறார்கள். ஏனெனில்...
நான் கேட்டேன் - எனக்கு மறந்து விட்டது
நான் பார்த்தேன் - எனக்கு ஞாபகம் இருக்கிறது
நான் செய்து பார்த்தேன் - எனக்கு புரிந்தது

பங்கேற்று புரிந்து கொள்வது தான் நிலையானது என்று அறியப்படுகிறது

Monday, July 20, 2009

நீதி கிடைக்குமா?

நேற்றைய தினமலரில் படித்த செய்தி, இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

http://www.dinamalar.com//sambavamnewsdetail.asp?News_id=11563

பொதுவாக பெண்களுக்கு நடக்கும் அநீதி தொடர்ந்து கொண்டே வருகிறது, ஒரு கருத்துக்காக இதை சொல்கிறேன், பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் என்று யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் சொல்கின்றது. இது ஒரு குறீயீடாக கூட சொல்லப்பட்டிருக்கலாம்.

அதாவது தலையில் இருந்து அல்லது காலிலிருந்து படைக்கப்பட்டவள் என்றால் ஆணை விட பெண் மேலானவள் என்றோ அல்லது ஆணை விட பெண் கீழானவள் என்றோ முறையே அர்த்தமாகி போகும்.

ஆனால் விலாவிலிருந்து என்றால் அது உடலின் நடு பகுதியில் இருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஆணுக்கு அதிகாரம் இருக்குமேயானால் அவன் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூட பொருள் கொள்ள முடியும்.

இன்னும் யூத வேதத்தில் (ஹெப்ரிவ் தல்முத்)  விலா எலும்பு கைகளுக்கு கீழே இருப்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதயத்திற்கு அடுத்தபடியாக இருப்பதால் அவள் நேசிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலே கொடுத்திருக்கும் இணைப்பில் காதலித்து மணமுடித்த அந்த ஆண் தனது காதல் மனைவியிடம் உன் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாதே என்று தகராறு செய்திருக்கிறான். இது அவர்களது குடும்ப விஷயம் என்று விட்டு விடலாம், இந்த விஷயம் தற்கொலை செய்தி வரை வராமலிருந்தால்.

"நீ பேசக்கூடாது.." என்று வெறும் வார்த்தைகளால் சொல்லியிருந்தால் தற்கொலை வரை போயிருக்க முடியாது. அடித்திருக்கலாம், வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கலாம்.

பரிதாபத்துக்குறிய அந்த பெண் நிர்வாணமாக தூக்கில் தொங்கப்பட்டிருக்கிறாள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளின் காலையில் அந்த பெண்ணின் தாயார் தொலைபேசியில் 8:23 மணிக்கு தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து செய்தி சொன்ன போது, "நான் குளிச்சிட்டு கோயிலுக்கு போறேன்..' என்று சொல்லியிருக்கிறார்கள். (இது பத்திரிக்கையில் இல்லாத செய்தி). சரியாக 11 மணிக்கு தாயாருக்கு தற்கொலை செய்தி போகிறது.

எது எப்படியிருப்பினும், தற்கொலை என்பது சந்தேகத்திற்குறியதாக படுகிறது. பத்திரிக்கை செய்தியில் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் கூறியிருக்கும் கருத்தும் சிந்திக்க கூடியது தான். 

தவறிழைத்தவர்கள் அவ்வாறு தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

Friday, July 17, 2009

முஹம்மது ரஃபி - குறளோவியம் - இறைவனின் பரிசு - நினைவாஞ்சலி

 பேச முடிந்தவர்கள் அனைவருக்கும் குரல் இருக்கிறது. சில குரல்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. காதால் கேட்டால் செவிக்கு போதை வரும். இதயத்தால் கேட்டால் இதயம் நழுவி போகும். அத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றால் அது ரஃபி சாஹேப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட முஹம்மது ரஃபி அவர்களையே சாரும்.

1940 லிருந்து 1980 வரை - கனீர் குரலோன் முகேஷ் அவர்களிடமிருந்து இளமையான குரலுக்கு சொந்தக்காரரான கிஷோர் குமார் வரை - சங்கர் ஜெய்கிஷனிலிருந்து லக்ஸ்மிகாந்தி பியாரிலால் வரை -  ஓ.பி. நய்யாரிலிருந்து ஆர்.டி.பர்மன் வரை - திலீப் குமாரிலிருந்து ஷம்மி கபூர் வரை - ராஜேந்திர குமாரிலிருந்து ஜானி வாக்கர் வரை - அனைத்து கால கட்டத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர இடத்தையும் பெற்ற பாடகர் ரஃபி சாஹேப் அவர்கள்.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

1924ம் வருடம் டிசம்பர் மாதம் 24ந் தேதி பிறந்த அவர் தனது 13 வது வயதிலேயே அரேங்கற்றம். அவ்ர் பாடலை மிகவும் ரசித்த அவரது மச்சான் ஹமீது அவர்கள் ரஃபி சாஹேப் அவர்களை ஊக்கப்படுத்தினார். ரஃபி சாஹேப் அவர்கள் உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வாஹித் கான், பண்டிட் ஜிவான்லால் மிட்டோ மற்றும் பிரோஜ் நிஜாமி போன்ற சகாப்தங்களிடம் இசை பயின்றார். அதன் பிறகு ஹமீது அவர்கள் ரஃபியை அழைத்துக் கொண்டு பாம்பே சென்று பிரபல இந்தி இசையமைப்பாளரான நவ்ஷாத் சாபின் தந்தையாரிடம் சிபாரிசு கடிதத்தை வாங்கி கொண்டு நவ்ஷாத் சாபிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.

இதற்கிடையே ரஃபி சாஹேப் அவர்களை லாஹுர் வானொலி நிலையம் அழைத்து தங்களின் நிகழ்ச்சிக்காக பாடுமாறு கேட்டுக் கொண்டது. அவர் முதன் முதலில் பாடிய பாடல் 1944 ஆம் ஆண்டு “சோனியே..” என தொடங்கும் ஒரு பஞ்சாபிய பாடலை தான். இந்த பாடலை ஜீனத் பேகம் என்பவருடன் சேர்ந்து பாடினார். இதற்கெல்லாம் பிறகு தான் பாம்பே வந்து நவ்ஷாத் சாப் இசையில் பாடியது எல்லாம்.

கொயா கொயா சாந்த் குலா ஆஸ்மான்

மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ரே

கியா ஹுவா தேரா வாதா

ஜோ வாதா கியா ஹே

சூலேனே ஜோ நா சுக் ஹோத்தோ

பஹாரோ பூல் பர்சாவோ மெரா மெஹபூப் ஆயா ஹெய்ன்

சாந்த் மேரா தில்

தர்தே தில் தர்தே ஜிகர்

ரங் அவுர் ரூப் கி பாராத்

தேரே மெரே சப்னே

தும் பின் ஜாவு கஹா

தேகா ஹெ தேரி ஆகோன் மேன்

தில் தோனே செஹெககா சங்கே யாரே தில்

சௌதவி கா சாந்த்

அபி நா சாவோன் சோடு கர்

தில்கா பன்வர் கானே புகார்

தெரி பியாரி பியாரி சூரத் கோ

ஆஜ் மாசம் ஹே படா பெய்மான் ஹே படா

ஜான் ஜானி ஜனார்த்தன்

சுராலியா ஹே தும்னே

ஹம் கிஸிஸே கம் நஹி

தீவானா ஹுவா பாதல்

சலோ தில் சார் சலோ

தேரே பிந்தியா ரே

எஹே சான் தெரா ஹோ கா முஜ்பர்



- இப்படி எத்தனை பாடல்களில் இதயங்கள் கனிந்திருக்கின்றன

ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது, ஒரு வக்த் தொழுகையை விட்டது கிடையாது, அதை விட முக்கியம் ஒரு படம் கூட பார்த்தது கிடையாது, தன் குரலுக்கு எப்படி நடிகர்கள் வாயை அசைக்கிறார்கள் என்பது கூட தெரியாது என்றாலும், லைலா மஜ்னு என்ற படத்தில் இவர் தோன்றி ஒரு பாடலுக்கு வாயசைத்தும் இருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் இவரை பற்றி சொல்லும் போது, “இறைவனின் பரிசு” என்றார். இவர் இறந்த போது ஷம்மி கபூரிடம் “உங்களின் குரல் போய் விட்டது..” என்றார்களாம், அதற்கு ஷம்மி கபூர், “ரஃபி இறந்து விட்டாரா?” என்று அழுதாராம்.

இவர் ஒரே ஒரு முறை நாகூருக்கும் வருகை தந்திருக்கிறார். இவருக்கு நெருக்கமான நாகூராரில் ஒருவர் “ஷேக் அலாவுதீன் நானா” என்பவர். இவர் தமிழ் சினிமா கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளருமான (வைதேகி காத்திருந்தாள்) தூயவன் என்ற அக்பரின் உறவினர். சில்லடியில் ரஃபி சாஹேபுடன் சந்தித்த அனுபவங்களை பலரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் கடைசியாக லக்ஸிமிகாந்த் பியாரிலால் இசையில் “ஆஸ் பாஸ்” என்ற படத்துக்காக பாடியது தான். அவர் கடைசியாக பாடி கொடுத்து விட்டு எப்போதும் போல் அல்லாமல் “நான் போவா..?” என்று இரண்டு முறை கேட்டிருக்கிறார். அதே நாளில் தான் இறந்தும் போனார்.


இவரின் மறைவிற்கு பிறகும் கூட அன்வர், முஹம்மது அஜிஜ், சுரேஷ் வாட்கர், சோனு நிகம் யாவரும் இவருடைய ஸ்டைலையே பின்பற்றுகிறார்கள்.

2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டாவும் ஸ்டார் பத்திரிக்கையும் ரஃபி சாஹேப் அவர்களை “இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

1948 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பரிசை வழங்கி கௌரவித்தார்

1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பத்மசிரி விருது வழங்கப்பட்டது


இரண்டு முறை தேசிய விருதும் (நீல் கமல் படத்திற்காகவும் ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம் பெற்ற கியா ஹுவா பாடலுக்காகவும்) ஆறு முறை பிலிம் பேர் விருதும் பெற்றிருக்கிறார்.

5000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவரின் பெயரை தான் மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு சாலைக்கு  “பத்மசிரி முஹம்மது ரஃபி சௌக்” என்று இவரின் நினைவாக பெயரிடப்பட்டது.

என் காதுகளிலும் நாவுகளிலும் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் “எஹே சான் தெரா..” என்ற பாடல் தான்.

அதில் வரும் வரிகள்..

எனக்கு சிரிக்க கத்துக் கொடுத்தாய்

இப்போது அழ கத்துக் கொடுக்கிறாய்

அழுது விடுவேன்

அது உன்னை பாதிக்கும் என்ற போது தான்
அழ மறுக்கிறேன்

- என்பது போல் வரும்

கீழே வரும் இந்த பாடலை கேட்டீர்கள் என்றால் எவ்வளவு கஷ்டமான பாடலை எவ்வளவு ஸ்டைலாக பாடியிருப்பார் என்று தெரியும்

அந்த பாடல்..

Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin


Abhi abhi to aayi ho

Bahaar ban ke chhayi ho

Hawa zara mehak to le

Nazar zara behak to le



Ye shaam dhal to le zara

Ye dil sambhal to le zara

Main thodi der ji to loon, nashe ke ghoont pi to loon

Abhi to kuch kaha nahi, Abhi to kuch suna nahi

Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin


-
உங்கள் இசையோடு வாழ்கிறேன்

Thursday, July 16, 2009

அடையாளம்

நான் என்னுடைய வகுப்பில் காலையில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, ஒரு தமிழர் என்னிடம் வந்து “சார், சி.எஸ்.ஓ.சி, (பாடத்தின் பெயர்), கம்மிங், சாரி, லேட்..” இப்படியாக ஆங்கிலத்தை உ டை த் து பேசினார்.

நான் கேட்டேன், “இது தமிழ் வகுப்பு, நீங்க தமிழ்லேயே பேசலாமே..” என்றேன்.

கொஞ்சம் யோசித்து விட்டு,  ”சாரி சார்” என்றார்.

சிங்கப்பூருக்கு வந்து எத்தனை நாளாச்சு என்றேன், “6 வருஷமாச்சு” என்றார்

“அதனால தான் இப்படி..” என்று கூறி விட்டு அவரை கவனித்தேன். தலை முடியில் சிங்கப்பூர் ஸ்டைல் தெரிந்தது. 

”பாஸ்போர் இருக்கிறதா” என்று கேட்டேன்

எடுத்து காட்டினார்

அதில் இருந்த அவரது போட்டோவை காட்டி “இவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்

சிரித்து விட்டார்

---------------------

நாகூர் கவிஞர் சலீம் நானா நல்ல பாடல்கள் எல்லாம் எழுதுவார்கள், அந்த காலத்தில் அவர்கள் எழுதிய ஒரு பாடல் இப்படி ஆரம்பிக்கும், “ஆளே மாறிட்டியே! ஆளே மாறிட்டியே!!...” என்று -

அதாவது லாட்டரில பரிசு விழுந்த ஒருவர் உடை நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி விட அவரின் பழைய கூட்டாளி ஒருவர் பாடுவது போல் அந்த பாடல் அமைந்திருக்கும்.

இந்த பாடல் கவிஞர் சலீம் நானாவிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆபிதீன் நானா அவர்கள் தான் சொல்லணும்.

-----------------------

எங்கள் ஊரில் ஹஜ்ஜுக்கு போய் விட்டு திரும்புபவர்கள் ஹொத்துவாக்கு (வெள்ளி கிழமை தொழுகை) பள்ளிவாசலுக்கு வரும் போது அரபி உடுப்பை போட்டு கொண்டு தான் வருவார்கள்.

ஹஜ்ரத் வஹ்ஹாப் சாபு அவர்கள் இப்படி என்னிடம் சொன்னார்கள், “நீ சைனாக்கு போனா பாம்ப தின்னுட்டு வர கூடாது..” என்று

இன்னொரு தருணத்தில் ஹஜ்ரத் அவர்கள் இப்படியும் சொன்னார்கள், “பேசும் போது வழக்கத்தில் இல்லாத இங்கிலீஷ் வார்த்தைல பேசினீனா ஒனக்கு சரியா பேச தெரியலைன்னு அர்த்தம்..” என்று

---------------

நான் சொல்ல வருவது இதை தான், சிங்கப்பூருக்கு வந்துட்டோங்கறதுக்காக கழிவறைக்கு போய் தாளில் துடைத்து விட்டு வர முடியாது, எப்போதும் போல கழுவிட்டு தான் வரணும்.

சில நடைமுறைகளை நாம மாத்திக்க கூடாது, அது நம்முடைய அடையாளம்.

-----------------------

அப்துல்லாஹ் என்று ஒருவர் சிங்கப்பூருக்கு வந்து வேலைக்கு சேர்ந்தார். எல்லோரும் உடற்பயிற்சி செய்வதை பார்த்து விட்டு அவரும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை 6 பேக் 7 பேக் என்பார்களே அந்த அளவிற்கு உடலை கட்டுகோப்பாக ஆக்கி விட்டாராம்.

வந்து கண்ணாடியை பார்த்திருக்கிறார். உடல் இவ்வளவு அழகாக இருந்தும் தலை முடி ஸ்டைலாக இல்லையே என்று முடி திருத்தகம் சென்று தன்னுடைய முடியை “ஸ்போர்ட்டி லுக்” என்று சொல்லுவார்களே அந்த ஸ்டைலில் தனக்கு முடி வெட்டி விடும் படி கேட்டுக் கொண்டாராம்.

அவ்வாறே வெட்டப்பட்டதும், கண்ணாடியை பார்த்திருக்கிறார், அடுத்த நூற்றாண்டின் இளைஞன் போல் தான் இருப்பதாக உணர்ந்த அவர் வெளியே வந்தாராம், அந்த வழியாக வேகமாக போன கார் ஒன்று அவரை மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.

குத்துயிரும் கொலையிருமான அந்த நிலையில “கடவுளே! என்னய ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினாய்?,பல காலம் நான் கஷ்டப்பட்டு உடலை வளர்த்து இவ்வளவு அழகா முடி வெட்டி நல்லா இருக்கும் போது இப்படி ஒரு துயரத்தை விதிச்சிட்டாயே   ” என்று கதறினாராம்

அந்த நேரத்தில் ஒரு தெய்வீக குரல் அப்துல்லாஹ்விடம் இப்படி பேசியதாம், “அப்துல்லாஹ்! இது நீயாப்பா!! எனக்கு அடையாளமே தெரியலையே!!!” என்று

எந்த அடையாளத்தை நாம் தொலைத்தாலும்
இந்த அடையாளத்தை மட்டுமாவது
தொலைக்காமல் இருக்க வேண்டும்
அது நாம் மனிதர்கள்
என்ற அடையாளத்தை தான்..

Friday, July 10, 2009

சிங்கை - ஜூரோங் ஈஸ்ட் பஸ் இண்டர்சேஞ்சில் என்னை சந்திக்கவும்



இடமிருந்து:
திரு ஹசிபுர் ரஹ்மான்
திரு கய் ஹோங் வெய்
இஸ்மாயில் (நான் தாங்க)
செல்வி ஜேன் ஹா சூ ஹய்

இந்தி நடிகர் சஞ்சீவ் குமார்

இந்தி திரையுலகின் மிக நேர்த்தியான நடிகர்களின் வரிசையில் திலீப் குமாருக்கு பிறகு சஞ்சீவ் குமாருக்கும் ஒரு இடம் உண்டு. திலீப் குமாருடன் இவர் சேர்ந்து படமும் நடித்துள்ளார் (சங்கர்ஷ், விதாதா போன்ற படங்கள்)

சோலே (தீச்சுடர் அல்லது தீசுவாலை) எனும் படத்தில் வில்லன் கப்பர் சிங்கிடம் (அம்ஜத் கான்) அமிதாப் மாட்டிக் கொள்ள ஒலிந்து கொண்டிருக்கும் தர்மேந்திரா சஞ்சீவ் குமாரின் காலடியில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து தூக்கி போடும் படி கண்களால் சொல்லுவார். சஞ்சீவ் குமார் துப்பாக்கியையும் தர்மேந்திராவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கப்பார் பக்கம் திரும்பி விடுவார். அவர் துப்பாக்கியை எடுத்து கொடுக்காததன் காரணம் ஒரு பிளாஷ் பேக்குக்கு பிறகு கதைப்படி தெரிய வரும்.

சொல்ல வந்த செய்தி இது தான், வசனங்கள் பேசி நடிப்பை காட்ட முடியும், பார்வையில் நடிப்பு திறனை வெளிப்படுத்த முடியுமா? மனுசன், வசனம் பேசும் போதை விட மௌனமாக இருக்கும் போது தான் அருமையாக நடிப்பார்.

1960ல் ஹம் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகம் கண்ட இவர் நடிகராக அடையாளம் காணப்பட்டது கிலோனா (பொம்மை) என்ற படத்தில் தான். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு பிலிம் பேர் அவார்டுக்கு சஞ்சீவ் குமாரின் பெயரும் களத்தில் இருந்தது.

இதன் பிறகு இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைத்துமே மிகவும் சவால் மிக்கது தான். அதிலும் முக்கியமாக குல்ஜார் சாப் (ஜெய் ஹோ புகழ்) இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும்.

இவர்களின் கூட்டணியில் நம்கீன், ஆன்ந்தி, பரிச்சே, அங்கூர், கோஷிஷ், மாசும் போன்ற படங்கள் குறிப்பிடதக்கவை. மிஸ்டர் பாரத் எனும் படம் இந்தி படமான திரிசுல் என்ற படத்தின் தழுவல், இந்த இந்தி படத்தில் சத்தியராஜ் வேடத்தில் சஞ்சீவ் குமார் அசத்தியிருப்பார். மாசும் (சீசன் - காலங்கள்) எனும் படம் சிவாஜி நடிக்க வசந்தத்தில் ஒரு நாள் என்று வெளிவந்தது என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

பரிச்சே எனும் படத்தில் அமிதாப்பின் மனைவி ஜெயபாதுரியின் தந்தையாக நடித்திருப்பார், சோலே படத்தில் அதே ஜெயபாதுரியின் மாமனாராக நடித்திருப்பார், அனாமிகா படத்தில் ஜெயபாதுரியின் காதலராகவும் நடித்திருப்பார். கோஷிஷ் படத்தில் ஜெயபாதுரியின் கணவராகவே நடித்துமிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயபாதுரியை தங்கையாக பாவிப்பதாக அறிவித்து அதிலிருந்து ஜெயபாதுரியுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் ஹேமா மாலினியிடம் காதல் வசப்பட்டு ஒரு முறை வெளிப்படுத்தவும் செய்தார். இருவரும் சேர்ந்து சீதா அவுர் கீதா எனும் படத்தில் நடித்திருப்பார்கள் (தமிழில் வாணிராணி - ஏர்ஹோஸ்டஸ் வானிசிரி நடித்தது)  ஆனால் ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவை திருமணம் செய்ய வேண்டி சஞ்சீவ் குமாரின் காதலை ஹேமாமாலினி ஏற்க மறுத்து விட்டார்.

47வது வயதிலேயே இதய நோயால் இறந்து விட்ட இவர், பெரும்பாலும் ஏற்று நடித்தது 50 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை. அதாவது 50 வயது வரை வாழ்ந்த அவர் 50 வயதுக்கு மேல் திரையில் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.

மிகவும் சிம்பிளான மனிதர், ஒட்டு போட்ட துணியை எல்லாம் உடுத்தியிருக்கிறார்.

பரிச்சேயில் இவர் நடிப்பை பார்த்து கண்கலங்கியதுண்டு. கோஷிஷ் படத்தில் காது கேளாத வாய் பேச முடியாதவராகவும் நடித்திருப்பார்.இந்த படத்திற்காக 1973 ம் ஆண்டு தேசிய விருதை தட்டி சென்றார். இது இவருக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது. முதலாவதாக 1971ல் தஸ்தக் படத்திற்காக கிடைத்தது. சிவாஜி 9 வேடங்கள் ஏற்று நடித்த நவராத்திரி இந்தி பதிப்பில் நடித்தவரும் இவர் தான். மேலும் 14 முறை பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இவர் பிறந்த வருடம் ஜூலை 9 - 1938
இவர் இறந்த வருடம் நவம்பர் 6 - 1985

இன்று ஜூலை 9 -
பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சீவ் குமார்

உங்களின் தீவிர விசிறி
நாகூர் இஸ்மாயில்

Monday, April 06, 2009

திரையில் காதல் மலரும் தருணங்கள்

”தாஜ்மாஹாலை உலகத்து அதிசயம்னு சொல்றானே தவிர உலகத்து சோகம்னு எவனாவது சொல்றானா..?” என்று சின்னபூவே மெல்லபேசு படத்தில் ஒரு வசனம் வரும்.

காதலில் வெற்றி மட்டுமல்ல தோல்வியும், அந்த காதல் தோல்வியினால் உருவாகிற சோகமும் அழகுடையது தான் போலும், ஒரு வித சோகமான அழகு. அதனால் தான் தாஜ்மஹலை உலகத்து அதிசயமாகவே பார்க்க முடிகிறது.

தமிழ் சினிமாவில் காதல் தோல்வி படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. காதலை மென்மையாகவும் அழகாகவும் சொன்ன படங்கள் ஏராளம்.

பெரும்பாலான மசாலா படங்களில் ரவுடிகளிடமிருந்து கதாநாயகியை காப்பாற்றி ”என் கடமையை தான் செஞ்சேன்” என்று சொன்ன அடுத்த காட்சியிலேயே கனவுக் காட்சியில் ஜோடியாக ஆடித் திரிவது சினிமா காதலின் கடமையாக தான் இருந்து வந்திருக்கிறது.

விதிவிலக்காக சில படங்கள் காதல் மலரும் தருணங்களை அழகாக காட்சிபடுத்தி இருக்கின்றன.. உதாரணமாக சில படங்கள்.. ஏதோ எனக்கு ஞாபகத்திற்கு வருவதை எழுதியிருக்கிறேன்.. அப்படியே அடிபிறழாமல் திருக்குறள் மாதிரி எல்லாம் எழுத முடியாது..
...........................................................................
ராஜபார்வை

கண் பார்வையற்ற அவன் மின்தூக்கியில் கருப்பு கண்ணாடி அணிந்து நின்று கொண்டிருக்கிறான். பக்கத்தில் யார் நிற்கிறார்கள்? ஆணா? அல்லது பெண்ணா? என்று கூட அவனுக்கு தெரியாது.

அவன் அருகில் அவள் நிற்கிறாள். அவள் அணிந்து இருக்கும் ஆடை அவளது மேலழகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சிரித்த முகத்துடன் நிற்கும் இவனை பார்த்து தன் அழகை இரசிக்கிறான் என்று நினைத்து ஆடையை சரி செய்கிறாள். அவன் இன்னமும் அதிகமாக சிரிக்கிறான்.

மின்தூக்கி நிற்கிறது. அவள் கத்தி கூச்சலிடுகிறாள். மின்தூக்கியை விட்டு வெளியே வந்து விடுகிறாள். மின் தூக்கியின் உள்ளேயே வைத்து அனைவரும் அவனை அடிக்க ஆரம்பிக்க அவனது கண்ணாடி கழன்று கீழே விழுகிறது. கீழே விழுந்து கண்ணாடியை தேடி தரையில் கையை தடவுகிறான். மின் தூக்கியின் கதவு மூடிவிடுகிறது. அவள் அதிர்ச்சியில் உரைகிறாள். அவளுக்கு காதலின் கண் அப்போது தான் திறக்கிறது.

Different Pathetic, இல்லை..?
...........................................................................
நிழல்கள்

அவள் வீட்டு மாடி சன்னலை திறந்தால் எதிர் வீட்டில் மாடியில் குடியிருக்கும் இளைஞர்கள் தங்கியிருக்கும் வீடு தெரியும். அப்போது அவள் சன்னலின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் போது கைதட்டும் ஓசை கேட்கிறது. சத்தம் வந்த எதிர் வீட்டு சன்னலின் திசைக்கு பார்வையை திருப்புகிறாள்.

அங்கே அவனே தான், கண்ணாடி அணிந்து கலைந்த தலையுடன் கைதட்டி இரண்டு விரலை நீட்டி காட்டுகிறான். அவள் படாரென்று சன்னலை அறைந்து தாழிடுகிறாள். இதே போல் இன்னொரு முறையும் நடக்கிறது.
முன் பின் தெரியாத பெண்ணிடம் இத்தனை அநாகரிகமாக நடந்து கொள்வதா என்று கோபமும் வெறுப்பும் கொள்கிறாள்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் தாயாரும் அவனும் ஒரே ஊர்காரர்கள் என்றும் தூரத்து சொந்தமும் என்று தெரிய வருவதால் அந்த பையனை தன் பெண்ணுக்கு டியுசன் சொல்லி கொடுக்க வைக்கிறாள்.

இந்த கட்டத்தில் அந்த பெண் அவளுக்குள் இருக்கும் வெறுப்பை வெளிகாட்டுகிறாள். தேநீர் சகிக்க முடியாமல் போட்டு தருகிறாள். எடுத்து எறிந்து பேசுகிறாள். எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள்.

அந்த பெண் வீட்டிற்கு கீழே காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது அந்த கண்ணாடி இளைஞன் மேலிருந்து சன்னலை திறந்து கையை தட்டி கூப்பிடுகிறான். இவள் திரும்பி அண்ணாந்து பார்க்கிறாள். இரண்டு என்பது போல் கையை காட்டுகிறான். பக்கத்து டீக்கடையில், "மேலே ரெண்டு டீ கொண்டு போய் கொடு.." என்று சொல்லப்படுகிறது.

அவளுக்கு அப்போது தான் விபரம் புரிகிறது. தன் தவறை உணர்கிறாள். இது நாள் வரை தேநீர் கேட்டு தான் கையை தட்டி இருக்கிறான் நம்மை பார்த்து அல்ல என்று புரிகிறாள்.

இதற்கிடையில் தன்னிடம் ஏன் எதிர் வீட்டுப் பெண் இவ்வளவு அவமரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று குழப்பத்தில் தவிக்கிறான் அவன்.

அடுத்த தினம் டியுசன் சொல்லி கொடுக்க போகும் போது தேநீர் கொண்டு வந்து வைக்கிறாள். அவன் தயங்குகியவாறே, "நீங்க ஏன் எங்கிட்ட மரியாதை குறைவா நடந்துக்கிறீங்கண்ணு எனக்கு புரிஞ்சு போச்சு..! நான் டிகிரி முடிச்சிருக்கேனா இல்லையா என்று தானே உங்கள் சந்தேகம், இங்கே பாருங்க நான் டிகிரி வாங்கினப்போ எடுத்த போட்டோ.." என்று புகைப்படத்தை காட்டுகிறான்.

அவளுக்கு சிந்திக்க எல்லாம் நேரமில்லை. வந்த சிரிப்பை அடக்க விருப்பமில்லை. நன்றாக சிரிக்கிறாள், முன்பு சன்னலை அடைத்தவள் அன்று காதலின் கதவையே திறக்கிறாள்.
............................................................................
நீ பாதி நான் பாதி

அவள் மிதிவண்டியில் வேகமாக வருவதுடன் தவறான திசையில் வந்து வேகமாக வளைக்கிறாள். அவன் மீது மோதி விடுகிறாள். அவன் கீழே விழுகிறான். அவன் எழுந்து திட்டுவானோ "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..?" என்று கேட்பானோ என்று பயந்து "சாரி.." சொன்னவளுக்கு ஏமாற்றம். அவன் எழுந்து இடித்தது யார் என்று கூட பார்க்காமல் சென்று விடுகிறான்.

அடுத்த முறை வேகமாக வந்து இடித்து விடுகிறாள் வேண்டுமென்றே என்று அல்ல, தெரியாமல் தான். திரும்பி பார்க்காமல் செல்கிறான். இன்னொரு முறை ஹோலி பண்டிகையில் வர்ணங்களை தெளித்து விளையாடும் போது அவன் மீது தெளித்து சட்டையை எல்லாம் வீணாக்கி விடுகிறாள். மௌனமாக கலைகிறான்.

ஆச்சர்யப்படுகிறாள், ஒரு வேளை மனநிலை குன்றியவனோ..? அவர்களாக வந்து மோதி விட்டு "ஏய்யா கண்ணை என்னா பிடறிலயா வச்சிருக்கே.." என்று மூளையை கக்குளில் வைத்துக் கொண்டே அலைபவர்கள் கேட்டு திரியும் இந்த மனித கூட்டத்தில் இப்படியும் ஒரு அதிசயமா..? யார் அவன்..?

சாலை நடுவே ஒரு கூட்டம். ஒருவர் வர்ணங்களால் ஓவியம் வரைந்திருக்கிறார். அதை பார்க்கத் தான் அத்தனை கூட்டம். அவனும் நிற்கிறான். அவள் கவனித்து விட்டாள். நிறைய பேர் ஓவியத்திற்கு காணிக்கை வழங்குகிறார்கள். ஒரு சிறுவன் அதிலிருந்து 5 ரூபாயை எடுத்து கொண்டு ஓடுகிறான். பின்னாடியே அந்த சிறுவனை துரத்திக் கொண்டு அவனும் ஓடுகிறான்.

கூட்டம் அவர்கள் ஓடிய திசையையே பார்க்கிறது. அவன் அந்த சிறுவனின் காதை திருகிக் கொண்டே இழுத்து வருகிறான். சிறுவன் அழுதவாறே வருகிறான்.

அவள் கோபமுற்று, "என்னய்யா அப்டி பெரிய தப்பை இந்த சின்ன பையன் செஞ்சுட்டான், வயித்துக்கு சோறு இல்லாம எடுத்திருப்பான், அப்படியே எடுத்திருந்தாலும் இப்படியா போட்டு அடிக்கிறது, இந்தாப்பா திருடாதேன்னு 10 ரூவா கைல கொடுத்திருந்தா பாராட்டி இருக்கலாம்.." என்று முடிக்கும் முன்பே..

அந்த சிறுவன் அழுது கொண்டே தொடர்கிறான், "அதையே தாம்மா அவரும் சொன்னாரு, ஆனா 10 ரூவா இல்லம்மா 20 ரூவா கொடுத்தாரும்மா.." என்று சொல்லவும் அவள் கண்கள் நிமிர்ந்து அவனை தேடுகிறது. அவன் அதோ தூரமாக சென்று கொண்டிருக்கிறான். அவனை தொடர்ந்து அவளது காதலும்....
...........................................................................

இப்படி காதல் கனிரசம் பொழிந்த காட்சிகள் எத்தனையோ..?

Friday, January 02, 2009

கஜினி (இந்தி)

தமிழில் பார்த்து பிரம்மித்து போன அதே கஜினி இந்தியில் அமீர்கான் தலைமையில் படையெ(டமெ)டுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பை ஒரு சதவிகிதம் கூட குறை சொல்ல முடியாத நிலையில் கச்சிதமாக நடிக்கும் அமீர்கான் எப்படி வித்தியாசம் காட்ட போகிறார் என்ற திரைப்பட ரசிகர்களுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வத்தை அமீர்கான் ஏமாற்றாமல் முத்திரை பதித்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் தான் தான் நம்பர் ஒன் என்று சொல்கின்றாரா?, சச்சின் தான் தான் நம்பர் ஒன் என்று சொல்கின்றாரா? நான் மட்டும் ஏன் அப்படி சொல்ல் வேண்டும்? நான் தான் நம்பர் ஒன் என்று சொல்கிறவர்கள் உண்மையில் நம்பர் ஒன்னாக இருக்கவே முடியாது..! என்று நீங்கள் தான் நம்பர் ஒன்னா..? என்ற ஒரு கேள்விக்கு அமீர்கான் மேற்கூறியவாறு பதிலளித்திருந்தார்.

ஆகவே, அவர் சூர்யாவை விட சூப்பரா..? என்றெல்லாம் பார்க்காமல் அமீர்கான் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் கடினமான உழைப்பு தெரிகிறது. சல்மான்கான் இந்த படத்தை பார்த்து விட்டு பிரம்மித்து போய் அமீர்கானின் உடலுக்காக கடுமையாக உழைத்திருந்தாலும் அதை விட படத்தில் முன்னால் நிற்பது அவர் நடிப்பு தான் என்றதுடன் நிற்காமல் அமீர்கானின் கஜினி பட தோற்றத்தில் ஒரு ஓவியத்தையே வரைந்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இது போல் நடக்குமா என்பது கேள்விக்குறி தான்.

தமிழில் இரு வேடத்தில் வந்த கெட்டவன் இந்தியில் ஒரு வேடத்தில் மட்டுமே வருகிறார். தமிழில் வரும் தேவையில்லாத கல்லூரி விடுதி இறுதி கட்ட சண்டை காட்சிகளையும் மாற்றி ஓரளவுக்கு நன்றாகவே அமைத்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புத இசை தமிழில் மிக பெரிய பலம். இதே போல் இந்தியில் மிக அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். குஜாரிஷ், கேய்ஸே முஜே பாடல்கள் தேன் சுவை. பிண்ணனி இசையும் பின்னி எடுத்திருக்கும் இசையாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் பார்ப்பதற்கு சொட்டு போல இருந்தாலும் பாலிவுட்டுக்கே போய் பெரிய வசூல் சாதனை புரிந்திருப்பது பாராட்டுக்குறியது

பொம்மலாட்டம்

நாற்றம் அடித்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு மண்வாசனையோடு முதல் மரியாதை தந்து கடலோர கவிதைகளையும் பாடிய பாசத்துக்குறிய பாரதிராஜா இனிய தமிழ் மக்களுக்காக இவர் கொடுத்திருக்கும் மாற்றம் தான் பொம்மலாட்டம்.

பாரதிராஜா கதை சொல்லும் விதமே குழப்பமாக தான் இருக்கும். நேரடியாக கதை சொல்லவே மாட்டார். பின்நினைவு காட்சிகள் கூட நேர்கோட்டில் வராது. முன்னாடி உள்ளதை பின்னாடியும் பின்னாடி உள்ளதை முன்னாடியும் காட்டுவார்.

மனைவி உள்பட உடன் பணியாற்றுபவர்கள் அனைவரும் கிறுக்கன் (eccentric) என்று கூறினாலும் தான் கிறுக்கன் அல்ல முழுமையானவன் அல்லது பிழையில்லாமல் கச்சிதமாக செய்பவன் (perfectionist) என்று தனக்கு தானே சான்றிதழ் வழங்கி கொள்ளும் ஒரு இயக்குனர்.

தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி தான் சொன்னபடி நடிக்காததால் அந்த கடல்நீரில் கால் நனைக்காத அந்த நடிகையை விலக்கிவிட்டு வேறு ஒரு நடிகை கிடைக்கும் வரை படப்பிடிப்பை ஒத்தி போடுகிறார்.

அதன் பின்னர் மக்கள் கடலில் மூழ்கி முத்து ஒன்றை கண்டெடுத்து படப்பிடிப்பை தொடங்குகிறார். பொத்தி பொத்தி வைத்து பாதுகாத்த அந்த நடிகையை பற்றி பத்திரிக்கைகாரர்களுக்கு பேட்டி கொடுக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலம் தாழ்த்துகிறார்.

அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு பத்திரிக்கைகாரர்கள் அந்த விடுதிக்கு செல்லும் போது அங்கிருந்து அந்த கதாநாயகியுடன் தப்பி ஓடி கதாநாயகியை காரில் வைத்து மலையிலிருந்து தள்ளி விடுகிறார்.

இந்த கொலையுடன் படப்பிடிப்பின் போது நடந்த இரண்டு கொலைகளையும் சேர்த்து மூன்று கொலைகளையும் விசாரிக்க சிபிஐ வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பதை உணர்வு பூர்வமாக ஆடியிருக்கும் படம் தான் பொம்மலாட்டம். வழக்கமான திகில் படங்களில் கொலைக்கான நியாயங்கள் சொத்து அல்லது பழைய பகை என்று இருக்கும். இந்த படத்தில் இது வரை கண்டிராத நியாயங்களும் இருக்கிறது.

டைனோசருக்கு தீனி போட பாரதிராஜாவால் தான் முடியும். காமோஷியில் (இந்தி படம் - மௌனம் என்று பொருள்) பேசாமலே நடித்து அனைவரையும் ஊமையாக்கிய நானா படேகரே அந்த டைனோசர். இவரின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு நடிப்பு பாடம். நிழல்கள் ரவியின் குரல் அப்பட்டமாய் பொருந்தியிருக்கிறது.

நல்ல ஒரு திரைப்பட அனுபவம் வேண்டுமா? பார்க்க வேண்டிய படம் பொம்மலாட்டம்.

Friday, November 28, 2008

துளசி - என் கதை

நான் எப்பவோ எழுதி பாதியிலே எழுதாமல் விட்ட கதை, பழைய கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்த போது அகப்பட்டது, அப்படியே பதிவிடலாம் என்று தோன்றியது.

இது வரை 3 அத்தியாயங்கள் மட்டுமே எழுதி இருந்திருக்கிறேன். இப்போதைக்கு முதல் அத்தியாயம் மட்டும் இங்கே..

துளசி

1 - கல்லூரி நாட்கள்

ராஜாராமன் லட்சுமி தம்பதியரின் குடும்பமே ஒரு பல்கழைக்கழகம் தான். ராஜாராமன் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி லட்சுமி அதே பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். இவர்களின் ஒரே மகளின் பெயர் துளசி. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் துளசி அந்த ஊரில் இருந்த பொறியியல் கல்லூரிக்கு முதல் நாள் வகுப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

துளசி கல்லூரிக்கு செல்வதற்குள் அவளை பற்றிய சில தகவல்களை சொல்லி முடித்து விட கடமைப் பட்டுள்ளேன். இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்றோ அல்லது இது உயர்ந்த வேலை, இது தாழ்ந்த வேலை என்றெல்லாமோ பார்க்க மாட்டாள், எந்த வேலையை கொடுத்தாலும் ஈடுபாட்டோடு செய்வாள். செய்யும் வேலையை ஒழுங்காக செய் என்பதே இவளது தெய்வீக மந்திரம். மனிதராக இருந்தால் போதும் - இவளுக்கு, நல்லவிதமாக பழகுவாள். ஒரு முறை இவளது வீட்டில் வேலை பார்த்த மங்கை என்பவரின் குழந்தைக்கு ஏதோ பெயர் சொல்லாத கடும் வியாதி வந்து விட்டது. அந்த குழந்தைக்கு குணமாக வேண்டி 9 வியாழக்கிழமை விரதம் இருந்தாள். மருத்துவம், வேண்டுதல் எல்லாத்தையும் மீறி இவளது நல்ல குணம் அந்த குழந்தையை குணப்படுத்தியதாக தான் மங்கை நம்பினாள். மங்கைக்கு உடல் நலம் இல்லாமல் இருந்தால் அல்லது வேறு ஏதோ காரணத்தால் முடியாமல் இருந்தால் வீட்டை பெருக்கி கூட்டி சுத்தம் செய்து விடுவாள். சும்மாவே இருக்க மாட்டாள், வீட்டை அலங்கரிப்பாள், எம்பிராய்டரி போடுவாள், ஓவியம் வரைவாள். தேநீர் நன்றாக போடுவாள் ஆனால் தேநீர் அறவே குடிக்க பிடிக்காது இவளுக்கு.

அவளின் அழகை பற்றி நான் எழுத ஆரம்பித்தால், நான் எழுதி முடிப்பதற்குள், நீங்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் எண்ணி முடித்திருப்பீர்கள். அவ்வளவு எழுதலாம். நான் சொல்ல வருகின்ற அழகு நிறத்தை தோற்றத்தை மட்டும் குறிப்பிடுபவை அல்ல குணத்தை நன்னடத்தை போன்றவைகளையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன்.

கல்லூரியில் முதல் நாள் வகுப்பு அறிமுக நேரங்களாக தான் இருந்தது. துளசியுடன் பள்ளியில் படித்த யாரும் இந்த கல்லூரியில் சேரவில்லை. இவளுக்கு எல்லோருமே புதுமுகங்கள் தான். தேநீர் இடைவேளையில் எல்லோரும் வெளியே போன பிறகும் துளசி தனது இருக்கையிலேயே அமர்ந்து வழங்கப்பட்ட புஸ்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.

'எக்ஸ்கியூஸ்மி..' குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

அவன் வாயில் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். நல்ல வளர்த்தி, ஆள் பார்ப்பதற்கு திரை நடிகர் மாதவனை கொஞ்சூண்டு ஞாபகப் படுத்தினான்.

'யெஸ்..' எழுந்து நின்றாள்.

அவன் கையை நீட்டினான், 'ஐயம் துரை..' என்றான்.

பதிலுக்கு கையை பட்டும் படாமல் குலுக்கி விட்டு, 'ஐயம் துளசி..' என்றாள்.

துரை இரண்டு விரலை நீட்டி 'இதுல ஒரு விரல தொடுங்க..' என்றான் புன்னகை மாறாமல்.

'ஐயம் சாரி.. எனக்கு புரியல.. எதுக்கு இதெல்லாம்..' புரியாமல் பார்த்தாள், கேட்டாள்.

'தப்பா நினைக்காதீங்க.. நான் தனியா கேன்டீன் போறதா?, உங்களோட போறதான்னு ஒரு சின்ன டெஸ்ட், நான் எப்போதும் இப்படி தான்.. இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல..' விளக்கினான்.

'நம்பலாமா..?' முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்.

'சத்தியமாங்க.. நான் டீ பிரேக்ல பொய்யே சொல்ல மாட்டேன்.. நம்பலாம்.. தொடுங்களேன்..' என்றான்

'..ம்ம்ம்ம்ம்ம்.....' தொட்டாள்.

'யெஸ்.. நீங்க என் கூட வர்ரீங்க..' என்றான்.

'வர்ரத பத்தி ஒண்ணும் இல்ல.. நான் டீ காஃபி குடிக்க மாட்டேன்' என்றாள்.

'டீ காஃபி சேர்ந்து குடிக்க கூடாதுங்க.. ஏதாவது ஒன்னு தான் குடிக்கனும்..' என்றான்.

'சத்தியமா சொல்றேன்.. எவ்வளவோ டிரை பண்ணி பார்த்தேன்.. சிரிப்பே வரலை..' என்றாள்.

'சரிங்க.. அங்கே இருக்குற சிநேக்ஸயாவது வயித்துக்கு அனுப்புவோம்..வாங்க..' என்றான்.

கேன்டீன்.
'உண்மைய சொல்லுங்க.. ரெண்டு விரல்லயும் என்னோட சாப்பிடணும்னு தானே நினைச்சிருந்தீங்க' என்றாள்.

'நான் அப்படி எல்லாம் நினைப்பேனா..? ஒரு விரல்ல நாம சாப்பிடறதுக்கு நீங்க தான் காசு குடுக்கணும், இன்னொரு விரல்ல நான் தான் காசு குடுக்கணும்னு நினைச்சிருந்தேன், நீங்க தாராளம், இப்ப நீங்க தான் காசு கொடுக்கணும்.. கொடுங்க..' என்றான்.

இதயம் எனும் படம் கல்லூரி மாணவர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டதால் அரங்கத்தில் இடம் இல்லாமல் பலர் தவித்தனர். அப்படி தவித்த பலரில் அன்றைய தினத்தில் நம்ம துரையும் அடக்கம். 'என்னடா.. இது.. டிக்கெட் இல்லையே?' என்று யோசித்த விநாடி யாரையோ பார்த்து விட்டு வாய்க்குள் விசிலடித்தான். பெண்களுக்கான டிக்கெட் வழங்கும் பகுதி தனியாக இருந்தது, அங்கு கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது, அந்த கூட்டத்தில் துளசியும் நின்றிருந்தாள். வெயில் தாங்காமல் தலையில் சுடிதாரின் துப்பட்டாவை போட்டு மறைத்திருந்தாள்.

துரை, 'ஹாய்.. என்னங்க, எனக்கு தெரியகூடாதுன்னு தானே இப்படி தலையில துப்பட்டாவ வச்சு மறச்சுட்டு நிக்கறீங்க?' என்றான்.

'இல்லங்க நீங்க வேற..' என்றாள்.

'பின்னே என்ன கப்பல் கவுந்துடுச்சா..' என்றான்.

'வெயில் கொடுமையே தேவல போலருக்கு' என்றாள்.

'சரிங்க நீங்க என்ன அடிக்கிறதுக்குள்ளே, வந்த விஷயத்த சொல்லிடறேன், எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க முடியுமா?' என்று கேட்டான்.

துளசி இரண்டு விரலை நீட்டி ஒன்றை தொட சொன்னாள். யோசிக்காமல் பட்டென்று தொட்டான்.

'போச்சு..' என்றாள்.

'என்னங்க.. எனக்கு டிக்கெட் எடுக்க மாட்டீங்களா..?' என்றான்.

'அதில்லைங்க.. என் டிக்கெட்டுக்கும் நீங்க தான் காசு கொடுக்கணும்..' என்றாள்.

துரை வாய் விட்டு சிரித்தான்.

அடுத்த நாள்,
'படம் எப்படி?' என்றான்.

'நல்லா தானே இருந்துச்சு, ஆனா.., இந்த காதலில் எல்லாம் எனக்கு பெரிசா ஈடுபாடு இல்லை, அதனால, எனக்கு பெரிசா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல..' என்றாள்.

'இப்படி சொல்றவங்க தான் நாளைக்கு காதல்.. காதால்.. காதல்.. காதல் இல்லையேல் சாதல்ன்னு டயலாக் உடுவாங்க' என்றான்.

'இப்போதைக்கு படிப்பு மேல தான் எனக்கு காதல்.. படிப்பு இல்லையேல் சாதல் தான், கரெக்டா..?' என்றாள்.

'நீங்க இப்படி சொல்றீங்க, என்னோட காதல் ஒரு லவ் லெட்டரால கெட்டு போச்சு' என்றான்.

'எப்படி?' என்றாள்.

'என் கூட ஜெயந்தின்னு ஒரு பொண்ணு படிச்சா, பார்த்தீங்கன்னா, சினிமா நடிகை சுகன்யா மாதிரி இருப்பா,
அழகா இருக்காளேன்னு கவிதை எழுதினேன்
நீயின்றி நானில்லை
நான் குப்பை தொட்டி
நீ பூத்தொட்டி
நாம் இருவரும்
சேர்ந்து செய்வோம்
ஒரு பிள்ளை தொட்டி
'தூ'ன்னு காரி துப்பிட்டு போயிட்டா, அவ துப்பிட்டு போனதுல கூட பெருசா வருத்தம் ஒண்ணுமில்லைங்க, ஆனா அவ சொன்னா பாருங்க ஒரு வார்த்தை, அத தாங்க என்னால தாங்க முடியல' என்றான்.

துளசி சிரித்துக் கொண்டே கேட்டாள், 'என்னா அது..?' என்று

துரை தொடர்ந்தான், 'ஜெயந்தி சொல்றா, 'கண்ணா, நீ வாழ்க்கையில் ரெண்டு விஷயம் மட்டும் எப்பவுமே செய்யாதே, ஒண்ணு கவிதை எழுதுறது, இன்னொன்னு காதலிக்கிறது, நீ நல்லா இருப்பே, நான் சொல்றத கேட்காம எவளயாவது காதலிச்சேன்னு வைய்யி, மவனே, தண்டம் ஒன் தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்னு, ரஜினியையும் நம்பியாரையும் கல்ந்தாப்ல பேசி மிரட்டிட்டு போனாங்க..' என்று துரை பயந்த மாதிரி சொல்ல துளசி சிரிப்பை அடக்க முயன்று தோற்று போய், 'ஜெயந்தி தான் என் குல தெய்வம்..' என்று துரை முறைப்பதையும் பொருட்படுத்தாமல் சிரிசொத்தில்லி(சிரித்து+சொல்லி) முடித்தாள்.


கல்லூரி சுற்றுலா..
பேருந்து புறப்பட சில மணி நேரங்களே இருந்தன.. துரையின் கண்கள் துளசியை தேடின.. இன்னமும் ஏன் வரவில்லை?.. அவன் கண்களுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையில் தெரிந்தது. வீட்டில் ஏதேனும் நிலைமை சரியில்லாமல் வராமல் போய் விடுவாளோ?, அவள் இல்லை என்றால் இந்த பயணம் ஏதோ கடைசி பயணம் போல் தான் இருக்கும் என உணர்ந்தான்.
அப்பொழுது தான் ஒரு சீருந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், அவன் கண்களில் நரகாசுரனின் டெத் அன்னிவர்சரி, தீபாவளி என்று சொல்ல வந்தேன்.. இனி இந்த பயணம் புனித பயணமாக தான் இருக்கும் என தோன்றியது அப்போது அவனுக்கு..
இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். வழி நெடுக துரை துளசியை சிரிக்க வைத்தான். சிறு வயதில் பக்கத்து வீட்டு கொள்ளையில் மாங்காய் திருடியது, பள்ளிகூடத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டது, தயிர் கார அம்மாவை மோதி சைக்கிள் ஓட்ட கத்துக் கொண்டது இப்படியாக அவன் விழுந்து விழுந்து கத்துக் கொண்டதை கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
பிடித்த நடிகர், நடிகை, சிரிப்பு நடிகர், படம், பாடல் இப்படி எல்லாவற்றையும் பேசினார்கள்,
துரை திடீரென்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தான், திடீரென்று நிறுத்தி, 'நான் நல்லா பாடுறேன்ல..' என்றான்
அதற்கு துளசி, 'ஜெயந்தி இருந்தா உங்க கிட்ட மூணு விஷயம் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருப்பாங்க, பாடுறது தான் மூணாவது' என்று சிரித்தாள்.
துளசி தங்கியிருந்த அறை கதவு தட்டப்பட்டது. திறந்தாள், துரை நின்றிருந்தான், 'வாங்க' என உள்ளே அழைத்தாள்.
உள்ளே வந்தான், 'எங்கே யாருமே இல்லை?' என்று கேட்டுக் கொண்டே.
'எல்லோரும் வெளியே போயிருக்காங்க.. எனக்கு மயக்கமா இருக்கிற மாதிரி இருந்துச்சு, அதான் நான் போகலை' என்றாள்.
துரை, 'பயன களைப்பா இருக்...' சொல்லிய விநாடி துளசி குமட்டிக் கொண்டு வந்த வாயை பொத்திக் கொண்டு கழிவறைக்கு ஓடி கதவை தாழிட்டு கொண்டாள். ரொம்ப நேரமாகியும் சத்தமும் வராததால் துளசியும் வெளியே வராததால் கழிவறை நோக்கி நகர்ந்தான், 'துளசி..' என்று அழைத்துக் கொண்டு. கதவு திறக்கப்பட்டது, கிட்டதட்ட மயங்கிய நிலையில் தலையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். 'என்னாச்சு..?' என்றான்.
'என்னன்னே தெரியலைங்க..' என்றாள்.
'இங்கே இருக்க வேண்டாம்., வெளியே வாங்க முதல்ல ..' என்றான்.
வெளியே அழைத்து வந்து உட்கார வைத்தான். 'நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்..' என்றாள்.
'இப்ப என்ன போச்சு, அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க எதயும் நினைக்காதீங்க..' என்றான்.
அவள் பேசினில் அடைத்துக் கொண்டு வடியாமல் வாந்தியாக எடுத்த அஜீரணங்களை பற்றி கவலைப்பட்டாள், யாரும் வர்ரதுக்கு முன்னாடி சுத்தம் செஞ்சுட்டா நல்லா இருக்கும்' என்று துடித்தாள்.
'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்' என்றவன் ஓடி போய் யாரையோ பார்த்தான், அந்த யாரோ வந்தார்கள், எல்லாம் சரி செய்யப்பட்டது.
துளசி சொன்னாள், 'வழியில ஒரு கடையில புரோட்டா வாங்கி சாப்பிட்டேன் பாருங்க, அதான் எனக்கு ஒத்துக்கல..' என்றாள்.
'சரி இப்ப எப்படி இருக்கு, அத சொல்லுங்க முதல்ல..' என்றான்.
'இப்ப பரவாயில்லை.. சரி நீங்க வெளியே இருக்கீங்களா..?, நான் டிரஸ் சேஞ் பண்ணனும்' என்றாள்.
ஊர் திரும்பியதும், 'நீங்க செஞ்ச உதவியையும் உங்களையும் மறக்கவே முடியாது' என்றாள்.
சில தினங்கள் கழித்து,
துளசி, துரை இன்னும் சில நண்பர்கள் படிப்பு சம்மந்தமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பி.எம்.டபிள்யு சீருந்து வேகமாக உள்ளே நுழைந்து நின்றது. அனைவரின் கவனமும் அந்த காரில் இறங்கியவர்கள் மீது தான் இருந்தது. உள்ளேயிருந்து கல்லூரி முதல்வர் இறங்கினார், கூடவே ஒரு பெண்மணி இறங்கினார். துளசி தன்னை அறியாமல், 'அத்தை..' என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
அந்த அத்தை துளசியை பார்த்து விட்டு நேராக துளசியை நோக்கி முதல்வருடன் நெருங்கினார். 'துளசி..' என்று அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
'அத்தை.. நீங்க எப்போ..?' என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.
'அதெல்லாம் இருக்கட்டும்.. ' என்றவர் முதல்வரிடம் , 'இது தான் துளசி, எப்படி இருக்கா பாருங்க, தங்க விக்கிரகம் மாதிரி.. இவ தான் எனக்கு மருமகள், நம்ம சுதாகருக்கு இவ தான்னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணுனதாச்சே..' என்றாள்.

Sunday, October 19, 2008

முகலே ஆஸம்

முகலே ஆஸம் (மாட்சிமை தங்கிய முகலாய பேரரசு) என்ற படம் இந்திய சினிமாவிற்கே ஒரு பெருமை. 1960ம் ஆண்டு கருப்பு வெள்ளையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இரட்டிப்பான லாபத்தை சம்பாதித்து கொடுத்த படம்.

சென்ற ஆண்டு இந்த படம் மீண்டும் கலர் படமாக வெளி வந்தது
வெள்ளி விழாவும் கண்டது
இந்த தலைமுறையினரையும் கவர்ந்திருக்கிறது என்றால்,
இந்த படம் தான் காரணமா? இல்லை,
இந்த காதல் தான் காரணமா?... தெரியவில்லை!.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் காதல் பற்றி இப்படி எழுதினார்
காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள் - என்று.

படத்தின் கதை என்னவோ எல்லோருக்கும் பரிச்சயமான சலிம் - அனார்கலி கதை தான். இந்த கதை உண்மையாக நடந்ததா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் சரியான பதிலாகும். இருந்தும் இந்த படம் இத்தனை தூரம் பாதிப்பை ஏற்படுத்த நிறைய காரணம் உண்டு அந்த பாத்திரத்தில் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் உண்மையான காதலர்களாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த காவிய காதலின் முடிவும் படத்தின் முடிவும் ஒன்று தான்.
சோகம் சோகம் சோகம்.

மதுபாலா என்ற அழகு பதுமை காதலர் தினமாக அனுசரிக்கப்படும் பிப்ரவரி 14ம் தேதி வின்னில் இருந்து இறங்கியது. மும்தாஜ் கான் என்ற இயற் பெயரை கொண்ட இவர் 13ம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார்.
யூசுப் கான் என்ற இயற் பெயரை கொண்ட திலீப் குமார் பாகிஸ்தானில் பிறந்தவர். இருவரும் 1951ம் ஆண்டு ‘தரானா’ என்ற படத்தில் முதன் முதலாக சந்தித்து காதல் மரத்தின் வேர் புதைத்து நீர் பாய்ச்சினர். பிறகு ‘சங்தில்(1952)’ ‘அமர் (1953)’ போன்ற படங்களில் இணைந்து நடித்த போது காதல் துளிர் விட்டு மரமாக வளர ஆரம்பித்தது.

இந்த நிலையில் ‘நயா தவுர்’ எனும் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்கு திலிப் குமாருடன் அனுப்ப மாட்டேன் என்று மதுபாலாவின் தந்தை கூறிய போது காதல் மரம் காயின்றி கனியின்றி வாடி வதங்க ஆரம்பித்தது. இதன் காரணத்தினால் படத்தில் மதுபாலாவிற்கு பதிலாக வைஜெயந்திமாலா நடிக்க ஒப்பந்தமானார்.

ஒரு கட்டத்தில் மதுபாலாவை நிகாஹ் செய்ய வேண்டி காஜியை (திருமண ரெஜிஸ்தரர்) ஏற்பாடு செய்து விட்டு மதுபாலாவிடம் வீட்டை விட்டு வந்து விட வேண்டும் என திலீப் குமார் கூறிய போது அதை மதுபாலா ஏனோ மறுத்து விட்டார். இதன் பிறகு ஒரு கோர்ட் கேஸில் மதுபாலாவிற்கு எதிராக திலீப் குமார் சாட்சியம் கூற நேர்ந்தது, அப்பொழுது திலீப் குமார் நீதிமன்றத்தில், ‘நான் எனது வாழ்நாளின் கடைசி நாள் வரை அவளை காதலித்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரின் மனதில் உள்ள காதல் இவர்களை ‘முகலே ஆஸம்’ எனும் படத்தில் நடிக்க வைத்தது. இருவரும் காட்சியில் பேசியது தவிர ஒரு வார்த்தை கூட வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அப்பொழுது மதுபாலாவிற்கு உடல் நலம் கெட்டிருந்தது (தீராத இதய நோய்). இதை பொருட்படுத்தாது நடித்தார். படத்தை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும் இருவருக்கும் உள்ள காதலின் ஆழம். படத்தின் உள்ள வசனங்களே இவர்களது கதையை பேசியது.

இனி படத்தின் கதை - பிள்ளை வரம் வேண்டி கடும் வெயிலில் சுடும் பாலையில் காலணி கூட அணியாமல் முகலாய பேரரசர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் (- படத்தில் நடித்தவர் பிருதிவிராஜ் கஃபூர் - இவர் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜ்கபூர், ஷம்மி கபூர், ஷஷி கபூரின் தந்தை ரிஷி கபூர், ரந்திர் கபூர், ராஜிவ் கபூரின் தாத்தா, கரிஷ்மா கபூர், கரீனா கபூரின் கொள்ளு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது) சூ•பி ஞானி செய்கு சலீம் சிஸ்டி என்ற இறையடியாரை சந்தித்து தனது பிள்ளை பாக்கியத்திற்காக இறைவனிடம் மன்றாடும் படி வேண்டுகிறார். இறை நம்பிக்கையாளரின் நெஞ்சிலிருந்து வெளியாகும் துவாவானது (பிரார்த்தனை) தக்தீரையே (விதி) மாற்றக் கூடியது என்ற முஹம்மது நபிகளின் வாய்மொழிக் கேற்ப அழகிய மைந்தன் பிறக்கிறான். இறை நம்பிக்கையாளரின் துஆவானது அக்பரின் தக்தீரையே மாற்றி விடுகிறது. பிரசவம் பார்த்தவரிடம், அக்பர் ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்து “இன்று நீ என்ன கேட்கிறாயோ அது அல்லாஹ் உதவியால் உனக்கு கிடைக்கும்” என்கிறார். அவரோ எதுவும் கேட்க மறுத்து விடுகிறார்.

சலீம் என்ற பெயர் தாங்கி வளரும் இந்த குழந்தை (மேலே படித்தவை யாவும் வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்கள் தான், இந்த சலீம் தான் பிற்காலத்தில் ஜஹாங்கீர் என்று அழைக்கப்பட்டார்) தாய்க்கு செல்ல பிள்ளையாக வளர்கிறது.

அதிக செல்லத்தினாலும் செல்வத்தினாலும் சிறு பிராயத்திலேயே மது, மாது என மனம் போன போக்கில் அலையும் இந்த குழந்தையை வருங்கால இந்தியாவின் மன்னன் இப்படி சீரழிந்து திரிவதா என்று “..இவன் நெற்றியில் உள்ள இவனது தாயாரின் அன்பு பதிந்த முகமூடியை கிழித்து போரில் தரிக்கும் இரும்பு கவசத்தை அணி.. வருங்கால முகலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்..” என்று தளபதியிடம் கூறி போர்களத்திற்கு அனுப்புகிறார்.

சலீம் போரில் ஈடுபட்டு வெற்றிகளை குவித்து தந்தைக்கு வெற்றி செய்தியை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கவித்துவமாக பேசும் சலீமை பார்த்து படை தளபதி, “என்ன ஆச்சர்யம், 14 ஆண்டுகளாக ரத்தத்தில் குளித்த வாளுக்கு கவிதையும் வாசிக்க வருகிறதே” என்று கேட்கும் போது சலீம் சொல்வார், “இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, (உமர்) கய்யாமின் கவிதைகளை கல்லில் எழுதினால் அர்த்தம் மாறிவிடுமா, என்ன..?” என்று.

நேர்ந்து தவம் கிடந்து பெற்ற மகனை பார்க்க பிராயசைப்பட்டு, “உடனே திரும்பவும்” என்று சலீமுக்கு அழைப்பு வருகிறது. அரண்மனை விழாக் கோலம் பூணுகிறது. அரண்மனை சிற்பியிடம் வரவேற்க வேண்டி ஒரு விக்கிரகம் செய்யுமாறு ஆணையிடப் படுகிறது. தவணைக்குள் சிலையை செய்து முடிக்காத சிற்பி மாதிரியாக நின்ற நாதிரா என்ற பெண்ணையே முத்து தோரணங்களால் மறைப்பு போட்டு மூடி சிலை போல் நிற்க வைக்கிறார்.

சலீம் வந்து தாயாரை சந்திக்கிறார். தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை பார்த்து தாய் கேட்கிறார், “நான் பாலூட்டி உனக்கு கொடுத்த ரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் ரத்தத்தை பாய்ச்சினாயா? –
என் கண்ணை விட்டு இவனை மறைத்து விடுங்கள் இல்லை என்றால் என் கண்ணே பட்டு விடும்” என்கிறார்.

சிலையை மூடியுள்ள திரையை அம்பு எய்தி அகற்ற வேண்டும் என சலீம் கேட்கப்படும் பொழுது, சிலை அசையாமல் அப்படியே நிற்கிறது. சலீம் குறி பார்த்து அம்பு எய்தி திரையை விலக்குகிறார். அழகு சிலை வெளிப்படுகிறது, உடனே அக்பர், “நிச்சயமாக இந்த சிலையை சிற்பி வடித்திருக்க முடியாது, இது விண்ணிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்” என் று அழகை அதிசயிக்கிறார்.. அந்த சிலை அசைந்து குனிந்து நன்றி சொல்கிறது. எல்லோருக்கும் ஆச்சர்யம். அக்பர் கேட்கிறார், “ஏன் அம்பு எய்த போதும் கூட அசையாமல் நின்றாய், உன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிருந்தால்..?” என்று – “நான் அசைந்து இருந்தால் அது சாஹிபே ஆலம் (சலீம்) அவர்களுக்கு தானே அவமானம், அது அவரின் வீரத்தை சந்தேகிக்கும் படி அல்லவா ஆகி விடும்” என்று ஒரு போடு போடுகிறார்.

அன்று முதல் நாதிரா என்ற அழகி அனார்கலி என்று அழைக்க வேண்டியும் வேலைக்காரியாகவும் நாட்டியக்காரியாகவும் அரண்மணையிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிகிறார்.

ஒரு பாட்டு போட்டி நடக்கிறது, “காதல் செய்தவர்கள் எல்லோரும் கடைசியில் சோகத்தில் சிக்கி இறந்து விடுவார்கள்” என்று பாடிய ஒருவருக்கு சலீம் பரிசாக பூவையும் “உண்மை தான் அப்படி இறந்தாலும் அவர்களை இந்த உலகம் மறக்காது” என்று பாடிய அனார்கலிக்கு முள்ளையும் காம்பையும் பரிசாக தருகிறார். பரிசை வாங்கி கொண்ட அனார்கலி, “காம்புக்கு தான், தான் வாடி (பூவைப் போல) விடுவோமோ என்ற அச்சமே இல்லை” என்கிறாள்.

அனார்கலியின் தங்கை சுரய்யா என்ற சிறிய மொட்டு தனது அக்காளின் அகத்தின் காதலை முகத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்கிறது. அனார்கலி நான் வேலைக்காரியாக இருந்து கொண்டு ராணியாக வாழ எவ்வாறு ஆசைப்பட முடியும்” என்று மறுக்கிறாள். சுரய்யாவோ, “ஏன் ஆசைப்பட கூடாது?, நீ அல்லாஹ்விடமிருந்து தான் வந்தாய், அவர் அல்லாஹ் அல்லாமல் வேறு யாரிடமிருந்தாவது வந்து விட்டாரா என்ன..?” என்று ஆறுதல் கூறி தூதுவராக செல்கிறாள்.

சலீமின் கடித்தத்தை சுரய்யா கொடுக்கும் போது, “இதோ, அவரின் இதயம்” என்று கொடுக்கிறாள். அனார்கலி கடிதத்தை பெற்றுக் கொள்ள தயங்க, சுரய்யா, “ஆ! உன் இதயம் கொடுக்கும் போது சிறிதும் யோசிக்க வில்லை, இப்பொழுது அவரின் இதயம் (கடிதம்) வாங்கும் போது இவ்வளவு யோசனையா?” என்கிறாள். இதயம் பெறப்படுகிறது.

இதயங்கள் சந்திக்கிறது,
அனார்கலி சொல்கிறாள், “அல்லாஹ்வுக்காக சொல்கிறேன், நீங்கள் (வேலைக்காரியான) என்னை சந்திக்க வந்து உங்களின் மதிப்பை இழந்து விடாதீர்கள்” என்று
சலீம், “நான் இந்த மேலோர் கீழோர் எனும் சுவற்றை உடைக்க போகிறேன், அனார்கலி, உன் கண்களை காட்டு நான் அதில் என் காதலை பார்க்க வேண்டும்” என்று கவிதை வசனம் பேசுகிறார்.
அனார்கலி, “என் கண்களை பார்க்காதீர்கள், அதில் வேறொன்றுமில்லை, ஒரு வேலைக்காரியின் சோகத்தை தவிர”
சலீம், “நீ வேலைக்காரி என்பதை மறந்து விடு, நீ எதை சொல்ல பயப்படுகிறாயோ அதை சலீமே உன் கண்களில் படிக்க அனுமதி கொடு”
அனார்கலி, “என் கண்களில் இருக்கும் கனவுகளை பறித்து விடாதீர்கள், நான் இறந்து விடுவேன்”
சலீம், “அனார்கலி, உன் கனவுகளை நிஜமாக்கி காட்டுகிறேன், பார்”
அனார்கலி, “யாரோ வருகிறார்கள் - உங்களை(தன்னை பற்றி கவலை பட வில்லை) பார்த்து விடுவார்கள்”
சலீம், “அவர்கள் பார்க்கட்டும்”
அனார்கலி, “இந்த பணியாளினாள் தங்களின் பிரிவை கூட தாங்கி கொள்ள முடியும், ஆனால் தங்களின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் ஒரு களங்கம் வந்து விட்டால் தாங்கி கொள்ளவே முடியாது” என்று ஆனந்த கண்ணீர் அல்ல ஆனந்த காதல் வடிக்கிறாள்.

தந்தைக்கு தெரிய வர பாரம்பரியத்தை காரணம் காட்டி காதல் நிராகரிக்கப் படுகிறது. அனார்கலி சிறை வைக்கப் படுகிறாள். சலீம் தன் கைவசம் உள்ள படையை வைத்து கொண்டு தந்தைக்கு எதிராக போர்க் கொடி தூக்குகிறார். சிறையிலிருந்து அனார்கலியை கடத்துகிறார்.

சலீம் என்ன தான் மாபெரும் வீரனாக இருந்தாலும் இந்திய பேரரசிடம் மோதி வென்று விட முடியுமா? சலீம் சிறை பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறார். மரண தண்டனையை திரும்ப பெறுமாறு நாடே கேட்டுக் கொள்கிறது. அனார்கலி திரும்ப ஒப்படைக்கப்பாடலன்றி தண்டனை திரும்ப பெறப்பட மாட்டாது என்று அறிவிக்கப் படுகிறது. சலீம் மறுக்கிறார், ஆனால் அனார்கலியோ சலீமை காப்பாற்ற தாமாகவே வந்து சரணடைகிறார். சலீமுக்கு விடுதலை, அனார்கலிக்கு உயிருடன் கல்லறை கட்ட வேண்டும் என்பது மன்னரின் ஆணை.

அனார்கலி மரண தண்டனைக்கு முன் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறாள், அனார்கலி, “ஒரு நாளேனும் நான் முகலாய பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டும்” என்கிறார்.
அக்பர், “உன் மனதில் உள்ளது இப்பொழுது வெளியாகி விட்டது, இது தானே உன் ஆசை, மகாராணியாகி சுக போகத்தை அனுபவிக்க வேண்டும் என்பது?” என்கிறார்.
அனார்கலி, “சாஹிபே ஆலம் எனக்கு வாக்கு கொடுத்தார், உன்னை நான் மகாராணியாக்கி காட்டுவேன் என்று, அவரின் ஆசை நிறைவேற வேண்டி தான் நான் இவ்வாறு கேட்கிறேன்” என்கிறாள்
அக்பர் ஒப்புக் கொள்கிறார் ஒரே ஒரு நிபந்தனையோடு, முதலிரவு பாட்டு முடிந்ததும் சலீமை மயக்க மருந்து கலந்த ரோஜாப்பூவை நுகர வைத்து மயக்கமடைய வைத்து விட்டு மரணத்தின் வாசலுக்கு வந்து விட வேண்டும் என்பதே நிபந்தனை. அனார்கலி சம்மதிக்கிறாள்.

அக்பர், “இந்த திட்டம் நடந்தாக வேண்டும், இல்லை என்றால் சலீம் உன்னை இறந்து போக விட மாட்டான், நான் உன்னை வாழ விட மாட்டேன்” என்கிறார்
அனார்கலி, “நான் எப்பொழுதோ இறந்து விட்டேன், இப்பொழுது நீங்கள் பார்ப்பது பேசுவது எல்லாம் ஜனாசாவிடம் (இறந்த உடல்) தான் - நீங்கள் சொல்வது நடக்கும்” என்கிறாள்.
அனார்கலி தலையில் மகாராணி அணியும் கிரீடத்தை (மயக்க மருந்துடைய ரோஜாப்பூவும் இதில் தான் உள்ளது) அக்பர் அணிவித்து விடுகிறார்.
அனார்கலி, “ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் கொடுத்த இந்த மேன்மை தங்கிய பரிசிற்காக நாளை அவர் செய்ய இருக்கும் கொலை குற்றத்தை அனார்கலி மன்னித்து விடுகிறாள்” என்று வார்த்தை சவுக்கடி கொடுக்கிறாள்.

முதலிரவு கொண்டாட்டம் நடைபெறுகிறது, அனார்கலி சலீமை ரோஜாப்பூவை நுகரச் செய்கிறாள்”, சலீம் மயக்க மடைகிறார், அனார்கலியிடம் மயக்க நிலையில், “ஏன் இப்படி செய்தாய்? - என்னை ஏமாற்றி விட்டு போகத் தான் இப்படி செய்தாயா?” என்று கேக்கும் போது அனார்கலி, “நான் உங்களை விட்டு இறந்து போவேனே தவிர ஏமாற்றி விட்டு போக மாட்டேன்” என்கிறாள். சலீம் “அனார்கலி என்னுடையவள், யாரும் தொட விட மாட்டேன்” என்று கத்திக் கொண்டே மயக்கமாகி கீழே விழுகிறார்.

அனார்கலிக்கு மரண அழைப்பு வருகிறது, இந்த கட்டத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் சலீமை பார்த்து மனதிற்குள் பாடுகிறாள்,

“அல்லாஹ் உங்களுக்கு துணையிருக்கட்டும்
இந்த மனத்தின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களது உலகை விட்டு நான் போகிறேன்
எழுந்திருங்கள் - என் இறுதி சலாத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

நாளை என் ஜனாசா (இறந்த உடலை எடுத்து செல்லும் இறுதி ஊர்வலம்)
நீங்கள் இருக்கும் பக்கமாக போகும்

சத்தியம்! உங்கள் தோள்களால்
அதை தாங்கிக் கொள்ள இயலாது”

என்று பாடி விடைபெறுகிறாள்.

அனார்கலியை சுற்றி கல்லறை எழுப்பப் படுகிறது. கண்கள் மட்டுமே தெரிகிறது.
அடுத்து என்ன? - இது தான் முடிவு..

சில இசை செவிக்கு இனிமை, சில இசை இதயம் தொடும், ஆனால் நவ்ஷத் சாபின் முகலே ஆசம் இசையோ உயிரின் வேர் தொடும். அர்த்தம் தெரியா விட்டாலும் கண்கள் குளமாகும். அர்த்தம் தெரிந்தாலோ கண்கள் இரத்தமாகும்.

இப்படியாக இந்த படம் முழுக்க பேசாமல் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் படத்திலேயே எல்லா வற்றையும் பேசி முடித்து விட்டிருந்தார்கள்.

இதன் பிறகு காலம் சுழன்று கொண்டே இருந்தது, மதுபாலாவின் அழகில் மயங்கி திருமணம் முடிக்க எத்தனையோ பேர் தவமிருந்தும் பின்னனி பாடகரான கிஷோர் குமாரை ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் முஸ்லிமாக வேண்டும் என்ற நிபந்தனையோடு நிகாஹ் செய்து கொண்டார். புகழ் பெற்ற பிண்ணனி பாடகர் கிஷோர் குமார் அன்றிலிருந்து கரீம் அப்துல் ஆனார்.

இந்நிலையில் மதுபாலாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. லண்டனுக்கு ஆபரேஷனுக்காக சென்ற போது மருத்துவர்கள் மிகவும் ரிஸ்க் என்று ஆபரேஷன் செய்யவே மறுத்து விட்டனர்.

படுக்கையிலேயே மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த அவர் முகலே ஆஸம் படத்தை மட்டும் 500 தடவை பார்த்திருக்கிறார். அவர் திலீப் குமாருடனான காதலை இன்னும் மறக்க வில்லை.

ஹாலிவுட்டிற்கு மர்லின் மன்றோவும் கிரேட்ட கார்போவும், ஜப்பானிய சினிமா உலகிற்கு தொஷிரோ மி•ப்யூன் பிரெஞ்ச் திரை துறைக்கு ஜின் கேபனும் பிரிஜிட் பார்டோட்டும் ஆனால் இந்திய வெண்திரை உலகிற்கு என்றும் ஒருவர் உண்டு, அது வேறு யாருமல்ல முடிசூடா அரசி மதுபாலா ஒருவர் தான்.

படுக்கையிலேயே கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் வரை மிகவும் கஷ்டம் அனுபவித்த அவர், பிப்ரவரி மாதம் 23ம் தேதி 1969ம் ஆண்டு உலகை விட்டு பிரிந்து போனார். கண்களாலேயே மொழிகளற்ற மொழி பேசி நடிக்கும் இந்த தேவதை தனது கண்களை இறுதியாக இறுக்கமாக மூடிக் கொண்டது.

திலீப் குமாரும் சாய்ரா பானு என்ற நடிகையை திருமணம் செய்து வாழும் சகாப்தமாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

திலீப் குமார் நீதிமன்றத்தில் சொன்னது போல், அவரின் கடைசி நாள் வரை மதுபாலாவை காதலித்து கொண்டு தான் இருப்பார்”

ஒரு முறை
காதலில் தோல்வி
அவசியம் வேண்டும்
வாழ்க்கை முழுமையாகும்

இந்த 'கவிதை மாதிரி' யை சொல்லி முடிக்கிறேன்
முகலே ஆஸத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட
பல கோடி பேரில் ஒருவன்
A.Mohamed Ismail

Wednesday, July 23, 2008

ராத்திரி சாப்பாடு - சிறுகதை

எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,

மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்,

எல்லோருக்கும் முன்னாடி கேட்டே விட்டார், சோறு திங்குறியா? இல்லை வேற ஏதாவதா? என்று வேற ஏதாவதா என்றால் வேறு என்ன பீ தான். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ‘சோறு திங்குறீயா..?’ என்று அவர் என்னை கேட்ட 2 மணிக்கு கூட எனக்கு சாப்பாடு ஞாபகம் வரவில்லை என்பது தான். இத்தனைக்கு காலையிலே காலம் கடந்து விட்டது என்பதற்காக பசியாறாமல் அவசரமாக புறப்பட்டு வந்தேன்.

எல்லாத்தையும் உட்கார்ந்து சரி பார்த்து என் தவறுகளள சரி செய்த போது மணி 4. நண்பர்கள் இடையில் தேநீர் அருந்த அழைத்தார்கள், உணவு உண்ண போனார்கள், சாயங்காலம் மீண்டும் தேநீர் அருந்த கூப்பிட்டார்கள், வாங்கி வரவா என்று கூட கேட்டார்கள். ம்கூம்.. போக வில்லை. பசி நினைப்பு கூட இல்லை. ஐந்து மணி இருக்கும், வேலை பலு குறைந்த போது தான் அதை உணர்ந்தேன். வயிறு குழந்தையாய் அழுதது.

அடடே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, என்று ஞாபகப் படுத்திக் கொண்டு உடனே வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தேன், எடுத்தது அவளே தான்.

‘யாரு?’ - குழலினிது யாழினிது என்பர் தம் மனைவி சொல் கேளாதார் - வள்ளுவர் பெருந்தகை மன்னிப்பாராக - அவர் மன்னிக்கா விட்டால் கூட பராவாயில்லை, நான் இப்படி சொல்ல வில்லை என்றால் என் மனைவி என்னை மன்னிக்க மாட்டள், எனக்கு வேறு நல்ல பசி..

‘கண்மனி (இது அவள் பேரல்ல.. நான் கொஞ்சுகிறேனாம்) ராத்திரிக்கு என்ன சாப்பாடு’

‘உங்களுக்கு என்னா வேணும் சொல்லுங்க?’ -

‘தாழிச்ச சோறு’

‘அப்புறம்’

‘தாழிச்சா’

‘அப்புறம்’

‘கோழி பொறிச்சிடு’

‘அப்புறம்’

‘அப்பளம் பொறிக்க முடியுமா?’

‘ஓ..!’

யோசித்தேன்..

‘அவ்வளவு தானா..?, போதுமா..? என்னங்க இது இப்படி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும், ஒரு காய்கறியாவது..’

‘காலி பிளவர் எனக்கு புடிக்கும்.. எல்லாம் முடியுமா?’

‘கண்டிப்பா முடியும்.. காலி பிளவரும்.. உருளை கிழங்கு பொறியலும் செஞ்சு வைக்கிறேனே.. சரியா?’

தொலைபேசி துண்டிக்கப்பட்டது

மக்களே, நான் சொல்றத கேளுங்க.. நீங்கள் நல்ல சாப்பாட்டுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கனும்,.. பாருங்க பேசிக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி மணி அடிக்கிறது, கொஞ்சம் இருங்க’

‘ஹலோ’ - நான்

‘என்னங்க.. (என் மனைவி தான்) வீட்ல எண்ணெய் இல்ல.. நீங்க போய் கடைல சாப்டுட்டு வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு எண்ணெயும் வாங்கிட்டு வந்துடுங்க..’