Friday, July 30, 2010

கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 3/4)

கற்காலம்

நாகூர் ரூமி

பகுதி 1 - http://nagoreismail786.blogspot.com/2010/07/14.html

பகுதி 2 - http://nagoreismail786.blogspot.com/2010/07/24.html

என்னுடைய கருத்தில்

நான் ஒரு மார்க்க அறிஞன் இல்லையென்றாலும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய வரலாற்றையும், திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியும் நான் மிகத் தெளிவாக என்னளவில் புரிந்து வைத்திருக்கிறேன். நான் சொல்ல வருவது இதுதான்.

இஸ்லாத்தின் எல்லைகளுக்குள் ஒரு பிரச்சனை எழுப்பப்படுமானால், முதலில் அதற்கு திருக்குர்ஆன் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, திருக்குர்ஆனாகவே வாழ்ந்ததாக தன் மனைவி ஆயிஷா அவர்களால் புகழப்பட்ட நபிகள் நாயகம் இந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆனா ஹதீதா என்ற கேள்வி எழுமானால், முன்னதுதான். திருக்குர்ஆனில் உள்ள ஒன்றுக்கு முரணாக, மாற்றமாக ஹதீதில் இருக்கிறதென்றால், அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அது ஆதாரப்பூர்வமான ஹதீது என்றாலும் சரியே. காரணம், நூற்றுக்கு நூறு மாற்றப்படாமல் இருக்கின்ற ஒரே வேதம் திருக்குர்ஆன்தான் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் கிடையாது. (கல்லடிக் கொல்லரசுகளும் ஒத்துக்கொள்ளும் கருத்து இது). ஆனால் இந்த அளவுகோல் எந்த ஹதீதுக்கும் கிடையாது.

லட்சக்கணக்கான ஹதீதுகளை, வாழ் நாள் பூரா செலவழித்து, சுண்டிசுண்டிப் பார்த்துத்தான் இமாம் புகாரி போன்றவர்கள் அவற்றிலிருந்து ஆதாரப்பூர்வமானவை என்று அவர்கள் கருதியவற்றை தொகுத்திருக்கிறார்கள் என்பதில் இருவேறு கருத்தில்லை. என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான். And to err is human. குழப்பவாதிகளால் சொருகப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் பல ஹதீதுகள் புகாரி போன்ற ஆதாரப்பூர்வமான தொகுப்பிலும் உண்டு.

ஒரு உதாரணம்

ஜாஹிலிய்யா என்று சொல்லப்பட்ட இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக் காலத்தில், ஒரு குரங்குக் கூட்டத்தைத் தான் பார்த்ததாகவும், அதில் 'ஜினா' செய்த ஒரு குரங்கை மற்ற குரங்குகள் கல்லால் அடித்துக் கொன்றதாகவும், எனவே தானும் அவைகளோடு சேர்ந்து அந்தக் குரங்கை கல்லால் அடித்ததாகவும் அம்ரிப்னு மைமூன் என்பவர் சொல்வதாக புகாரியில் ஒரு ஹதீது உள்ளது (வால்யூம் 5, பிரிவு 58, எண் 188) !

இந்த ஹதீதை வாசிக்கின்ற அறிவுள்ள யாருக்கும் சில கேள்விகள் எழும். உதாரணமாக,

1. இஸ்லாத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்ததாக இந்த 'நிகழ்ச்சியை' வைத்துக் கொண்டாலும், சட்டம் என்பது மனிதர்களுக்கா, அல்லது மிருகங்களுக்குமா?!

2 இந்த ஹதீதைச் சொல்லும் மைமூன் என்பவருக்கு அந்த குறிப்பிட்ட குரங்கு 'ஜினா' செய்தது என்று எப்படித் தெரியும்? குரங்குகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்ததா? இதையெல்லாம் மைமூன் எப்படி முடிவு செய்தார்? மற்ற குரங்குகளோடு பேசித் தெரிந்து கொண்டாரா?! ஒருவேளை பேசியிருப்பாரானால், இது ஹதீதுகளில் காணப்படும் மாந்திரீக யதார்த்தமாகத்தான் இருக்க வேண்டும்!

3. பாதிக்கப்படுவது எல்லாக் காலத்திலுமே பெண் என்பதால், இந்த ஹதீதில் குறிப்பிடப்படும் குரங்கும் பெண் குரங்காகத்தான் இருக்க வேண்டும்! 'அடல்ட்ரி' செய்த அந்த இன்னொரு (ஆண்) குரங்கு எங்கே? (இந்த ஹதீதின் அறிவிப்பாளருடைய 'மைமூன்' என்ற பெயர்கூட பாரசீக மொழியில் குரங்கைக் குறிப்பது என்ற உண்மைக்கும் இந்த கேள்விக்கும் தொடர்பில்லை).

அந்த பாவப்பட்டக் குரங்கை கல்லாலடித்துக் கொன்ற மற்ற குரங்குகளெல்லாம் நிச்சயமாக அறியாமைக் காலத்து ஷரீயத் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் தென்னாப்பிரிக்காவின் இஸ்லாமிக் ரிசர்ச் ·பௌண்டேஷன் இண்டெர் நேஷனல் இன்க். என்பதன் உறுப்பினராகவும், அல்-பலாக் என்ற மாதமிரு முறை வரும் இதழின் ஆசிரியரும், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான ஏ.எஸ்.கே. ஜும்மூல் அல்லது ஜமால் என்பவர்.

ஹதீதுகளுக்குள் இப்படிப்பட்ட குரங்குத்தனங்கள் ஊடுறுவி இருப்பதை அலசி ஆராய்கின்ற யாரும் புரிந்துகொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்படப்பட்ட ஐந்து ஹதீதுகளில் முதல் மூன்றை இப்போது எடுத்துக்கொள்வோம். இந்த மூன்றிலும் நபிகள் நாயகம் அவர்கள் குற்றவாளிகளை கல்லால் அடித்து கொல்வதற்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது நபிகள் நாயகம் அவர்களின் ஆளுமைக்கே எதிரானது.

ஏனெனில் மனித குலமனைத்திற்கும் நபிகள் நாயகத்தை ஒரு அருட்கொடையாக, கருணையாக அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான். (அத்தியாயம் 21, சூரா அம்பியா, வசனம் 107).

தாயி·ப் என்ற ஊரிலே இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அவர்கள் சென்றபோது, அவர்களை சொல்லாலும் கல்லாலும் துரத்தித் துரத்தி அடித்தனர் அவ்வூர் மக்கள். கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ரத்தம் கொட்டக் கொட்ட நபிகள் நாயகமவர்கள் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவர வேண்டியிருந்தது. அப்போதுகூட அந்த மக்களை அவர்கள் சபிக்கவில்லை. மாறாக, அவர்கள் திருந்தாவிட்டாலும், அவர்களுடைய சந்ததியினராவது நம்பிக்கை கொள்வார்கள் என்று அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

தனக்கு விஷம் வைத்த யூதப் பெண்ணை மன்னித்தார்கள்.

வெற்றி வாகை சூடி மக்காவுக்குள் மறுபடி நுழைந்தபோது, தன்னை எதிர்த்த, கொல்ல முயற்சி செய்த குறைஷிகளுக்கு மன்னிப்பும் உயர் பதவிகளும் வழங்கினார்கள்.

தவறு செய்யும் ஒரு அடிமையை ஒரு நாளைக்கு எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபோது, 70 முறை என்று பதில் சொன்னார்கள். அதாவது மன்னித்துக்கொண்டே இருங்கள் என்ற அர்த்தத்தில்.

எத்தனையோ முறை, போரில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்யலாம் என்று கேட்கப்பட்ட போது, கொன்றுவிடலாம் என்று உமர் சொன்னார், ஆனால் மன்னித்து விடலாம் என்று முடிவெடுத்து அதன்படி செயல்பட உத்தரவிட்டார்கள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் அவர்களின் மன்னிக்கின்ற குணச்சான்றுகளால் நிரம்பியிருக்கிறது.

நபிகள் நாயகம் இறுதித் தூதர் எனவும், அவர்களுக்கு முந்தையை தூதர்களிடத்தே இருந்த குறைகள் ஏதும் அவர்களிடத்தே இல்லை எனவும், மாறாக முந்தையை தூதர்களின் சிறப்புக் குணங்கள் யாவும் ஒருங்கே அவர்களிடம் அமைந்திருந்தது என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், மேலே கூறப்பட்ட ஹதீதுகள் இந்த நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன.

காரணம், அந்த ஹதீதுகளில் சொல்லப்படுவது போன்ற ஒரு நிகழ்ச்சி புனித பைபிளில் வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற அந்த நிகழ்ச்சியில், விபச்சாரம் செய்ததாகக் கொண்டுவரப்படும் ஒரு பெண்ணை, இயேசு கிறிஸ்து அவர்கள், "உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் முதல் கல்லை எறியலாம்" (ஜான்-8) என்று சொல்லி காப்பாற்றிவிடுகிறார்கள். மனிதாபிமானமும் மனசாட்சியும் கொண்ட ஒரு மனிதரால்தான் அதைச் செய்ய முடியும். அதுவும் ஈஸா (இயேசு கிறிஸ்து) அவர்களைப் போன்ற அன்பே வடிவான இறைத்தூதர் வேறெப்படி இருந்திருக்க முடியும்?

இதில் விஷேஷம் என்னவெனில், அவர்களேகூட முதல் கல்லை எறிந்திருக்க முடியும்! ஏனெனில், பாவம் செய்யாத ஒரு புனித ஆத்மாவாகத்தான் அவர்கள் இருந்தார்கள். ஆனாலும், "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று சொல்லி அவளை அனுப்பிவிடுகின்றார்கள்.

ரஸ¥லுல்லாஹ்வுக்கு முந்திய ஒரு நபி, ஒரு பெண்ணின் மீது காட்டிய இரக்கமும் பரிவும் கருணையும், மனிதகுலத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதி நபியிடம் இல்லையென்று சொல்வது அவர்களது ஆளுமைக்கு எதிரானது அல்லவா?

எனவே இஸ்லாமிய சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன், யூத சட்டத்தைப் பின்பற்றி கல்லால் அடிக்கச் சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானத்துக்கு ஆதாரமில்லை. நான் இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணமுள்ளது.

திருக்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்களான மோஸஸின் ட்டோரா, தாவூதின் சங்கீதங்கள், ஜீசஸின் காஸ்பெல் -- எல்லாமே மனிதர்களால் அசுத்தப்படுத்தப்பட்டவை என்பது முஸ்லிம் நம்பிக்கை. இதன் அடிப்படையில் பார்ப்போமானால் ஒரு உண்மை விளங்கும்.

இறைவன் ஒருவன்தான். மோஸஸ், ஜீசஸ், முஹம்மது எல்லாருடைய இறைவனும் ஒருவன்தான். மோஸஸ¤க்கு வேதம் அருளும்போது கண்டிப்பானவனாகவும் கொடுமையானவனாகவும் இருந்த அல்லாஹ், முஹம்மதின் காலத்தில் போனால் போகிறதென்று மிருதுவாகி கருணை வடிவாகிவிட்டான் என்று நினைப்பது அபத்தமாக இல்லையா?

இறைவன் ஒருவனென்றால், அவனுடைய குணாம்சங்களும் (attributes) எல்லாக் காலத்துக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? இறைவனுக்கு கோபமே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் எனது கோபத்தைவிட கருணை மிகைத்துள்ளது என்று அவனே கூறுகிறான் (ஹதீது குதுஸி). திருக்குர்ஆனில் கருணை(mercy) என்ற விஷயத்தைப் பற்றி கிட்டத்தட்ட 172 இடங்களிலும், மன்னிப்பைப் பற்றி ஏறத்தாழ 150 இடங்களிலும் அல்லாஹ் பேசுகிறான். நான் நிச்சயமாக மன்னிப்போனாக இருக்கிறேன் என்று அடிக்கடி கூறுகிறான்.

இவ்வளவு ஏன்? ஒவ்வொரு காரியத்தையும் துவங்குவதற்கு முன் ஒரு முஸ்லிம், "பிஸ்மில்லாஹிர்ரஹ்மா நிர்ரஹீம்" என்று சொல்வது வழக்கம். இது திருக்குர்ஆனில் உள்ள 143 சூராக்களின் தொடக்கமாக உள்ளது. (ஒரே ஒரு அத்தியாயத்தில் மட்டும் அது துவக்கத்தில் வராமல் இடையில், உள்ளே வருகிறது). அதற்கு, "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு" என்றுதானே பொருள்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கின்ற அந்த ஓரிறைவன் ஒரு சமுதாயத்தினரை கல்லாலடித்துக் கொல்லச் சொல்லி, இன்னொரு சமுதாயத்தினருக்கு கசையடி போதும் என்று சலுகை கொடுக்கிறான் என்பது இறைத்தன்மைக்கு எதிரானது.

எனவே, மோஸஸின் தவ்ராத்திலும், இந்த சட்டம் இறைவனால் அருளப்பட்டதாக இருக்க முடியாது. அந்தக் கால குருமார்களான ரப்பிகளால் (Rabbis) சொருகப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

எனவே கல்லாலடித்துக் கொல்ல வேண்டும் என்பதே 'ரப்பி'களின் சட்டமே தவிர, 'ரப்'பின் சட்டமாக இருக்க முடியாது. ('ரப்' என்பது இறைவனின் இன்னொரு பெயர்).

அப்படியானால், அந்த மூன்று ஹதீதுகளையும், அதையொத்தவற்றையும் சொருகப்பட்டவை, பலவீனமானவை, spurious என்று ஒதுக்கிவிட வேண்டியதுதான். கல்லால் அடிக்கச் சொல்லும் காட்டுமிராண்டித்தனமான அந்த தண்டனை இஸ்லாத்தின் எதிரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்றும் அவற்றுக்கு 'இஸ்ரேலியாத்' என்று பெயர் என்றும் கூறப்படுகிறது.

நான் இப்படிச் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீதுகளிலும்கூட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

திருக்குர்ஆனின் ஆதாரங்கள்

பாலியல் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற விஷயத்துக்கு திருக்குர்ஆனின் வசனங்களே எதிராக இருக்கின்றன.

1. கசையடி கொடுக்கச் சொல்லும் வசனத்தில்கூட, தப்பித்தவறி, உணர்ச்சி வேகத்தில் முதன்முறையாகத் தப்பு செய்பவர்களுக்கு அந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று திருமறை சொல்லவில்லை என்பது சில அறிஞர்களின் கருத்து. காரணம், அந்த வசனம், "ஜினா செய்த அந்த பெண்ணையும், ஜினா செய்த அந்த ஆணையும்" என்று தொடங்குகிறது. அதற்கு அரபியில், "அஜ்ஜானியத்து"(az-zaniyathu), "வஜ்-ஜானீ"(wa-z-zani) என்ற அரபிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

'அஜ்ஜானியத்து' என்பது பெண்பால். 'வஜ்-ஜானீ' என்பது ஆண்பால். That, the என்ற பொருள் தரும் 'அல்' என்ற definite article-தான் 'அஜ்', 'வஜ்' என்று இங்கே சப்தம் மாறிச் சேருகிறது. அரபி இலக்கண விதிகளின் படி, 'அல்' என்ற பதத்தின் சேர்க்கையினால், அது திரும்பத்திரும்ப தப்பைச் செய்கின்ற ஒரு persistant sexual offernder-ஐக் குறிப்பதாகும் என்று சில மொழி வல்லுணர்கள் குறிக்கின்றனர். அப்படிப் பார்த்தால், முதன் முறையாக அந்த தப்பைச் செய்பவர்களுக்கு கசையடிகூட கொடுக்க முடியாது.

2 அதற்கு அடுத்த வசனமே, (24 : 03) அப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான ஆண்களுக்கு ஒழுக்கக் கேடான பெண்களே மனைவிகளாகவும், அப்படிப்பட்ட பெண்களுக்கு ஒழுக்கம் கெட்ட ஆண்களே கணவர்களாகவும் வருவார்கள் என்று கூறுகிறது.

கல்லால் அடித்து அவர்களை ஒரேயடியாகக் காலி செய்யச் சொல்வதானால், அவர்களுடைய திருமணத்தைப் பற்றி இறைவன் ஏன் கூறவேண்டும்?

3. அதற்கு அடுத்த வசனம் (24 : 04), கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்பவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும், பொய் சாட்சி கூறுபவர்களுக்கு 80 கசையடிகள் தரவேண்டும் என்று கூறுகிறது!

சாட்சி வைத்துக்கொண்டு அந்தக் காரியத்தைச் செய்கின்ற அளவுக்கு அதில் மூழ்கிப் போனவர்களாலேயே இது சாத்தியம். எனவே, இது பெண்களை காப்பாற்றும் விதமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். (மேலே 1-ல் 'அல்' என்ற definite article தரும் பிரத்தியேகப் பொருளை இங்கே பொருத்திப் பார்க்கலாம்).

4. அடுத்த வசனம் ( 24 : 05), திருந்தி மன்னிப்புக் கேட்கின்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றும், ஏனெனில் இறைவன் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான் என்றும் கூறுகிறது!

ஏன், இந்த வசனத்தை யாரும் பின்பற்றுவதில்லை?

5. வசனம் 24 : 09ல், ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண், தான் குற்றமற்றவள் என்றும், தன்மீது அபாண்டமாக பழி போடப்படுகிறது என்றும், இறைவன் மீது ஆணையிட்டு நான்கு முறை சொல்வாளாகில், அவளை மன்னித்துவிட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்!

ஈரானிய, நைஜீரிய, பாகிஸ்தானிய, சவூதி அரேபிய நீதிமன்றங்களின் கண்ணில் இந்த வசனங்கள் படவில்லையா?

ஹதீதுகளைப் பற்றி இறைவன் என்ன சொல்கிறான்?

ஹதீத் அல்லது ஹதீஸ் என்பதற்கு 'பேச்சு' என்றொரு பொருள் உண்டு. இறைவனுடைய பாதையிலிருந்து மக்களை வழிகெடுக்கும் பொருட்டு, உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல், 'அனாவசியமான பேச்சை' விலைகொடுத்து வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்று இறைவன் கூறுகிறான் (சூரா லுக்மான், 31 : 06). இந்த வசனத்தில், 'அனாவசியமான பேச்சு' என்பதற்கு 'லஹ்வல் ஹதீஸ்' என்ற சொல்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது!

இறைவனையும் அவனுடைய அடையாளங்களையும் மறுதலிப்பவர்கள், வேறு எந்த பேச்சைத்தான் நம்பப் போகிறார்கள்? (சூரா ஜாஸியா, 45 : 06). இங்கும் 'பேச்சு' என்பது 'ஹதீஸ்'தான்!

இறுதித் தூதருக்கு இறைவன் சொன்னது

நபியே! இவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதனை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது (சூரா அந்நஹ்ல், 16 : 64).

வேறுபாடுகள் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம், திருக்குர்ஆனை வைத்து அதைத் தெளிவிக்கச் சொல்கிறான் இறைவன். அதில் இல்லாத ஒன்றை, ஹதீதை வைத்து முடிவு செய்யச் சொல்லவில்லை.

எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகிறேன் என்று சொல்லச் சொல்லி முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளை இடுகிறான் (சூரா அல் அன் ஆம் 06 : 50).

மக்களுடைய விருப்பத்துக்காக இறைவசனங்களை மாற்றிச் சொல்கின்ற வேலையைச் செய்ய முடியாது எனவும், அதற்குத் தனக்கு சக்தி இல்லை எனவும், இறைவனுக்கு மாறு செய்தால் மகத்தான வேதனைக்கு நிச்சயம் பயப்படுகிறேன் என்று நபியைச் சொல்லச் சொல்லி இறைவன் அறிவுறுத்துகிறான் (சூரா யூனூஸ் 10 : 15)

கட்டளையும், அதிகாரமும் தீர்ப்பும் தனக்கே உரியது என்றும் (சூரா யூசு·ப் 12 : 40), அதில் யாருக்கும் பங்கு இல்லை என்றும் (சூரா அல் கஹ்·ப், 18 : 26)

மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில் உள்ள ஒவ்வொன்றையும் விவரித்திருக்கிறோம். ஆனாலும் மனிதன் அதிகமாக வீண் தர்க்கம் செய்பவனாகவே இருக்கிறான் (18 : 54) என்றும் தெளிவாகக் கூறுகிறான்.

பெருமானாரின் பொன்மொழிகள்

இது சம்பந்தமாக நபிகள் நாயகத்தின் சில பொன்மொழிகளும் இந்த விஷயத்தில் நமக்கு தெளிவைக் கொடுக்கின்றன.

1. என்னிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்பாளர்கள் வந்து உங்களிடம் கூறுவார்களானால், அந்த ஹதீதுகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், திருக்குர்ஆனின் ஒளியில் அவற்றை உரசிப் பாருங்கள். திருக்குர்ஆனோடு அது ஒத்துப்போனால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் அதை விட்டுவிடுங்கள்.

2. யாருக்கு திருக்குர்ஆன் போதுமானதாக இல்லையோ, அவர் நம்மைச் சேர்ந்தவரல்ல.

இது போதாதா சட்ட வல்லுணர்களுக்கு?

உமரும் அலீயும்

- தொடரும்

No comments: